Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம் - திரையுலகமே திரண்டு வா...



விஸ்வரூபத்தின் மீதான தடை பற்றியும், முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றியும் சாமானியனான எனது கருத்துக்களை ஒரு நீண்ட பதிவாக எழுதி வைத்திருக்கிறேன். அதைத் தான் இன்று வெளியிடுவதாக இருந்தேன். ஆனால் இப்பொழுது தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது, “முஸ்லீம்கள் விஸ்வரூபத்திற்கு ஏற்படுத்திய பிரச்சனைகள் அவர்களாக செய்தது அல்ல, சில மதத்தலைவர்களும், இன்றைய அரசும் சேர்ந்து அவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி முன்வரிசையில் சாகக்கொடுத்திருக்கிறார்கள்” என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அரசின் வீண் கர்வத்திற்கு (EGO) விஸ்வரூபத்தால் கமலும், முஸ்லீம்களும் சம்பந்தமே இல்லாமல் நாமும் பலியாகியிருக்கிறோம் என்பதும் தெரிகிறது.

தமிழகத்தில் எத்தனையோ தலையாய பிரச்சனைகள் கிடப்பில் கிடக்க, ஒரு சாதாரண திரைப்படத்தை முடக்க 10 மணிக்கு தீர்ப்பு வெளியானவுடன் 11.30 மணிக்கே கிளம்பிப் போய் உயர்நீதி மன்ற நீதிபதியைச் சந்தித்த அரசு வக்கீல்கள், அவசர அவசரமாக இன்று காலை முதல் வழக்காக, விஸ்வரூபத்தின் தடை நீக்கம் தொடர்பான தீர்ப்பிற்கு மீண்டும் ஒரு தடை வாங்கியிருக்கிறார்கள். ஒரு சாதாரண திரைப்படம் அப்படி என்ன செய்துவிடப்போகிறது இந்த அரசை? இத்தனைக்கும் தமிழக அரசு இதுவரை சந்திக்காத பிரச்சனைகளா? அதையெல்லாம் சமாளிக்கத் தெரியாதவர்களா? ஏன் விஸ்வரூபம் வெளியாகிவிடக் கூடாது என்பதில் மட்டும் அரசிற்கு இத்தனை அக்கறை? ஏன் இவ்வளவு அவசரம்? மக்கள் நலன் மேல், மதநல்லிணக்கனத்தின் மேல், நாட்டின் பாதுகாப்பின் மேல் அவ்வளவு அக்கறையா? அல்லது நேரடி உத்தரவு வந்த பிறகும் கமல் தன் படத்தை வேறு சேனலுக்கு விற்றது தான் காரணமா? அல்லது தடை போட்டவுடன் வந்து பார்க்காமல், காலில் விழாமல், கமல் நீதிமன்றத்தை நாடியதால் வந்த கோபமா?

முதலில் படம் தடை செய்யப்பட்டதும் அதை விசாரித்த நீதிபதி, “நான் படத்தைப் பார்க்க வேண்டும்” என்றார். சரி, “தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை, ஆறு கோடி பேர் பார்க்கலாமா வேண்டாமா, அதனால் அவர்களது மனம் கெடுமா கெடாதா, முஸ்லீம்களின் மனம் வருந்துமா வருந்தாதா? என்பதையெல்லாம் இவர் ஒருவர் பார்த்துக் கூறுவார் என்று காத்திருந்தனர் மக்கள். மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டார், நீதிபதி. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, சினிமா ஒரு அவசரமா என்று நினைத்திருக்கலாம். தப்பில்லை. இறுதியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அன்று “அரசு அதிகாரிகளிடம் பேசுங்கள்” என்று கமலுக்கு அறிவுரை செய்துவிட்டு மீண்டும் ஒரு நாள் தீர்ப்பை ஒத்தி வைத்தார். அரசு அதிகாரிகளிடம் பேசச் சொல்லவா கமல் நீதிமன்றத்தை அனுகினார்? அதற்காகவா நீதிபதி படம் பார்த்தார்? சரி, நீதிபதி சொன்னது போல் “அரசு அதிகாரி”களிடம் பேசி, சுமூக முடிவு எடுக்கப்பட்டு, படத்தை வெளியிட்டால், மதம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராதா? அப்படியென்றால் என்ன அர்த்தம்? இந்த அரசால் எப்படிப் பார்த்தாலும் பிரச்சனை வராமல் தடுக்க முடியும். அப்படித்தானே? அப்படியென்றால் படத்தை முடக்கத் துடிப்பது யார்? அரசா அல்லது முஸ்லீம்களா? யாருடைய “உணர்வுகள்” இங்கு கமலால் பாதிக்கப்பட்டிருக்கிறது? தணிக்கை செய்யப்பட்ட ஒரு படம், தடை நீங்கி மீண்டும் வெளியாக உத்தரவிடப்பட்ட ஒரு படம், மீண்டும் தடை செய்யப்பட்டு, கேஸ் அடுத்த திங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படி, இப்படி என்று என்னைக் கேட்டால் படம் வெளியாக (ஒருவேளை ஆனால்) சரியாக இரண்டு வாரம் ஆகும் போலத் தோன்றுகிறது. அதாவது அரசு, தனது இரண்டு வாரத் தடையில் வெற்றி பெற்ற பின் விஸ்வரூபத்தை வெளியிடும். அப்படித்தானே?

கமல் இப்பொழுது "சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயார். எங்களுக்குள் பிரச்சனை தீர்ந்தது" என்று சொல்லியிருக்கிறார். அதாவது அவரது முஸ்லீம் சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இறங்கி வந்திருக்கிறார். இப்பொழுது நிஜமாகவே படம் வெளியானால் எந்தப் பிரச்ச்னையும் இருக்காது. முஸ்லீம் தலைவர்கள் சொன்னதால் தான் மற்றவர்கள் படத்தைப் பார்க்காமலேயே அதை எதிர்த்துப் போராடினார்கள். இப்பொழுது அதே தலைவர்கள் கமலிடம் பேசி சுமூகமாக, யாருக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பிரச்சனையை முடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் முஸ்லீம்கள் வென்றுவிட்டதாகத் தான் அர்த்தம். மற்ற மதத்தினரும் முஸ்லீம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டிருப்பார்கள். தமிழ் சினிமாவில் இனி முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்காது. எல்லாம் OK தானே? பின்னர் ஏன் படம் இன்னும் வெளிவரவில்லை? எந்தப் பிரச்சனையும் இல்லையென்றால் இந்நேரத்திற்கெல்லாம் அரசு கேஸை வாபஸ் வாங்கியிருக்க வேண்டும், படமும் வெளியாகி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் போலீஸ் விரட்டுகிறது, ராமநாதபுரத்தில் படம் நிறுத்தப்பட்ட பிறகும் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் பட பேனர்கள் கொளுத்தப்பட்டுள்ளன, தியேட்டரின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. தியேட்டரில் குண்டு வீசியது யார்? எதிர்ப்பைத் தெரிவிக்கும் முஸ்லீம் அமைப்புகள் என்றா நினைக்கிறீர்கள்? இப்படி குண்டு வீசுபவர்களாக தங்களை தமிழ் சினிமா தொடர்ந்து காட்டுகிறது என்று தானே இவர்கள் போராட்டத்திலேயே இறங்கினார்கள். தங்களது எதிர்ப்பை போதுமான அளவு காட்டி விட்ட பிறகும், கமலே இறங்கி வந்துவிட்ட பிறகும் இவர்கள் இப்படிச் செய்வார்களா? அப்படியென்றால் யார் வீசியது? மதக்கலவரம் வரும் என்று தானே தடை வாங்கப்பட்டது? ஆனால் பெரிய பிரச்சனை அல்லவா அரங்கேற ஆரம்பித்திருக்கிறது!

கமல் இன்று காலை பத்திரிக்கைக்காரர்களை சந்தித்து, தான் இந்த மாநிலத்தை விட்டு அல்லது இந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். தனது சொத்துக்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகச் சொல்கிறார். மதச்சார்பற்ற, கலைஞனை மதிக்கும் வேறு மாநிலம் அல்லது நாட்டைத் தேடி தான் போகப் போவதாகக் கூறியுள்ளார். காலம்காலமாக சினிமாக்காரர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழகத்தில் இன்று ஒரு சினிமாக்காரனுக்கு இடமில்லையா? காரணம் மதமா? அல்லது அவன் எடுத்த ஒரு சினிமாவா? அல்லது கலைஞனுக்கே உள்ள திமிரா? கமல் வெளியேறக் கூட வேண்டாம். இப்படி பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தாலே உலகம் நம்மைக் காரித் துப்பாதா? மதம் என்னும் போர்வையால் தன்னை பாதுகாப்பாக மறைத்துக்கொண்டு தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கும் கமல் ஹாசன் அவரது மகள் ஸ்ருதி ஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கலைஞர், டாக்டர். ராமதாஸ் என்று இன்னும் பலரை தன் இஷ்டத்திற்கு தன் சமூகமே வெறுக்கும் வண்ணம், ஆபாசமாக கேமராவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டே ஒருத்தனால் திட்ட முடியும், அதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் உலகமே ஒத்துக்கொண்ட ஒரு உண்மையை, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சர்வதேசப் பிரச்சனையை படமாக எடுத்து தமிழகத்தில் வெளியிட உரிமையில்லை, எடுத்தவனுக்கும் இடமில்லை. அப்படித்தானே?

இதெல்லாம் வெளியில் நடப்பது. ஆனால் “தமிழ் சினிமா” விற்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கலைஞனுக்கு, தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவனுக்கு இன்றைய தமிழ் சினிமா இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறது? நியாயமாகப் பார்த்தால் இது யார் பிரச்சனை? யார் போராட வேண்டியவர்கள்?

“தூள்” படத்தில் ஒரு காட்சி வரும், நினைவிருக்கிறதா? வில்லன் அரசியல்வாதி சாயாஜி ஷிண்டே ஒரு உண்ணாவிரத்தத்தை ஏற்பாடு செய்து உட்கார்ந்து கொள்வார். மற்ற அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்வார்கள். ஏனென்றால் எங்கு தான் வந்து அமரவில்லை என்றால் தமிழன் இல்லை என்று சொல்லி அரசியலிலிருந்தே ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம். அது தான் இப்பொழுது கமல்ஹாசன் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி துக்கம் விசாரிக்கப்போவது தெரிந்தவுடன் ஒருவர் பின் ஒருவராக இப்பொழுது படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் உண்மையிலேயே கமலுக்காக வருந்துகிறார்கள்? முதலில் டுவிட்டரில் பட்டும் படாமல் பேசினார்கள், பின்னர் அறிக்கை விட்டார்கள் (அதிலும் ரஜினி தான் முதல். ஆனால் அதுவே லேட்), இப்பொழுது நேரில் சந்தித்து துக்கம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உப்பு சப்பில்லாத பிரச்சனைகளுக்கெல்லாம் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை கூட்டாக பெரிய அளவில் காட்டி பிரபலமடைந்தவர்கள் இன்று கமல் பிரச்சனைக்கு மட்டும் தனித்தனியே வந்து "உள்ளேன் அய்யா" மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி நீர் பிரச்சனை, ஒக்கேனக்கல் பிரச்சனை, சேவைவரி அதிகரிப்பு, ஏன் டெல்லி பலாத்கார சம்பவத்திற்கு கூட ஒன்று கூடினார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள், படப்பிடிப்பை நிறுத்தினார்கள். ஆனால் கமல் என்னும் கலைஞனை இங்கு தமிழக அரசியல், அரசியல்வாதிகள் கலை பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மட்டும் ஏன் பலமான எதிர்ப்பு தெரிவிக்க மறுக்கிறார்கள்? இது இவர்கள் பிரச்சனை இல்லையா? பொறுப்போடு முன்னின்று போராட வேண்டியவர்கள் யார்? தமிழ்த் திரையுலகினரா அல்லது நாமா? புவனேஸ்வரி பிரச்சனைக்கு இருந்த போபம் கமல் பிரச்சனைக்கு இல்லையே, ஏண்?

தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர் தான் இன்றைய முதல்வர். அதே தமிழ் சினிமாவிலிருந்து வந்தவர் தான் எதிர்கட்சி தலைவரும். அவர் "இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி" என்று அறிக்கை விடுகிறார். இப்படி மாறி மாறி அறிக்கை தான் விடுகிறார்களே தவிர்த்து "வாருங்கள், தெருவில் இறங்கி நம் கலைமகனுக்காக போராடுவோம், தமிழ் சினிமாவைக் காப்பாற்றுவோம்" என்று யாராவது சொல்கிறார்களா? தமிழக்கத்தில் வேறு எந்த துறையினருக்கு இது போல் நடந்திருந்தாலும் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் போராடியிருப்பார்கள் சாதித்துக் காட்டி இருப்பார்கள். ஆனால் தமிழ் சினிமா மட்டும் கமுக்கமாக, பாதுகாப்பாக, சுயநலமாக, பொத்திக்கொண்டு இருக்கிறது. “கமலையே அமுக்கி விட்டார்கள், நாமெல்லாம் எம்மாத்திரம்” என்கிற பயம் ஒவ்வொருவரது மனதிலும் இருக்கும். அதில் ஆச்சரியமில்லை. ஆனால் – தமிழ்த் திரையுலகமே திரண்டு வரும் பொழுது இந்த அரசால் என்ன செய்ய முடியும்? ஆண்டு கொண்டிருப்பவர்கள் வந்ததே இந்த சினிமாவில் இருந்து தானே? இவர்களே ஒன்றாக வந்தால் மக்களின் ஆதரவு இன்னும் பலமடங்கு பெருகும் தானே? கமலுக்கு 50 ஆண்டு விழா எடுத்தார்கள்; தமிழ் சினிமா ஒரே குடும்பம், கமல் அதன் வாரிசு என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்கள், கட்டித் தழுவிக்கொண்டார்கள், அண்ணன் என்றார்கள், காலில் விழுந்து சித்தப்பா என்றெல்லாம் கூட முறை வைத்து அழைத்தார்கள். இப்பொழுது எங்கே போனார்கள் அவர்கள் எல்லாம்?

மிக மோசமான, தரம் கெட்ட, கவர்ச்சி, வன்முறையை மட்டுமே காட்டும் படங்கள் தொடர்ந்து வந்த போதும், அநியாய டிக்கெட் விலையோடு சேர்த்து பார்க்கிங் விலை, பாப்கார்ன் விலை என்று தமிழ் சினிமாவும், தியேட்டர்களும் செய்த அத்தனை அராஜகத்தையும் கண்டு கோபம் வரவில்லை தமிழ் ரசிகனுக்கு. ஆனால் இன்று கமலுக்கு ஒன்று என்றவுடன் முதல் ஆளாக முன்னால் நின்று போராடுபவன் இந்த ரசிகன் தான். கோபப்படுபவனும் இதே முட்டாள் ரசிகன் தான். கமல் ரசிகன் அல்ல. தமிழ் சினிமாவின் ரசிகன். “தலைவா நீ கவலைபடாதே நாங்கள் இருக்கிறோம்” என்று பணம் அனுப்புகிறார்கள் கமல் பெயருக்கு. “படம் பார்த்ததாக நினைத்துக்கொள்கிறேன். அந்தப் பணத்தை உனக்கே கொடுக்கிறேன். நீ இங்கேயே இரு. நாங்கள் இருக்கிறோம்” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இன்று காலையிலிருந்து இந்த நிமிடம் வரை கமலுக்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கிறார்கள், காவல் இருக்கிறார்கள். "அமைதியாக இருங்கள், நீதி கிடைக்கும்" என்று தங்கள் தலைவன் சொன்ன ஒரே காரணத்திற்காக எந்தப் பிரச்சனையும் செய்யாமல் காத்திருக்கிறார்கள். சினிமாவை, சினிமா நடிகனை தமிழர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள், இன்னும் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க இதை விட வேறு என்ன வேண்டும்? ஆனால் இவர்களுக்கு தமிழ் சினிமா என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ன செய்துகொண்டிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்? ஏன் இந்த மௌனம்? அப்படி யார் பயம்காட்டினார்கள் இவர்களை?

தமிழ் சினிமா உள்ளடக்கிய நடிகர்கள் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி, விநியோகிஸ்தர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்று அத்தனை சங்கங்களும் ஒன்று கூடி, உடனடியாக கமலுக்கு துணையாக, அடாவடித்தனம் செய்து கலையை கொலை செய்யப் பார்க்கும் அரசிற்கு எதிராகத் திரள வேண்டும். போராட வேண்டும். வென்று காட்ட வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் தமிழ் சினிமா தனது இந்த “இன்னும் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கத் தெரியாத” முட்டாள் ரசிகர்களை இழக்கும். கோட்டைக்கு ஏற்றியவர்களுக்கு குப்பையில் தள்ளவும் தெரியும்.

விஸ்வரூபம் மற்ற மாநிலங்களில் சக்கை போடு போடுகிறது. வரும் வெள்ளியன்று ஹிந்தியிலும் வெகு விமர்சையாக இதுவரை இல்லாத அளவிற்கான காட்சிகளுடன் வெளியாகிறது. வெளிநாட்டு கலெக்ஷன் எல்லாம் அபாரம் என்பது பழைய செய்தி. ஆனால் தமிழ் நாட்டில் இந்த தமிழ் படத்தை இன்னும் யாரும் பார்க்கவில்லை. திருட்டு வி.சி.டி சக்கை போடு போடும் இங்கு, ஒரு படத்தை, எத்தனை நாட்கள் ஆனாலும் சரி தியேட்டரில் போய் தான் பார்க்கவேண்டும் என்று மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த ரசிகர்களை வைத்து இன்னனும் எவ்வளவோ சாத்திக்கலாம் தமிழ்த்திரையுலகம். என்ன செய்யப்போகிறது?

தலைவர் ரஜினிகாந்த் தன் நண்பனைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருப்பதோடு மட்டுமல்லாமல், “ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடுகட்ட கமல் இயக்கத்தில் ஒரு பைசா வாங்காமல் நடிக்கத் தயார்” என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா, வதந்தியா என்று தெரியவில்லை. ஆனால் தலைவன், தலைவன் தான். மற்றவர்காளுக்கு எப்படியோ, துன்பத்தில் இருக்கும் தன் நண்பர்களுக்கு முதலில் தோள்கொடுப்பவர் இவர் என்பது உலகறிந்த விஷயம். இந்த இடத்தில் நடிகர் விஜய் யின் செயல்களையும் பாராட்டியே ஆக வேண்டும். யாரும் எதுவும் உருப்படியாக செய்யாத நிலையில், விஜய் தனது “தலைவா” படப்பிடிப்பை, விஸ்வரூபம் வெளிவரும் வரை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது. தனது ரசிகர்களையும் கமலுக்கு ஆதரவாக இருக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி உண்மையென்றால் “விஜய்” – நான் இனி உங்களது ரசிகன். “தலைவன்” தன் நண்பனுக்காக மோதிப் பார்க்கத் தயார், “தளபதி”யும் களத்தில் இறங்கிவிட்டார், திரையுலகம் இனி திரண்டு வரவேண்டியது தான் பாக்கி… அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் – “நாங்கள் நேசிக்கும் தமிழ் சினிமாவைக் காப்பாற்று… என் தமிழ் சினிமாவைக் காப்பாற்று…”

Monday, January 28, 2013

விஸ்வரூபமும் பிரச்சனைகளும் - ஒரு அலசல்...



பதிவிற்குப் போகும் முன் இந்த வாக்கியங்களைச் சொல்லிவிடுதல் அவசியம் என்று நினைக்கிறேன் - “நான் விஸ்வரூபம் பார்த்துவிட்டேன்! படத்தைப் பார்த்த பிறகு தான் கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறேன்”

விஸ்வரூபம் தமிழக்கத்தில் வெளியாகும் வரை படத்தின் கதை, காட்சிகள் பற்றி எழுதுவது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்த வரை ஒரு திருட்டு விசிடியைக் கொடுத்துப் படம் பார்க்கச் சொல்வதும், படத்தின் மொத்தக் கதையைச் சொல்லிவிட்டு படம் பார்க்க விடுவதும் ஒன்று தான். படம் பார்க்கும் உண்மையான உணர்வை அது கெடுக்கும். எனவே கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. மேலும் படத்தை உண்மையாகவே ரசித்துப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவு செய்து கதையைச் சொல்லும் அல்லது அந்தக் கதையைப் பற்றிய கருத்துகளை அலசும் எந்த விமர்சனத்தையும் படிக்க வேண்டாம். அது நிச்சயம் படம் பார்க்கும் உங்களது அனுபவத்தைக் கெடுக்கும். ஜூனியர் விகடனில் பிரச்சனையை விளக்குகிறேன் பேர்விழி என்று நீட்டி முழக்கி முழுக்கதையையும் விலாவாரியாக விவரித்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான டுவிஸ்ட் ஒன்றைச் சொல்லித்தான் கதையைச் சொல்லவே தொடங்குகிறார்கள். கஷ்டகாலம்...

பெங்களூரில் விஸ்வரூபம் வெளியாகவிருந்த ஊர்வசி தியேட்டர் முகப்பு
பெரிய சிரமம் இல்லாமல், ஒரே ஒரு சிறிய ஏமாற்றத்துடன் மட்டும் விஸ்பரூபத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிரமம் இல்லை என்று சொன்னதற்குக் காரணம் படத்தை ஓரளவிற்கு சுமாரான தியேட்டரில், பெங்களூரிலேயே பார்த்தேன். முட்டல் மோதல் இல்லாமல், சாகசம் / அட்வென்ச்சர் ஏதுவும் செய்யாமல் (சிவாஜி வெளியான போது நான் கர்நாடகாவில் இருந்தேன், படம் வெளியாகவில்லை, டிரெயின் ஏறி கேரளாவில் படம் பார்த்தேன் - சாகசம்) என்று எதுவும் இல்லாமல் ஆன்-லைனிலேயே முதல் நாள் இரவு புக் செய்து, அடுத்த நாள் மதியம் நிம்மதியாகப் போய் படம் பார்த்து விட்டு வந்தேன். சாப்பிடாமல் கொள்ளாமல் தியேட்டருக்கு போய் வெயிலில் வண்டியை நிறுத்துவதற்கு 20ரூ, ஆறிப்போன 10ரூ கூட மதிப்பு பெறாத முட்டை பப்ஸ் 30ரூ, வெகுவாக தண்ணீர் கலக்கப்பட்ட பெப்ஸி 50ரூ, மொக்க தியேட்டருக்கு டிக்கெட் விலை மட்டும் 180ரூ - என்பதெல்லாம் எந்தப் படம் பார்க்கப் போனாலும் நடப்பது தான் (ஐ மீன் கொடுப்பதுதான்) என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சிறிய ஏமாற்றம் என்னவென்றறால் படத்தை சென்னையில் AURO 3Dயில் நல்ல தியேட்டரில், முதல் நாளே பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். என் (துர்)அதிர்ஷ்ட்டம், இதுவரை நான் ஒதுக்கியே வைத்திருந்த பெங்களூரு INNOVATIVE MULTIPLEXல் படம் பார்த்தேன். சின்ன திரை, ஓக்கே வான சவுண்ட் (சில வசனங்கள் புரியவில்லை), முன்னால் தலை மறைக்கும் சீட்கள் என்று மிகவும் சுமாரான மல்டிபிலெக்ஸ் அது. யாரும் வந்து பிரச்சனை செய்ய வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. திடீரென்று புரொஜெக்டர் சரியில்லை, ஸ்பீக்கர் சரியில்லை என்று தியேட்டர் காரர்களே படத்தைப் பாதியில் நிறுத்துவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லவேளை நான் படம் பார்த்த பொழுது அப்படி எதுவும் நடக்க வில்லை. நான் படம் பார்த்த பிறகு அந்தத் தியேட்டரையும் சேர்த்து பெங்களூரில் வேறு எங்கும் விஸ்வரூபம் ஓடவில்லை. காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க (கலவரக்காரர்களுக்கு பயந்து) திரையிடலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். I’m a lucky guy!

விஸ்வரூபம் படம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் அதன் பின்னணியில் நடப்பதாக பல்வேறு ஊடகங்கள் நமக்குச் சொல்லும் விஷயங்கள், தனிப்பட்ட முறையில் நான் வெகுநாட்களாகச் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தத சில கருத்துக்ககளைத் தான் எழுதத் தொடங்கினேன். நான் மொத்தமாக எழுதித் தள்ளியது அளவிற்கதிக பெரிதாக இருந்ததாலும், நண்பர்கள் சிலர் பதிவு வெளிவதற்கு முன்பே படித்து, சில கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று "சுதந்திர நாடான இந்தியாவில் இப்போதிருக்கும் கருத்து சுதந்திரத்தின் நிலைமையக் கணக்கில் கொண்டு" என் நலன் கருதி, “தடை” போட்டிருப்பதாலும், பதிவை இரண்டு பாகங்களாக வெளியிடுகிறேன். முதல் பாகம் விஸ்வரூபத்தின் பின்னணியில் நடப்பதாக ஊடகங்கள் சொல்வது (கீழே நீங்கள் படிக்கப்போவது). இரண்டாம் பாகம் எனது கருத்துக்கள். தணிக்கை முடிந்து நாளை அல்லது மறுநாள் வெளிவரும் என்று நம்பலாம் :-). சர்ச்சைக்குரிய பாகங்களை நீக்கி வெளியிடலாமா என்று மேல்முறையீடு செய்திருக்கிறேன். தீர்ப்பு தெரியவில்லை. (ஓவராத் தெரியுதோ?). எது எப்படியோ இரண்டையும் பொறுமையாகப் படித்து, உங்களது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை தன்மையான முறையில், யார் மனதும் புண்படாத வகையில் பதிவு செய்யவும். விருப்பமில்லாதவர்கள் தாராளமாக இங்கேயே விலகிவிடுங்கள். தயவு செய்து உங்களது "கமல் எதிர்ப்பை" பின்னூட்டத்தில் காட்டி பிரச்சனை செய்யாதீர்கள்.

64 ஆவது குடியரசு தினத்திற்கு ஒரு நாள் முன்பு, மதத்தின் பெயரைக் காரணம் காட்டி, சாதாரண ஒரு திரைப்படத்தை, மிகப்பெரிய கலவரம் ஒன்றை வெடிக்கச் செய்யும் அபாயம் இருப்பதாகக் குற்றம்சாட்டி, நம் அரசு தடை செய்திருக்கிறது. படம் பார்த்தவன் என்ற முறையில் (கெத்து!) நான் அடித்துச் சொல்கிறேன்… ஸாரி, நோ வயலன்ஸ்... சத்தியமாகச் சொல்கிறேன் விஸ்வரூபம் எந்த விதத்திலும் முஸ்லீம் சமூகத்தையோ இஸ்லாமையோ இழிவு படுத்தவில்லை. இது முழுக்க சர்வதேச தீவிரவாத இயக்கமான அல்-கொய்தா சம்பந்தப்பட்ட படம். முஸ்லீம்கள் உட்பட (ரிலீஸிற்கு முன் ஸ்பெஷல் ஷோ பார்த்த தலைவர்களைத் தவிர) படம் பார்த்தவர்கள் அனைவரும் இதைத்தான் சொல்கிறார்கள். படத்தில் காட்டப்படும் தீவிரவாத இயக்கம் தங்களது அடையாளமாக தங்களது மதத்தைதான் கொண்டுள்ளன. பிறகு அவர்களை வேறு எப்படி தான் காட்டுவது? உலக அமைதியை குலைக்கும் சர்வதேசத் தீவிரவாதிகளைப் பற்றிய படத்தைப் பார்துவிட்டு நாம் எப்படி நமது பக்கத்து வீட்டுக்காரர்களையும், உடன் வேலை செய்பவர்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்போம் என்று பிரச்சனையை ஆரம்பித்துள்ள “மதவாதிகள்” கூறுகிறார்கள் என்று எனக்குச் சத்தியாமாகத் தெரியவில்லை. வேண்டுமென்றால் “இந்து மதச் சங்கங்கள்” பிரச்னை செய்யலாம். சில இடங்களில் செம்ம ஓட்டு ஓட்டியிருக்கிறார் கமல். திரைப்படமாக மட்டும் அதைப் பார்த்ததால் எனக்கு சிரிப்பு மட்டுமே வந்தது. “என் சாமிய வாடா நக்கல் பண்ற” என்று கோபமெல்லாம் வரவில்லை.

படத்திற்கு இப்பொழுது ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. காரணம் இது 95 கோடி பட்ஜெட்டில் உருவான பிரம்மாணட பட்ஜெட் படம் என்பதாலோ, கமல் படம் என்பதாலோ அல்ல. படத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த “மதம் சார்ந்த தடை” மட்டும் தான். இந்தக் தடை மட்டும் இல்லையென்றால் படம் இந்த அளவு எதிர்பார்க்கப்பட்டிருக்குமா? அந்தத் தகுதி விஸ்வரூபத்திற்கு உண்டா?

எனது பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

சரி, ஆரம்பத்திலிருந்து என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது விஸ்வரூபத்தைச் சுற்றி? கேட்டதை, படித்ததை, புரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

முதலில் செல்வராகவன் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. அதுவே முதல் முரண். செல்வாவால் இந்தப் படத்தை இயக்கியிருக்கவே முடியாது. சொல்லப்போனால் கமலைத் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த மாதிரி ஒரு சப்ஜெக்ட்டை படமாக, அதுவும் இந்தத் தரத்தில் எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும் கமல் - செல்வா இருவருமே எதிரெதிர் துருவங்கள். இவர்கள் இணைவதால் என்னைப் பொறுத்த வரை யாருக்கும் எந்த லாபமும் இருக்கப் போவதில்லை.

“தலைவன் இருக்கிறான்” – இது தான் முதலில் வைக்கப்பட்ட பெயர் (அது வேறு கதையா என்று தெரியவில்லை). Hannibal படத்தின் காப்பி என்றார்கள். “விஸ்வரூபம்” என்று பெயரை அறிவித்தார் கமல். "சமஸ்கிருத பெயரை மாற்று" என்று அப்பொழுதே ஆரம்பித்தார்கள். ஆனால் அது எடுபவைல்லை. முதல் காணொளியும் வெளியானது. விஸ்வரூபம் என்று டைட்டில் வருவதைப் பார்த்தே நானெல்லாம் மிரண்டு போனேன்.

ஹீரோயின் தேடல் பல நாட்களாக நடந்தது. யார் யார் பெயரெல்லாமோ அடிபட்டு கடைசியில் கௌதமி சிபாரிசு செய்த "பூஜா குமார்" தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கு தயாரிப்பாளர்களான PVPயுடன் இணைந்து தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஸ்வரூபத்தை ஆரம்பித்தார் கமல். பட்ஜெட் எகிறவே பாதிலேயே கழண்டுகொண்டது PVP. செலவழித்த பணத்தை படம் வந்தவுடன் கொடுத்தால் போதும் என்று PVP சொன்னதாகத் தகவல். தனியாளாக கையில் இருக்கும் காசை எல்லாம் கொட்டி ஒரு வழியாக ரூ95 கோடி பட்ஜெட்டில் விஸ்வரூபத்தை எடுத்து முடித்தார் கமல். படம் முடிந்த நிலையில் திடீரென்று “பிரமிட் சாய்மீரா” தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு பெயரில் கமல் மீதும் ராஜ்கமல் நிறுவனத்தின் மீதும் கேஸ் ஒன்றைப் போட்டது. அது - கமல் தனது "மர்மயோகி" படத்திற்காக எங்களுடன் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் படமும் எடுக்கப்படவில்லை, பணமும் செட்டில் செய்யப்படவில்லை, ரூ10 கோடி வேண்டும் என்பதாகும். பதிலுக்கு “படம் கைவிடப்பட்டதால் அந்த நிறுவனம் தான் எனக்கு ரூ40 கோடி தர வேண்டியிருக்கிறது” என்று கேஸ் போட்டார் கமல். பெரிய சத்தம் இல்லாததால் கேஸ் என்ன ஆனதென்று தெரியவில்லை. விஸ்வரூபத்தை வெளியிட இடைக்காலத் "தடை" விதிக்க வேண்டும் என்று முதன்முதலில் திருவாய் மலர்ந்தவர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தமிழ் சினிமாவிற்கு தன் படங்கள் தவிர்த்து கொடுத்த மற்றவை
படத்தின் தரம் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிய கமல் AURO 3D என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். இதெல்லாம் சாத்தியமா? எத்தனை தியேட்டர்களில் இதெல்லாம் இருக்கு. சும்மா வெட்டி பந்தா என்கிற ரீதியில் தான் விமர்சனங்கள் வந்தது. ஆனால் என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் விஸ்வரூபத்தை AURO 3D யில் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். விஸ்வரூபத்தில் AURO 3Dயை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கமல்,வேறு எதையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பதன் பட்டியல் தான் மேலே நீங்கள் பார்க்கும் படம்.

அடுத்து DTH. இது நிச்சயம் தோல்வித் திட்டம் தான். ஆனால் பின்னாட்களில் இது தான் தமிழ் திரையுலகை ஆளப் போகிறது. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். இப்பொழுது மட்டும் தாத்தா ஆட்சி நடந்துகொண்டிருந்து, கமல் தன் படத்தின் DTH உரிமையை சன் குழுமத்துடன் சேர்ந்து நடத்தியிருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்குமா? கிளம்ப விட்டிருப்பார்களா? ஊடக அதிகாரத்தைப் பொறுத்த வரை “அவர்கள்” மட்டும் தான். எவ்வளவு முயன்றாலும் அம்மாவால் தன் ஆட்சியில் அந்த இடத்தை அடைய முடியாது. வேண்டுமென்றால் முடக்கி வைக்கலாம். இந்த இடத்தில் வேறு ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். கமல் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல வியாபாரியும் கூட. அவர் இயக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள், அவர் நடிக்கும் படங்கள், அவர் பிறர் தயாரிப்பில் நடிக்கும் படங்கள் என்பதையெல்லாம் சற்று உற்று கவனித்தால் மனிதரின் சாணாக்கியத்தனம் (அல்லது குள்ளநரித்தனம். எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) தெரியும். உதா: மன்மதன் அம்பு. தசாவதாரம் கொடுத்த இயக்குனரும் நடிகரும் மீண்டும் இணைந்து இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பார்களா? அதுபோலவே சரியாக விலை போகாத தன் விஸ்வரூபம் படத்தை விலையேற்றத்தான் கமல், இந்த DTHஐ கையில் எடுத்து தியேட்டர்காரர்களைக் குழப்பியிருக்கிறார் கமல் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. DTH பூச்சாண்டி தியேட்டர்காரர்களை ஏகத்திற்கும் பயமுறுத்தியது உண்மை. அதனாலேயே விஸ்வரூபத்தின் வியாபார விலைம் ஏறியது. தனது பிறந்த நாளின் போது பெரிய மலர்க்கொத்துடன் அம்மாவை கமல் சந்தித்ததையும், சேட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவிக்கு கொடுத்ததும், ஜெயா டிவி முத்திரையுடன் மூன்று பெருநகரங்களில் ஆடியோ ரிலீஸை நடத்திக் காட்டியதையும் “தனக்கு சப்போர்ட் இருக்கிறது” என்பதை கமல் தெரிவிப்பதற்காகத்தான் என்கிறார்கள், விவரம் தெரிந்தவர்கள் (ஏதோ புலனாய்வு பத்திரிக்கைக் கட்டுரை மாதிரி, "விவரம் தெரிந்தவர்கள்" "விஷயம் அறிந்தவர்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். கேள்விப்பட்ட விஷயத்தை வேறு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்).

சரி, அம்மாவைச் சந்தித்து "ஆசி" வாங்கிய பிறகும் ஏன் கமலுக்கு படத்தை இப்போது வெளியிடுவதில் இவ்வளவு பிரச்சனைகள்? காரணம் “கமல் வாய்” தான் என்கிறார்கள். தமிழரான டில்லி அரசியல் தலைவர் சம்பந்தப்பட்ட ஒரு விழாவிற்கு சென்ற கமல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் “அடுத்த பிரதமர் ஆவதற்கு எல்லா தகுதியும் உடையவர் இவர்தான்” என்று பேசி வைக்க, பிரச்சனை ஆரம்பமானது. அம்மாவிற்கு பிரதமர் ஆசை இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை (இருந்தாலும் ஆச்சரியமில்லை) ஆனால் அந்த டெல்லி அமைச்சருக்கும் அம்மாவிற்கும் இடையில் இருக்கும் பிரச்சனை ஊரறிந்த ஒன்று. டெல்லிக்கே சென்று அவரை மாற்ற வேண்டும் என்று சத்தம் போட்டு விட்டு வந்தவர் இவர். நிச்சயம் கமலின் பேச்சு எரிச்சலைக் கொடுத்திருக்கும. சரி, இது ஒன்று மட்டும் தான் பிரச்சனையா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கலயாண், விஸ்வரூபம் தடை சமந்தமாக வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “சேட்டிலைட் உரிமத்திற்கான நிழல் யுத்தம் தான் இந்தத் தடை!” - என்னடா இவர் புதிதாக எதையோ சொல்கிறார் என்றால், “விஷயம் இல்லாமல் இல்லை கமல் தனது விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவிக்கு தான் கொடுப்பதாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது விஜய் டிவிக்கு கைமாறியுள்ளது” என்கிறார்கள். அம்மா அதனால் செம்ம டென்ஷன். யோசித்துப் பார்க்கையில் ஒருவேளை இது தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இந்து மதத்தின் பெரிய தலைவர் என்று கருதப்பட்ட காஞ்சிபுரத்துக்காரரையே கைது செய்து இழுத்துக்கொண்டு போனவர் அம்மா. தாத்தாவை நடுராத்திரியில் கைது செய்ததையெல்லாம் மறக்கவே முடியாது. இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அப்படிப் பட்டவருக்கு சினிமாவைக் காரணம் காட்டி போராட்டத்தில் குதித்திருக்கும் இந்த மதவாதிகள் செய்யும் பிரச்சனைகள் எல்லாம் நிச்சயம் ஜுஜுப்பி தான். “கமலுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கு படத்தைப் போட்டுக்காட்டும் ஐடியாவே இல்லை, அரசு உத்தரவின் பேரில் தான் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இல்லையென்றால் தான் எது செய்தாலும் எதிர்ப்பவர்களுக்கு, மதவெறி பூச்சு பூச்சுபவர்களுக்கு தனது “இந்தப்” படத்தை போட்டுக்காட்ட கமல் என்ன முட்டாளா?” என்றொரு வாதம் இருக்கிறது - வாஸ்தவம் தானே? சொந்த செலவில் யாராவது, அதுவும் "கமல்" சூனியம் வைத்துக்கொள்வாரா? வைத்துக்கொள்ள ஆணையிடப் பட்டிருக்கிறார், என்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த ஒரு படத்திற்கு 144 தடை போடப்பட்டு ஊரெல்லாம் போராட்டம், அறிக்கை, முற்றுகை என்று நடந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் முதல்வர் எதுவும் பேசாமல் இருப்பதும், நடிகர் சங்கங்கமும் அதில் உள்ல பெரிய தலைகளும் பட்டும் படாமல் இந்த விஷயத்தில் நடந்துகொண்டிருப்பதும், தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதி "அரசுடன் பேசி சுமூகமாகுங்கள்" என்று சொல்வதெல்லாம் எதற்கு? தன் ஊரில் தன் படத்திற்கு நடப்பதை கவனிக்காமல் கமல் இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்து கொண்டு “சட்டம் தன் கண்கட்டை அவிழ்க்கும்” என்று வசனப்பேட்டி மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது வெளியில் நமக்கு தெரிவதை விட (காட்டப்படுவதை விட) உள்ளுக்குள் பல பெரிய பிரச்சனைகள், உரசல்கள் இருப்பது உண்மைதான் என்று தெரிகிறது.

இதன் உச்சகட்டம், இந்தப் பிரச்சனைகளால் கமலுக்கு கொடுக்கப்படவிருந்த பத்மபூஷன் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என்று வெளிவந்த செய்தி. இது உண்மை என்றால் நிச்சயம் கமல் பாவம் தான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க மறுபுறம் மிக சுவாரஸ்யமான கதை ஒன்று வலம்வருகிறது. விஸ்வரூபம் திரைக்கதையை விட அதிக சுவாரஸ்யம் உள்ள கதை இது. இது கமலின் ஹாலிவுட் பிரவேசத்தை சுற்றி அமைக்கப்பட்ட கதை. ஹாலிவுட் அல்லது அமெரிக்காவிற்கு விருப்பமான சப்ஜெக்ட் “முஸ்லீம்கள் - தீவிரவாதம்”. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இந்த ஏரியா அல்வா சாப்பிடுவது மாதிரி. அமெரிக்க மக்களும் தங்களது நாட்டைத் தாக்கும் தீவிரவாதிகளை ஹீரோக்கள் அழிப்பதை எத்தனை படங்களில் காட்டினாலும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பார்கள். அதனாலேயே, கமல் தனது நீண்ட நாள் ஆசையான ஹாலிவுட் (ஆஸ்கார்) கனவை நிறைவேற்ற, அதாவது அமெரிக்கர்களை மகிழ்விக்கவே இப்படி ஒரு படத்தை / சப்ஜெக்ட்டை எடுத்தார் என்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் கமலுக்கு ஹாலிவுட்டில் நுழைய ஒரு அருமமையான விசிட்டிங் கார்டாக அமையும். இத்தனை நாள் இல்லாமல் சரியாக இந்தப் படத்தின் பொழுது மட்டும் திடீரென்று “பேரி ஆஸ்போர்ன்” உள்ளே வந்ததும், கமலின் ஹாலிவுட் பயணம் உறுதிசெய்யப்பட்டதும் எப்படி? “சரி, அப்படியே இது உண்மையாக இருந்தாலும், சொந்தக் காசு 95 கோடியைப் போட்டா ஒருவர் தன்னை ஹாலிவுட்டுடன் இணைத்துக்கொள்வார்?” என்று நாம் கேட்கலாம். அதற்கும் “கொள்வார்” என்றே பதில் தருகிறார்கள். போட்ட காசை எடுப்பதற்குத் தான் “தடை” என்கிற ஆயுதம் இருக்கிறதே. நிச்சயம் படத்தின் “கன்டென்டிற்காக” தமிழகத்தில் பிரச்சனை வரும். படம் முடக்கப்படும். ஏற்கனவே DTH முயற்சியில் “தனியாளாக நின்று போராடியவர்” என்ற பெயர், ஆதரவு இருக்கிறது, இப்பொழுது இந்தத் “தடை”யும் அதில் சேர்ந்தது கொண்டால் பெரிய அளவில் அனுதாப அலை அடிக்கும் (அடித்தது), ஆதரவு பன்மடங்கு பெருகும் (பெருகியிருக்கிறது), எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தும் (உயர்ந்திருக்கிறது). அதை வைத்தே போட்ட காசையும் எடுத்துவிடலாம், ஹாலிவுட்டிற்கும் போய் விடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். எப்புடி?” என்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. காரணம், சொன்ன தேதியில் படம் வெளியாகாததால், கமலுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. திருட்டு டிவிடி பரபரப்பாக வெளியாகி சக்கை போடுபோட்டுக் கொண்டிருப்பபதும் அதைத் தடுக்க தமிழ் சினிமா ஆர்வலர்களும், கமல் ரசிகர்களும் போராடிக்கொண்டிருப்பதும் உண்மை. மதவாதிகளோ "கட்" எல்லாம் இல்லை, மொத்தமாகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். இதெல்லாம் என்னைக் கேட்டால் கமலை தெருவில் தான் நிறுத்தும். ஹாலிவுட்டில் அல்ல!

இவையெல்லாம்தான் விஸ்வரூபத்தின் விஸ்வரூப பிரச்னைகளைச் சுற்றிச் சொல்லப்படும் விஷயங்கள். எது எப்படியோ நமக்குச் சொல்லப்படும் ஆயிரம் கதைகளில் எது உண்மை என்பது மட்டும் இன்று வரை தெரியவே இல்லை என்பது மட்டும் நிஜம்.

படம் பற்றி இறுதியில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. இதோ…

எந்தத தடையும் இன்றி சொன்ன தேதியில் வெளிவந்திருந்தால் நிச்சயம் எடுத்துக்கொண்ட களத்திற்காகவும், எடுத்த விதத்திற்காகவும் மிகுந்த பாராட்டுக்களையும், நல்ல லாபத்தையும் நிச்சயம் படம் கொடுத்திருக்கும். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு நல்ல, புதிய never seen before முயற்சி தான், விஸ்வரூபம். “ஹாலிவுட்! ஹாலிவுட்!!” என்கிறார்களே அந்தத் தரத்தில் (பிரம்மாண்டத்தில் மட்டும்) எங்களாலும் படம் எடுக்க முடியும் என்று வென்று காட்டிய ஒரே காரணத்திற்காக கமலுடன் சேர்ந்து நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நிலையில் ஓடும் அத்தனை படங்களையும் தடை செய்துவிட்டு விஸ்வரூபத்தை மட்டும் எல்லாத் திரையரங்குகளிலும் திரையிடலாம். அவ்வளவு தகுதிகள் இருக்கிறது விஸ்வரூபத்திற்கு. ஆனால்…


கமல் இயக்கிய முந்தைய படங்களான “ஹேராம்”, “விருமாண்டி” படங்கள் அல்லது அவர் நடிதத படங்களான “சலங்கை ஒலி”, “நாயகன்”, “தேவர் மகன்”, “மகாநதி”, “அன்பே சிவம்” போன்ற படங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது “விஸ்வரூபம்” நிச்சயம் கமலின் “மாஸ்டர் பீஸ்” அல்ல. இது கமலின் மற்றுமொரு கமர்ஷியல் படம், அவ்வளவே. மற்றபடி ஹேராம் எடுக்கும் பொழுது நாம் பார்த்த அந்தக் கமல், அவருக்கு இருந்த கட்ஸ், விருமாண்டியில் நாம் பார்த்த கமல், கதையைச் சொன்ன விதத்தில் அவருக்கு இருந்த ஆளுமை - இரண்டும் விஸ்வரூபத்தில் இல்லை. முதல் முயற்சி என்பதால் இதையெல்லாம் நாம் தாராளாமாக ஏற்றுக்கொள்ளலாம். சொந்தக் காசை போட்டு கமல் இவ்வளவு உழைத்திருக்கிறார். தாராளமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். இந்தக் கொண்டாட்டங்கள் தான் நாளைய மாஸ்டர் பீஸ் (மேலே படம் காண்க) களுக்கு அஸ்திவாரம்! 

ஆனால் மதவாதிகளின் வேண்டாத செயல்களால் படம் முடங்கிக்கிடக்கிறது. பல்வேறு வகையில் ஒரு நல்ல படைப்பு தியேட்டரை அடையும் முன்னரே தொடர்ந்து கருக்களைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறாது. எது எப்படியோ கமலுக்கு விஸ்வரூபத்தால் மிகப்பெரிய நஷ்டம் என்பது மட்டும் உறுதி. நம்மால் ஆன சிறு உதவி படம் தியேட்டரில் வெளியாகும் வரை காத்திருப்பது. இணையத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தின் தரவிறக்க "லின்க்"குகள் எங்கேனும் தென்பட்டால் உடனே maiam360degree@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அந்த  அந்த "லின்க்"கை  அனுப்பிவையுங்கள். இது தமிழ் சினிமாவிற்கு, கமலுக்கு நாம் செய்யும் பேருதவி.

என்னைக் கேட்டால் கமல் இனி தமிழ் படமே எடுக்க வேண்டாம், ஹாலிவுட்டிற்கே போய்விடட்டும். திறமைக்காரராக இருந்தால் நிச்சயம் உலகப் புகழ் பெருவார். அல்லது சிலர் சொல்வது போல் கமல் “போலி” என்றால் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வருவார். எதுவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்மை தான்.

“தடை சரியா?" என்பதைப் பற்றியும் மேலும் எனது கருத்துக்கள் சிலவும் விரைவில்…

Tuesday, January 22, 2013

2013 - விஸ்வரூபம் தொடங்கி எதிர்பார்ப்பிற்குரிய படங்கள்


2013 ஆம் ஆண்டில் எனது முதல் பதிவு அட்டகாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர் பார்த்தேன். ஒரு பெரிய பதிவும் எழுதினேன். ஆனால் அந்தப் பதிவை எனது முதல் பதிவாகப் போட மனம் வரவில்லை. 2012 ல் சூடு போட்டுக்கொண்ட பிறகும் புத்தியில்லாமல் மீண்டும் அதே பாணிப் படங்களை வெளியிடுகிறார்கள் என்றால் தமிழ் சினிமா ரசிகனை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் இன்றைய சினிமாக்காரர்கள் என்பது தெரிகிறது. வந்த மூன்றில் வழக்கம் போல ஸ்டுடியோ கிரீன் பிரம்மாணடமாக வெளியிட்ட அலெக்ஸ் பாண்டியன் “மஹா மட்டம்”, சமர் “பரவாயில்லை”, கண்ணா லட்டு தின்ன ஆசையா “சூப்பர்” என்ற விமர்சனங்ககளைப் பெற்றிருக்கிறது. சரி, இந்த மூன்று படங்களுக்கும் ஒரே டிக்கெட் விலையைக் கொடுத்து தான் பார்த்திருப்பார்கள். இந்த வாரம் வெளியாகும் விஸ்வரூபத்திற்கும் அதே பணத்தை தான் கொடுக்கப் போகிறார்கள். ஆனால் க.ல.தி.ஆ என்ற பவர் ஸ்டார் நடித்த காவியத்திற்கு கிடைத்த பெருந்தன்மையான “சூப்பர் படம்” என்கிற அந்தஸ்த்து விஸ்வரூபத்திற்குக் கிடைக்குமா? தெரியவில்லை. காரணம் இது கமல் படமாயிற்றே. பவர் ஸ்டாருக்கு இருக்கும் மரியாதை கூட கமலுக்கு இல்லை அப்படித்தானே? சரி அது அடுத்த வாரக் கதை. அப்பொழுது பார்த்துக்கொள்வோம். இப்போதைக்கு தமிழ் சினிமாவிற்கு 2013 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை ஒரு முன்னோட்டம் போல் பார்த்து கணக்கை ஆரம்பித்து வைப்போம்.

விஸ்வரூபம்
நிச்சயமாக இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படம் விஸ்வரூபம் மட்டும் தான். இந்தப் படத்தைப் பற்றிய முன்னோட்டம் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. படம் வந்த பிறகு நிச்சயம் ஒரு அனுபவப் பதிவு, முடிந்தால் போஸ்ட்மார்ட்டம் தொடர் எழுத நினைத்திருக்கிறேன். விமர்சனம் எழுத வேண்டிய அவசியமே இருக்கப்போவதில்லை. ஏனென்றால் இப்பொழுதே நண்பர்கள் சிலர் தங்களது கீ-போர்டுகளைத் துடைத்து வைத்து முன்னுரையையும் எழுதி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம், கமல் இந்த வசிஷ்டர்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெருகிறாரா, இல்லையா என்று.


பரதேசி
விஸ்வரூபத்திற்கு அடுத்து இந்த ஆண்டு நான் அதிகம் எதிர்பார்க்கும் படம். பாலாவின் படம். பாலா ஸ்டாண்டர்ஸ்டை வைத்துப் பார்த்தால் "அவன்-இவன்" மிகவும் சுமாரான ஒரு படம். ஆனால் விஷாலிடமிருந்து வெளிப்பட்ட நடிப்பில் பாலா டச் இருந்தது. எத்தனையோ படங்கள் விஷால் நடித்து விட்டார். ஆனால் இந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் பாவம் படம் பிளாப் என்பதால் கேவலம் ஒரு விஜய் அவார்டு கூட கிடைக்கவில்லை விஷாலுக்கு. அதை எல்லாம் சரிகட்டி வீடு கட்டி அடிக்கும் “பரதேசி” என்பது டிரைலரிலேயே தெரிகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டத்திற்கு கொத்தடிமைகளாகப் போகும் கூட்டத்தினரின் கதை. முரளி மகன் அதர்வா நடித்திருக்கிறார். இதே கொத்தடிமை கான்செப்ட்டை வைத்து முரளி நடித்த வாட்டக்குடி இரணியன் படம் “ரா” தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. பரதேசி அந்தப் படத்தை விடம் பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அழகிருந்தும் அடையாளமில்லாமல் போன வேதிகாவிற்கும், திறமையிருந்தும் சரியான படங்கள் அமையாமலிருக்கும் தன்ஷிகாவிற்கும் பரதேசி தான் புதிய விசிட்டிங் கார்டு. பரதேசி படம் பார்த்த பிறகு ஒரு கப் தேநீர் குடிக்கவே நாம் யோசிப்போம் என்கிறார் பாலா. விரும்பிச் சென்று, மனம் கனத்து, திருப்தியாக மனம் விட்டு அழுது வரும் அனுபவத்தை பாலாவால் மட்டுமே கொடுக்க முடியும். நான் கடவுள் பார்த்த பிறகு எனக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம் என்பதை நான் மனதார உணர்ந்தேன். பரதேசியை எதிர்கொள்ள உண்மையில் எனக்கு பயமாக இருக்கிறது. போன வருடமே வெளியாக வேண்டியது, என்ன நடந்ததோ அடுத்த மாதம் தான் திரைக்கு வருகிறது.



கடல்
மணிரத்னம் – இந்த ஒரு பெயரைத் தவிர படத்தில் எதிர்பார்க்க ஒன்றுமே இல்லை. இது மற்றுமொரு அலைபாயுதே வாக இருக்கலாம் அல்லது உணர்வுகளை மெலிதாக தாக்கிச் செல்லும் "கன்னத்தில் முத்தமிட்டால்" போலும் இருக்கலாம். ஆனால் டிரைலரைப் பார்த்தால் மீனவர் பிரச்சனையைப் பேசும் படமாகவெல்லாம் தெரியவில்லை. எங்கெல்லாமோ பயணிக்கும் கதையின் கிளைமாக்ஸில் ஹீரோ கடைசியில் சிங்கள குண்டடிபட்டு இறக்கிறார் என்று காட்டினால், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் படம் பிளாப். மற்றுமொரு முக்கிய விஷயம். வசன உச்சரிப்பு. மணி படங்களில் வசனங்கள் வர வர ஏன் இப்படி கேட்பரைச் நோகடிப்பதாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் 'குரு', ‘ராவணன்’ இப்பொழுது ‘கடல்’; கேரக்டர்களை வலுக்கட்டாயமாக 'ஏலே மக்கா என்ன சொல்லுத' என்று நெல்லைத் தமிழ் பேச வைத்து "நேட்டிவிட்டி டச்" கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தப்பே இல்லை. ஆனால் இது அளவிற்கதிக நேட்டிவிட்டியாகப் படுகிறது. நானும் தூத்துக்குடியில் வளர்ந்தவன் தான். எங்கும் இவ்வளவு இன்டென்சிவ் ஸ்லாங் கேட்டதில்லை (மீனவர்கள் உட்பட). டிரைலரிலேயே பாதி வசனங்கள் புரியவில்லை, படத்தில் எப்படியோ. மணிக்கு இன்றும் சாதாரண தமிழே சரியாக வராது என்கிறார்கள். பிறகு எதற்கு இப்படி? அதிலும் அர்ஜுன், அரவிந்த்சாமி எல்லாம் நெல்லைத் தமிழ் பேசுவது… பார்ப்போம் படத்தில் எப்படி இருக்கிறது என்று. மேலும் தமிழுக்கு வெறும் மூக்கு, முதுகு என்று அறிமுகப்படுத்திவிட்டு தெலுங்கில் போய் கதாநாயகன் - கதாநாயகியை அறிமுகப்படுத்தியதும் கடுப்பேற்றிய ஒரு விஷயம். இத்தனைக்கும் தைழிற்கென்று தனியாகவெல்லாம் எடுக்கவில்லை. வெறுமனே டப் மட்டும் தான் செய்துள்ளார்கள். அதற்கே இவ்வளவு அலப்பறை. தேவையா?


இரண்டாம் உலகம்

செல்வராகவன் – ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத மரியாதை இந்தப் படத்திற்கு கிடைக்க வேண்டும். அதை விட பிரம்மாண்டமான படமாக இந்தப் படம் இருக்க வேண்டும். மற்றபடி படத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, ரிலீஸ் தேதி உட்பட…

ஆதிபகவான்

அமீர் நடித்த “யோகி” பார்த்த பிறகு அமீரின் மீதிருந்த மரியாதை குறைந்தது உண்மைதான். உலகமே கொண்டாடும் உலகப்படமான பருத்திவீரனை எடுத்து விட்டு வேறொரு உலகப் படத்தை அட்டைக்காப்பி அடித்த படத்தில் அவர் எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை. ஆதிபகவான் அந்த கரையைப் போக்கலாம். பருத்திவீரனுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத களம். ஆனாலும் அமீர் கலக்கியிருப்பார் என்று நம்பலாம். காரணம் அவரது முதல் படம் மௌனம் பேசியதே சிட்டி சப்ஜெக்ட், இரண்டாவது ராம், ஊட்டியில் நடக்கும் கதை. மூன்றாவது பருத்திவீரன். இப்பொழுது மாபியாவை கையில் எடுத்து பாங்காக் சென்றிருக்கிறார். படம் அடுத்த மாதம் (மாவது) வெளியாவதாகத் தெரிகிறது.



தங்க மீன்கள்
“கற்றது தமிழ்” ராம் – இன் இரண்டாவது படம். படத்திலும் இவரே நடித்திருக்கிறார். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம் இந்தப் படம். ராமிற்கு சினிமா மீதிருக்கும் கிறுக்கிற்கு “கற்றது தமிழ்” படம் ஒன்றே போதும். ஆனால் இந்தப் படத்திலும் அது கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பதற்கு சான்றாக ஒரு செய்தியைப் படித்தேன். படத்தில் ராமின் மகளாக 5 வயதில் ஒரு குழந்தை நடித்திருக்கிறது. கதை மூன்று வருடங்களுக்கு பின் நகர வேண்டும். வளர்ந்த வேறோரு குழந்தையைப் போட்டு மற்றவர்களைப் போல படமெடுக்காமல் 5 வயதில் நடித்த குழந்தை 8 வயதாகும் வரை காத்திருந்து, அவரை வைத்தே படமெடுத்திருக்கிறார். இது உண்மையாக இருக்குமெனில் ராமின் சினிமா கிறுக்கை நான் தலைவணங்குகிறேன். இந்தப் படதின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்பது படத்தை கவனிக்க வைக்கும் கூடுதல் சிறப்பு. இயக்குனர் ராம் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

டேவிட்
பிஜாய் நம்பியார் – ஹிந்தி “ஷைத்தான்” படம் கொஞ்சம் குழப்படியான கதை என்றாலும் வித்தியாசமான படம். முக்கியமாக கேமரா கோணாங்கள் இசை, மேக்கிங்கில் அசரடித்த படம். டிசைன் டிசைனாக பிளாப் கொடுத்துக்கொண்டிருக்கும் விக்ரமிற்கும் ஜீவாவிற்கும் இந்தப் படம் ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம். வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே பெயருள்ள இருவருக்குள் நடக்கும் இரு கதைகள் என்கிற ஒன்-லைனே திரைக்கதை எப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. மேலும் ஷைத்தானில் இருந்தது போலான அதீதபோதை தரும் இசையினூடே காட்டப்படும், நமக்குள் இருக்கும் மிருகத்தை மிருதுவாக வருடி வெளிக் கொண்டுவரும், ரசிக்ககூடிய வயலன்ஸ் காட்சிகள் இந்தப் படத்திலும் நிச்சயம் இருக்கும் என்று நம்பலாம்.



ஷங்கர் – பிரம்மாண்ட இயக்குனர் என்பதைத் தாண்டி இவரது பழைய படங்களில் இருந்த அந்த “செய்தி” சமீபத்திய படங்களில் இல்லை. எல்லோரும் காதலைக் கட்டி அழுது கொண்டிருந்த காலத்தில் இவர் காட்டிய காதலன் நிச்சயம் வேறு விதமாக இருந்தது. ரஜினுக்கு எழுதிய “முதல்வன்” எல்லாம் வரலாறு. இந்தியன் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால் இவரது சமீபத்திய படங்களில் அப்படி எதுவுமே இல்லை. பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று இவர் சொல்வதெல்லாம் 15ரூபாய்க்கு ஹாலிவுட் பட டிவிடிகளாக பர்மா பஜாரிலேயே காணக்கிடைக்கிறது. தமிழுக்கு சங்கருக்கு பெருமை அவர் சொல்லும் கதை. ஐ எப்படி என்று வந்தால் தான் தெரியும்.

ராதாமோகனின் "கௌரவம்” - தமிழகத்தில் பலகாலமாக நடந்துகொண்டிருந்தாலும் திடீரென்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் கெளரவக் கொலைகளைப் பற்றிய படம். ராதாமோகன் படம் என்பதால் நம்பி போகலாம். சசியின் “555” – பூ படத்திற்குப் பிறகு வெகு நாட்கள் கழித்து வரும் படம். பரத் தனது மொத்த உழைப்பையும் போட்டு நடித்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. V.Z.துரையின் “6 மெழுகுவர்த்திகள்” – துரைக்கும் நடித்திருக்கும் ஷியாமிற்கும் முக்கியமான படம். டிரைலர் நம்பிக்கை தருகிறது. பாண்டிராஜின் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” – முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டிருக்கும் இது நிச்சயம் பாண்டிராஜ் ஏரியா இல்லை என்றாலும் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது, எனது நண்பர் ஒருவர் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் என்பதாலும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஹரியின் “சிங்கம் II” – வேங்கை அடித்த அடி ஹரிக்கு நினைவில் இருக்கும் என்று நம்பலாம். சுசீந்திரனின் “ஆதலால் காதல் செய்வீர்” – "தமிழக மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று பேட்டி கொடுக்க வைத்த படம் ராஜபாட்டை. என்ன நினைப்பில் அவர் இந்தப் படத்தை எடுத்தார் என்றே தெரியவில்லை. வெண்ணிலா கபடிக் குழுவில் இருந்த வெள்ளந்திக் காதல், நான் மகான் அல்ல வில் இருந்த அந்த கியூட் லவ் இரண்டும் இந்த காதல் செய்வீரில் இருக்கும் என்று நம்புவோம். வசந்தின் “மூன்று பேர் மூன்று காதல்” – நல்ல இயக்குனராக இருந்தாலும் இவரது படங்கள் சீரியல்களைப் போல் இருப்பதை மறுக்க முடியாது. அதிவேகமாகப் போய்க்கொண்டிருக்கும் நம் மக்களும் வசந்த் காட்டும் மெல்லிய உணர்வுப்பூர்வமான காட்சிகளை திரும்பிப்பார்க்கக்கூட நேரமில்லை. பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. படம் எப்படி என்று வந்த பிறகு தான் தெரயும். சமுத்திரகனியின் “நிமிர்ந்து நில்” – அனைவரும் ரசிக்கும் வண்ணம் நல்ல படங்களைக் கொடுக்கும் ஓரளாவிற்கு சென்சிபிளான இயக்குனர் சமுத்திரகனி. நம்பலாம்.

வெங்கட் பிரபுவின் “பிரியாணி”, விஜய் யின் “தலைவா”, விஷ்ணுவர்தனின் “வலை”, சுந்தர்.சி யின் “மதகஜராஜா”, ராஜேஷ்.M இன் "ஆல் இன் ஆல் அழகுராஜா" படங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. தனிப்பட்ட முறையில் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. நன்றாக இருந்தால் கொண்டாடலாம். மட்டமாக இருந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.

மேற் சொன்னதில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்யவிருப்பது சூர்யா-கார்த்தி மாமா கம்பெனி (?) யான ஸ்டுடியோ கிரீன் தான். யார் இவர்கள் என்றே தெரியவில்லை. திடீரென்று தமிழ் சினிமாவின் அசுர சக்தியாக உருவெடுத்து நிற்கிறார்கள்.

இந்தப் படங்கள் தவிர்த்து இரண்டு மிக முக்கியமான படங்கள் இந்த ஆண்டு எனது எதிர்பார்ப்பு லிஸ்டில் இருக்கிறது. இவை இரண்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.

சூது கவ்வும்
நாளைய இயக்குனர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் நளனின் முதல் முழுநீளத் திரைப்படம். நளனின் குறும்படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரியும் இவர் யார் என்று. எந்தப் படம் ஜெஇக்குமோ இல்லையோ இந்தப் படம் நிச்சயம் பட்டையைக் கிளப்பும்.

பண்ணையாரும் பத்மினியும்
அதே நாளைய இயக்குனரின் மற்றுமொரு பேமஸ் குறும்படம் திரைப்படமாகிறது. பிரீமியர் பத்மினி கார் ஒன்றை வைத்திருக்கும் பண்ணையாருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் இருக்கும் உறவை செம ஜாலியாகச் சொன்ன அருமையான குறும்படம் இது. S U அருண் குமார் இயக்கத்தில் பண்ணையாராக நம்பண்ணையாராக நம் ஜெயப்பிரகாஷும், பத்மினியின் டிரைவராக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்கள்.

முக்கியமான இரண்டு படங்களை நான் விட்டுவிட்டதாக நினைக்கலாம். காரணம் உண்டு.

கோச்சடையான் 
வெளியிடப்பட்ட ஸ்டில்களில் இருப்பது தலைவரைப் போலவே தெரியவில்லை. ஒரு சின்ன டிரைலராவது வந்தால் தான் இந்தப் படம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கவாவது முடியும். பிறகு தான் எதிர்பார்க்க முடியும். மற்றபடி ரஜினி மகள் சௌதர்யா அஸ்வின் படத்தில் எதிர்பார்க்க ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. பொம்மைப்படம் என்று பெயர் பெற்று ஒன்றுமில்லாமல் போய்விடகூடாது என்கிற வருத்தமும் இருக்கிறது. 

அன்னக்கொடியும் கொடிவீரனும்

பாரதிராஜாவின் கம்பேக். பார்க்கலாம்…

இவர்களைத் தவிர எனது விருப்ப இயக்குனர்களான மிஷ்கின் (இவர் இருக்கும் இடம் தெரியவில்லை) கௌதம் மேனன், வெற்றிமாறன் போன்றவர்கள் அடுத்து என்ன படம் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

தமிழ் சினிமாவிற்கு விஸ்வரூபம் தொடங்கி மேற்சொன்ன படங்கள் 2012 ஆம் ஆண்டின் சாபத்திலிருந்து மீண்டு ஒரு நல்ல கம்-பேக் ஆக இருக்கும் என்று நம்புவோம். விஸ்வரூபம் படத்தை மட்டும் கமல் படமாகப் பார்க்காமல் மற்றுமொரு தமிழ் படம், புதிய முயற்சி என்று நம்மவர்கள் எதிர்கொண்டாலே படம் இமாலைய வெற்றி பெரும். அடுத்தடுத்து பல கதவுகளைத் திறந்து வைக்கும். அதை விட்டு விட்டு பவர் ஸ்டாருக்கு கொடுக்கும் மரியாதை கூட கமல் ஹாசனுக்கு கொடுக்க முடியாது என்று சொன்னால், சொல்பவர்களைப் பார்த்து “அய்யோ பாவம்…” என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. படம் நன்றாக இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக கிளம்பி காரி உமிழ்கிறோம் இல்லையா? அது போலவே ஒரு படம் வெற்றி பெற்றாலும் சேர்ந்தே கொண்டாடுவோமே!


Sunday, December 30, 2012

2012 சினிமா: பாகம் 05 - தமிழ் - TOP 10, OK 10, AWARDS!

2012 ஆம் ஆண்டு வெளியான வொர்ஸ்ட் 10 படங்கள் பற்றி சொல்லிவிட்டேன். இந்தப் பதிவு இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது.

முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே.

10) அட்டக்கத்தி
விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர். அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் க்கு நன்றிகள் பல.

9) கலகலப்பு & ஒரு கல் ஒரு கண்ணாடி
இரண்டு படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் ஒரே இடம்.

கலகலப்பு - Soul Kitchen படம் நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் கலகலப்பு எனக்கு நன்றாவே இருந்தது. படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா – “அமிதாப் மாமா” இளவரசு தான். சந்தானத்தின் காமெடி அடுத்த பெரிய பலம். வயிறு குலுங்க சிரித்து விட்டு வந்த படம். இன்றும் விடாமல் இணையத்திலும், டிவியிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் படம். முக்கியமாக இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ். சுந்தர்.சி ரிட்டன்ஸ் (ஆனாலும் காப்பி காப்பிதான்!) 

ஒரு கல் ஒரு கண்ணாடி - மீண்டும் சந்தானம். சந்தானம் மட்டும் தான். ஹன்சிகா added attraction. அடுத்து தான் உதயநிதி வருகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லையென்றாலும் ஆரம்பத்திலிர்ந்து கடைசி வரை சிரித்துவிட்டு வெளியே வந்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனர் ராஜேஷ் சந்தானம் இல்லாமல் ஒரு காமெடி படமோ அல்லது ஏதாவதொரு படமோ எடுக்கட்டும், அப்பொழுது பார்க்கலாம்.

"மிரட்டல்" படத்தையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதிலும் சந்தானம் இருந்தார். காமெடியும் இருந்தது.

8) மாலை பொழுதின் மயக்கத்திலே
இந்தப் படத்தை டாப் 10னில் கொண்டுவரவில்லை என்றால் என் நண்பர்கள் என்னைப் பிண்ணிவிடுவார்கள். இந்தப் படத்தை, எத்தனை முறை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றே தெரியவில்லை. முக்கியமாக ஹீரோயின் நண்பருடன் ஹீரோ பேசும் காட்சி. நடிப்பு, வசனம், இசை என்று எல்லாமே அருமையாக அமிதிருக்கும் காட்சி இது. அருமையான ஒன்-லைன், கன்வின்ஸிங்கான திரைக்கதை, புத்திசாலித்தனமான வசனங்கள், ப்ளீஸிங்கான ஒளிப்பதிவு, இனிமையான பாடல்கள் என்று இந்தப் படம் ,மொத்தமாக கொஞ்சம் “போர்” அடித்தாலும், தனித்தனியாக இவையனைத்தும் அற்புதமாக இருக்கும். பாடல்கள் அடிக்கடி வந்து நம்மைச் சோதிப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம் தான். ஆனால் ஒரு காஃபி ஷாப்பில் நடக்கும் கதையை, வெறும் 9 கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு 2 மணிநேரத்திற்கு மேல் பாடல்கள் இல்லாமல் வேறு எப்படி நகர்த்த முடியும்? அதனால் மன்னித்துவிடலாம். இப்படிச் சொல்லக்கூடாது என்றாலும், தியேட்டருக்கு போய் பார்ப்பதை விட, ஒரு மழை பெய்யும் மாலைநேரத்தில் கையில் ஒரு சூடான காஃபியை வைத்துக்கொண்டு பார்க்க இது சரியான சினிமா. இந்தப் படத்தின் ஹீரோயின் “சுபா” இறந்த செய்தி கேட்டு நாங்கள் அடைந்த துக்கம் சொல்லில் அடங்காது. அழகு தன்னை மாய்த்துக்கொண்டது அன்று. கதாநாயகன் ஆரி கலக்கியிருக்கிறார். அருமையான expressions. சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ். மிஷ்கினின் அசிஸ்டண்ட். இதுபோனட்ர வேறுபட்ட கதைக்களங்களில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கத் தெரிந்தால் பெரிய ஆளாக வரும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் படத்தில் இவர் எழுதிய வசனங்கள் இவரது ஒரு பலம் என்றால், கோபி அமர்நாத் தின் ஒளிப்பதிவு, அச்சு வின் இசை கூடுதல் பலம்.

பி.கு: நான் மது அருந்துவதில்லை. மது அருந்துவதை ஆதரிப்பவனும் இல்லை என்பதால் மதுபானக்கடையை இங்கு கொண்டு வர மனம் ஒத்துவரவில்லை. ஆனால் “கன்டென்ட்” படி பார்த்தால், மதுபானக்கடை படமும் இந்த இடத்தில் வர வேண்டும். அருமையான முயற்சிக்கு இயக்குனர் கமலக்கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.
 
7) தடையறத் தாக்க 
சத்தியமாக இந்தப் படம் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேக்கிங்கில் என்னை அசரடித்துவிட்டது. அருண் விஜய் தன் வாழ்வில் எடுத்த பெஸ்ட் முடிவு இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகத்தான் இருக்க முடியும். ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் Characterization. ஹீரோ அருண் விஜய், ஹீரோயின் மம்தா, முக்கியமாக இரண்டு வில்லன்களை வடிவமைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெல்டன் இயக்குனர் மகிழ் திருமேனி! படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் தயவு செய்து எப்படியாவது ஒரு முறை பார்க்க முயற்சி செய்யவும்.

6) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்தப் படமும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ள, மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்ததாலோ என்னவோ, ஆரம்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மிகவும் ஸ்லோ வாக இருந்தது. ஆனால் செகண்ட் ஆப் – அல்ட்டிமேட் காமெடி. சிரித்து சிரித்து வயிறு புண்ணானது நிஜம் முக்கியமாக - ப்ப்பா… யார்டா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு. செம சிரிப்பு. நண்பர்கள் மூவர், விஜய் சேதிபதி - அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கன்டென்ட் வைத்துப் பார்க்கும் பொழுது இன்னும் கொஞ்சம் டிரிம் செய்யப்பட்டு வந்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. படம் தேவையை விட நீளம். மேக்கிங் கூட குறும்பட அளவிற்கு தான் இருந்தது என்றாலும் பரவாயில்லை. பெரிதாக “குறை” போல் எங்கும் தெரியவில்லை. இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என்று இப்பொழுதே தெரிகிறது. வாழ்த்துக்கள். படத்தில் இடம் பெறாத “ஓ கிரேசி மின்னல்” பாடல் எனது ஆல் டைம் பேவரிட்.

5) பீட்ஸா
சினிமாவிற்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. முதல் பாதி முழுக்க ஒரு கதையை சொல்லிவிட்டு, பல முடிச்சுகளை கண்டமேனிக்கு போட்டுவிட்டு இரண்டாம் பாதியில் அந்த முடிசுகளை அவிழ்ப்பதற்கான பதில்களைச் சொல்லாமல் “அப்போ நாங்க சொன்னதெல்லாம் பொய், இது தான் நிஜம்” என்று சம்பந்தமே இல்லாத வேறு ஒரு கதையை, அதுவும் கிளைமாக்ஸிற்கு கொஞ்சம் முன் சொல்வதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருப்பவனை ஏமாற்றும் செயல். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இப்படி ஏமாற்றியதை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். நானும் தான். லாஸ்ட் டுவிஸ்ட் எனக்கு பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. மேக்கிங், கதையைச் சொன்ன விதம், முக்கியமாக ஒளிப்பதிவு பிரமாதம். பிரமாதப் படுத்திவிட்டார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். விஜய் சேதுபதிக்கு இனி முழுக்க க்ரீன் சிக்னல் தான். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்து நடித்தால் தொடர்ந்து கவனிக்கப்படுவார். அட்டகத்தியைத் தயாரித்த அதே திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் C.V.குமார் தான் இந்த படத்தையும் தயரித்திருக்கிறார். நாளைய இயக்குனர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் நளன் இயக்கப் போகும் முதல் படத்தையும் நன்றிகள் பல. 

4) துப்பாக்கி
என்னைக் கேட்டால் இந்த இடம் துப்பாக்கிக்கு மிகவும் அதிகம். விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம். விஜய் இது போன்ற நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், அவருக்கு இருக்கும் மாஸ் ஓப்பனிங்கிற்கு வேல்யூ சேர்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும். துப்பாக்கியை நான் முழுக்க முழுக்க ஏ.ஆர்.முருகதாஸின் படமாகத்தான் பார்க்கிறேன். இவரது ஏழாம் அறிவிற்கு முந்தயை படங்களை கணக்கில் கொண்டால் துப்பாக்கி அப்படி ஒன்றும் சிறப்பான படம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை. இந்த ஆண்டு வெளியான எத்தனையோ ஏமாற்றங்களுக்கு (முக்கியமாக பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்கள்) மத்தியில் துப்பாக்கி எவ்வளவோ மேல். என்னை அசரடித்தது படததின் முதல் பாதி + விஜய் யின் நீட் பெர்பாமன்ஸ். இரண்டாம் பாதி OK. துப்பாக்கி பற்றிய எனது பதிவுகள் பாகம் 01, பாகம் 02

3)

2)

1)

முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அளவிற்கெல்லாம் இந்த வருடம் எந்தப் படமும் வரவில்லை என்பதால் அந்த இடங்களை காலியாக விட்டுவிட்டேன். அவசியம் வேண்டுமென்றால் இங்கிலீஷ் விங்கிலீஷை மூன்றாம் இடத்திலும் நான் ஈ யை இரண்டாம் இடத்திலும் வைக்கலாம். ஆனால் இந்த இரண்டு படங்களையும் படங்களை தமிழ் படங்கள் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொறுத்த வரை முதல் மூன்று இடங்கள் இந்த வருடம் காலியாக இருக்கிறது.

இந்த 7 படங்கள் தவிர இன்னும் 10 படங்கள் இருக்கிறது. சூப்பர் என்று சொல்லமுடியவில்லை என்றாலும், என்னைக் கவர்ந்த படங்கள் இவை. அதாவது OK 10 படங்கள். 

கும்கி

மைனாவில் உயிர் இருந்தது. ஆனால் கும்கியில் அது மிஸ்ஸிங். அதனாலேயே பெஸ்ட் பத்திற்குள் வர வேண்டிய படம் ஓக்கே பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. படத்தில் எனக்குப் பிரபு சாலமனே தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் தெரிந்தார். அவரை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருப்பது போல் தெரிந்தது. தம்பி ராமையாவின் ஒரே மாதியான காமெடி, ரிபீடட் காட்சிகள், பொம்னை சட்டையே செய்யாமல் யானையை மட்டுமே ரசிக்கும் அல்லி ப்ரீ-கிளைமாக்ஸிற்கு முன் திடீரென்று பொம்மனையும் காதலிப்பதாககச் சொல்வது, வில்லன் யானை கொம்பனை இரண்டே காட்சிகளில் மட்டுமே காட்டி, கிளைமாக்ஸ் யானை சண்டையையும் இரண்டு நிமிடத்திற்குள், அதுவும் இருட்டுக்குள்ளேயே முடித்தது, முக்கியமாக மைனாவில் ஹீரோ ஹீரோயின் என்றால் இந்தப் படத்தில் அவர்கள் தவிர்த்து மற்றவர்களைக் கொன்றது என்று படத்தில் என்னைக் கவராத விஷயங்கள் நிறைய இருந்தது. யானைகளை உண்மையாக மோத விட்டு படமெடுக்கக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசஷயம் தான். கிராபிக்ஸ் தான் ஒரே தீர்வு. கதையின் அடிநாதமே கொம்பனை எதிர்ப்பதுதான், அதாவது கிளைமாக்ஸ் யானைச் சண்டைதான். அதை வெளிச்சத்தில் இன்னமும் கொஞ்சம் செலவு செய்து தெளிவாகக் காட்டியிருக்கலாம். இடம் வாங்கிப் போட்டு, பயிர் வளர்த்து அறுவடை செய்தெல்லாம் படம் பிடித்தவர்கள், முக்கியமான இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது வருத்தம். கொம்பன் மீதே முழு கவனமும் இருந்தததால் பொம்மன்-அல்லி காதல், அதிலிருக்கும் பிரச்சனை என்பதெல்லாம் தெரியவே இல்லை. இம்பாக்ட்டும் இல்லை. “ஆடுகளம்” படத்தில் காட்டப்பட்ட சேவல் சண்டை கிராபிக்ஸ் தான். பொம்மைச் சண்டை போல் தான் இருந்தது. பெரும்பாலானோர் நேரிலேயே பார்த்திருக்கும் சேவல் சண்டையையே மக்கள் கிராபிக்ஸில் காட்டிய போது ஏற்றுக்கொண்டபோது, சாமானியர்கள் யாரும் பார்த்திராத யானைச் சண்டையை கிராபிக்ஸில் ரொம்ப பெர்பெக்டாக வேண்டாம், கொஞ்சம் திறம்படக் காட்டியிருந்தால்கூட நிச்சயம் ரசித்திருப்பார்கள். இருட்டில், கீழே பள்ளத்தில் தொங்குவது கொம்பனா மாணிக்கமா என்றே தெரியவில்லை. படம் அந்த இடத்தில் என்னைப் பொறுத்தவரையில் தோற்றுவிட்டது. இது இருக்கட்டும். விஷுவல், டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் தமிழுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் சினிமாவிற்கு மிகவும் பழையது. நமது பலம் கதை, திரைக்கதை. அதிலாவது நம் இயக்குனர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உலகமே கொண்டாடும் ஈரான் படங்களில் எல்லாம் என்ன டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கிறது? “கதை” – இது மட்டும் தான் ஹாலிவுட்டிலிருந்து மற்ற நாட்டவரை (படங்களை) வேறுபடுத்திக் காட்டும். இதை நம்மாட்கள் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி விக்ரம் பிரபுவிற்கு அருமையான அனுபவம். லக்ஷ்மி மேனன் அழகு.

காதலில் சொதப்புவது எப்படி

நாளைய இயக்குனர் ஷோவிலிருந்து முதலில் படம் இயக்க வந்த பாலாஜி மோகனின் படம். முழுக்க முழுக்க ஹீரோவின் செல்ஃப் நரேஷன் ஸ்டைலில் படம் பிடிக்கப்பட்டிருந்தது எவ்வளவு பலமோ அதே அளவு போகப் போக பலவீனமாகவும் அமைந்தது. ஆனாலும் புதிதான டிரீட்மெண்ட், யூத்தான மேக்கிங், காட்சிகள், அப்ரோச் என்று படம் நன்றாகவே இருந்தது. இயக்குனரது குறும்படங்களில் பார்த்த காட்சிகளே மீண்டும் படத்திலும் வந்ததால், கொஞ்சம் அலுப்பும் தட்டியது. காட்சிகள் இன்னமும் புதிதாக, கொஞ்சம் ப்ரெஷாக இருந்திருந்தால் படம் இன்னமும் அருமையாக இருந்திருக்கும். ஏகப்பட்ட காதல் படங்களைப் பார்த்து விட்டோம் என்பதால் படத்தைக் கொண்டாடி பெஸ்ட் 10 இல் வைக்க முடியவில்லை.

அம்புலி 3D

இந்த வருடத்தின் மற்றுமொரு ஆச்சரியம். தமிழின் முதல் Stereoscopic 3D படம். படத்தின் முதல் 10 நிமிடக்காட்சிகள் இன்னமும் என் கண் முன் தெரிகிறது. சப்பைக் கதை, அதை விட சப்பையான கேரக்டர்கள், காஸ்டியூம்கள் (முக்கியமாக அம்புலி காஸ்டியூம்) என்றாலும் மேக்கிங் அற்புதம். வாழ்த்துக்கள் ஹரி சங்கர், ஹரிஷ் நாராயண்.

3

படத்தின் முதல் பாதியால் தப்பியது ஐஸ்வர்யா தனுஷின் “3”. இரண்டாம் பாதி முழுச் சொதப்பல், கொலைவெறி பாடலைப் விஷுவலாகப் பார்த்தவர்களுக்கெல்லாம் கொலைவெறி வந்தது. பள்ளிப் பருவத்தில் காதல் என்பதெல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகள் அதிகம். அடுத்தடுத்து வரிசையாக “பள்ளியில் காதல்” டைப் படங்கள் வருவது சரியல்ல. அதே போல் “நோய் கதைகள்”. போன பதிவிலேயே இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். ஹீரோவிற்கு கேன்சர் என்று ஆரம்பித்து, பார்ப்பவர்களைச் சாவடிப்பதை தமிழ் சினிமா நிறுத்தியே ஆக வேண்டும். கேன்சர், மஞ்சள்காமாலை, வரட்டு இருமல் என்று எதையாவது சொல்லி ஒரு டாக்டரை வைத்து “இந்த வியாதி உள்ளவங்க என்ன செய்வாங்க டாக்டர்?” “இவங்கள குணப்படுத்த வழியே இல்லையா டாக்டர்?” “நீங்க நெஜமாவே டாக்டர் தானா டாக்டர்?” என்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு டாக்டர் வாயாலேயே மொத்தக் கதையையும் விவரமாகச் சொல்லிவிட்டு சாவகாசமாக கிளைமாக்ஸை நோக்கி படத்தை நகர்த்துவது என்பது என்னைப் பொறுத்தவரையில் மோசமான, மிக மோசமான கதைசொல்லலுக்கான எடுத்துக்காட்டு. திரைப்படம் என்பது காட்களின் வாயிலாகத்தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். வெறும் பக்கம் பக்கமான வசனங்களால் அல்ல.

Bi-Polar Disorder நோயை வைத்து எடுக்கப்பட்ட, பாராட்டக்கூடிய ஒரு நல்ல முயற்சி, லக்ஷ்மி ராம்கிருஷ்ணனின் “ஆரோகணம்”.

Bi-Polar Disorder நோயுடைய கதாநாயகியைக் கொண்ட டி.வி சீரியல் “Homeland”. இந்த ஆங்கிலத் தொடர் பற்றியும், நோயை அவர்கள் காட்டிய விதம் பற்றியும் நான் எழுதிய பதிவு இது. 

சுந்தரபாண்டியன்

முதல் முறை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த போது, எனக்கும் சரி, உடன் வந்த என் நண்பனுக்கும் சரி, படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் அடுத்து இந்தப் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது “படம் நன்றாகத்தானே இருக்கிறது” என்று தோன்றியது. முதல் தடவை படம் எங்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் - நாங்கள் கொடுத்த டிக்கெட் விலை - 250ரூ! 100ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் விலை இருந்திருந்தால் நாங்கள் இந்தப் படத்தைக் கொண்டாடியிருப்போம். சரி சொந்தக்கதையை விடுங்கள். சசிகுமார் இன்னும் எத்தனை நாளைக்கு “நட்பு - துரோகம்” என்கிற ஆயுதத்தையே வைத்துக் கொண்டு சினிமாவில் போராடப் போகிறார் என்று தெரியவில்லை. மதுரை பேக்ரவுண்ட், ஊருக்கே பிடிக்கும், எதுவும் படித்திருக்கவில்லையென்றாலும் எல்லாம் தெரியும் கதாநாயகன், வளைத்து வளைத்து காதலிக்கும் ஹீரோயின், முக்கியமாக “கூலாங்கல்லு பல்லுக்காரன்"பாட்டையெல்லாம் சுந்தரபாண்டியனோடு நிறுத்திக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். வேற ஏதாவது முயற்சி பண்ணுங்க சசி. லக்ஷ்மி மேனனுக்கு இதைவிட அருமையான "முதல் படம்"  கிடைக்காது. அழகு!

சாட்டை

சொல்லிய கருத்திற்காக இந்த படம் எனது OK லிஸ்டில் இடம் பெருகிறது. காட்சிகள் டிராமாத்தனமாக இருந்தாலும், சில காட்சிகள் பாராட்டும்படி இருந்தது. அரசுப்பள்ளிகளில் நடக்கும் அவலங்களில் முடிந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். சிறிய பள்ளிகளில் இன்னும் பிரச்சனைகள் அதிகம். அத்தனையையும் காட்டினால் நம் அரசிற்குத் தான் அவமானம். அரசு உத்யோகத்திற்காக காத்துக்கிடக்கும் ஆசிரியர்களைவிட, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவு. ஸ்கூலிற்குப் போகும் பெண்ணிடம் ஒரு பையன் வழிமறித்து “என்னைக் காதலிப்பியா மாட்டியா” என்று கேட்கும்படியான காட்சிகள் இனி வேண்டாம். ப்ளீஸ். இது போன்ற காட்சிகளால் தான் இன்று வழி மறிப்பதை சரி என்று புரிந்துகொள்ளும் மாணவன் நாளை தனக்குக் கிடைக்காத பெண்ணின் மேல் ஆஸ்ட் அடிப்பதும் தப்பில்லை என்று தனக்குத்தானே ஒரு நீதியை வகுத்துக்கொண்டு செயல்படுகிறான். இரண்டாம் பாதியில் அந்தப் பெண் காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்பதைப் போல் காட்டியிருப்பதெல்லாம் ம்ஹூம்ம்… சரியில்லை. இது தப்பான எடுத்துக்காட்டு. இறுதியில் அந்த ஜோடி ஒன்று சேரவில்லை என்று காட்டினாலுமே, அந்தக் காதல் டிராக் தவிர்த்து மீதிப் படம் நல்ல படமே. சாட்டை படத்தைப் பற்றிய எனது முந்தைய பதிவு இது.

சாருலதா

மாற்றானை விட சாருலதாவில் Conjoined Twins Concept புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. Genetics அது இதுவென்று போட்டுக் குழப்பாமல், சாதாரணமாக ஒட்டிப்பிறந்த இரட்டையர் பெண்களில் ஒருத்திக்கு காதல் வருகிறது. மற்றவளாய் பாரமாக நினைக்கிறாள். பிரிகிறார்கள். அப்படிப் பிரியும்போது ஒருவள் இறந்து விட, பிழைத்தவள் தான் தன் சாவிற்குக் காரணம் என்று இறந்தவள் நினைத்து பழிவாங்கத் தொடங்குவது தான் கதை. அருமையான ஒரு டுவிஸ்ட் படத்தில் உண்டு. ஆனால் அதை காட்சியப்படுத்திய விதம் வொர்ஸ்ட். பிரியாமணி தேசிய விருது நடிகை. அல்வா சாப்பிடுவது போல் சும்மா அசால்ட்டாக நடித்து விட்டுப் போயிருக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மும்மொழிகளில் இந்தப் படம் வெளியானது. தமிழ், தெலுங்கில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் கன்னடத்தில் சூப்பர் ஹிட்!

நான்

Identity Theft Concept வைத்து ஒரு புதிய முயற்சியைக் கொடுத்திருந்தார்கள். அடெம்ப்ட் ஒக்கே. ஆனால் படம் சுமார் தான். விஜய் ஆண்டனி சும்மாவே நின்று கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இசையமைப்பதை மட்டும் தான் அவர் செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நடிப்பது என்று முடிவு செய்தால் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து, பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம்.

நண்பன்

படம் முழுக்க எனக்கு 3 IDIOTS மட்டுமே தெரிந்தது. விஜய் யோ, ஷங்கரோ தெரியவேயில்லை. 3 IDIOTS எனக்குப் பிடித்த படம் என்பதால் இந்த இடம். 3 IDIOTS 35 கோடியில் தயாரிக்கப்பட்ட படமாம். ஆனால் நண்பனின் பட்ஜெட் 60 கோடி. சிறப்பு!

நீதானே என் பொன்வசந்தம் & மாற்றான்

இந்த இரண்டு படங்களுமே விமர்சனங்கள் சொல்லும் அளவிற்கு மோசமில்லை என்றே சொல்வேன். கௌதம் மேனன் - கே.வி.ஆனந்த். இருவருமே தங்களது ரசிகர்களை ஏமாற்றியது என்னவோ உண்மை தான். ஆனால் இருவர் மீதும் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இருவரது அடுத்த படங்களையும் நான் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

OK லிஸ்ட் முடிந்தது!

இறுதியாக இரண்டு படங்களைப் பற்றி நான் சொல்லவேண்டும்.

வழக்கு எண் 18/9
இந்தப் படத்தை எந்த லிஸ்டிலும் என்னால் கொண்டு வரமுடியவில்லை. பெஸ்ட், ஓக்கே, வொர்ஸ்ட் என்று எதிலும் அடங்காத ஒரு படம் வழக்கு எண்.  தமிழின் ரியலிஸ சினிமா. முகத்தில் அறையும் உணமியைச் சொன்ன படம். தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய படம். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சோகம், கண்ணீர், வேதனை, இழப்பு, துரோகம் எல்லாம் சொந்த வாழ்க்கையிலேயே நிறைய இருக்கிறது. அதையே தியேட்டரிலும் போய் பார்ப்பது, எனக்குப் பிடிக்காது. எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தியேட்டருக்கு போய் படம் பார்ப்பது. அங்கும் தினம் தினம் நான் பார்க்கும், வாழும் இயல்பு வாழ்க்கையையே பார்க்க நான் விரும்புவதில்லை. நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கும் கேட்கும் சம்பவங்களின் கோர்வை தான் வழக்கு எண். அதற்காக நம் எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கும் என்று சொல்லவரவில்லை. இது நல்ல படம் இல்லை என்றும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், இந்த மாதிரி படங்கள் தமிழில் இப்போதிருக்கும் சூழலில் நிச்சயம் (அவ்வபோது) வர வேண்டும், நானும், அனைவரும் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டும். முக்கியமாக வெற்றியடையச் செய்ய வேண்டும். எதையெதையோ தின்கிறோம், அப்படியே கசக்கும் என்று தெரிந்தும், நம்மை குணப்படுத்தும் என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரையையும் விழுங்கிவிடுவதில்லையா, அதுபோல. நமக்கு வராது என்ற நம்பிக்கை இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதில்லையா அது போலத் தான் இந்தப் படமும் நமக்கு!

நீர்ப்பறவை
வழக்கு எண் படம் பற்றிய எனது கருத்தைத் தான் இந்தப் படத்திற்கும் சொல்வேன். சிறு வித்தியாசம். இந்தப் படம் உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது. கடலும் கடல் சார்ந்த பகுதியையும் அருமையாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன். விஷ்ணு பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் சுனைனா கலக்கியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. "மகனை கண்மூடித்தனமாக நேசிக்கும் தாய்" என்கிற கதாப்பாத்திரத்தில் இவர் இன்னும் எத்தனை படங்கள் நடித்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம். நந்திதா தாஸ் உட்பட படத்தில் நிறைய நட்சத்திரக் கூட்டம். அவர்கள் எல்லாம் எதற்கு என்று புரியவில்லை. மீனவர் வாழ்க்கை, குடியின் தீமை போன்றவற்றை அழகாகச் சொல்லிய இயக்குனர் சீனு ராமசாமி, மீனவர்களின் முக்கியமான பிரச்சனையை மட்டும் மற்ற எல்லோரையும் போல பட்டும் படாமல் தான் சொல்லியிருக்கிறார். படத்தில் சமுத்திரக்கனி (அருமையான நடிப்பு) மட்டும் தான் இது தொடர்பாக பேசுகிறார். அதுவும் மூன்றே காட்சிகள் மட்டும் தான். எதையும் முழுதாக, தெளிவாகச் சொல்ல்வில்லை. விருது வாங்க வேண்டும் என்கிற நினைப்பு மட்டும் தான் இயக்குனர் மனதில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இவரும் பேட்டிகளில் "விருது" பற்றி மட்டும் தான் பேசுகிறார். பேசுகிறாரே தவிர படத்தில் விருது கொடுக்கும்படியான காட்சிகள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். படம் இன்னமும் கொஞ்சம் “ரா”வாக இருந்திருக்க வேண்டும். காட்சிகளில் தமிழரின் கோபம் தெரிந்திருக்க வேண்டும். தயரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பது தான் பிரச்சனை என்றால் வேறு தயாரிப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம். அல்லது சொந்தக் காசைப் போட்டே படம் எடுத்திருக்கலாம். தேசிய விருது இயக்குனர் எனபதால் நிச்சயம் இவருக்கு குறைந்த பட்ச ஓப்பனிங்காவது இருந்திருக்கும். சேஃப்டியும் முக்கியம், பணமும் முக்கியம், விருதும் வேண்டுமென்றால் எப்படி? சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக, தெளிவாக இன்னமும் கொஞ்சம் குத்தலாக சொல்லியிருக்கலாமே? “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால்” படங்களை எப்படி இலங்கை பிரச்சனையைச் சொல்லும் படம் என்று சொல்ல முடியாதோ அது போலத்தான் என்னைப் பொறுத்த வரை நீர்ப்பறவையையும் மீனவர் பிரச்சனையை சொல்லும் படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. குடியின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கடலோர இளைஞன், திருந்தி தன் வாழ்க்கையைத் தொடங்கும் போது குண்டடிபட்டு சாகிறான் என்பதை மட்டும் தான் இந்த படம் நமக்குச் சொல்கிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் இந்தப் படத்தை TOP10 இல் வைத்துக் கொண்டாடவும் முடியவில்லை. OK 10 இல பத்தோடு பதினொன்றாக வைக்கவும் மனம் வரவில்லை!

கழுகு, கிருஷ்ணவேணிப் பஞ்சாலை, ஆச்சரியங்கள், பெருமான், தோனி, அம்மாவின் கைப்பேசி என்று இன்னமும் பல படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவற்றில் சில படங்கள் வேண்டுமென்றே பார்க்கவில்லை. சில படங்கள் விருப்பம் இருந்தும் பார்க்க முடியவில்லை.

இந்த ஆண்டு நிலைமையை கணக்கில் கொண்டு தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு பல நல்ல  படங்கள் வெளியாகும் என்று நம்புவோம்.

அப்படியே 2012 ஆம் ஆண்டின் "சிறந்த" லிஸ்டையும் கொடுத்து நிறைவு செய்துவிடுகிறேன்.

சிறந்த இசை - D. இமான் (கும்கி)
சிறந்த பின்னனி இசை - அச்சு (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்க்கி (துப்பாக்கி, முகமூடி)
சிறந்த பின்னணிப் பாடகர் - D. இமான் (ஒன்னும் புரியல-கும்கி), "கானா" பாலா :-)
சிறந்த பின்னணிப் பாடகி - மஹாலட்சுமி அய்யர் (கால் முளைத்த பூவே-மாற்றான்)
சிறந்த ஒளிப்பதிவு - சுகுமார் (கும்கி), கோபி அமர்நாத் (மா.பொ.ம, பீட்ஸா), நீர்ப்பறவை (பாலசுப்ரமணியன்)
சிறந்த படத்தொகுப்பு - மதுபானக்கடை (யார் என்று தெரியவில்லை)
சிறந்த ஸ்டண்ட்ஸ் - அனல் அரசு (தடையறத்தாக்க), Tony Leung Siu Hung (முகமூடி)
சிறந்த கலை இயக்குனர் - விஜய் முருகன் (அரவான்)
சிறந்த உடையலங்காரம் - நளினி ஸ்ரீராம் (நீ.தா.என்.பொ.வ)
சிறந்த காமெடியன் - சந்தானம் (OK OK, கலகலப்பு)
சிறந்த துணை நடிகை - சரண்யா பொன்வண்ணன் (Ok Ok, நீர்ப்பறவை)
சிறந்த துணை நடிகர் - முத்துராமன் (வழக்கு எண் 18/9)
சிறந்த புதுமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)
சிறந்த புதுமுக நடிகை - லக்ஷ்மி மேனன் (சுந்தரபாண்டியன், கும்கி)
சிறந்த நடிகர் - விஜய் (துப்பாக்கி), விஜய் சேதுபதி (பீட்ஸா)
சிறந்த நடிகை - ஸ்ருதிஹாசன் (3), சமந்தா (நீ.தா.எ.பொ.வ)
சிறந்த வசனம் - நாராயண் நாகேந்திர ராவ் (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த கதை - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
சிறந்த திரைக்கதை - கார்த்திக் சுப்புராஜ் (பீட்ஸா), ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி முதல் பாதி மட்டும்)
சிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

சிறந்த நடனம், சிறந்த வில்லன், சிறந்த படம் என்று இந்த வருடம் எதுவும் இல்லை.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். Happy New Year 2013!