Friday, February 24, 2012

Nader and Simin - A Separation | Iran | 2011


கருத்து வேறுபாடு என்று தமிழில் சொல்வதை விட இந்தக் காலத்திற்கேற்ப Difference of Opinion என்று சொன்னால் பலருக்கு சரியான அர்த்தம் சற்று தெளிவாகவே புரியும். இன்றைய தேதியில் திருமண முறிவுகளுக்கு பலர் சொல்லும் சர்வசாதாரண காரணம் இதுதான்.

நமக்காக என்றிருந்த இடத்தில் எல்லாம் இப்பொழுது எனக்காக நிரம்பி இருப்பதால் தான் இந்தப் பிரச்சனை. 7 வருடங்கள் காதலித்து அந்தக் காதலில் வெற்றி கண்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன், அதே 7 வருடம் காதலித்து திருமணம் செய்யாமல் Difference of Opinionல் பிரிந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். காதலுக்கே இந்த நிலைமை என்றால் வீட்டில் பார்த்து திருமணம் செய்துகொள்பவர்கள் நிலைமை? அது இன்னும் படு மோசம்.

எனக்குத் தெரிந்த ஒரு நபர் பெண் பார்க்க போன அன்று தான் அந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்த்தார். ஐந்து நிமிடம் அந்தப் பெண்ணோடு தனியாகப் பேசினார். பேசிவிட்டு வந்து, "பெண்ணைப் பிடித்து விட்டது, மணந்தால் இவளைத்தான் மணப்பேன் என்று சொன்னார். திருமணமும் நடந்தது. "அப்படி என்னப்பா 5 நிமிட்ஸ்ல பேசி முடிவு பண்ண" என்று கேட்டால், நான் எங்க போனாலும் கூட வருவியா?னு கேட்டேன். அவ கொஞ்சம் கூட யோசிக்காம 'வருவேன்'னு சொன்னா என்றார். சொன்னபடியே இப்போது அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கிறார். அவரது மனைவியும் வழக்கம்போல கொஞ்சம் கூட யோசிக்காமல் வருவதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது. திருமணமான மூன்றே மாதம் தான் மனைவி கர்ப்பம். எங்க பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. ஒன்னும் தெரியாது. அதனால பிரசவம் முடியுற வரைக்கும் வீட்லயே வச்சிக்கிறோம் மாப்ள என்று சொல்லி விட்டனர் மாமா-மாமியார். பெண் குழந்தை ஒன்று பிறந்து வருடம் ஒன்றாகப் போகிறது. முதல் திருமண நாளிற்கு கணவன் மனைவிக்கு அனுப்பிய மெசேஜ் என்னை விட்டு ஒழிந்து போகமாட்டாயா சனியனே! இப்போது கோர்ட் படியேறப் போகிறார்கள். ஆக மொத்தம் மூன்று மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்குள் வீதிக்கு வந்து விட்டார்கள். காரணம் Difference of Opinion. அப்படி Difference of Opinion காரணமாக கோர்ட் படியேறும் ஒரு இரானியத் தம்பதியைப் பற்றிய படம் தான் Nader and Simin – A Separation. இந்தப் படத்தை சென்ற மாதம் நடந்த பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் காண நேர்ந்தது. 

கௌதம் மேனன் காக்க காக்க படத்தின் ஆரம்பத்தில் ‘An Episode in a Police Officer’s life’ என்று போட்டிருப்பார். அதே போல் வேட்டையாடு விளையாடு படத்திற்கு ‘Another Episode in a Police Officer’s life’ என்று போட்டிருப்பார். ஆனால் அவ்விரண்டு போலீஸ் அதிகாரிகளைப் பற்றிய மொத்த ஜாதகத்தையுமே ஓப்பனிங் சாங்கோடு சொல்லிய பிறகே கதைக்குள் வருவார். எனவே அவையிரண்டுமே எப்பிசோட்கள் இல்லை. ஒரு முழு நீள திரைப்படத்தில் எப்பிசோட் என்பதன் அர்த்தம் என்ன என்பதை இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் காட்சியில் நடேர்  சிமின் தம்பதி நீதிபதியின் முன் அமர்ந்து தங்களது வாதங்களை முன் வைத்து விவாகரத்து கேட்கின்றனர். அவர்களகது 13 வயது மகளான  தெர்மா (Termeh) யாருடன் இருக்கப் போகிறாள் என்று கேட்கிறார் நீதிபதி. படத்தின் இறுதிக்காட்சியில் நீ யாருடன் இருக்கப் போகிறாய் என்பதை முடிவு செய்துவிட்டாயா? என்று தெர்மாவைக் கேட்கிறார் நீதிபதி. அவளும் ம் என்று பதில் சொல்கிறாள். படம் நிறைவடைகிறது. விவாகரத்து கிடைத்ததா இல்லையா? தெர்மா யாருடன் வளரப்போகிறாள்? எது நியாயம்? எது அநியாயம்? இந்தக் கேள்விகளுகெல்லாம் விடை பார்வையாளனிடமே விடப்படுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் மேலே நான் சொன்ன இரண்டு கேள்விகளுக்குமே இதுதான் பதில் என்று ஒன்றை நம்மால் நிச்சயம் சொல்லமுடியாது. காரணம் திரைக்கதை! கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே கொடுக்கும் தெளிவான திரைக்கதை.

சிமினிற்கு தன் மகள் எதிர்காலம் கருதி கட்டுப்பாடுகள் நிறைந்த இரானை விட்டு தன் கணவனுடன் வெளியேற வேண்டுமென்று ஆசை. ஆனால் நடேருக்கோ அதில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை. காரணம் அல்சைமர் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் அவனது வயதான தந்தை. இருவருமே தங்களது முடிவில் தெளிவாக இருப்பதால் "பிரிந்துவிடுவது" என்று முடிவு செய்து நீதிமன்றம் செல்கின்றனர். சிமின் விவாகரத்து பதிவு செய்கிறாள். ஆனால் நடேர் அதை மறுக்கிறான். நீதிபதி முன் தனது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். சமரச உடன்பாடு இல்லாததால் பதிவு நிராகரிக்கப்படுகிறது. படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இப்படித் தான் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

கணவன்-மகளைப் பிரிந்து சிமின், தன் பெற்றோருடன் வாழச் சென்று விடுகிறாள். வயதான தன் தந்தையைப் பார்த்துக்கொள்ள ரசியா (Razieh) என்ற பணிப்பெண்ணை தன் மனைவி மூலமே ஏற்பாடு செய்யும் நடேர், தான் பணி முடிந்து திரும்பும் வரை தன் தந்தையைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் அவளது பொறுப்பு என்று கூறுகிறான். மகள் தெர்மாவும் அதே நேரத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. ரசியாவும் தன் மூன்று வயது மகளுடன் தினம் வந்து, தான் யார், எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடேரின் வயதான தந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட ரசியாவிற்கு முதல் நாளே தன் வேலை அவ்வளவு சுலபம் இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் பொருளாதார நிலை காரணமாக தொடரந்து வேலைக்கு வருகிறாள்.

ஒரு நாள் பணி முடித்து வீடு திரும்பும் நடேர், வீடு பூட்டியிருப்பதையும் உள்ளே ரசியா இல்லாததையும் கண்டு பதற்றத்துடன் தன் தந்தையைக் காணச் செல்கிறான். கட்டிலுடன் இணைத்துப் பிணைக்கப்பட்டிருப்பதால் எழ முடியாமல், கீழே விழுந்து கிடக்கிறார் தந்தை. இறந்து விட்டாரோ! என்று நினைத்து கலவரப்படும் நடேர் அவரைத் தூக்கி படுக்க வைத்து நெஞ்சில் குத்தி, அழுது ஒரு வழியாக அவர் உயிரேடுதான் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறான். பொறுப்பில்லாமல் விட்டுப் போன ரசியா மீது ஆத்திரம் வருகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வரும் ரசியாவுடன் சண்டையிடு வீட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான்.  

அடுத்த நாள் நடேர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. வீட்டை விட்டு வெளியேறச் செய்யும் போது நடேர் ரசியாவைத் தள்ளிவிட்டதில், அவளது கர்ப்பம் கலைந்ததாக வழக்கு! ஆம், ரசியா கர்ப்பிணி என்று அப்போது தான் நமக்கும் சொல்லப்படுகிறது. மேலும் ரசியா தனது கணவனிடம் சொல்லாமல் இந்த வேலைக்கு வந்துபோயிருப்பதும் சொல்லப்படுகிறது. வயதான தன் தந்தையைப் பார்த்துக்கொள்ள வந்த ரசியா, அவரைக் கட்டி வைத்து கொல்ல முயற்சித்ததாக எதிர்வழக்கு போடுகிறான் நடேர். மேலும் ஏழ்மை ஏற்படுத்திய விரக்த்தியில் முரடனாகிப் போன ரசியாவின் கணவன் ஹௌஜாட் (Houjat) என்பவனால் பிரச்சனை மேலும் வலுக்கிறது. தானும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் கணவனுக்காக போராட வேண்டிய நிலை சிமினிற்கு. இந்தப் பிரச்சனையிலிருந்து நடேர் எப்படி வெளியே வந்தான்? நடேர் - ரசியா யார் பக்கம் நியாயம்? உண்மையில் நடந்தது என்ன? நடேர்-சிமின் சேர வழி ஏற்பட்டதா? என்து தான் கதை.

அதிகம் குழப்பாமல் தேவையான இடத்தில் மட்டும் முன்னுக்குப்பின் சென்று வரும் திரைக்கதையால் படத்தின் சுவாரஸ்யம் அதிகமாகிறது. அடுத்தடுத்து என்ன நடைபெற்றது என்பது தெரியவரும் போது நமக்கே தெரியாமல் நம் உதடுகள் சபாஷ் சொல்வதை தடுக்க முடியாமல் போகிறது.

ஈரானின் கட்டுப்பாடுகளைச் சீண்டாமல் ஆங்காங்கே அழகாகச் சுட்டிக் காட்டியதிலும் இயக்குனர், Asghar Farhadi பலே வெள்ளையத்தேவா பலே வாங்குகிறார். முக்கியமாக சுயநினைவில்லாமல் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்து விடும் வயதானவரைத் தொட்டு சுத்தம் செய்யலாமா, கூடாதா? என்று தெரியாமல் மதகுருமார்களுக்கு போன் செய்து ரசியா கேட்கும் காட்சி, தன் சொந்தத் தாத்தாவை அப்பாவிற்கு உதவியாக தெர்மா தூக்கும் காட்சியில் தெர்மாவைக் காட்டாமல், நடேரையும் வயதானவரையும் மட்டுமே காட்டும் காட்சி என்று பல காட்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லிக்கொண்டே போகலாம்.   

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது ரசியா தான். ஏழ்மை சூழ்ந்த, மதக்கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட, கணவன் சொல் மீறாத ஒரு நடுத்தர வயது பெண்மணியாக கச்சித்மாகப் பொருந்திப் போகிறார்.

அடுத்தது நடேர்-சிமின் மகளான தெர்மா கதாபாத்திரம். இறுதிவரை தன் தாய்-தந்தையர் மீண்டும் இணைந்து விடுவர் என்ற நம்பிக்கையுடனும், இறுதியில் யாருடன் செல்வது என்பதை முடிவு செய்து சொல்ல முடியாமல் தவிப்பதுமாக இந்த சின்னப்பெண்ணின் நடிப்பு அற்புதம்.

பெரியவரின் ஆக்ஸிஜன் குழாயை ஏற்றி இறக்கி விழையாடும் ரசியாவின் குழந்தை, நடக்கவே முடியாத சூழ்நிலையிலும் தானாக சாலையில் இறங்கி 'பேப்பர்' வாங்க முயற்சிக்கும் அந்தப் பெரியவர், போன்ற சின்னச் சின்னக் காட்சிகளிலும் "நீங்கள் தான் அவர் மகன் என்பதே உங்கள் அப்பாவிற்குத் தெரியாது, அவருடன் நீங்கள் இருக்க வேண்டுமா?" என்று கேட்கும் மனைவியிடம் "அவர் தான் என் அப்பா என்பது எனக்குத் தெரியும்; அதனால் அவருடன் தான் கடைசி வரையிருப்பேன்" என்று நடேர் கூறும் வசனம் போன்றவற்றிலும், பேட்ண்டிலேயே சிறுநீர் போய்விட்ட தன்னை பாத்ரூமிற்கு அழைக்கும் வேலைக்காரியை மருமகள் பேர் சொல்லி அழைக்கும் இடத்திலும் ஈர்க்கிறார் இயக்குனர்.

எது சரி, எது தவறு என்று இந்தப் படம் சொல்லவில்லை. விவாகரத்தால் ஏற்படும் தீமைகள் என்று கணவன்-மனைவிமார்களுக்கு பாடம் எடுப்பதாகவும் தோன்றவில்லை. நம் வீட்டில், நம் பக்கத்து வீட்டில் நடைபெற முழு சாத்தியமுள்ள ஒரு சம்பவத்தை அழகாக எடுத்துரைக்கிறது இந்தப் படம். ஏற்கனவே பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா, கோல்டன் குளோப் என்று விருதுகளை வாரியெடுத்து விட்ட இந்தப் படம்தான் இந்த வருட ஆஸ்காரில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதைத் தட்டிச் செல்லப் போகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இந்தியாவின் "ஆதாமண்டே மகன் அபு" ஆஸ்கார் இறுதிச் சுற்று வரை செல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறையும் இந்தியாவிற்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ஆனால் நம் படம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோஷப்படுவேனோ, அவ்வளவு சந்தோஷம் இந்த ஈரானியப் படம் வெற்றிபெற்றாலும் எனக்குள் இருக்கும்.

4TamilMedia திரட்டியில் வெளியான இந்தப் படத்திற்கான எனது விமர்சனம் (படங்களுடன்) இதோ...

Thursday, February 23, 2012

Midnight In Paris | 2011 | U.S



அடுத்த காதல் கதை - Midnight in Paris. 76 வயதான பிரபல இயக்குனர் Woody Allen, இது நாள் வரை தான் எடுத்த படங்களிலேயே சிறந்தது என்று சொல்லும் இந்தப் படம் Gil Pender (Owen Wilson) என்னும் எழுதாளனைச் சுற்றியே நகர்கிறது.

சினிமா கதாசிரியராகப் பணியாற்றும் கில், தனக்கு மனைவியாகப் போகும் காதலி Inez (Rachel McAdams) மற்றும் அவளது பணக்கார பெற்றோருடன் பாரிஸ் நகருக்கு சுற்றுலா வருகிறான். பழைமை விரும்பியான கில்லிற்கு பாரிஸ் மிகவும் பிடித்துப் போகிறது. கலையுலகின் பொற்காலம் "20'களே" என்பது கில்லின் அசைக்க முடியாத நம்பிக்கை. எழுத்து, ஓவியம், நாடகம், சினிமா என அனைத்துமே பெர்ஃபெக்டாக இருந்தது 80களில் மட்டும் தான் என்று தொடர்ந்து வாதிடுகிறான் கில். அதனாலேயே எரிச்சலடைகிறாள் ஐனெஸ். இவளும் சதா ஸ்டேடஸ் பற்றி பேசும் இவளது பெற்றோரும் பாரிஸிற்கு வந்தது சுற்றிப் பார்க்க மட்டும் தான். ஆனால் கில் பாரிஸிறு வந்ததன் காரணமே வேறு. தனது முதல் நாவலை இங்கு எழுதி முடிக்கத் திட்டமிடுகிறான். ஆனால் பழைமை மாறாத பாரிஸின் அழகோ, நிரந்தரமாகவே கில்லை பாரிஸிற்கு குடியேறி விடத் தூண்டுகிறது.

பாரிஸின் பல இடங்களை சுற்றிப் பார்த்துக்கொண்டே இந்த ஜோடி பொகும் பொழுது ஐனெஸின் பழைய கல்லூரி நண்பன் Paul என்பவனை அவனது காதலியுடன் சந்திக்க நேர்கிறது. தன்னை பெரியவன் என்று காட்டிக் கொள்ள சகட்டு மேனிக்கு வரலாற்றை அடித்து நொறுக்கும் பாலை பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போகிறது. ஆனால் ஐனெஸிற்கோ பால் ஜீனியஸாகத் தெரிகிறான். பாலைப் போல் கில் ஜனரஞ்சக ஆசாமியாக இல்லாமல் பழைமைவாதியாக இருக்கிறான் என்று கோபமும் கொள்கிறாள். நாளடைவில் கில் சொல்லும் எதயும் பொருட்படுத்தாத ஐனெஸ், பால் வாக்கையே வேதவாக்கு என்று அவன் பின்னாலேயே சுற்றத் தொடங்குகிறாள். ஒரு நாள் இரவு பால் சொன்ன கிளப்பிற்கு டான்ஸ் ஆட அனைவரும் கிளம்ப, அந்தக் கூட்டத்தில் ஒட்டாத கில், பாரிஸின் இரவு நேரஅழகை ரசிக்கச் செல்கிறேன் என்று தனியாக பாரிஸ் நகர வீதிகளில் நடக்கத் தொடங்குகிறான்.

வெகு நேரம் நடந்த கில்லிற்கு திரும்பி ஹோட்டலுக்குப் போகும் வழி தெரியவில்லை. நள்ளிரவு நெருங்கும் நேரமென்பதால், எதாவது டாக்ஸி வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே ஓர் இடத்தில் அமர்கிறான். அப்போது சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு ஒரு பழைய மாடல் கார் வந்து நிற்கிறது. தனியாக இருப்பதற்கு இவர்களோடு செல்லலாம் என்று ஏதும் பேசாமல் காரில் ஏறிக் கொள்கிறான். அந்த டாக்ஸியில் இருப்பவர்கள் அனைவரும் 1920களைப் போல் உடயணிந்திருப்பதை கில் கவனிக்கத் தவறவில்லை. அந்த கார் சென்ற இடத்தில் 1920 களில் வாழ்ந்த புகழ் பெற்ற கலைஞர்களைச் சந்திக்கிறான் கில். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் Ernest Hemingway. தான் காண்பதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் கில், அடுத்த நாள் அதே இடத்திற்கு ஐனெஸையும் அழைத்து வருகிறான். ஆனால் அவளோ பன்னிரெண்டு மணியாவதற்குள் வெறுப்பாகி கில்லை லூசு என்று முடிவு செய்து அவ்விடத்தை விட்டுச் சென்று விடுகிறாள். ஆனால் நள்ளிரவு அந்தக் கார் மறுபடியும் வருகிறது. இம்முறையும் 1920களில் வாழ்ந்த பல முக்கியமான கலைஞர்களை கில் சந்திக்க நேரிடுகிறது முக்கியமாக Picasso மற்றும் அவரது ரகசிய காதலியான Adriana என்னும் அழகியையும்.

பின்னடப்பவையெல்லாமே கில் கனவில் மட்டும் இதுதினம் வரை கண்டு வந்த நிகழ்வுகள் தான். ஆனால் நடப்பவை அனைத்தும் நிஜத்தில், நம்புவதற்குத்தான் ஆள் இல்லை. தான் வாழ நினைத்த காலத்தை இரவில் காணும் கில். அதே உற்சாகத்துடன் தனது நாவலையும் முடிக்கிறான். முடித்துவிட்டு 1920ல் வாழ்ந்த Gertrude Stein னிடம் கொடுத்து 'ரெவ்யு' செய்கிறான்.ஆனால் காலப்போக்கில் பல உண்மைகள் தெரிய வருகிறது கில்லிற்கு. உண்மையான காதலை உணர்கிறான். பாரிஸிலேயே தங்கி விட முடிவு செய்கிறான்.

காதலின் அர்த்தத்தை இதை விட அழகாக யாராலும் சொல்லியிருக்க முடியாது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் விஷயங்கள் (priorities), விட்டுக்கொடுக்கும் தன்மை போன்றவற்றை 1920களுக்குச் சென்று புரியவைக்கிறார் இயக்குனர். Picasso, Salvador Dali, Hemingway, Gertrude Stein போன்றவர்களைப் பற்றித் நமக்குக் கொஞ்சம் அதிகம் தெரிந்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் கருத்து. காதல் படமென்றால் காதலன்-காதலி அவர்களுக்குள் வரும் பிரச்சனைகள், அது தீர்ந்து பின் சேர்தல் என்று தான் இருக்க வேண்டுமென்றில்லை, இப்படியும் இருக்கலாம் என்று சொல்கிறது இந்தப் படம்

மேலும் பாரிஸின் அழகையும், மழை இரவில் அதன் பேரழகைக் காட்சியப் படுத்திய விதமும், படம் நெடுக மனதை வருடும் அந்த மெல்லிசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள்.

மொத்தத்தில், Midnight in Paris - A walk in 1920's in the search of true LOVE! 

Crazy Stupid Love | 2011 | U.S


பொதுவாக காதல் திரைப்படங்கள் என்னைக் கவர்வதில்லை. திரையில் கதாநாயகன்  கதாநாயகி பார்த்தவுடன் காதல் வயப்பட்டு அடுத்த செக்கெண்டிலிருந்து உருக ஆரம்பிப்பதைப் பார்த்தாலே அடங்கோ... என்று எனக்குக் கடுப்பாகிவிடும். ஆனால் என்னவோ இந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. காரணம், வெறுக்கவே முடியாத அளவிற்கு இந்தப் படத்தில் கண்டாமேனிக்கு காதல் கொட்டிக் கிடக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் ஐந்து காதல் டிராக்குகளுக்கு மேல் இந்தப் படத்தில் உள்ளது.

முதல் காதல் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான கேலினுடையது (Cal - Steve Carell). தன்னுடைய 15 ஆவது வயதில் எமிலி (Emily - Julianne Moore) என்னும் பெண்ணை சந்தித்து அவளையே தன்னுடைய 17 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட கேல், தன் மனைவியைத் தவிர வேறு பெண் வாசம் அறியாதவன். அப்படியாப்பட்ட கேலிடம் படம் ஆரம்பித்தவுடன் எமிலி தான் தன்னுடன் வேலை செய்யும் டேவிட் (David - Kevin Bacon) என்பவனுடன் படுத்துவிட்டதாகவும், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கேட்கிறாள். மனமுடையும் கேல் எதுவும் பேசாமல் சரக்கே என்னுயிர் சகா என்று பாரில் தவம் கிடக்கிறான்.

 இரண்டாவது காதல், இரண்டாவது பிரதான கதாப்பாத்திரமான ஜேகப்பினுடையது (Jacob - Ryan Gosling). பெண்களை ஜஸ்ட் லைக் தட் உஷார் செய்து படுக்கையில் விழவைக்கும் மன்மதனான இவன் பாரில் தன் மனைவி அடுத்தவனுடன் படுத்துவிட்ட சோகக்கதையை சத்தமாக புலம்பிக் கொண்டிருக்கும் கேலுடன் தானாகப் போய் பேசுகிறான். 17 வயதிலேயே திருமணமானதால் வாழ்க்கையில் பலவற்றை இழந்துவிட்டதாக கேலுக்கு புரிய வைக்க முயற்சியும் செய்கிறான். ஜேகப்பின் டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ்களால் முழுமையாக மாறிய கேலும் தற்காலிக மன்மதனாகி சில பல பெண்களை கரெக்ட் செய்கிறான், படுக்கையில் வீழ்த்துகிறான். ஆனால் அப்படியாப்பட்ட மன்மத குருவான ஜேகப், ஹன்னா (Hannah - Emma Stone) என்னும் பெண்ணை சந்திக்கும் பொழுது மட்டும் காதல் வயப்படுகிறான்.

மூன்றாவது காதல் கேலின் மகனுடையது. பன்னிரெண்டு வயதான ராபி (Robbie) பதினேழு வயதான தனது பேபி சிட்டர் ஜெசிக்காவை (Jessica) காதலிக்கிறான். அதை அவளிடம் வெளிப்படுத்தி, பல வழிககளில் அவளைக் கவரவும் முயற்சி செய்கிறான். ஆனால் ஜெசிக்காவின் கதையோ வேறு.

நான்காவது காதலான ஜெசிக்காவினுடையதோ வேறு கதை. ஜெசிக்கா மேல் பல வருடம் ராபிக்கு காதல் இருப்பது போல், ஜெசிக்காவிற்கு பல வருடம் கேல் மேல் காதல். ஆனால் அதை அவள் வெளிப்படுத்தியதில்லை.

ஐந்தாவது காதல் கேலின் மனைவி எமிலி மேல் டேவிட்டிற்கு இருக்கும் காதல். திருமணமானவளாக இருந்தாலும், எமிலி மேல் டேவிட்டிற்கு விருப்பம் உண்டு. தன்னால் கேல்-எமிலி பிரிந்துவிட்டார்கள் என்பது தெரிந்தவுடன் எமிலியை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று முயற்சியும் செய்கிறான்.

இந்தப் பிரதான ஐந்து காதல் கதைகள் தவிர்த்து, கேல் முதல் முதலில் வீழ்த்திய பெண்ணான கேட் கேல் மேல் கொண்டுள்ள காதல், ஜேகப்பைச் சந்திக்கும் முன் ஒரு பழத்தின் மேல் காதல் கொண்டிருந்த ஹன்னாவின் காதல் என்று பலப்பல காதல்கள் இந்தப் படத்தில் உள்ளது.

படத்தில் காதல் அனைவரையும் பாடாய்ப் படுத்திகிறது. சரியான பெயராகத் தான் வைத்திருக்கிறார்கள் படத்திற்கு  Crazy, Stupid, Love!

படத்தில் முறையில்லா உறவுகளாகவே பல காதல்கள் தெரிந்தாலும் அவற்றை காட்சியப்படுத்திய விதத்தில் விரசமில்லாமல் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். என்னதான் யாரென்றே தெரியாத ஒரு சின்னப் பையனின் பேச்சைக் கேட்டு ஆளே மாறி பத்து பெண்களை கேல் படுக்கையில் வீழ்த்தினாலும், தன் மனைவி மேல் மேல் அவன் கொண்டுள்ள காதலை எல்லா இடங்களிலும் அவன் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். சொல்லப் போனால் இவன் புலம்பல்களைக் கேட்டுத் தான் முதல் இரண்டாவது பெண்ணான கேட்டிற்கு காதலே வருகிறது. இதே கேட் கேலின் மகனான ராபியின் டீச்சராக வருவது தனி காமெடி டிராக்!

பார்த்துப் பேசிய பத்தாவது நிமிடத்தில் பெண்களை மயக்கி “Can we get out of here” என்றழைக்கும் ஜேகப், புல் போதையில், எதற்கும் தயாராக வந்திருக்கும் ஹன்னாவிடன் ஒரு நாள் இரவு முழுவதும் வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்து விட்டு உண்மையான காதலை உணருகிறான்.

என்னதான் டேவிட்டுடன் ஒரு முறை அத்துமீறி அது இதுவென்று கசமுசா நடந்துவிட்டாலும், தன் கணவனை மறக்க முடியாமல் எமிலி தவிக்கும் தவிப்பும், அதை வெளிப்படுத்தும் விதமும் அருமை. வெளியில் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கேல் இருப்பதை அறியாமல் அவனை அழைத்து, ஹீட்டர் ரிப்பேர் செய்வதெப்படி என்று கேட்பதும், தன்னுடன் பேச வேண்டும் என்பதற்காகவே தன் மனைவி அழைக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு அழகாக அதைச் சமாளிக்கும் கேல் என்று போகும் அந்த இடத்தில் காதலை உணர்ந்து கேல்-எமிலிக்கு மட்டுமல்ல நமக்கும் சந்தோஷக் கண்ணீர் வந்தாக வேண்டும்.

 தன்னை விட வயது மூத்த பெண்ணைக் காதலிக்கும் ராபி, அவள் என்னதான் சின்னப் பையன் அது இதுவென்று சொன்னாலும் விடாமல் லவ்வுவது பிஞ்சில் பழுத்திருந்தாலும் அழகான காதல்! அதே பெண் லவ்வுவது தன் தந்தையை என்று தெரிந்தவுடன், காதல் தோல்வியில் பள்ளி விழாவில் இந்த உலகில் மோசமான ஒரே விஷயம் காதல் என்று ராபி புலம்ப, அவனைத் தடுத்து இந்த உலகில் அற்புதமான விஷயம் காதல்தான் என்று அதே மேடையில் பேசி எமிலி மேல் தனக்கிருக்கும் காதலை கேல் வெளிப்படுத்த, தந்தையும் மகனும் தங்களது காதலிகளைப் பற்றிப் பேசும் அந்த இடம் கவிதைக் கல கல... 

கிளைமாக்ஸிற்கு கொஞ்சம் முன்பு படத்தின் கேரக்டர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் இடத்தில் நிகழும் குழப்பமும், கை கலப்பும் மற்றுமொரு சிறப்பான கலகல...

இப்படிப் படத்தில் பல அருமையான தருணங்கள் உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அனைவரும் நல்லவர்கள். வில்லன்களே இல்லை என்பது இன்னொரு விஷயம் (டேவிட் அடுத்தவன் மனைவி மேல் காதல் கொண்டாலும், அது அவளின் விருப்பத்தோடு தான் என்பதால் அவனை வில்லனாக்க முடியாது)

ஆக மொத்தத்தில் காதிலில் இருப்பவர்கள் காதலின் மகத்துவத்தை உணரவும், காதலில் இல்லாதவர்கள் காதலின் அருமையை உணரவும் ‘Crazy, Stupid, Love’ ஒரு அற்புதமான திரைப்படம்!


Friday, January 6, 2012

2012 ஒரு ஆரம்பம்!



நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012ல் உலகம் அழியப் போகிறது என்று சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் மினிமம் கியாரண்டி உண்டு என்று தெரிகிறது.

இந்தியாவிற்கு தலைக்கு மேல் காஷ்மீர் பல நாள் பிரச்சனை, இந்தப் பக்கம் பாகிஸ்தான் பிரச்சனை, அந்தப் பக்கம் சீனா பிரச்சனை. சீனா அருணாச்சல பிரதேசத்தை மொத்தமாக தன்னுடன் இணைத்து 'மேப்' ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறது, நம்மாட்களும் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவிற்கு இப்படியென்றால் தமிழகத்திற்கு? மேலே கர்நாடகாவுடன் காவிரிப் பிரச்சனை, பக்கவாட்டில் இப்போது கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை. கர்நாடகா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு காட்டிய அதே நடுவிரலைத்தான் இப்போது கேரளாவும் காட்டுகிறது. கீழே இருக்கும் சிலோனைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. அநேகமாக இந்நேரத்திற்கெல்லாம் மிச்ச் சொச்ச தமிழினமும் அழிக்கப்பட்டிருக்கும்.

350 மீனர்வர்களுக்கு மேல் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள் இதுவரை; தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அணையை இடிப்பது எங்கள் உரிமை என்கிறது கேரள அரசு. ஆனால் "தமிழ் நாட்ல இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல; 'ஒய் திஸ் கொலவெறி'னு ஒரு பாட்டு வந்திருக்கே அது தான் மெயின் மேட்டர். அத பாடுன தம்பிய வரச் சொல்லு, சோத்த போட்டு அனுப்புவோம்" என்று மன்மோகன் சிங் அழைப்பு விடுக்கிறார்.

அன்னா ஹசாரே என்று ஒரு பெரியவர். கலியுக காந்தியாக சும்மா சும்மா கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார் "உண்ணாவிரதம்" என்று. எதிர்த்துப் போராடுவது ஆங்கிலேயர்கள் என்றால் பரவாயில்லை, அவர்களுக்கடுத்து படையெடுத்து வந்த தொப்பி போட்ட அரசியல்வாதிகள் அல்லவா? ஒன்னும் செய்ய முடியவில்லை. "தாத்தா, நா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ - நீ இந்தியன் தாத்தா மாதிரி கத்திய தூக்கிருந்தா கூட எதுனா ஒன்னு ரெண்டு மாத்தல் வந்திருக்கலாம். ஆனா, நீ இப்போ எடுத்திருக்குற ரூட் காந்தி தாத்தாவோடது. அது இங்கே வேலைக்கே ஆகாது. நீ மவுத்தானாலும் மதிக்கமாட்டானுவ. டெண்டுல்கர் ஏன் இன்னும் நூறாவது நூறு அடிக்கலனு பேச்ச மாத்திருவானுவ. உன் பேட்ச் மேட் லத்திக்கா பெருசு ஒன்னு இங்க இருக்கு, அது வேணா டுவீட் பண்ணும் - "சேகர் செத்துட்டாண்டானு". இந்த அவமானம் நமக்குத் தேவையா? "ஊழல், லஞ்சம், கடன்" இவை மூன்றும் இல்லாத இந்தியா நன்றாக இருக்காது!

"மின்சாரம் இல்லை, மின்சாரம் இல்லை" என்று கத்திக்கொண்டே இருக்கிறார்களே என்று 1988ல் கையெழுத்தைப் போட்டு, 1997ல் அடிக்கல் நாட்டி, 2001ல் ஆரம்பித்து, 2004ல் ஒரு பகுதியை ஆரம்பித்து என் அனைத்தும் சுபம். ஆனால் திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை, கடைசியாக கடையைத் திறக்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்து விட்டார்கள் "போராட்டம்" என்று. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் கேடும் இல்லை என்று அப்துல் கலாம் வந்து சத்தியம் செய்தும், ஹும்ம் யாரும் கேட்கவில்லை, கடையையும் இன்னும் திறக்கவில்லை. "வேண்டுமென்றால் அப்துல் கலாம் வீட்டிற்கு பக்கத்தில் அணுமின் நிலையத்தைக் கட்டிக் கொள்ள வேண்டியது தானே" என்று டீக்கடையில் ஒரு மகான் பேசிக்கொண்டிருந்தாக என் நண்பன் சொன்னான் -  "அது!" (அஜித் ஸ்டைலில் வாசித்தால் இந்த இடத்தில் நன்றாக இருக்கும்!) சென்ற ஆட்சியில் 3 மணிநேரம் இந்த ஆட்சியில் 6 மணிநேரம். இப்பொது அநேகமாக எல்லா வீடுகளிலும் 'இன்வர்டர்' வந்து விட்டது. பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிறார்களோ என்னவோ.

1,70,00000... எத்தனை சைபர்கள் என்று மறந்துவிட்டது. அவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது என்றார்கள். ஜோடியாக தமிழகத்திலிருந்து இரண்டு பேரை திகாருக்கு விருந்திற்கு அனுப்புவது போல் அனுப்பினார்கள். போனவர்களை 'இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்ல' என்று கேட்பது போல் 6 மாதத்தை ஓட்டினார்கள். அந்த கேப்பில் ஒரு பெண்ணென்று கருணை காட்டுங்கள், ஒரு தாயென்று நினையுங்கள், ஒரு வயதானவரின் மகள் என்று யோசியுங்கள் என்று ஆளாளுக்கு எழுதித் தள்ளினார்கள். மேலிடமும் ஒரு வழியாக 'கனி'வாகி திருப்பி அனுப்பி 'எந்தப் பிரச்சனையும் பண்ணாமல் ஒழுங்காக இருந்தார். நாங்கள் பார்த்ததிலேயே நல்ல கைதி' என்ற ஜெயில் வார்டன் சர்டிபிகேட்டையும் கொடுத்தார்கள். வந்து வருவதற்குள் என்னா அலப்பறை? தியாகச் செம்மல், தங்கக் கம்மல் என்றெல்லாம் பட்டத்தை அள்ளி வீசி, 'தமிழகத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டும் அனைத்து தகுதிகளும் இந்தம்மாவிற்கு உண்டு, அதனால் கட்சியில் முக்கிய பதவி' என்று பேட்டி கொடுக்கிறார்கள். சத்யராஜ் ஒரு போராட்டத்தின் போது சொன்ன முட்டாக்கூ தமிழன் அதை கேட்டுக் கொண்டு இருக்கிறான். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.  

இவையெல்லாம் ஊர்க்கதை. சொந்தக்கதை சூப்பரு. செய்ற வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி சொல்லியே ஒரு வருடத்தை ஓட்டிவிட்டேன் நான். பிடித்த வேலை எது என்று தெரிந்தால்தானே கை நிறைய காசு கொடுக்கும் இந்தப் பிடிக்காத வேலையை "சீ...போ" என்று தூரப்போட முடியும்? அந்தத் துப்பு தான் எனக்கில்லையே! என் அப்பாவோ "IAS, IPS ல் ஆரம்பித்து இப்போது வக்கீலாப் போடா ஆளலாம்" என்று இன்றைய தேதிக்கு அம்பதறுவது ஆப்ஸன்ஸ் கொடுத்து விட்டார். எனக்குத்தான் எதும் செட்டாகல!

"ஆம்பிளைக்கு கெத்து தான்டா மாமா சொத்து" வகையறாவான எங்களெல்லாம் சும்மகாச்சூக்கு ஒரு பிகர் பாத்து சிரிச்சாலே உஸ்பெக்கிஸ்தான்ல ட்ரீம் சாங் கேப்போம், கொஞ்சம் அழுத்தமாகவே ஒரு பிகர் சிரிச்சா? முடின்ச்... பினீஸ்ஸ். "ரவிவர்மன் ஓவியம் என்று சொல்கிறார்களே, அதன் நயமென்ன உன் கூந்தலை விட அழகானதா? அடடே...!" என்று நாளொரு கவிதை, பொழுதொரு ட்ரீம் லொக்கேஷன் என்று பாதி வருடம் ஓடிவிட்டது. "இவ நம்மளுக்கு செட் ஆகமாட்டா மச்சி" என்று என் ஆழ்மனம் இப்போது சொல்கிறது (அப்படியா?). இத்தனை நாள் கொய்யால எங்கிருந்தது என்று தெரியவில்லை. வீட்ல சீக்கிரம் ஒரு பொண்ண பாக்கச் சொல்லனும். ரொம்ப வீக்கா இருக்கேன்! அதுலயும் ஒரு சிக்கல். 'வோட்கா' குடித்தால் தொண்டை அரிக்கிறது" என்று என்னுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி சொன்னதாக நண்பன் ஒருவன் சொன்னான். "ஸ்மோகிங் ஜோன்" என்று ஒரு இடத்தை ஒதுக்கியிருப்பதே பெண்கள் ஆர அமர உட்கார்ந்து தம்மடிக்கத்தான் போலிருக்கிறது. என்னாக்கூட்டம்! கலி முத்திவிட்டது என்று சொல்வதா? இல்லை பாரதி கேட்ட புதுமைப் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே உலா வருகிறார்கள் என்று சொல்வதா? தெரியவில்லை. "நல்ல பொண்ணெல்லாம் நமக்கு கிடைக்காது மச்சி, 'நீ எப்படி இருந்தனு நான் கேக்கமாட்டேன், நான் எப்படி இருந்தேன்னு நீ கேக்கக்கூடாது, ஓக்கேவா?'னு வாழ்க்கைய ஓட்டிரனும் மச்சி" என்கிறான் இன்னொரு நண்பன் (குட் கேர்ள்ஸ், உங்கெளுக்கெல்லாம் ஒரு கொஸ்டீன்; மெய்யாலுமே இவன் என் நண்பன் தானா?)


ஆக மொத்தமாக ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிகிறது. நடப்பது நடக்கட்டும்... வேடிக்கை பார்ப்பதற்கு என்ன வரப் போகிறது?


இவ்வளவு நேரம் மொக்கை போட்டது இதோ இந்த மேட்டரைச் சொல்வதற்குத்தான். "சென்ற வருடத்தைப் போல இல்லாமல் இந்த வருடம் கொஞ்சம் "சுமூத்தாக" போகும் என்ற நம்பிக்கையில் இதோ வந்துவிட்டேன் - I am Back!!!"

P.S - அடுத்து மூன்று வெவ்வேறு விதமான காதல் கதைகளைக் கொண்ட படங்களின் விமர்சனம் (நான் திருந்த மாட்டேன்!)

Thursday, December 29, 2011

தமிழ் சினிமா 2011 - பாகம் 02


2011 தமிழ் சினிமாவில் என்னை பெரிதும் ஏமாற்றிய 10 படங்களின் பட்டியல் கீழே

ராஜபாட்டை
இந்த வருடம் என்னை வெறித்தனமாக வெறுப்பேற்றிய படம் என்றால் அது ராஜபாட்டை தான். குழந்தையாக தெய்வத்திருமகளில் நடித்த விக்ரமின் அடுத்த அவதாரம், ‘நான் மகான் அல்ல’விற்குப் பிறகு வந்த ‘அழகர்சாமியின் குதிரை’ சரியாகப் போகாததினால் தன்னை நிரூபிக்க சுசீந்திரன் அடுத்து தரவிருந்த மாஸ் படம் என்ற இரண்டே முக்கிய காரணங்களால் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஆனால் கடைசியில் கடுப்பானது தான் மிச்சம். விக்ரமைச் சொல்லி குற்றமில்லை. நான் மகான் அல்ல அதன் திரைக்கதைக்குப் பெயர் போனது. அழகர்சாமியின் குதிரை கதை இரண்டு பக்க சிறுகதையினுடையது. திரைக்கதை தான் படமே! இவற்றைக் கொடுத்த சுசீந்திரனா இப்படி? திரைக்கதை என்னும் வஸ்து மருந்துக்குக் கூட இல்லை. மூன்று நல்ல படங்களைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிய பிறகு படு மொக்கையாக ஒரு ப்ளாப் கொடுக்க வேண்டும் என்பதென்ன தமிழ் சினிமாவின் இன்னொரு சென்டிமெண்டா?

ஏழாம் அறிவு
தீனா, கஜினி, ரமணா கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸின் கதை, திரைக்கதை, சூர்யா, ரெட் ஜெயண்ட், ஸ்ருதிஹாசன், அசாதரண சைனீஸ் வில்லன், தமிழர்கள் அறியாத தமிழன் போதிதர்மன், மிகப் பெரிய பட்ஜெட், அதற்கும் பெரிதான எதிர்பார்ப்பு, வியாபாரம்... இத்தனை இருந்தும் படம் என்னவோ சுமார் ரகம் தான். பேசிய பேச்சிற்கு நான் என்னென்னவோ எதிர்பார்த்து போயிருந்தேன். யாரும் இதுவரை சொல்லாத போதிதர்மரைப் பற்றி மட்டும் காட்டிவிட்டு “பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா” என்று சொன்னால் போதும், திரைக்கதையெல்லாம் தேவையேயில்லை என்று முருகதாஸ் நினைத்திருப்பார் போல. கதையின் போக்கை நேற்று படம் பார்க்க ஆரம்பித்த குழந்தை சொல்லிவிடும். அவ்வளவு பெரிய ஓட்டை. நீங்களே இப்படி பண்ணலாமா முருகதாஸ்... எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தோம்...

அவன் இவன்
தேசிய விருதை வாங்கித் தந்த ‘நான் கடவுள்’ படத்தை எடுக்க மூன்று வருடம் ஆகிவிட்டது, பணம் வேஸ்ட், ஆர்டிஸ்ட் டேட்ஸ் வேஸ்ட் அது இதுவென்று குறை சொல்லி பாலாவை வெறுப்பேற்றி அவசரவசரமாக ஒரு படத்தை எடுக்க வைத்தார்கள். முடிவு பாலாவே விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளில் வந்தமர்ந்து விளம்பரப்படுத்தியும் படம் ஓடவில்லை. விஷாலின் அருமையான நடிப்பு விரயமானது தான் மிச்சம். காக்காவிற்கு வெள்ளை பெயிண்டை வலுக்கட்டாயமாக அடித்துவிட்டாலும் அதனால் காக்கா என்று தான் கத்த முடியும். ஒரு படைப்பாளியை அவரது போக்கில் விட்டுவிட வேண்டும். இம்சிக்கக்கூடாது...

நடுநிசி நாய்கள்
விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு கௌதம் மேனன் இப்படி ஒரு முயற்சியை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த முயற்சியை தைரியமாக பாராட்டலாமென்றாலும், படத்தை பாராட்ட முடியவில்லை.

பொன்னர் சங்கர்
பிரசாந்தின் மீதோ, அவரது தந்தை நடிகர்/இயக்குனர் தியாகராஜன் மீதோ, கலைஞரின் கதை வசனத்தின் மீதோ எனக்கொன்றும் பெரிதாக ஈடுபாடு இல்லையென்றாலும், பொன்னர் சங்கரை நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ரிசல்ட் ஏமாற்றமே. ஏற்கனவே பக்கம் பக்கமாக இங்கே புலம்பியிருக்கிறேன்.

ரௌத்திரம் / வந்தான் வென்றான்
சத்தியமாக ரௌத்திரம் படத்தின் டிரைலரைப் பார்த்து நான் மிரண்டது உண்மை. போலீஸ் கதை தான் என்று நினைத்தேன். ஆனால் போய் பார்த்ததில்தான் தெரிந்தது வேலையில்லாமல் திரியும் கோபக்கார இளைஞனின் கதை என்று. காட்சிப்படுத்திய விதம் அருமை தான் என்றாலும் கதை இல்லாததால் படுத்துவிட்டது.

ஆர்.கண்ணனின் ஜெயம் கொண்டானை இப்பொழுது போட்டாலும் அலுப்படையாமல் பார்ப்பேன். கண்டேன் காதல் காமெடி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அந்த நம்பிக்கையில் சென்ற வந்தான் வென்றான் வெறுப்பேற்றி அனுப்பியது தான் மிச்சம். அடுத்து சிம்புவை வைத்து டெல்லி பெல்லியை எடுக்கப் போகிறார் என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

வேங்கை
சிங்கத்திற்காக ஒரு வருடம் கதை விவாதம் நடத்திய ஹரி மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டதாக நினைத்து இரண்டே மாதத்தில் வேங்கை படப்பிடிப்பைத் தொடர்ந்தார். ஊரையே ஆட்டி வைக்கும் அப்பா, அவருக்கு மட்டுமே அடங்கும் பையன், இவர்களை அழிக்க நினைக்கும் ஒரு வில்லன், நடுவே ஒரு காதல், அருவாள்... போரடிக்கிறது!

எங்கேயும் காதல்
பாடல்களை கேட்டு ஏமாந்து விட்டேன். ஹன்ஸிகாவை தவிர்த்து படத்தில் ஒன்றுமே இல்லை.

வெடி
எங்கேயும் காதல் படத்தைப் பார்த்த பிறகும் பிரபுதேவாவை நம்பி இந்தப் படத்திற்கு போனது என் தவறே!


ஓஸ்தி
சல்மான் கான் இடத்தில் சிம்பு. இதெல்லாம் தேவையா?

என்னைப் பெரிதும் ஏமாற்றிய இந்த ஆண்டின் 10 படங்களுக்கு அடுத்து அடுத்த ஆண்டில் நான் மிகவும் எதிர்பார்க்கும் 10 படங்களையும் சொல்லிவிடுகிறேன்...

தலைவரின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் - இந்த இரு படங்களின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லையே கிடையாது. அவை தவிர்த்து மற்றவை

அரவான்
வசந்த பாலன் காட்டப்போகும் பழந்தமிழர் வரலாறு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. நிச்சயம் ஏமாற்றாது என நம்பலாம்.

நீதானே என் பொன்வசந்தம்
மீண்டும் ஒரு விண்ணைதாண்டி வருவாயாவாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. யோஹான் அத்தியாயம்: ஒன்று வருவதற்கு 2013 ஆகலாம் என்றாலும், கௌதம் மேனன் இயக்கப் போகும் விஜய் படம் என்பதால் அதற்கும் ஆர்வம் அதிகமாகத் தான் இருக்கிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி
சந்தானம்-ராஜேஷ், நம்பிப் போகலாம்

அன்னக்கொடியும் கொடிவீரனும்
பாரதிராஜாவின் கனவுப் படம். ஏமாற்றாது!

எரியும் தணல்
அவன் இவன் தந்த தோல்வி பாலாவை தூங்க விடாது. முரளி மகன் அதர்வா தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகப் போவது நிஜம்

முகமூடி
மிஷ்கின்-சூப்பர் ஹீரோ. எப்படியிருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பே பி.பியை எகிற வைக்கிறது.

பில்லா 2
விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷ் மேக்கிங் வேண்டுமா இல்லை அஜித் மட்டும் போதுமா என்பது இந்தப் படம் வந்தால் தெரிந்து விடும்

மாற்றான்
கே.வி.ஆனந்த் - சூர்யா!

இரண்டாம் உலகம்
செல்வா அண்ட் செல்வா ஒன்லி!

வடசென்னை
வெற்றிமாறன் முதன்முதலில் படமாக்க விரும்பிய கதை என்று சொல்லப்படுகிறது. இம்முறை தனுஷ் தவிர்த்து சிம்புவுடன் இணைந்திருக்கிறார். பார்க்கலாம்.

இவை தவிர ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி (ஏழாம் அறிவு எனது போன வருட எதிர்பார்ப்பு லிஸ்டில் முதலாம் இடத்தில் இருந்தது), லிங்குவின் வேட்டை, இயக்குனர் விஜய்-விக்ரம் மீண்டும் இணையும் தாண்டவம், விகரமின் சரித்திரப் படமான கரிகாலன், பாலாஜி சக்திவேலின் புதிய படம், குறும்படங்களில் பட்டையைக் கிளப்பிய பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ போன்றவையும் லிஸ்டில் உள்ளது. ஷங்கரின் நண்பன் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. 3 இடியட்ஸ் எனக்கு மிகவும் பிடித்த படம். அதைக் கெடுக்காமல் இருந்தால் சரி. பலர் பல விதமாக இணைந்து பூஜை போடுகிறார்கள்; சொன்னது போல் டிரைலர் கூட அற்புதமாக கட் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் என்ன படம் தான் பப்படமாகவே இருக்கிறது. பார்ப்போம் 2012 மகிழ்விக்குமா அல்லது வழக்கம்போல வேதனைப்படுத்துமா என்று.

Monday, December 26, 2011

தமிழ் சினிமா 2011 - பாகம் 01

இந்த வருடம் வெகுவாக வலைப் பக்கம் வராமல் இருந்ததற்கு பெரிய காரணம் ஏதுமில்லாததால், "அடுத்த வருடம் நிச்சயம் தொடர்ந்து எழுதவேண்டும்" என்ற உறுதிமொழியை மட்டும் தற்சமயம் எடுத்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம். "தமிழ் சினிமா இந்த வருடம்" என்று பார்த்தால் "பெரிதாக ஒன்றுமில்லை" என்று தான் சொல்வேன். சென்ற வருடமே மோசம் என்று சொல்லியிருந்தேன். இந்த வரும் அதற்கும் மோசம். எதிர்பார்த்த படங்கள் பல ஊத்திக்கொண்டது. சில நல்ல முயற்சிகளும் வந்து வெற்றியடந்திருக்கிறது என்றாலும், பிரியாணி எதிர்பார்த்திருந்தவனுக்கு போனால் போகட்டும் என்று தயிர் சாதம் போட்ட கதை தான் அந்த சில படங்களின் வெற்றிகள்.

இந்த வருடத்தின் பெஸ்ட் 10 ஆக நான் பார்க்கும் படங்கள் கீழே

10) அழகர்சாமியின் குதிரை
சுசீந்திரன் - 'வெண்ணிலா கபடிக்குழு'விற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் வெளிவந்தது 'நான் மகான் அல்ல'. அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வந்தது இந்த அழகர்சாமியின் குதிரை. நிச்சயம் நல்ல முயற்சி தான் என்றாலும், இந்தக் கதைக்கு இதற்கு மேல் எதுவும் கொடுக்க முடியாதுதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் பெட்டராக எடுத்திருக்கலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

9) வாகை சூட வா
இந்த வருடத்தின் பெஸ்ட் முயற்சி என்றால் அது வாகை சூட வா தான். களவாணியின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சற்குணம் நினைத்திருந்தால் பெரிய மாஸாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் தனது அடுத்த படத்தையும் சத்தமே இல்லாமல் வித்யாசமாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். இவரது அடுத்தடுத்த படங்காள் நிச்சயம் தமிழ் சினிமாவின்  போக்கை மாற்றி அமைக்கும் என்று நம்பலாம். வாகை சூட வா - 1960 களில் படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லாத ஒரு செங்கசூலை கிராமத்திற்கு வரும் ஆசிரியரைப் பற்றிய கதை. கதைக்களனுக்கு எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் மிக நுணுக்கமாகவும் அற்புதமாகவும் காட்டிய இயக்குனர், கதையின் அடிநாதமான "ஒரு சமூகத்திற்கே கல்விகண் திறக்க வரும் ஆசிரியர்" என்னும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்வேன். மெயின் மேட்டர் நெஞ்சில் பதியவில்லை :(

8) சிறுத்தை
இந்த வருடத்தின் மாஸ் ப்ளாக் பஸ்டர் என்றால் அது சிறுத்தை தான். போன வருடம் அண்ணன் சிங்கம் செய்த வேலையை இந்த வருடம் தம்பி சிறுத்தை செய்திருக்கிறது. ஆனாலும் பல முறை பார்த்து சிலாகித்த 'விக்ரமார்குடு' ரிமேக் தான் என்பதால் எட்டாம் இடம் தான் கொடுக்க முடிகிறது.

7) யுத்தம் செய்
'நந்தலாலா' ரிசல்ட் ஏற்படுத்திய கோபத்தால் சேரனை வைத்து மிஷ்கின் செய்த யுத்தம் இந்த யுத்தம் செய். டிபிக்கல் மிஷ்கின் படம். கிட்டத்தட்ட அஞ்சாதேவின் Sequel என்றே சொல்லலாம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ஒய்.ஜி, சேரன் ஆகியோரின் அருமையான நடிப்பில் அசத்தலான திரில்லராக வந்திருக்க வேண்டியது. ஆனால் ஏதோ மிஸ்ஸிங். அதற்குக் காரணம் மிஷ்கினின் அந்த டச்சாகக் கூட இருக்கலாம். ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.

6) மயக்கம் என்ன
இதுவும் மேல் சொன்ன மாதிரி தான். ஆயிரத்தில் ஒருவனின் ரிசல்ட் ஏற்படுத்திய வெறியில், விக்ரமை வைத்து 'சிந்துபாத்' என்னும் கதையை ஆரம்பித்து ஆரம்பிபதற்குள் நிறுத்திவிட்டு, தனது பழைய 'டாக்டர்ஸ்' கதையையே இரண்டாம் உலகம் என்று எடுக்க ஆரம்பித்து, பின் ஆன்ட்ரியா உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் (வதந்திதான்!) அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு புது மனைவி கொடுத்த தெம்பின் காரணமாக அவருக்கே சமர்ப்பணம் செய்ததுபோல் 'மயக்க என்ன' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். "யாருக்கு வேணும்னாலும் வி.தா.வி ஜெஸ்ஸி மாதிரி ஒரு லவ்வர் கிடைப்பா, ஆனா யாருக்காவது தான் மயக்கம் என்ன யாமினி மாதிரி ஒரு மனைவி கிடைப்பா, அப்படிக்கிடச்சவன் தான் உண்மையில் லக்கி" - இது நான் FBயில் படித்த ஒரு கமெண்ட். யாமினி ரிச்சா வின் நடிப்பு சான்ஸ்லெஸ், "ஆடுகளத்துல அப்படி என்ன பெருசா நடிசிட்டான்னு தேசிய விருது..." என்று தனுஷின் நடிப்பைப் பார்த்து முணங்குபவர்களுக்கு 'மயக்கம் என்ன' ஒரு நல்ல பதில். காதல் கொண்டேன், 7ஜி, மயக்கம் என்ன என்று அடுத்தவன் பிகரை உசார் செய்வதாக Trilogy கதையை எடுத்து விட்டார் செல்வா என்றும் சொல்லலாம் :)

5) கோ
இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் என்றால் அது கோ தான். அயன் கொடுத்த தெம்பில் ஜம்மென்று ஒரு படத்தை தந்திருகிறார் கே.வி.ஆனந்த். அயன் கதை 'Catch Me If You Can' படத்தின் தழுவல் அல்ல, அதற்கு முன்னமே எழுதப்பட்ட 'சுபா' கதைதான் என்று சொன்னார்கள். 'கோ' படத்தின் பாதி காட்சிகள் 'State of Play' படத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு எந்த பதிலும் இல்லை. என்றாலும் அனைவருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் கோ ரொம்பவே பிடித்திருந்தது. காரணம் நான் கோ பார்த்த பிறகு தான் 'State of Play' பார்த்தேன்!

4) பயணம்
அருமையான படம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய லைட்டான படங்களை கொடுத்துக்கொண்டிருந்த ராதாமோகன் என்னடா விமானக்கடத்தல் கதையெல்லாம் எடுக்கிறாரே என்று நினைத்தால் தன் பாணியிலிருந்து சற்றும் விலகாமல் அருமையான் நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கதை கொடுத்து இந்த முறையும் அசத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

3) ஆரண்ய காண்டம்
'இந்த வருடத்தின் சில நல்ல முயற்சிகள்' என்று முதலில் சொல்ல முக்கியக் காரணம் ஆரண்ய காண்டம். அருமையான கதை, திரைக்கதை, கேமரா கோணங்கள், நடிப்பு எக்ஸட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா என்று ஒரு புல் பேக்காக வந்த படம். சரியான விளம்பரம் இல்லாததால் வியாபாரம் சற்றுக் குறைவுதான் என்று தெரிகிறது. இந்தப் படத்தைப் பற்றிய எனது விமர்சனம் இதோ

2) எங்கேயும் எப்போதும்
முதலிடத்தைதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சத்தமில்லாமல் வந்து பம்பர் ஹிட் அடித்த படம். படம் பார்த்த பின் ஒவ்வொரு முறை பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும் திக் திக் கென்று இருப்பது உண்மை. இரண்டு அருமையான, வெவ்வேறு விதமான காதல் கதைகள், ஒரு விபத்து என்ற சாதாரண கதையை வைத்துக் கொண்டு அசால்ட் காட்டிவிட்டார் புது இயக்குனர் சரவணன். ஏழாம் அறிவிற்கு முன் விளம்பரங்களிலெல்லாம் நிரம்பி வழிந்த ஏ.ஆர். முருகதாஸ் ரிலிஸிற்குப் பிறகு ஆள் அட்ரஸே காணோம். ஆனால் ரிலீஸிற்குப் பிறகு எங்கேயும் எப்போதும் விளம்பரங்கள் அனைத்திலும் ஏ.ஆர். முருகதாஸ் தான். இது ஒன்றே போதும் படத்தின் வெற்றியைப் பற்றிஷ் சொல்ல.

1) ஆடுகளம்
சந்தேகமே இல்லாமல் நம்பர் ஒன் ஆடுகளம் தான். இரண்டாம் பாதி தான் கிளாஸிக் என்கிறார்கள் பலர். ஆனால் எனக்கோ முதல் பாதிதான் வெகுவாகப் பிடித்திருந்தது. சேவல் சண்டையில் கே.பி.கருப்புடன் சேர்ந்து அவன் சேவல் ஜெய்ப்பதற்காக நானும் தியேட்டரில் கடவுளை வேண்டிக் காத்துக் கொண்டிருந்தேன்!

ஓக்கே பார்க்கலாம் என்று நான் நினைக்கும் பத்து படங்களின் பட்டியல் கீழே

1) வானம் - சிம்பு கோவில், வி.தா.வி க்குப் பிறகு நன்றாக தனது நடிப்புத் திறமையை அழகாக வெளிக்காட்டிய படம். சந்தானத்தின் காமெடி சரவெடி மிகப்பெரிய பிளஸ்.

2) மங்காத்தா - "தல" ஒருத்தரை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படம். சூப்பர் வில்லன் அஜித், சூப்பர் காப் அர்ஜுனை வைத்துக் கொண்டு ஒரு அருமையான ராபெரியைக் காட்டாமல், சின்னப் பசங்களை வைத்து கூத்தடித்ததனால் பெஸ்ட் 10ல் இடம் பெறமுடியாமல் போய்விட்டது.

3) போராளி - "நாடோடிகள்" அருகில் கூட வர முடியாது என்றாலும் முதல் பாதிக்காக ஓக்.கே லிஸ்டில் மூன்றாமிடம். ஈழக் கதையாக இருக்குமோ என்று நினைக்க வைத்து வெகுவாக ஏமாற்றிய படம். சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு வந்த ஈசனை விட, இது எவ்வளவோ பரவாயில்லை. வெகுவாகக் கவர்ந்த புரோட்டா சூரியின் வசனத்தை வைத்தே சொல்ல வேண்டும் என்றால் "டேய் நீங்கள்ளாம் அப்பவே அந்த மாதிரி இப்போ போய் ஏண்டா இப்படி?"

4) தெய்வத்திருமகள் - முதன்முதலில் வெளியான டீசரே சொல்லிவிட்டது, "நான் 'I am Sam'ன் ரீமேக் என்று" இருந்தாலும் விக்ரம், குழந்தை சாராவின் அருமையான நடிப்பினால் தேறி விட்டது.

5) சதுரங்கம் - சரியாக வெளியாக வேண்டிய நேரத்தில் வந்திருந்தால் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கும். அருமையான திரில்லர் பிளஸ் கரு.பழனியப்பனின் ஷார்ப் வசனங்கள்.

6) காவலன் - அதிசயமாக விஜய்த்தனங்கள் இல்லாத ஒரு நல்ல விஜய் படம்.

7) காஞ்சனா - முக்கால் பாகம் லாரன்ஸின் நடிப்பிற்காகவும் மீதி கால் பாகம் சரத் மற்றும் கோவை சரளாவின் கூட்டணிக்காகவும் இந்த இடம்

8) குள்ளநரி கூட்டம் - நல்ல கதையுடன் தேவையானதைக் கொடுத்த டைம் பாஸ் படம்.

9) வேலாயுதம் - இதுவரை வந்ததற்கு இது எவ்வளாவோ தேறலாம்.

10) தம்பி வெட்டோத்தி சுந்தரம் - கொக்கி, கருப்பசாமி குத்தகைக்காரருக்குப் பிறகு கரணுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு படம்.

2011 ஆண்டில் என்னை ஏமாற்றிய 10 படங்கள், 2012ல் நான் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியல் அடுத்த பாகத்தில்...