அங்காடித் தெரு - உணர்வுகளும் பகிர்வுகளும்

4:49:00 AM

விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து விட்டு கொஞ்ச நாள் "மச்சி, இந்தலவ்வு… அழகாத்தான் இருக்கும் போலடா" காதல் பெருக்கெடுத்து திரிந்துகொண்டிருந்த சமயம் நண்பர்கள் சிலர் அந்தப் படத்தைப் பற்றி எழுதும்படிஎன்னை கேட்டுக்கொண்டேயிருந்தனர். நானும் எழுதலாம் எழுதலாம் என்றுஉட்காரும்போதெல்லாம் வேறு ஏதாவது வேலை குறுக்கிட்டு ஃபீல் குறைந்துகடைசியில் எழுதமுடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது பார்த்தஅங்காடித் தெரு’வை அப்படி சாதாரணமாக விட்டு விட முடியாது. விண்ணைத்தாண்டி வருவாயா எஃபெக்ட், நான் காதலில் விழுந்தாலொழியஎனக்கு அடுத்து வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. படம் பார்த்து விட்டு ஒருவாரம் சிலாகித்து, உருகி, கனவில் தொலைந்து பின் அடுத்த வாரம் கொஞ்சம்தெளிந்த பின் அடுத்த வேலையைப் பார்க்கவைத்து விட்டது. ஆனால் அங்காடித்தெரு?

காலை வீட்டிற்குப் பக்கத்திலுள்ள சிற்றூண்டியில் 17 ரூ கொடுத்து சாம்பார் இட்லிசாப்பிட்ட போது நியாபகம் வந்தது, மாலை பஜ்ஜி வடை சாப்பிட ரோட்டோரக்கடைக்குச் சென்ற போது நியாபகத்திற்கு வந்தது. இரவு மினரல் வாட்டர் கேன்சொல்ல பக்கத்து பேக்கரிக்கு போன போதும் நியாபகத்திற்கு வந்தது. சிற்றூண்டி, பஜ்ஜிக்கடை, பேக்கரி என்று எங்கு திரும்பினாலும் சிறுவர்கள்! சிறுவர்கள்என்றால் 10 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள். தமிழகத்தின் வருங்காலம். புரியாதபாஷை பேசும், தெரிந்தவர்கள் யாருமே இல்லாத ஊரில் கொத்தடிமைகளாகவிற்கப்பட்ட, வாழ்கையைத் தொலைத்த இவர்களை பெங்களூரில் தினம் தினம்எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. சின்னஞ்சிறு சிறுவர்கள்... அந்த வயதில்எனக்கு எங்கள் தெருவில் என் வீடு எது என்பது கூட குத்து மதிப்பாகத் தான்தெரியும். அப்பா அம்மாவை விட்டு ஒரு நிமிடம் கூட நகர மாட்டேன். வீட்டிலிருந்து பள்ளிக்கு ரிக் ஷா, மதியம் இரண்டு வகைக் கூட்டுப்பொரியலுடன்சாப்பாடு கொண்டு வர ஒரு ஆள், மாலை பூஸ்ட், ஸ்னாக்ஸ் என்று நான் வாழ்ந்தஅந்த வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதி கூட இவர்களுக்கு கிடைப்பது சாத்தியமேஇல்லை என்று நினைக்கும் பொழுது... சொல்லத்தெரியவில்லை அல்லதுமுடியவில்லை

காலை 5 மணிக்கு எழுந்து, 6:30 மணியிலிருந்து இரவு 11:30 மணிவரை வேலை. கஸ்டமர் சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை எடுக்க வேண்டும், டேபிளைத்துடைக்கவேண்டும், தண்ணீர் வைக்க வேண்டும் இல்லையென்றால் உடன்வேலையிலிருக்கும் கொஞ்சம் பெரியவர்களோ அல்லது முதாலாளியோஅல்லது கஸ்டமர் பெருமக்களோ யாராவது ஒருவர் தலையில் ஒரு கொட்டோ, முதுகில் ஒரு அடியோ வைக்காமல் இருக்க மாட்டார்கள். எதையாவது கீழேகொட்டிவிட்டால் தப்பு இவர்கள் மேல் இல்லையென்றால் கூட அடி இவர்களுக்குதான் விழும். கன்னடத்தில் திட்டுவார்கள், ஏன் திட்டுகிறார்கள் என்று கூடத்தெரியாது. கடைக்கு வரும் தமிழர்களை பேசுவதை வைத்து அடையாளம் கண்டுகொண்டு நெருங்கி வருவார்கள். பெரும்பாலானவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். சிலர் சினேகமாகச் சிரிப்பார்கள். இப்போது கூட சில தினங்களுக்குமுன் மஞ்சள் நிறத்தில் ' ஓசூர் அரசுப்பள்ளி' என்று பதித்த டி-ஷர்ட்போட்டுக்கொண்டு மூன்று சிறுவர்கள் புதிதாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள்.

20 லிட்டர் தண்ணீர் கேன். ஒரு பத்தடி தூக்கிவருவதர்குள் மூச்சு வாங்குகிறது. இங்கு 8 வயதுச் சிறுவன் ஒருவன் தான் வீடு வீடாக இதை தூக்கிக்கொண்டுசப்ளை செய்கிறான். சத்தியமாக அந்த வயதில் என்னை ஒரு நான்கு கேன்அடுத்தடுத்து தூக்கச் சொல்லியிருந்தால் மூச்சிறைத்து நடுரோட்டில் செத்துகிடந்திருப்பேன். ஆனால் அந்தச் சிறுவன் அதைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான், ரோட்டைக் கடக்கிறான்... விழுந்து விடுவானோ என்ற பயம் நமக்குத்தான்; ஆனால் அவன் அசால்ட்டாக தூக்கித் தோளில் வைத்துகொண்டு வந்துவிடுகிறான். தப்பித் தவறி கேன் கீழே விழுந்து விட்டால், கேன் காசு + தண்ணிகாசு என்று பெரிதாய் சம்பளத்தில் கழித்து விடுவார்கள். சலவைக்காரன் முதல்ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை தமிழ் நாட்டைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள்இங்கு மிக மிக அதிகம்.

தமிழக எல்லையான ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி போன்ற ஊர்களில்வசிப்பவர்கள், பெங்களூர் வியாபாரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களதுகுழந்தைகளை ஒப்படைத்துவிடுகிறார்கள். வட்டியுடன் அசல் முடியும் வரைபெற்றோர் கடனை மகன் அடைப்பான். இன்ன வேலை என்றுவரையறையெல்லாம் கிடையாது. கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும். நான் முன்பு தங்கியிருந்த வீட்டு ஓனர் வீட்டில் வேலை செய்தவன் 14,15 வயதுசிறுவன் ஒருவன். அவன் வீடு இருப்பது 150 கி.மீக்குள். ஆனால் அவன்வருடத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு செல்வான். அதுவும் வெறும் மூன்றுநாள். தீபாவளி அன்று கூட ஓனர் வீட்டில் வேலை இருக்கும் என்பதால் அவனால்செல்ல முடியாது. சம்பளம் 3000 ரூ. சாப்பாடு அவர்களே போட்டு விடுவதால்ரூ கட். 2000 ரூபாய்க்காக அவன் ஓனர் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டுவதிலிருந்து, நாயை வெளியே ரவுண்ட்ஸ் கூட்டிப் போவது வரைகாலையிலிருந்து மாலை வரை நிற்க நேரமில்லாமல் வேலை செய்வான். இன்கம்மிங் மட்டும் வரும் செல்போன் ஒன்றைக் கொடுத்து விடுகிறார்கள். ஒரேஒரு ரிங் தான், அவன் எங்கிருந்தாலும் ஓனர் முன் நிற்க வேண்டும், ஹெட்மாஸ்டர் முன் ஐந்தாவது படிக்கும் மாணவன் நிற்பது போல. படிப்புவராததால் இவனும் ஒரு வகையில் பெற்றோர்களால் விற்கப்பட்டவன் தான்என்பது பின்னாட்களில் தெரிய வந்தது.

கொத்தடிமைத்தனம் - இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. தெரியாதவரையில் நான் கொடுத்து வைத்தவன். 'நான் கடவுள்' படத்தைப் பார்த்து விட்டுபல நாட்கள் (இன்று வரை கூட) நான் பிறத்த பிறப்பிற்காக இறைவனுக்கு நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது 'அங்காடித் தெரு' பார்த்த பிறகு, நான்வாழும் வாழ்க்கைக்காக இறைவனுக்கும் என் பெற்றோர்களுக்கும் நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு சிறிய நாவல், பல சின்னஞ்சிறு கதைகள் ஒன்று சேர்ந்த ஒரு அற்புதமானதொகுப்பைப் போல் உள்ளது 'அங்காடித் தெரு'. நாவலின் கதை என்று பார்த்தால், தந்தையை இழந்ததால் என்னை விட +2வில் 48 மார்க்கூட எடுத்த கதையின்நாயகன், சென்னையின் பிரபல பல்பொருள் கடைக்கு வேலைக்கு வருகிறான். அந்த வேலை அவனுக்குக் கிடைக்க உதவிய தகுதிகள் - தந்தை இல்லை, தாய் - தங்கைகள் உண்டு, வீட்டில் இவனை விட்டால் சோற்றிற்கு வேறு வழியில்லை. +2வில் அவன் எடுத்த மார்க் இல்லை. நண்பர்கள், கிரிக்கெட், காதல் என்றுஜாலியாக பொறியியல் கனவு கண்டு கொண்டிருந்தவன், "எச்சகைய ஆட்டுனாஆயிரம் காக்கா" என்று தத்துவ மழை பொழியும் அண்ணாச்சியின் பொறியில்வந்து தானாக விழுகிறான், உடன் உயிர் நண்பன். வந்த முதல் நாளே குடோனில்வேர்க்க விறுவிறுக்க வேலை செய்து, அடித்துப்பிடித்து உணவு உண்டு, ஒருவர்மேல் ஒருவர் படுத்து எழுகிறார்கள்... நாயகியுடன் முதலில் தகராறு பின் காதல்என்று வழக்கமான ஃபார்முலா, மற்ற படங்களைப் போல் வழக்கமானதாகவேஇருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. அவர்களுக்குள் காதல் மலரும்அந்த இடங்கள் கொஞ்சம் வேதனையான கவிதை. தான் போட்டுக்கொடுத்ததால்நாயகி அடைந்த துன்பத்திற்காக நாயகன் வாழ்நாள் முழுவதும் மன்னிப்புகேட்பதற்கு பதில் தன்னையே அர்பணித்து விடுகிறான்... அடுத்தடுத்து நிகழும்சம்பவங்கள் யாருக்கும் கிடைக்கக் கூடாத துர்ரனுபவங்கள்.

சிறுகதைகள் என்று பார்த்தால்,

1) 30 வருடங்களாக மனிதர்களை நம்பி வாழும் கண்தெரியாத பெரியவர். "விற்கத்தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன்" என்று அவர் சொல்லும்வார்த்தைகளில் ஆயிரமாயிரம் உண்மைகள் பொதிந்து கிடக்கிறது. "You must know how to sell yourself in the market" இது கொஞ்சம் டீசன்ட்டாக நான் வேலை செய்வதுபோன்ற ஐ.டி கப்பெனிகளின் முதலாளிகள் சொல்வது. அதாவது "நம்திறமைகளை சரியான முறையில், சரியான இடத்தில் வெளிக்காட்டி பசக்கென்றுஒட்டிக்கொள்ள வேண்டும்". இது தான் அர்த்தம் என்று அவர்கள் சொன்னார்கள். எனக்குப் புரிந்த அர்த்தம் அடுத்த பத்தியில்.

2) தன்னை விற்று பிழைத்துக்கொண்டிருந்த பெண்ணை ("You must know how to sell yourself in the market? - இங்கு தான் இது பொருந்துகிறார் போல் தெரிகிறது!") திருமணம் செய்து கொண்ட குள்ள மனிதர், அவர்களது நலவிரும்பியானமுஸ்லிம் பாய். எதிர் எதிர் திசையில் சந்தித்துக்கொள்ளும் திரைக்கதைஅமைப்பிலேயே அவர்களது கதையை சொன்ன விதம் அற்புதம்.
3) சௌந்தரபாண்டி - செல்வராணி. எதையும் யோசிக்காமல், காதலை மட்டுமேநினைத்து கசங்கிப்போன 2 வருடக் காதல். "சிறுக்கி மவ, இந்தா இங்க தான்கோலம் போட்டுக்கிட்டே என்ன பாத்து சிரிப்பா. இப்போ அவ இல்ல!" - நம்மாளும்ராணியை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது.

4) இரண்டு சீனே வந்த இரண்டு வரிக்கதைகள் இரண்டு. பொதுக்கழிவறையைகட்டணக்கழிவறை ஆக்கி உயரும்(!) நபர், பழைய டி-சர்ட்களை துவைத்து, இஸ்த்ரி போட்டு, கவர்-லேபிள் ஒட்டி, ரூ10 என்று கூவிக்கூவி ஒரே நாளில்விற்றுத் தீர்க்கும் நபர்.

5) அண்ணனைப் பார்க்க முடியவில்லை, அவன் வேலை செய்யும்கடைப்பையையாவது வைத்துக் கொள்ளலாம் என்று ஏங்கும் நாயகனின் தங்கை; பூஜை, புணஸ்காரம், படையல், ஆச்சாரம், தீட்டு என்று கடவுளுக்கு மட்டும்எல்லாம் செய்யும், கொடுக்கும் வீட்டில் வேலை செய்யும் நாயகியின் தங்கை, அவளுக்காக அழும் நாயகி.
6) பருவ வயதில் நாயகிக்கு வரும் முறிந்த ஸ்கேல் காதல், இர்ர்ர்ர்ர் விட்டதால்பிரிந்த நாயகனின் காதல்.
7) "எப்படி தீயா எழுதியிருக்கான் பாரு" என்று கடவுள் வாழ்த்துப்பாடலைகவிதையென நினைத்து உருகி பின் காணாமல் போன 'மாரிமுத்து' காதல்.

8) 30 வருடங்களாக அடைக்க வேண்டியவர் வாயையெல்லாம் அடைத்து, நிலைத்து நிற்க என்ன வேண்டுமானாலும் செய்யும் அண்ணாச்சி.

9) பல வருடங்கள் நின்று கொண்டே வேலை செய்த்தால் கெட்ட ரத்தம்அனைத்தும் ஒன்று சேர்ந்து எரிக்கோஸ் நோய் வந்து இறந்து நாயகனின்எதிர்காலத்தைக் முதல்னாளே தன் காலில் காட்டும் அந்த முன்னாள் ஊளியர்.

10) “அள்ளிக்கோ, அள்ளிக்கோ” என்று வரும் விளம்பரப் பட சூட்டிங் எப்பிஸோட்.

இப்படி நிறைய இருக்கிறது. மறுபடியும் படம் பாக்கும் தெம்பிருந்தால், பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

இவ்வளவு எழுதியும் கருங்காலி சூப்பர்வைஸரைப் பற்றி எழுதவில்லை. அவ்வளவு வெறுப்பு அந்தக் கதாப்பாத்திரத்தின் மேல். அது தான் கருங்காலியாகவரும் ஏ.வெங்கடேஷிற்கு வெற்றியும் கூட.
‘ 1000 பத்து பேர் சேர்ந்து நின்றால் கூட காணாமல் போய்விடக்கூடிய சாதாரண முகம் ஹீரோவிற்கு, அருமையாக செய்திருக்கிறார் மகேஷ்!
அஞ்சலி - தமிழ் எம்.ஏ 'ஆனந்தி'யையே இன்னும் மறக்கவில்லை. இப்போது
மீண்டுமொருமுறை 'கனி'யாக. மறப்பது சிரமம் தான்.

பாண்டி - கனாக்காணும் காலங்கள் - இவரை பார்க்கும் பொழுது.
நாம் அன்றாடம் பார்க்கும் நிறைய சின்னச் சின்னக் காட்சிகளை எதிர்பார நேரத்தில் கத்தி சொருகுவதைப் போல படமெங்கும் சொருகியிருக்கிறார் வசந்த பாலன்.

இரவு 9 மணிக்குமேல் கடை கடையாக ஏறி 10 ரூ வாங்கும் போலீஸை நான் பல
முறை பாத்திருக்கிறேன். ரோட்டில் ஒரு டேபிளைப் போட்டு டி.வி.டி விற்கும் சிறுவனை விடாமல் நச்சரித்து, அவன் த்தூ... என்று துப்பியதையும் கண்டுகொள்ளாமல் 5 ரூ வாங்கிக்கொண்டு போன போலீஸையும் நான் பார்த்திருக்கிறேன். எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அனைத்தும் நான் தினம் தினம் காணும் நிகழ்வுகள்.

அவையனைத்தும் 'அங்காடித் தெரு'வில் காட்டப்படுகிறது.

இசை, ஒளிப்பதிவு, பாத்திரப்படைப்பு... இன்னும் நிறைய இருக்கிறது எழுத. எப்படியும் இன்னொரு முறை பார்த்துவிடுவேன் என்று தான் நினைக்கிறேன்.

இது போன்றதொரு அங்காடித் தெருவில் வாழ்க்கையை ஆரம்பித்து இப்போது
நல்ல நிலைமையிலிருக்கும் சக பதிவிர் வடகரை வேலன் அவர்களது இந்தப் பதிவை கட்டாயம் வாசிக்கவும்.

மொத்ததில் அங்காடித் தெரு - கொஞ்சம் மிகைப்படுத்தியிருப்பதைப் போலத்
தெரிந்தாலும் உண்மை இதை விடக் கொடுமை என்பதை உணர வைக்கும் வலி.

பி.கு - கடைசியில் நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வதைப் போலக் காட்டி
பாஸிடிவ்வான டைரக்டராக முயன்றிருக்கிறார் வசந்த பாலன். அவரது 'ஆல்பம்' படம் வெற்றியடந்திருந்தால், 'வெயில்', 'அங்காடித்தெரு' நமக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆல்பம் ஹிட்டாகியிருக்க வேண்டும். என்னைப் போன்ற சாமானியர்களால் வெயிலின் தாக்கத்தையும், அங்காடித் தெருவின் நெறிசலையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மீண்டும் வருவேன்...

You Might Also Like

3 comments

  1. நண்பரே,

    உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகள் கனக்க வைக்கிறது, அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  2. nicely did...i thought of typing in tamil...but correct ah varala da...i am readly your post's regularly..
    My brother did this....and check hiis other videos too
    http://www.youtube.com/watch?v=yKvyV8xx1Zg&playnext_from=TL&videos=nkiRl15kGAE

    ReplyDelete
  3. Sathiyama solren padam paarthu 2 varusham irukkumem=ndru ninaikiren innum ovvoru charactarum manasil..

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...