URUMI (Malayalam) | INDIA | 2011

10:12:00 AM


தமிழில் சுருள் பட்டை என்றழைக்கப்படும் உறுமி கேரள களரிப் பயிற்சி முறையில், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கும் அபாயத்தின் காரணத்தினால் கடைசியாக கற்றுத்தரப்படுகிறது. The Most Deadly Weopon வகையராக்களில் வரும் நீளமான இந்த சுருள் கத்தி, வெகு சுலபமாக எதிராளியின் உடல் பாகங்களை துண்டாக்கி விடும். பயன்படுத்தத் தெரியாமல் இதை சுழட்டினால் பயன்படுத்துபவருக்கும் அபாயம் நிச்சயம். இது உருமியின் வரலாறு.

சரித்திரக் கதைகளில் எனக்கு எப்பவுமே ஒரு தீராத காதல் உண்டு. சந்திரமுகியில் வேட்டையராஜா சந்திரமுகி கதையைக் கேட்டு, மயங்கி, ஒன்றிப்போய் ஜோதிகா தன்னையே சந்திரமுகியாக நினைத்துக் கொண்டு Split ஆகிப் போவார். அதே போன்ற நிலைமை இன்னும் எனக்கு வராமல் இருப்பது ஆச்சரியமே! அந்த அளவிற்கு எனக்கும் சரித்திர, போர் கதைகளில் ஈடுபாடு உண்டு. அதனாலேயே உறுமிக்காக நான் காத்திருந்தேன்.

மற்றொரு காரணம் சந்தோஷ் சிவன். அவரது கைவண்ணத்தில் வந்த அனைத்துப் படங்களையும் தேடிப் பிடித்து பார்த்துவருகிறேன். ராவணன் படம் எனக்குப் பிடித்திருந்ததற்கு ஒரே காரணம் மணிரத்னமும் அல்ல, விக்ரமும் அல்ல. சந்தோஷ் சிவன் தான். அவரது கேமராக் கோணங்களிக்கு நான் ரசிகன். ஹை-ஸ்பீட் கேமராவில் எடுத்து ஸ்லோ மோஷனில் அவர் காட்டும் மேஜிக்கள் அனைத்தும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். க்ளோசப் காட்சிகளை இவர் போல் இதுவரை யாரும் இவ்வளவு அழகாக, ஆழமாக காட்டியிருக்க முடியாது. இந்தப் படத்திலும் இவரது அனைத்து மேஜிக்களும் உண்டு!

சந்தோஷ் சிவனின் இன்னொரு பெருமை, இவரது படம் என்றால் நடிகர்-நடிகையர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன்வருகிறார்கள். காரணம் இவருக்கு இருக்கும் சர்வதேச அடையாளம். அதற்கு வெகு சமீபத்திய உதாரணம் உறுமி படத்தின் டிரைலர் வெளியானது ஹாங் காங் உலகப் திரைப்படவிழாவில்! உருமியிலும் ஏகப்பட்ட நட்சதிரங்கள். பிரதாண கதாபாத்திரங்களாக ப்ரித்திவிராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், ஜெகத்தி ஸ்ரீகுமார். சிறப்பு தோற்றத்தில் ஆர்யா, வித்யா பாலன், தபு. மேலும் இவரது படங்கள் பெரும்பாலும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மலையாளத்தில் உறுமி, தமிழில் பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாள், ஆங்கிலத்தில் Vasco Da Gama.

இதற்கு முன் நான் பார்த்த மலையாள சரித்திரப் படம் பழஸிராஜா. 10 படம் எடுக்கக் கூடிய பட்ஜெட்டில் ஒரே ஒரு படம் எடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். இப்போது அதேபோன்றதொரு பெரிய பட்ஜெட்டில் உறுமி. இந்தப் படம் பழஸியைவிட மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில் வாஸ்கோ டகாமா இரண்டாவது, மூன்றாவது முறையாக இந்தியா வந்த போது கேரளத்தில் நிகழ்ந்த சம்பவங்களோடும், AD 1524 ஆம் ஆண்டு எப்படி அவர் ஒரு கொடூர மரணத்திற்கு ஆளானார் என்பதைம் இணைத்து கிடைத்த தகவல்களைத் வைத்து தெளிவான ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறார், ஷங்கர் ராமகிருஷ்ணன். இந்தக் கதைக்கு ஒளி ஓவியம் கொடுத்து, இயக்கியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.

நிகழ்காலத்தில் ஜாலி ஜோக்கராக திரிந்து கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு (ப்ரித்திவிராஜ்), அயல் நாட்டு ரியல் எஸ்டேட்டான நிர்வாணா விலிருந்து வரும் நித்யா மேனன், அவனுக்கே தெரியாமல் அவனது பெயரில் கேரளத்தில் இருக்கும் பாட்டன் சொத்த்திற்கு மூன்று மடங்கு அதிகம் விலை தருவதாகச் சொல்கிறார். வந்த வாய்ப்பை வீணடிக்காமல் தன் இடத்தைப் பார்க்க தனது தமிழ் நண்பன் பிரபுதேவாவுடன் தன் சொத்தைப் பார்க்கச் செல்கிறான். அந்த இடத்தில் இதுநாள் வரை ஆதிதிராவிட மக்கள் நலனுக்காக NGO ஒன்றும், ஆரம்பப்பள்ளியும் வித்யாபாலன் தலைமையில் நடந்துவருவது தெரிகிறது. அதே இடத்தில் புத்திசுவாதீனம் இல்லாத ஜெனிலியாவையும் காண நேர்கிறது. வித்யாபாலன், கிருஷ்ணனிடம் இந்த இடத்தை வெளிநாட்டவர்கள் இத்தனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கும் சுரங்களால் தான் என்றும், ஏற்கனவே அவர்கள் லோக்கல் எம்.எல்.ஏவை வைத்து முயற்ச்சித்து ஏமாந்து போய்தான் அவரிடன் வந்திருக்கின்றனர் என்பதையும், இதை விற்க ஜெனிலியாவின் கையெழுத்தும் வேண்டும் என்கிறார்.

குழப்பத்துடன் வெளியே வரும் நண்பர்களை ஒரு கும்பல் கடத்தி, கண்ணைகட்டி காட்டிற்குள் அழைத்து செல்கிறது. கடத்தியது அந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள். கிருஷ்ணனை அவர்களது தலைவனிடம் (ஆர்யா) விடுகிறார்கள். அந்தத் தலைவன் மூலம் கிருஷ்ணனுக்கும் நமக்கும் அவனது மூதாதயரின் வரலாறு ப்ளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது. 

கதை வாஸ்கோ டகாமா பற்றியது என்றாலும், கதைகளன் வாஸ்கோடகாமாவை 22 வருடங்களாக கொல்லக் காத்திருக்கும் வீரன், சிரக்கல் கீழு நாயர் என்பவனைப் பற்றியதே. AD 1524 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இந்தியா வரும் போர்த்துகீஸிய வைசிராய் வாஸ்கோ டகாமா, கேரளத்தில் விளையும் மிளகிற்கு தன் நாட்டில் ஏக வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து, அதை வணிகம் செய்ய விரும்புகிறான். ஆனால் அதற்கு கேரளத் தம்புரான் (மன்னன்?) எதிர்ப்பு தெரிவித்து மறுக்க, இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் ஹஜ் பயணம் முடித்து திரும்பி வரும் மிரி என்னும் கப்பலைத் தகர்க்கிறான் வாஸ்கோ. ஏற்கனவே பரங்கியர் (கேரளத்திலும் வெள்ளையர்களை பரங்கியர் என்றே அழைக்கின்றனர்) தன் தேசத்திற்குள் செய்யும் அட்டூழியங்களால் காண்டாகிப் போயிருக்கும் வீரன் சிரக்கல் கொத்துவாள் (ஆர்யா) பலர் பயந்து பின்வாங்க தனியாளாக அவர்களது படகிற்கே சென்று தாக்குகிறான். வாஸ்கோவை சராமாறியாக புரட்டும் கொத்துவாள், அவனது சுண்டுவிரலை வெட்டிவிடுகிறார். அதற்கு முன் சமாதனத்திற்கோ எதற்கோ தன் மகனை வாஸ்கோவின் படகிற்கு ஒரு பிராமணருடன் ஆர்யா அனுப்புவது எதற்கு என்று புரியவில்லை (மொழிப் பிரச்சனை). தன் மகனை காப்பாற்றி விட்டு பரங்கியரின் துப்பாக்கி குண்டிற்கு இரையாகிறார் கொத்துவாள்.

தன் தந்தையைக் கொன்ற வாஸ்கோவைக் கொன்று, பரங்கியரின் தடத்தை இந்த தேசத்திலிருந்தே அழிப்பது என்று சபதமெடுக்கிறான் கொத்துவாளின் மகனான சிரக்கல் கீழு நாயர் (ப்ரித்திவிராஜ்). அந்தச் சிறுவனுக்கு அடைக்கலம் தந்து உயிர் நண்பனாகிறான் இஸ்லாமியனான வவ்வாளி (பிரபு தேவா) உயிரோடு கடலில் மூழ்கடித்து கொல்லப்பட்ட பெண்களின் தங்க ஆபரணங்களை உறுக்கி, எப்போதும் அவர்களது ஆசி தன்னிடம் இருக்க உறுமி ஒன்றை செய்கிறான். உருமியும் வவ்வாளியும் எப்பபோதும் கீழுவுடனே இருக்கும் பக்கபலங்களாகிறது.

முதலில் வாஸ்கோவின் மகனான எஸ்டாவியோ டாகாமாவை சிறை பிடிக்கும் போது அறிமுகமாகிறாள் அரக்கல் இளவரசியான ஆயிஷா (ஜெனிலியா). தன்னிடம் விளையாடிய போர்த்துகீஸியர்கள் இருபத்தி ஒன்பது பேரை தனியாளாக கொன்று குவித்து ஒருவனை மட்டும் இதைச் உலகிற்கு சொல்ல விட்டு வைத்தவள் இந்த ஆயிஷா.

சிரக்கல் மாகாணத்தின் தற்போதைய தம்புரான், அவரது மகன் பானு விக்ரமன், மகள் இளவரசி சிரக்கல் பாலா (நித்யா மேனன்) தம்புரானின் பெண் தன்மை மிகுந்த மந்திரி செனிச்சேரி குரூப் (ஜெகத்தி ஸ்ரீகுமார்), திடீரென்று தோன்றி மறையும் தேவதை போன்ற மக்கோம் (வித்யா பாலன்), சிரக்கல் ஆதிதிராவிட மக்கள் என்று பலரை தனது காலப் பயணத்தில் சந்திக்கும் கீழு நாயர் இறுதியாக குரூப் மூலம் தன் மகனை மீட்டு, தம்புரானையும், அவரது மகனையும் கொன்று சிரக்கல்லை கைப்பற்றும் வாஸ்கோவை எப்படி தான் உருவாக்கிய படையின் துணையுடன் எதிர்கொண்டு, அவனைக் கொன்று, உயிர் துறக்கிறான் என்பதுடன் ப்ளாஷ்பேக் முடிகிறது.

நிகழ்காலத்தில் வரும் கதாபாத்திரங்களையே ப்ளாஷ்பேக்கிலும் பயன்படுத்தி திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அழகாக கூட்டியிருக்கிறார் கதாசிரியர் ஷங்கர் ராமகிருஷ்ணன். ஆங்கிலேயர் வந்து நம்மை ஆண்டுவிட்டு போன காலத்திற்கு முன்னமே பலர் நமது நாட்டைக் கைப்பற்ற துடித்திரார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆங்கிலேயர் இனி வரப் போகிறார்கள் போன்ற தகல்வல்கள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க அப்போதிருந்த சூழ்நிலையிலேயே கதையை அமித்திருக்கிறார்.   

ப்ருத்திவிராஜ், இந்தப் படத்திற்காக தன் உடலை காட்டுத்தனமாக மெறுகேற்றியிருக்கிறார். பீமா விக்ரம் போல பிரம்மாண்டமாக, கதாபாத்திரத்திற்கு பெர்ஃபெக்ட்டாக பிட் ஆகிறார். தமிழ் படங்களில் இவரது உச்சரிப்புகள் என்னை எரிச்சலூட்டும். மலையாளம் கலந்த அந்த ஸ்லாங் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதே போல் தான் மலையாளமும் பேசுவார் என்று பார்த்தால், ஹுஹும். கடோத்கஜத்தனமான அந்த உருவத்திற்கு மிகப்பொருத்தமாகயிருக்கிறது அவரது வசன உச்சரிப்புகள். சண்டைக்காட்சிகளிலும் அபாரமாக நடித்திருக்கிறார். ஜெனிலியாவுடனான காதல் காட்சிகளிலில் ஸ்கோர் செய்கிறார். "வீரனுக்கு காதலி வீராங்கனை" என்ற சிம்பிள் 'நாட்'டில் காதல் வயப்படுகிறார்கள் இருவரும். பேச்சுக்கு பேச்சு என் அப்பா சொல்லியிருக்கிறார் என் அப்பா சொல்லியிருகிறார் என்று தந்தை சொல் தட்டாமல், அவருக்கு நிகழ்ந்த கொடுமையை மறக்காமல் எப்போதும் ஒரு வித கோபத்துடனேயே வலம் வருகிறார்.

நிகழ்காலத்தில் வரும் லூசுப் பெண்வேடத்திற்கு பொருத்தமானவர் யார் என்று கேட்டால், தமிழ்கம் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை என்று அனைத்து ஊர் ரசிகர்களும் ஜெனிலியாவைத் தான் கைகாட்டுவார்கள். அம்மணி இதுவரை நடித்துள்ள படங்கள் அப்படி. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இறுதிக்காட்சிகளில் ஜெனிலியா சீரியஸாகப் பேசுவதைப் பார்த்து விட்டு, அப்போ இந்தப் பொண்ணு லூசு இல்லையா? என்று என் அப்பா சந்தேகம் கேட்டது நினைவிற்கு வருகிறது. முழு படத்திலும் ஜெனிலியாவை லூசு என்றே நினைத்திருக்கிறார் அவர். இந்தப் படத்திலும் முதல் காட்சியில் கிட்ட வந்தாலே பிராண்டிவிடும் அபாய வேடத்தை அசால்ட்டாக செய்யும் ஜெனிலியா, ப்ளாஷ்பேக்கில் ஆயிஷாவாக வரும் போது என்னை வாய் பிழக்க வைத்தார். குட்டி டவுஸர் ஒன்றைப் போட்டுக் கொண்டு சதா எரிச்சல் படுத்தும் ஜெனிலியாவை நான் பார்க்கவில்லை.  நான் பார்த்தது ஆயிஷா...

அறிமுகக் காட்சியில் குதிரையில் இவர் வருவதை பார்க்கச் சொல்லி 39 பேரை இவர் கொன்றார் என்று சொன்னால் மேல் சொன்ன ஊரார் அனைவரும் நம்புவார்கள். அப்படி ஒரு நடிப்பு. ஜெனிலியாவிற்குள் இப்படி ஒரு நடிப்புத் திறமை ஒளிந்திருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ப்ருத்திவிராஜிற்கு இணையாக பொன்னம்பல வகையரா வீரர்களை தன் வாளுக்கு இவர் பறந்து, தாவிக் குதித்து இரையாக்குவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல இருக்கிறது. படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, களரி என்று இவர் பக்காவாக பிரிப்பேர் ஆகியிருப்பது ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. அலாவுதீன் கார்ட்டூனில் வரும் இளவரசி வாள் சண்டை போடுவது போல் அவ்வளவு அழகாக இருக்கிறார்.  லூசுத்தனங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு ஒரு போர் வீராங்கனையாகவே வலம் வருகிறார். நடை தா கொஞ்சம் நெருடல். அதெல்லாம் பார்க்க வேண்டாம்.. 

வவ்வாளியாக பிரபுதேவா. வெகு நாட்களாகி விட்டது ஸ்கிரீனில் இவரது குரங்கு சேட்டைகளைப் பார்த்து. நித்யா மேனனை முதலில் சந்திப்பதிலிருந்து, அவர் மேல் காதல் வயப்பட்டு தொட ஆசையிருந்தாலும் இளவரசியாதலால் தொடாமலேயே அவரையும் காதலில் விழ வைத்து, சிரக்கல்லில் இவர் அடிக்கும் லூட்டிகள் அற்புதம். எஸ்டாவியோ டகாமாவை ஒரே அடியில் வீழ்த்தும் இவர் ராபிர்ர்ர்ர்ர்ர்ரா ஸ்டைல் சூப்பர்.

நித்யா மேனன் அழகுப் பதுமை. கேரளா, கேரளாதான் என்பதை மறுபடியும் ப்ரூவ் செய்யும் ஆதாரம். சிரக்கல் இளவரசி, வவ்வாளியின் காதலி. பின்னிப்பெடலெடுக்கிறார். தன் அழகைப் பற்றிய வரிகளுடன் பிரபுதேவாவை மயக்கி இவர் பாடும் சிம்மி சிம்மி பாடலை விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். வீடியோவை விடாமல் நோக்கிக்கொண்டேயிருக்கிறேன் 

ஒரு பாடலுக்கு ஆட்டம் போட தபு. அந்தப் பாடலும் சிறியது, இவர வந்த காட்சிகளும் சொற்பமே. வித்யா பாலனும் நிகழ்காலத்தில் அளவான நடிப்பையும், ப்ளாஷ்பேக்கில் தேவதையாக வந்து கெட்ட ஆட்டத்தையும் போட்டு விட்டு போகிறார்.
வித்யாபாலன் இப்பொழுதெல்லாம் ம்ம் தான். தலைவரின் ரானாவில் இவர் இருப்பதாக கேள்வி... பார்ப்போம்.

ஊருக்கு ஊர் ஒரு எட்டப்பன் இருந்திருப்பான் போல. இந்தப் படத்திற்கு ஜெகத்தி ஸ்ரீகுமார். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து வரலாறு அஜித் உடல்மொழியில் தம்புரானையும் இளவரசரையும் தனித்தனி விதமாக கைக்குள் போட்டு சிண்டு முடிந்து பரங்கியர் ஆதரவாக இவர் செயல்படுவது இவரது அனுபவத்தைக் காட்டுகிறது.

 தேவையான இடத்தில் தேவையான இசையை அழகாக நிரப்பியிருக்கிறார், இசையமைப்பாளர் தீபக் தேவ். 'ஆரான்னே ஆரான்னே', 'சிம்மி சிம்மி' பாடல்கள் இப்போது எனது ப்ளேலிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.
  
சந்தோஷ் சிவன் - இவரைப் பற்றி இதற்கு மேலும் என்ன புகழ்ந்து என்ன எழுதுவது என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்தாக் இன்னொரு விஷயத்தைப் பற்றி எழுதவேண்டியது பாக்கியிருக்கிறது. Wild Life Photograpy இல் இவர் கைதேர்ந்தவர் என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு காட்சியில் துப்பாக்கி ஒன்று மண்ணில் குத்திக்கொண்டு நிற்க, சின்னத் தவளை ஒன்று தாவித் தாவி வந்து அதன் மேல் அமரும். அதை க்ளோஷப்பில் காட்டிக்கொண்டே பைட் முடிந்து வரும் கீழு நாயர் அந்தத் தவளையைத் தட்டிவிட்டு துப்பாக்கியர் எடுப்பார். அற்புதமான போட்டோகிராபி அது. அதே போல் டைட்டிலில் காட்டபடும் உறுமி ஷாட், ஜெனிலியாவும் ப்ருத்திவிராஜும் அருவிக்கு அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் நின்று கொண்டு காதல் செய்யும் காட்சிகள், அரண்மனையில் நடந்து கொண்டே கீழு யோசிக்கும் காட்சி, கட்டிலில் ஜெனிலியாவுடன் புரளும் போது இருவரது கண்களை மட்டும் காட்டும் ஷாட், மிக முக்கியமாக கிளைமாக்ஸில் ஸ்லோமோஷனில் காட்டப்படும் அதகள போர்க்களக்காட்சிகள் என அனைத்தும் ரவிவர்மாவின் ஓவியங்களை ஒத்த ஒளி ஓவியங்கள். அதனால் தான் என்னவோ இன்னொரு படத்தில் ரவிவர்மாவாகவே நடித்திருக்கிறார், சந்தோஷ் சிவன் (அந்தப் படத்தில் நித்யா மேனனும் உண்டு தேடிப் பிடித்து பார்க்கவேண்டும்)

படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் ஓடினாலும் கொஞ்ச கூட அலுப்பு தட்டவில்லை. குத்துமதிப்பாக காட்சிகளையும், சில தெரிந்த வார்த்தைகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு தியேட்டரில் படம் பார்த்த எனக்கே படம் இவ்வளவு பிடித்திருகிறது என்றால், சேட்டன்களுக்குச் சொல்லவா வேண்டும். படம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. மொத்தத்தில் உறுமி நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

You Might Also Like

3 comments

  1. உங்களின் இந்த விமர்சனம் நான் இதுவரை வலைபதிவுகளில் பட்டிக்கும் விமர்சனகளில் இருந்து வித்தியாசாபடுகிறது, படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது நன்றி!

    ReplyDelete
  2. @ராஜகோபால்: வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...