தமிழகம் விற்பனைக்கு, விலை: இலவசம்!

11:59:00 AM

கழகங்களின் தேர்தல் அறிக்கையை பார்த்த போது எனக்கு இப்படித் தான் தலைப்பு வைக்க வேண்டும் என்று தோன்றியது. இங்கே தமிழகத்தை விற்றுவிட்டு சுவிஸ் பேங்கிலே பணத்தை பத்திரப்படுத்திவிடுவர். நாம் வெறும் கையை நக்கிக்கொண்டு போகவேண்டியதுதான்...

இலவசம் - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இப்போது தெரியவில்லை. கோல்கேட் பேஸ்ட் வாங்கினால் ஷாம்பு இலவசம், மெத்தை வாங்கினால் மெத்தை விரிப்பு இலவசம், எனக்கு ஓட்டுப் போட்டால் உனக்கு கிரைண்டர் இலவசம். ஆஹா...! கேட்கவே எவ்வளவு ரைமிங்காக, அழகாக இருக்கிறது. என்ன இந்தியன் தாத்தா மாதிரி இப்போது யாராவது இருந்த்திருந்தால் செம காண்டாகி கத்தியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருப்பர். ஆனால் பாவம் யாரைத்தான் குத்துவது என்ற குழப்பம் மட்டும் நிச்சயம் இருந்திருக்கும். நமக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் அரசிற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது அதே அரசை அமைப்பதற்கு நமக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. ஆக லஞ்சம் நம் தேசிய உரிமையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

நாம் கட்டும் வரிப்பணம் நமக்கே திரும்பக் கிடைக்கிறது என்று நாம் இந்த ‘இலவசத்தை’க் கொண்டாடலாமா? எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வீடு ஒன்றல்ல இரண்டு கலர் டி.வி கொடுத்த அரசாயிற்றே! ஒரு டிவியின் விலை 1000, 2000 என் ஜகஜோராய் விற்று லாபம் பார்த்தவர்கள் அல்லவா நாம். இந்த முறை நிச்சயம் மிக்ஸி அல்லது கிரைண்டர், செம லாபம் பார்க்கலாம். மாதம் 35 கிலோ அரிசி வேறு இலவசம். அரிசி விலை ரூ1 என்று இருக்கும் போதே கேரளாவில் நமது அரிசி விற்பனை சக்கை போடு போட்டது, இப்போது முற்றிலும் இலவசம், கேட்கவே வேண்டாம். பன்மடங்கு லாபம் நிச்சயம்.

தேர்தல் கமிஷன் தேர்தலில் நடக்கும் முறைகேடல்களை, பணபரிமாற்றத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. சென்ற தேர்தலின் போது கொடுத்த மாதிரி காலையில் வரும் நாளிதல்களில் ‘பின்’ செய்து 500 ரூ நோட்டுக்களை இந்த முறை கொடுக்க முடியாது. அதுதான் தினம் இத்தனை லட்சம் சிக்கியது, இத்தனை பட்டுப்புடவை/வேட்டி சிக்கியது என்று சொல்லி தேர்தல் லஞ்சத்தை முற்றிலும் ஒழித்து விட்டதாக அதே நாளிதளில் பீத்திக் கொள்கிறதே தேர்தல் கமிஷன். ஆனால் நம் ஆட்கள் விவரமாக ‘ப்ரீ-பெய்ட்’ இல்லன்னா ‘போஸ்ட் பெய்ட்’ என்று “தேர்தலுக்கு முன்ன தான் நீ பணம் கொடுக்கவிடமாட்ட, நான் தேர்தலுக்குப் பின் கொடுப்பேன்ல, இப்போ என்ன பண்ணுவ, இப்போ என்ன பண்ணுவ” என்று கட்டை விரலுடன் நடுவிரலையும் சேர்த்து ஆட்டுகிறார்கள். கமிஷனும் தன் டியூட்டியை பெர்பெக்டாக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் காட்டுகிறது. 10,000 ரூபாய்க்கு மேல் வைதிருந்தால் காசைப் பிடுங்கிக் கொண்டு ஸ்டேஷனில் உட்கார வைத்து விடுகிறார்கள். என்ன ஒரு கடமை உணர்வு... அப்படியே புல் அரிக்கிறது...

போன முறை டி.வி கொடுத்தவர்கள் இந்த முறை கேபில் கொடுக்கிறார்கள். அதே போல் போன முறை அரிசி கொடுத்தவர்கள் இந்த முறை துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கொடுத்தால் பொங்க வைத்து தின்றுவிட்டு ஹாயாக கலர் டிவியில் மானாட மயிலாட அல்லது ஏதாவது பாராட்டு விழா பார்க்கலாம். ‘பாராட்டு விழா’ - செத்தாண்டா தமிழன்...

முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் - நம் ஊர் பஸ்களில் முதியவர்கள் பயணம் செய்தால் ‘இலவச ஊர்தி’ என்று வேண்டுமானால் சொல்லலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டல்ல மூன்று செட் யூனிபார்ம்கள். பள்ளி ஆரம்பம் ஜீன் மாதம்; ஆனால் சீருடைகள் வருவதோ பொங்கலுக்குப் பின். அதுவும் எப்படி? ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை இருந்தால் ஒன்று முதல் ஐந்திற்கு பொதுவாக ஒரு அளவு, ஆறிலிருந்து பத்திற்கு பொதுவாக ஒரு அளவு. கொஞ்சம் கூட அளவு சரியில்லாத துணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? விற்று விட வேண்டியதுதான். பெற்றோர்கள் விற்று விடுகிறார்கள், பிள்ளைகள் பள்ளிக்கு பின் பக்கம் பளபளவென தெரிய கிழிந்த, பழைய சீருடைகளை அணிந்து வருகிறார்கள். இது தான் உண்மையில் நடக்கிறது.

இலவச லேப்டாப் - இது தான் பெரிய காமெடி. லேப்டாப் கொடுக்கிறார்கள் சரி. அதை எப்படி பயன்படுத்துவது என்று யார் சொல்லித் தருவது? ‘ஜெ ஜெ’ படம் நியாபகத்திற்கு வருகிறது. எம்.எல்.ஏ வான சார்லி கம்ப்யூட்டர் கற்க வருவார். அதே போலத்தான் அரசு பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பயின்று பின்பு மாணாக்கருக்கு பயிற்றுவிக்கிறார்கள்... அந்த அழகை கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இப்படி இன்னும் எவ்வளவோ இருக்கிறது. சொல்லிப் பிரயோஜனமில்லை. நான் தற்சமயம் வேறு மாநிலத்தில் வசிக்கிறேன். ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்து நான் 'வோட்டு' அளிக்க வேண்டும். வரவில்லையென்றாலும் பெரிதாக ஒன்றும் நடக்காது. எனது ஓட்டை மறக்காமல் யாராவது ஒருவர் போட்டுவிடுவார். என் வீட்டிற்கும் கிரைண்டர்/மிக்ஸி, 35 கிலோ அரிசி, மளிகை சாமான் எல்லாம் வந்து விடும். தமிழகமும் செழிப்பாக வளர்ந்து விடும்.

மன்சூர் அலிகான் வாஷிங் மெஷின் தருகிறாராம். ச்சே... அவர் தொகுதியில் நான் இல்லாமல் போய்விட்டேனே...

நான் முன்பு ஒரு முறை நண்பர் எழுதியது என்று கவிதை ஒன்றை பதிவிட்டிருந்தேன். அந்தக் கவிதையை மறுபடியும் படிக்கத் தோன்றுகிறது. ஆனால் இம்முறை அந்தக் கவிதையில் வரும் தமிழ் குடிமகனுக்கு இன்னும் ‘கெத்’ ஏறியிருக்கிறது. தமிழகம் வந்தாரை மட்டுமல்ல இருப்பவர்களையும் நன்ட்ராகவே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியே புல்லரிக்குது... ஏதோ கல்யாண வீட்டில் பிறந்த வீட்டு சீர் அடுக்குவது போலல்லவா அடுக்குகிறார்கள். கூடிய விரைவில் கார் லோன், பெர்ஸனல் லோன், ஹௌசிங் லோன் போன்றவற்றையும் கேன்சல் செய்து விட்டார்கள் என்றால் எல்லா தரப்பினரும் நிம்மதியாக இருக்கலாம்.

ஒருவன் ஏழையாகப் பிறந்தால் அது அவனது தப்பில்லை, ஆனால் ஏழையாக இறந்தால் அது அவனது தவறே என்று ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. ஏழையாக இருந்தால் என்ன பணக்காரனாக இருந்தால் என்ன, தமிழ் நாட்டில் ஓட்டுரிமை இல்லையென்றால், அது தான் மிகப்பெரிய தவறு போலிருக்கிறது...

இந்த நாட்டோடு சேர்ந்து நானும் உறுப்பட்ட மாதிரி தான்... ஜெய்கிந்த்!

You Might Also Like

2 comments

  1. ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல ...என்ன செய்ய அவங்களுக்கு தெரிஞ்ச வரையில வறுமையை ஒழிக்க பாடுபடுறாங்க ...அரசாங்க பணத்த (நம்ம பணம் தானே ?)முதலீடு செஞ்சு அவங்க சொந்த வசதியா பெருக்கிக்கறாங்க ...


    ஓட்டுக்கு பணமோ பொருளோ வாங்கினா கைதுன்னு தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு ...அதனால ஏதாவது பயன் இருக்கா பார்க்கலாம் .

    ReplyDelete
  2. //நான் தற்சமயம் வேறு மாநிலத்தில் வசிக்கிறேன். ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்து நான் 'வோட்டு' அளிக்க வேண்டும்.//

    ஓட்டு போடும் உரிமை வந்த பிறகு நானும் எல்லாத தேர்தல்களிலும் தவறாமல் என் ஓட்டைப் பதிவு செய்து விடுவேன் ஆனால் இந்த முறை அது நடை பெறாது போல் தோன்றுகிறது.

    ஒருவேளை புதன்கிழமை தேர்தல் வச்சதுக்கு இதுதான் அர்த்தமோ???? வெளியூர்ல இருக்குற யாரும் வந்து ஓட்டு போடக் கூடாது நம்ம ஊரு ஓட்டு நாமதான் போடணும்ன்ற நல்லெண்ணமாக இருக்குமோ????

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...