சென்ற வாரம் டைரி குறிப்புகள் - தொடர்ச்சி...

9:37:00 AM

போன பதிவின் தொடர்ச்சி...

ரிலீஸாகி ஒரு வாரம் ஆனபோதும் பார்க்காமல் விட்டுப் போன மதராசபட்டினத்தை ஒர் வழியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 'இந்தியன்' படத்தில் ஷங்கர் அரை மணி நேரம் காட்டிய 1947 ஆம் ஆண்டை இயக்குனர் விஜய் இரண்டேகால் மணி நேரத்தில் காட்டியுள்ளார், அதுவும் பழைய மெட்ராஸ் பின்னனியில். இந்தப் படத்தைப் பற்றிய கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள், பிளஸ், மைனஸ் பற்றி ஏற்கனவே பலர் எழுதித் தள்ளி விட்டதால், சுருக்கமாக படத்தைப் பற்றிய என்னுடைய கருத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அருமையான கதைகளம், அருமையான நடிகர்கள் ஆனால் மூலக்கதை என்பது ரொம்பவும் பழையதாக ஏற்கனவே பலமுறை பார்த்திருந்ததாக இருந்தது என்று பலர் சொல்கின்றனர். எனக்கும் அப்படித்தான் பட்டது. ஆனாலும் பலர் சொல்வது போல இந்தப் படம் தமிழின் டைட்டானிகே தான். ஆங்காங்கே 'ஆட்டோகிராப்' படத்தின் கேரளா எபிஸோட் நியாபகங்களும் வந்தது.படத்தின் ஊடே வரும் வசனங்கள், காட்சிகள் அற்புதமாக, "சாதாரண காதல் கதை" என்ற குறையை மறைக்கும் விதமாக அமைந்திருந்தது. '200 வருடங்களுக்குப் பிறகு நாம திருப்பி அடிக்கிறோம்', 'சுபாஷ் சந்திர போஸ் செத்துட்டார்னு உனக்குத் தெரியுமா?', 'உயிர் வாழ்றதுக்கு சுதந்திரம் முக்கியமில்லை, சாப்பாடு தான் முக்கியம்' போன்ற வசனங்களும்; பிரிட்டனின் பொருளாதார வீழ்ச்சியால் தான் சுதந்திரம் கிடைத்தது போன்ற சின்னச் சின்ன ரெஃப்ரன்ஸ்களும், சுதந்திரம் கிடைக்கும் முன்னிரவு கூட இந்தியர்களை வெள்ளையர்கள் நாயைச் சுடுவது போல் சுட்டுக்கொள்வது போன்ற காட்சிகளும் படத்திற்கு தேவையான அளவு பலத்தைத் தந்திருக்கிறது. பரிதியாக ஆர்யாவும் அவரது நண்பர்களும் தேங்க் யூ சொல்லக் கிளம்புவதும், ஆங்கிலம் கற்கச் செல்வதும் ரசிக்கும் படியாகயிருந்தாலும் காமெடிக்கு படத்தில் பஞ்சம் தான். அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்கவும் கூடாது. (ஸாரி தாய்டமிளன் எங்கும் எதிலும் பாட்டு, பைட், காமெடி என்கிற கமர்ஷியல் சரவெடியை எதிர்பார்ப்பான்). இசை 'வாவ்' என்று சொல்லுமளவிற்கெல்லாம் காட்சியப்படுத்தப் படவில்லை. பூக்கள் பூக்கும் தருணம் அற்புதம், மேகமே, மேகமே ஓ.கே... வாம்மா துரையம்மா பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும், ஏதோ இங்கிலீஷ்கார ஆர்யா தமிழ் கற்றுக்கொண்டு, தமிழச்சி ஏமிக்காக பாடுவது போல் இருந்தது. இதற்கு “மெட்ராஸ சுத்திப் பார்க்கப் போறேன், கூவ நதியாண்ட சுண்டல் வாங்கப் போறேன்”என்று ஏமியே பாடியிருக்கலாம். "அட பாவிகளா இந்தியாவின் பெருமையை இப்படியாப்பட்ட ஒரு குரலிலா சொல்வது? என்றாகிவிட்டது. இதையெல்லாம் 'பருவாயில்லை' என்று ஏற்றுக் கொள்ள முடியாது! மேலும், ஐயா படத்தில் அப்பா சரத்குமார் ஏதாவது 'சோகப் பன்ச்' அடிக்கும் போதெல்லாம் பேஸில் ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் வரும். அச்சு அசல் அதே போல் இங்கும் ஏமி 'மறந்திட்ச்சா' என்று கேட்பதில் ஆரம்பித்து அவர் காதல் மொழி ( இங்கு தமிழ் தாங்க காதல் மொழி!) பேசும்பொழுதெல்லாம் ஒரு பேஸ் டியூன் திரும்பத்திரும்ப வருகிறது. என் தம்பி முதல் நாளே படம் பார்த்து விட்டு 'பைட்டெல்லாம் மல்யுத்தம் தான். வெறியா இருக்கு. போய்ப் பாரு' என்று சொன்னான். அவன் சொன்னதை போலவே ரசிக்கும் படியாக அமைந்திருந்தது சண்டைக்காட்சிகள். கமிஷ்னரும் பரிதியும் மோதி கடைசியில் புழுதி பறக்க 'பொத்' என்று கீழே விழும் அந்த டாப் ஷாட்டில் நீரவ் ஷா 'வாவ்' போட வைத்தார். ஆர்ட் டைரக்டர் செல்வக் குமார் தான் படத்தின் நிஜ ஹீரோ. பாதிக் காட்சிகளில் கூவம் நதி, சென்ட்ரல் ஸ்டேஷன் மட்டுமே காட்டப்பட்டாலும் நன்றாகத் தான் இருக்கிறது. கல்பாத்தி குரூப்ஸ் தான் இப்போதைக்கு படத்தயாரிப்பில் "தலைமையுடன்" சரியாக போட்டி போடுகிறது (சின்ன சின்ன அட்ஜஸ்மெண்ட்களுடன்தான்) வாழ்த்துவோம்… டைட்டில் க்ரெடிட்ஸ் கூட அற்புதமான அமைத்திருந்தார்கள், கடைசி வரை ஆர்வமாகப் பார்த்தேன்.

ஆர்யா - ஏனோ எனக்கு இவர் ஸ்கிரீனில் பாதி நேரம் தெரியவில்லை (அதற்கு ஏமி காரணமல்ல, சத்தியமாக) பெர்ஸனலாக படத்திற்குப் பொருத்தமில்லாமல் இவர் திரிவதாகஎனக்குப் பட்டது.

உலக அழகி ஏமியின் கண்களுக்கு எதை வேண்டுமானாலும் தரலாம், (நாட்டைத் தவிர!) இந்தப் பெண் பல இடங்களில் நம் 'ஜெ ஜெ'அமோகா என்ற நிஷா கோத்தாரி போலத்தான் எனக்குத் தெரிந்தார். அடுத்த ஃபாரின் பிகரான நிகழ்காலப் ஏமிப்பாட்டியின் பேத்தி அப்படியே ஷ்ருதி கமல்!

படத்தில் சில விஷயங்கள் மட்டும் எனக்குப் புரியவேயில்லை. ஏமிப் பாட்டி ஏன் மண்டையைப் போடும் சமயத்தில் பரிதி கொடுத்த மாங்கல்யத்தை திருப்பிக் கொடுக்க கிளம்புகிறார், அதுவும் இது எனக்குச் சொந்தமானதல்ல என்று கூறிக்கொண்டு? இப்போ கொண்டு வந்து கொடுத்தால் பரிதி அதை வைத்து என்ன செய்யப்போகிறார்? சரி, பரிதியை இழுத்துக் கொண்டு அந்த ஓட்டம் ஓடினாரே, ஏன் ஒரு பத்து வருடம் கழித்து கூட எஸ் ஆகி இந்தியா வந்திருக்கலாம். திருமணமாகி, புள்ள குட்டி, பேரன் பேத்தியெல்லாம் பாத்த பிறகு 'என்க்கு மெட்ராஸபட்ணம் போஹ்னும்' னு ஏன் கிளம்பி வரனும்? இன்னும் முக்கியமான ஒன்று, 60 வருடங்களுக்குப் பிறகும் தமிழ் அவருக்கு மறக்கவில்லை! கேட்கப் பெருமையாக இருந்தாலும் சத்தியமாக நம்பமுடியவில்லை...வில்லை... ல்லை... லை.

சரி, குறைகளை விட்டு விடுவோம். நாம் என்னவோ ஞானசூன்யம் மாதிரி. இயக்குனர் விஜய் தனது அடுத்த படத்தை அறிவித்தவுடன் நான் ரெடியாகி விடுவேன். பின்ன நம்ம லிஸ்டில் இவரும் சேர்ந்து விட்டார் அல்லவா?

பி.கு பதிவு:

வசந்த பாலன் தனது அடுத்த படத்தை அறிவித்து விட்டார். படத்தின் பெயர் அரவான். ஸ்டில்களைப் பாருங்கள், மிரட்டியிருக்கிறார்!

இன்னும் இரண்டு படங்கள் இருக்கிறது. இம்சைகள் தொடரும்...

You Might Also Like

3 comments

  1. கதை மட்டும்தான் மதராசபட்டிணத்தில் இல்லை.. அது தவிர, மற்ற அம்சங்கள் சூப்பர் !! ;-)

    அரவான் ஸ்டில்கள் நன்றாக இருக்கின்றன.. படம் வரட்டும்.. ;;-)

    ReplyDelete
  2. கல்பாத்தி குரூப்ஸ் தான் இப்போதைக்கு படத்தயாரிப்பில் "தலைமையுடன்" சரியாக போட்டி போடுகிறது- அருமயான லைன்ஸ்.அரவான் ஸ்டில்கள்
    இதுவரை நான் பார்க்காதவை.

    ReplyDelete
  3. @கருந்தேள் கண்ணாயிரம்: நீங்க சொன்னா சரிதான் கருந்தேள் :)
    @சி.பி.செந்தில்குமார்: தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...