சிறுகதை: காரியம்...

12:37:00 PM

"தாத்தா இறந்து விட்டார் !"

காலை அலுவலகம் வந்த நாற்பத்தி மூன்றாவது நிமிடத்தில் வந்த போன் கால் இந்தச் செய்தியைச் சொல்வதற்காகத்தான் சிணுங்கியது. சொன்னது என் அக்காள். அழுகவில்லை. ஆனால் குரல் உடைந்திருந்தது. அழுதிருக்க வேண்டும்.

"சீக்கிரம் கிளம்புடா... நாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் பஸ் பிடித்து விடுவோம்" வைத்துவிட்டாள்.

அந்த நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நிமிடம் அழுகை வந்தது. "தாத்தா!!!" கதறல் ஒன்று உள்ளிருந்து தொண்டை வரை வந்து ஏதோ ஒன்றிக்கு கட்டுப்பட்டு நின்றது. எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும் அவரவர் வேலையை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். யாரும் என்னை கவனிக்கவில்லை. யாரிடமாவது சொல்ல வேண்டும், சொல்லி அழ வேண்டும் போலிருந்தது.

அம்மா....!

அம்மாவைக் கைபேசியில் அழைத்தேன்."அம்மா!" "தம்பி..." அப்பாவின் குரல். "எப்படா கிளம்பப் போற? ராத்திரிக்குள்ள காரியமெல்லாம் முடிஞ்சிரும் போல" என்றார் அவசரமாக. "என்னது ராத்திரிக் குள்ளா? ஐய்யோ! அப்பா நான் இப்போதே கிளம்பினாலும் வர ராத்திரி ஆகுமே! ஏன் இவ்வளவு அவசரம்?" பதறினேன். "உங்க அம்மா வீடாளுங்க முடிவு செஞ்சதுடா. நாம தலையிட முடியுமா?" என்றார். "அப்பா செத்தது ஏன் தத்தா, உங்க மாமனார்.இப்படி பேசுறிங்க? அம்மா எங்கே?" கோபப்பட்டேன். "அம்மா பேச மாட்டாடா...அழுதுகிட்டு இருக்கா...என் மேல கோபப்பட்டு ஒன்னும் ஆகப் போறதுமில்ல, மாறப்போறதும் இல்ல. உன் மாமங்காரனுகளைப் பத்தித் தெரியுமில்ல? எதுவும் பிரச்சனை ஆகுரதுக்குள்ள முடிச்சிடனும்னு முடிவு. ஆஸ்பத்திரில இருந்த உடம்பு வேற. ரொம்ப நேரம் தாங்காது. நீ சீக்கிரம் வந்து சேறு. யாருக்காகவும் எதுக்காகவும் நிக்க மாட்டானுக போல!" பீப் பீப் பீப்... வைத்துவிட்டார்.

அழுகை வெளியே வர ஒரு போராட்டமே நடத்திக் கொண்டிருந்தது. தாத்தா இறந்து விட்டார். என்னால் வாய் விட்டு அழ முடியவில்லை. அழ முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை. கடைசியாக அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டால்? யாரிடம் கேட்பது? என்ன கேட்பது? சீக்கிரம் போக வேண்டும்.

பக்கத்தில் இருந்த அஸ்ஸாம்காரனிடம், "Hey...1 sec, My...My Grandpa...He is dead.I should...I should go now. Whats the procedure?" என்று எதையோ சொல்ல நினைத்து...அவன் ஒரு வருத்தப் பார்வையுடன் என் டீம் லீடரைக் கைக் காட்டினான். அவரும் இதைக் கவனித்தார் போல 'என்ன?' என்ற பார்வைப் பார்த்தார். நான் அவர் அருகே சென்றேன். அவரும் 'தமிழ்' தான்.

"Yaa..." நிமிர்ந்தார். "ஸார், எங்க தாத்தா...தாத்தா செத்துட்டாராம்..." வார்த்தைகள் வருவதில் சிக்கல் இருந்தது."ஒஹ் ஒ...ச் ச்
ச் ச்" பரிதாபப்பட்டார். "ஸார், நான் உடனே கிளம்பணும். ரெண்டு நாள் லீவ் வேணும்."லீவ்வ்வ்வ்... உன் நிலைமை எனக்குப் புரியுது. இருந்தாலும், மன்த் என்ட் ஆக்டிவிடீஸ் போய்கிட்டு இருக்கே...என்ன செய்யலாம்...ம்ம்ம்...தாத்தாவிற்கு என்ன வயசிருக்கும்? " "85 ஸார். "
"ஓ! எண்பத்தைந்தா...சரி சரி சரி..." இப்போது அவர் கண்கள் அவர் லேப்டாப் மானிட்டரில் இருந்தது.
"ஸார்ர்ர்ர்..." நான் கூப்பிட நிமிராமல் "சரி, இன்னிக்கி வேலைய சீக்ரமா முடிச்சிட்டு, மதியத்துக்கு மேல கிளம்பிருங்க. நாளை மட்டும் லீவ் எடுத்துக்கிட்டு தர்ஸ்டே வந்திருங்க...மறக்காம லீவ் போர்டல் பில் பண்ணிருங்க...ஹல்லோ...ய்யா..." என் பதிலுக்கு காத்திருக்காமல் அவருக்கு வந்த போன் காலுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தார்.

மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து சேரவே இரண்டரை ஆகி விட்டது. தாமதிக் காமல் பேருந்து மாறி மாறி சென்றாலுமே குறைந்தது ஏழு மணி நேரமாவது ஆகும். எப்படியும் கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும். பஸ் ஏறினேன். கூட்டம் இல்லை. செவ்வாய்கிழமை மதியம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு போகும் பேருந்தில் ஆட்கள் குறைவாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கண்ணை மூடினேன். நீர் தேங்கியிருந்த கண்கள் ஒரு துளியை நழுவ விட்டது. துடைத்துக் கொண்டேன். போன முறை ஊருக்குப் போயிருந்போது கூட பேசிவிட்டு தான் வந்தேன். 'பேசிவிட்டு' என்பதை விட 'பார்த்துவிட்டு' என்பது தான் சரி. தாத்தா கொஞ்ச காலமாக யாரிடமும் அவ்வளவாக பேசுவதில்லை.

மூணேகால் ஹோசூர். வண்டி நின்ற பத்து நிமிடத்தின் தேவையை யாரும் உணரவில்லை. அசமந்தமாக ஓட்டினான் டிரைவர். சேலத்தில் தேனி வண்டியே கிடைத்தது நான் செய்த புண்ணியம். கூட்டமிருந்தாலும் எனக்கு மட்டும் சீட் கிடைத்தது பாக்கியம். எப்போது தூங்கினேன் தெரியவில்லை. ஆனால் எழுந்த போது வாழ்கை வெறுத்தது. டயர் பஞ்சர். மணி ஆறு நாற்பது. அட பாவிகளா! புறப்பட்டு இன்னும் அரை மணி நேரம் கூட ஆகவில்லையா? வண்டியிலிருந்து பாதிக்கு மேல் மக்கள் இறங்கியிருந்தனர். எவனோ ஒருவன் என் பையையும் எடுத்துக் கொண்டு இறங்கியிருப்பது நான் இறங்க நினைக்கும் போது தெரிந்தது. ஒரு செட் டிரஸ், பனியன், ஜட்டி, முன் ஜிப்பில் சாமிப் படம், ஒரு பேனா, கம்பனியில் குடுத்த சோல்டர் பேக். என்ன இருக்கும் என்று நினைத்தானோ! நல்லவேளை பணம் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ்? நல்ல வேளை இருக்கிறது.

ஏற்கனவே கூட்டமாக வந்த கரூர் பேருந்தில் என்னுடன் வந்தவர்களுடன் நானும் சேர்ந்து கூட்டத்தை அதிகமாக்கியிருக்க, முழுதாக ஒரு பக்கம் சாய்ந்து ஊர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. வீல்ல்ல்...என்று ஒரு குழந்தை என் காத்து பக்கத்தில் அழுதது. "சனியனே வாய மூடு" "குழந்தைய போய் அடிக்கிறியே" "இதுவா குழந்தை...சனியன் சனியன்" "ஏம்மா...ஏன் குழந்தை அழுகுது" "அடடடா... எதையாவது செய்து வாயை மூடேன்" "ஏதாவது பிஸ்கட் கிஸ்கட் இருந்தா குடும்மா.." கரூர் வரும் போது குழந்தை தூங்கியிருந்தது.

தேனி பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன். பத்து நிமிடம் ஆகியும் கிளம்பவில்லை. மற்ற பஸ்கள் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தது. "ஸார். இது பதினொன்னு பத்து பஸ்" வெளியே இருந்து குரல் கேட்க, என்னையும் என்னைப் போலவே காத்திருந்த ஒரு குடும்பமும் எழுந்து, ஓடி, கிளம்பிக் கொண்டிருந்த பஸ்சில் ஏறி, இடம் கிடைக்கவில்லை. தேனி போக இன்னும் மூன்று நான்கு மணி நேரமாவது ஆகும். கால் வலி அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு மணி நாப்பதாவது நிமிடத்தில் திண்டுக்கலுக்கு முன் ஒருவன் இறங்க, கடைசி சீட்டில் இடம் கிடைத்தது. கண்கள் லேசாக மூட, ஒரு ஸ்பீட் பிரேக்கர் தயவால் இரண்டு இன்ச் மேலே போய் திடுக்கிட்டு முழித்து கீழே வந்தேன்.

திண்டுக்கலில் இன்னும் கொஞ்சம் பேர் இறங்க கொஞ்சம் முன் பக்கத்தில் ஜன்னலோர சீட் கிடைத்தது. பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் தட் தட் தட் என்று பின்னால் யாரோ தட்ட, பேருந்தின் வேகம் குறைத்தது. "வர்றோம்ள, அதுக்குள்ளே எங்க போறவுக..." இரண்டு பேர் ஏறி அதில் ஒருவன் அதே வேகத்தில் என் அருகில் 'தட்' என்று உட்க்கார, சாராய வாடையில் என் மூச்சே நின்று விடும் போலிருந்தது. வேறு இடமும் காலியாக இருப்பது போல் தெரியவில்லை. கொஞ்சம் போல் ஒதுங்கிக் கொண்டு தலையை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டேன். சாராய பார்ட்டி கொஞ்ச நேரத்தில் கவிழ்ந்தது. சில்லென்ற காற்று பட்டு உடம்பு லேசாகச் சிலிர்த்தது. மணி என்ன என்று பார்க்க மொபைல் போனை எடுத்தேன். லோ பேட்டரி. சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. கண்களை மூடினேன்.

"தாத்தா..."
"தாத்தா..ஆசிர்வாதம் பண்ணுங்க, எனக்கு வேலை கிடைச்சிருச்சு"
"தாத்தா, உங்களுக்கு ஒன்னும் இல்ல. கான்செர் ஆரம்ப கட்டம் தான். அதையும் சரி பண்ணியாச்சு. இனி எந்தப் பிரச்னையும் இல்ல."
"தாத்தா... அம்மாவால அடிக்கடி இங்க வர முடியாத நிலைமை. அதான் ஊருக்கு வரும் போதெல்லாம் நான் வந்துட்டு போறேன்ல..."
"தாத்தா...நான் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க..."
"ஸ்டிக் நல்லா இருக்கே! அக்கா வாங்கி கொடுத்ததா? "
"பாட்டிய மொதமொதல்ல எப்ப பார்த்தீங்க?"

தேனி பேருந்து நிலையம். சர் சர்ரென்று டீ ஆற்றிக் கொண்டிருந்தவன் பின்னால் இருந்த கடிகாரம் ஒன்று மணி ஐந்தைக் காட்டியது. போடி செல்லும் பேருந்து எதுவும் இல்லை. கடைசி பேருந்து ஒரு மணிக்கே போய்விட்டதாம். அடுத்தது எப்போது வருமென்று தெரியாது . திண்டுக்கலில்லிருந்து தேனிக்கு மூன்றரை மணி நேரம் ஓட்டியிருக்கிறான் நான் வந்த பேருந்தின் டிரைவர். பாராட்டியே ஆக வேண்டும்...என்ன ஒரு வேகம். வாழ்க தமிழக போக்குவரத்துக் கழகம் !!!

டாக்ஸிதான் ஒரே வழி. பேருந்தில் போனால் ஐந்து ரூபாய். அது தான் இல்லை என்றாகி விட்டதே. ஆயிரம் ரூபாய்க் கேட்டான். என் அவசரம் இதோ டாக்ஸி ஒடிக்கொண்டிருப்பவனின் லாபம்.

இருபது நிமிடம். போடி. தாத்தா...! எல்லாம் முடிந்திருக்குமோ!!

வீட்டு வாசலில் சொற்ப கூட்டமே இருந்தது. கூட்டமே இல்லை என்றாலும் சரிதான். இரவே எல்லாம் முடிந்திருக்குமோ... வாசில் தாத்தாவின் அந்த கால போட்டோ ஒன்று மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. லேசாக யாரோ விசும்பும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ யாருக்கோ டீ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே...

கண்ணாடிப் பெட்டிக்குள் தாத்தா தூங்கிக் கொண்டிருந்தார். இன்னும் காரியம் நடக்கவில்லை. அப்பாடா...! என்னைப் பார்த்துவிட்டு அப்பா அருகில் வந்தார். கேட்டேன். "என்ன ஆச்சு...ராத்திரியே முடிஞ்சிரும்னு சொன்னிங்களே!" "உங்க பெரிய மாமன் வந்து பொணத்த எடுக்க விட மாடேன்னு சொல்லிட்டான். சொத்து பிரிச்சதுல ஏதோ சதியக் கண்டுபிடிச்சிட்டானாம். இன்னிக்கி விடிஞ்சதுக்கபுரம் வக்கீலைக் கூட்டிட்டு வந்து சரி பார்த்த பிறகு தான் எடுக்க விடுவானாம்...கொடுமை...பார்த்துக்க" தலையில் அடித்துக் கொண்டே,"பை எதுவும் கொண்டு வரலியா ?" உள்ளே சென்று அம்மாவை எழுப்பினார்.

காலை 11 மணி ஆகியும் ஆளாளுக்கு திட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் கண்ணாடிப் பெட்டிக்கு அருகே என் தாத்தாவிற்கு மிக அருகே உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரது திறந்திருந்த கண்களில் தெரிந்தது உறைந்த கண்ணீர்...

யார் சொன்னது யாருக்காகவும் எதற்காகவும் நிற்க மாட்டார்கள் என்று. சொத்து கொடுப்பதாய்ச் சொன்னால் குட்டிக்கரணமே அடிப்பார்கள் என் மாமன்கள்...


(சமர்பணம்: என் தாத்தாவிற்கு...)
இந்தக் கதையை சிறுகதை என்று நினைத்தாலும் சரி, உண்மைக் கதை என்று நினைத்தாலும் சரி நான் சொல்ல வந்ததைச் சரியாக சொல்லிவிட்டேன்..

You Might Also Like

4 comments

  1. மரணம் என்பது இது வரை வாழ்ந்த ஒரு மனித வரலாறின் முற்றுப்புள்ளி... அதை அந்த மனிதனின் தொடர்புடையவர்கள் எதிர் கொள்வது சிரமமே... இது நாள் வரை, நம்மோடு பேசி கொண்டிருந்த ஒருவர் இன்று இல்லை என்றால், அந்த வெறுமையை யாராலும் நிரப்ப முடியாது... அந்த மனிதரை அமைதியாய் வழியனுப்பி வைப்பது, அவருக்கு செய்யும் கடைசி மரியாதையாகும்..
    அவருக்காக செய்யபட்டிருக்கும் உள் மனதின் கூவல் இது...
    அவருக்காக பிரார்த்திப்போம்!!

    ReplyDelete
  2. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை... Very emotional..

    ReplyDelete
  3. superb....
    nadaimurai nitharsanam...........
    Congrats......

    ReplyDelete
  4. It is real feeling. I can sense that. Well written. May God bless your grandpa.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...