முகமூடி போஸ்ட்மார்ட்டம் - ஒரு முன்னுரை!

12:34:00 PM

இந்தக் கட்டுரைக்கு எதற்கு இந்தப் படம் என்று கடைசியில் புரியலாம் :-)

முகமூடி பட சம்பந்தமான எனது முந்தைய பதிவிற்கு எனது மற்ற பதிவுகளை விட ஹிட்ஸ் அதிகம் என்று தெரிகிறது. முகமூடி விமர்சனம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்திருப்பார்கள் பலர் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் பலர் எனது அந்தப் பதிவைப் படித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மகிழிச்சியாக இருக்கிறது. ஆனால் அதே காரணத்திற்காக இப்பொழுது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே விமர்சனங்கள் முகமூடியை தேவையான அளவிற்கு கிழித்து விட்டதால், முகமூடி படத்தைப் பற்றிய எனது பார்வையைப் பார்க்கும் முன் சில கருத்துகளைப் பகிரவே இந்தப் பதிவு.

எல்லோருக்கும் தெரிந்த விஷயத்திலிருந்தே தொடங்குகிறேன்.

தமிழ் சினிமாவிற்கு என்று சில டெம்ப்ளேட் கதைகள் உண்டு. அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். எப்படியும் 10 படங்களில் 9 படங்கள் இந்த டெம்ப்ளேட்டிற்குள் அடங்கிவிடும்.

1) காதல் படங்கள் – பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்து சகல இடங்களிலும் நடக்கும் கதை, பார்த்தவுடன் / பார்க்க பார்க்க / பார்க்காமலே / பேசாமலே / கேட்காமலே / சொல்லாமலே காதல், காதலர்களுக்குள் பிரச்சனை, குடும்பம் (அப்பா, அண்ணன், முறை மாமன்) / வில்லன் / சமூகம் / முன்னாள் காதலி, காதலன், மனைவி, கணவனால் யாராவது ஒருவரால் பிரச்சனை, வீட்டை விட்டு ஓடிப்போவதால் பிரச்சனை, முக்கோணக்காதல், ஒருவருக்கு மேல் காதலிக்கும் ஹீரோ / ஹீரோயின் என்று காதல் கதைகள் என்று எடுத்து விட்டால் sub classification மட்டுமே 100 வரும் போல. அவ்வளவு இருக்கிறது நம் திமிழ் சினிமாவில். காதலைத் தவிர எதுவுமே இல்லை என்று 10ல் 5 படங்கள் முழுக்க முழுக்க காதல் படங்களாக இருக்கிறது. மீதியுள்ள 5 படங்களிலும் காதல் இருக்கிறது.

2) நட்பு / நண்பர்கள் - காலேஜ், பள்ளி, ஈகோ, சண்டை, செண்டிமென்ட், நம்பிக்கை, துரோகம், நம்பிக்கை துரோகம் என்று பல வகை உண்டு.

3) குடும்பப் படங்கள் - கும்பத்தினருக்குள் பிரச்சனை, மாமியார் – மருமகள் பிரச்சனை, அப்பா – மகன் பிரச்சனை, ஏன் தகாத உறவுக்கதைகள் கூட “குடும்ப படங்கள்” genreல் வந்து விட்டது.

4) பழிவாங்கும் படங்கள் - அப்பா / அம்மா / தம்பி / தங்கை / அண்ணன் / அக்கா / நண்பன் / காதலி இதில் யாரவது ஒருவரை கொன்றவனைப் பழி வாங்கும் ஹீரோ,

5) Angry young man படங்கள் - சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்கி எழும் வேலையில்லாத இளைஞன் கதைகள் (இதில் ஹீரோவை ரவுடி என்று சொல்ல முடியாது, பொறுக்கி என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாம்). இவனுக்கு வில்லனால் எழும் பிரச்சனை. இந்த வில்லனும் பெரும்பாலும் அரசியல்வாதியாகத்தான் இருப்பான். சமீப காலமாக போலீஸ்கார வில்லனகளும் வருகிறார்கள்.

6) பிளாஷ்பேக் கதைகள் - தன் தந்தை / தாத்தா / குடும்பம் எவ்வளவு பெரிய பிஸ்து என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கிளைமாக்ஸில் மாறும் ஹீரோ ஒரு வகை என்றால் பல வருடங்களுக்கு முன்னாள் பெரிய டான், கொலைகாரன், கொள்ளைக்காரன், போலீஸ் / மிலிட்டரி ஆபீஸர் / கலெக்டர் என்று யாராவாவது இருந்து விட்டு இப்பொழுது “சிலருக்கு” தெரியாமல் சாதாரண வாழ்க்கை வாழும் ஹீரோ,

7) நோய் கதைகள் - முதல் பாதியில் நன்றாகத்தான் போய்கொண்டிருக்கும். திடீரென்று இடைவேளை நெருங்கும் சமயம், ஹீரோ / ஹீரோயின் இருவரில் யாருக்காவது ஒரு வியாதி இருப்பது தெரிய வரும். பெரும்பாலும் கேன்சர். சமீப கால படங்களில் ஏதாவது ஒரு வகை மனவியாதி  (சைக்கோ). மறதி கதைகளுக்கும் அன்றும் இன்றும் பஞ்சமில்லை.

இவை எல்லாம் நகரம், கிராமம், வெளிநாடு என்று மூன்று ஏரியாக்களுக்கும் பொருந்தும். இவை மட்டும் தான் வருகின்றன என்று சொல்லவில்லை. பெரும்பாலும் இவைதான் வருகின்றன வெவ்வேறு கலர்களில், flavor களில்.

கடந்த 10 வருடங்களாக ஒரு சில வகையான படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன, 80 களின் angry young man கள் போல. இதில் முக்கியமான ஒரு வகை anti hero படங்கள் அல்லது கெட்ட ஹீரோ கதைகள். வில்லனுக்கு வலது கரமாக இருக்கும் ஹீரோ, இண்டர்வலில் வில்லன் சுயரூபம் அறிந்து செகண்ட் ஹாஃபில் அவனை எதிர்த்துப் போராடுதல் அல்லது மோசமான ஆசாமியாக இருக்கும் ஹீரோ ஹீரோயின் வருகையால் செகண்ட் ஹாஃபில் நல்லவனாய் மாற அதனால் ஏற்படும் பிரச்சனைகள்.

‘ஹீரோ அம்பானியாக இருந்தாலும் சரி, குஷ்டம் வந்த பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி அவனையே விரும்பும் கதாநாயகி’, ‘100 பேர் வந்தாலும் அவர்களைப் பந்தாடும் ஹீரோ’, ‘ஒரே பாட்டில் கோடீஸ்வரன்’ போன்ற நீண்ட கால கிளிஷேக்களுக்குள் சமீபகாலமாக சில விஷயங்கள் சேர்ந்திருக்கிறது. எந்த தமிழ் படம் வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு “நல்லா இல்ல, வேஸ்ட்” என்று சொல்லும் பதிவர்கள் போல :-)

அவற்றில் முதன்மையானது குடி கலாச்சாரம்படத்தில் ஒரு குடி / பார் / பாட்டு சீனாவது இருக்க வேண்டும் என்பது செண்டிமென்ட்டாவிட்டது. படத்தின் ஆரம்பத்தில் முன்பெல்லாம் கோவில் கோபுரத்தையோ, சாமி சிலையையோ காட்டுவார்களே, அது போல. வில்லன் மட்டும் தான் சில்க் குமிதாவையோ, டிஸ்கோ சாந்தியையோ அருகில் அமர்த்திக்கொண்டு முன்பு குடிப்பான். இப்பொழுது ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் குடிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முகமூடி 100 ஆவது படமாம். இந்த 100 படங்களில் குடி சீன் இல்லாத படம் எத்தனை? நான் தேடிப்பார்த்தேன். ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை.  

மற்றொன்று திணிக்கப்பட்ட அதீத சோக கிளைமாக்ஸ் – தியேட்டருக்கு வரும் மக்களை ஒரு திரைப்படம், ஒன்று மகிழ்விக்க வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் சமீப கால படங்கள் ரசிகர்களை கஷ்டப்படுத்துகின்றன. கனத்த இதயத்தோடு மக்கள் தியேட்டரை விட்டு போக வேண்டும் என்று இயக்குனர்கள் பிரயத்தனப்படுகிறார்கள். அது முற்றிலும் ஒரு தவறான அணுகுமுறை என்று எனக்குத் தோன்றுகிறது. 50ரூபாயைக் கொடுத்துவிட்டு மூன்று மணிநேரம் இருட்டரையில் தம்மை நம்பி அமரும் ஒரு ரசிகனுக்கு படைப்பாளி என்பவன் நெஞ்சடைக்கும் சோகத்தையா பரிசாக கொடுக்க வேண்டும்?

இவை எனக்குத் தோன்றிய சில விஷயங்கள். கோவை புத்தகக்கண்காட்சியில் பெரு. துளசி பழனிவேல் என்பவர் எழுதிய “’சுட்ட’ படங்கள்” என்ற ஒரு புத்தகத்தை வாங்கினேன். அதில் ஆசிரியர் ஆங்கிலப் படங்களிலிருந்து சுடப்பட்ட தமிழ் படங்களைப் பற்றி எழுதவில்லை. தமிழ் படங்களிலிருந்து சுடப்பட்ட தமிழ் படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திலிருக்கும் உதாரணங்கள் சிலவற்றைக் கூறுகிறேன். 1940 ஆம் ஆண்டு ‘உத்தமபுத்திரன்’ என்றொரு படம் வந்தது. தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படம். பி.யு.சின்னப்பா நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் நடித்திருப்பார். ஆள்மாற்றாட்டக்கதை. இந்த படம் தான் மூலக்கரு. இதே கருவை வைத்து வெளியான மற்ற திரைப்படங்கள்  ‘அபூர்வ சகோதரர்கள் (1949)’, ‘உத்தமபுத்திரன்’ (1958), ‘நீரும் நெருப்பும்’ (1971), சற்று புதிய படங்கள் என்று சொல்ல வேண்டுமானால் 23ஆம் புலிகேசி (2006), சிங்கம் புலி (2011). பெரும்பாலான இரட்டை வேடப்படங்களில் நிச்சயம் ஒரேஒரு ஆள் மாறாட்ட காட்சியாவது இருக்கும். மற்றுமொரு உதாரணம் திருமணத்தை வெறுக்கும் கதாநாயகி வீட்டில் இருப்பவர்களை சரிகட்ட யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்ல, கடைசியில் அந்த ‘யாரோ’ ஒருவன் தான் கதாநாயகனாக இருப்பான். இந்தக் கதையில் முதலில் வந்த திரைப்படம் குமரிப்பெண் (1966). இதே கருவில் வந்த மற்ற திரைப்படங்கள் கணவன் (1968), தெற்கத்தி கள்ளன் (1988), எங்கிருந்தோ வந்தான் (1995), பிஸ்தா (1997), சமீபத்தில் சண்ட (2008). மேலே கொடுத்துள்ள இரண்டு கதைகளும் நமது ‘டெம்ப்ளேட்’ மோகத்திற்கு மிக சாதாரணமான உதாரணங்கள். இவை போல் அந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன.

இன்னும் எத்தனை நாளைக்கு தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெறும் மசாலா படங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள் நம் இயக்குனர்கள், அதையே நாமும் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோன் என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் தமிழ் சினிமா இந்த மசாலா அல்லது கமர்சியல் என்ற பெயரில் ஒரே படத்தில் காதல், செண்டிமென்ட், நட்பு, ஆக்ஷன், க்ரைம், துரோகம், வன்முறை, செக்ஸ், கவர்ச்சி என்று ஒரு பிச்சைக்காரன் பாத்திரம் போலவே இருக்கப்போகிறது என்றும் தெரியவில்லை.

நாடங்களிலிருந்து சினிமா வந்ததால் பாடல்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்ததென்னவோ வாஸ்தவம்தான். உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் இதே ‘நாடகம் to சினிமா’ என்ற ஆரம்பம் தானே? உலகின் அநேக நாடுகள் தங்களது படங்களில் பாடல்களைத் திணிப்பதில்லை. இசை என்பது அவர்கள் எடுக்கும் படத்தின் genre ஆக இருக்கும் வரை. ஆனால் இந்திய சினிமாவில் மட்டும் தான் சினிமா தோன்றி 100 ஆண்டுகள் ஆன பிறகும் (இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் Shree pundalik ஆண்டு 1912. மேலும் விவரங்களுக்கு) ஹீரோ ஹீரோயினைக் கண்டவுடன் “டிரீம் சாங்” வருகிறது, ஏதாவது இழப்பு என்றால் சோகப்பாட்டு வருகிறது, கொண்டாட்டம் என்றால் குடித்துவிட்டு தொப்புள் அழகிகளுடன் ஆடும் குத்துப்பாட்டு வருகிறது. பாடல்களுக்கென புதிது புதிகாக் லொக்கேஷன்களைத் தேடுகிறார்கள். இதே தேடல் “கதை, திரைக்கதை”க்கு இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். பாடல்கள் வேண்டவே வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. கதைக்கு பொருத்திய, திரைக்கதையின் ஓட்டத்தைத் தடுக்காத, கதை நடக்கும் களத்தை விட்டு வெளியே போகாத, காட்சிகளின் பின்னணியில் இருக்கும்படியான பாடல்கள் நிச்சயம் படத்திற்கு பலம் தான். உ.தா: ஹீரோ ஹீரோயினை முதல் தடவையாகப் பார்க்கிறான். உடனே காதல் வருகிறது. மனதிற்குள் பாடல் ஒன்றும் உருவாகிறது. உடனே அதைப் பாட உலகில் ஏதாவதொரு நாட்டின் ஏதோ ஒரு பூத்தோட்டத்தில் ஏன் குதிக்கவேண்டும்? தன் காதலை, அவளை அவன் ரசிக்கும் விதத்தை, அவளைப் பார்த்த அதே இடத்தில், தனக்குள் நிகழும் மாற்றங்கள், அவள் அவனைப் பார்க்கும் விதம், அவன் அவளை அணுகும் விதம், பின்தொடரும் அனுபவம் என்று காட்சியப்படுத்தலாமே?

தொடரும்...

(சட்டென்று பாதியிலேயே தொடரும் போட்டுவிட்டதற்கு மன்னிக்கவும். இந்தக் கட்டுரை முழுதாக மேல் உள்ளது போல் நான்கு மடங்கு நீளம். ஒரேடியாக மொத்தமாக படிக்க எனக்கே 'போர்' அடிக்கிறது. முகமூடியைப் பற்றி எழுத ஆரம்பித்து, வழக்கம்போல எங்கெங்கேயோ சுற்றி விட்டேன். அடுத்த பாகத்தை விரைவில் வெளியிடுகிறேன். பொறுமையாகப் படித்ததற்கு நன்றி)

--------------------------------------

இந்தக் கட்டுரைக்கு தமிழ் பட போஸ்டரை வைத்தது சரிதானா?

You Might Also Like

13 comments

  1. எனக்கு படிக்க போர் அடிக்கவேயில்லையே.. அடுத்த பதிவை சீக்கிரமா போட்டுருங்க!

    ReplyDelete
    Replies
    1. நெஜமாத்தான் சொல்றீங்களா, இல்ல கலாய்க்கிறீங்களா :-) அடுத்த பதிவு இன்று இரவே போட்டு விடுகிறேன்! (அதுவும் முன்னுரை தான், பார்ட் 02) :-)

      Delete
  2. Kalaikkirukkan pesugiren.... nanba namba thamizh cinemala innum sila buthisaligal irukkirargal... avargalukku angila pada dvdgall illai endral kai kaal illathathu pol thondrum.. avatrai appidiye ATTA COPY adithu ithu ennudayathu endru peethikolvathu.. "illaye ithu naan munbe parthirukkirene.. ithu oru angila padamache" endru kettal "enakum theriyum avar enathu abina iyakkunar.. avarukku ithu oru samarpanam(tribute samiba kalamaga copy endra oru varthayay intha varthayay vaithu adjust pandrathu) melum silar ethartham endra peyaril karumantharamana kathaigalai eduthu savadikkirargall.. ithu pothathendru hero pakkathu veettu paiyan pol iruppan endru kodumai paduthugirargall... pakathu veetu paiyana pakka naan yean 150ruba kuduthu theatre ku poganum.. pakathu veettu kathava poi thatna paradesi vella vanthu pathuttu poran... thayavu seithu thamizh cinema iyakkunargal inimelavathu nalla kathaigalai swarasyamana thiraikathaiyodu engirunthum sudamal.. thirai arangathirku varum therukodi rasiganaiyum magizhchi paduthum vithatthil padam edungall endru kenji kettu kollgiren... melum enathu nanban "Baby Anandan" merkondirukkum intha muyarchikkum enathu manarntha vazhthukkall!!!

    ReplyDelete
  3. தல, செம அலசல்.. உங்க ஆதங்கம் தான் முக்க வாசி தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும்...நல்ல தமிழ் படங்கள் வேண்டும்.... !!!!!
    தமிழ்ல இது வரைக்கும் வந்த எல்லா படத்தையும் உங்க 10 classificationல அடைச்சு விடலாம்.. உங்க சினிமா அறிவு சான்சே இல்ல....செமையா சிம்பிளா புரியிற மாதிரி எழுதுற சில பிளாக்கர்ல நீங்களும் ஒருத்தர்....
    உங்க கிட்ட “’சுட்ட’ படங்கள்” புக் பத்தி இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்.. :):)
    முகமூடிய ப்ரீயா விடுங்க தல...அதை பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை....மிஷ்கின் ரொம்பவே சொதப்பிடார்..அடுத்து மாற்றானை எதிர்பார்ப்போம்..

    ReplyDelete
    Replies
    1. சுட்ட படங்கள் புத்தகத்துல ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. அப்பப்போ எடுத்து விடுறேன் :-)

      ஆதங்கம் எல்லாருக்கும் இருப்பது என்னவோ உண்மைதான். தியேட்டர்ல பாட்டு வந்தா ரசிகன் தம் அடிக்க போயிடுறான்னு தெரியுது. ஆனாலும் விடாமா 5 பாட்டு வக்கிறாங்களே அதான் ஏன்னு புரியல... 5 பாட்ட மட்டும் எடுத்துட்டா, படம் 90ல் இருந்து 120 நிமிஷம் தான் ஓடும்படியா இருக்கும், கதையைப் பொறுத்து. டிக்கெட் என்னவோ அதே விலை கொடுத்து தான் வாங்கப் போறோம். ஆனா பட்ஜெட் கணிசமான அளவு குறையும், அதை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்தலாம்...

      "முகமூடி"ய நான் பெருசா எதிர்பார்த்தேன் தல, அதே அளவு பெருசா ஏமாத்திருச்சு. சரியில்ல, சரியில்லனு புலம்பிகிட்டு விட்டுரதவிட, என்ன செஞ்சா நல்லா இருக்கும்னு சேத்து சொல்ல ஆரம்பிச்சோம்னா, ஒரு சின்ன மாற்றம் வரலாம். இந்த படத்துல இருந்து அப்படி செய்யலாம்னு யோசிக்கிறேன் - Constructive Criticism (இதுக்கும் ஒரு புத்தகம் தான் inspiration). அதுக்கு தான் இந்த பதிவு ஒரு முன்னுரை!

      எல்லா படத்துக்கும் இப்படி எழுத முடியுமானு தெரியல.... பார்க்கலாம்.

      Delete
  4. ஏகப்பட்ட தமிழ்ப்படங்களை போனவருடமும் இந்தவருடமும் தவிர்த்துவிட்டேன். ஏதாவது கொஞ்சம் வித்தியாசமான கதை, அட்லீஸ்ட் ஒரு 10 ப்ளாக்கர்ஸாவது நல்ல படம்னு ஒத்துக் கொண்ட தமிழ்ப்படத்தை மட்டும் பார்ப்பது என்று முடிவு கட்டியாச்சு.

    நான் தவிர்ப்பதற்கு முக்கிய காரணமே, சேம் கதை, சேம் மசாலா தான். போரடிச்சுப் போச்சு. தமிழ்ப்படங்களை வரவேற்க வேண்டும் தான். அதிலும் புதிய முயற்சிகளை நிச்சயம் வரவேற்க வேண்டும். ஆனால் புதிய ஐடியாக்கள் மட்டும் இருந்து போதாதே? படத்தை சுவாரஸ்யமாக ப்ரசண்ட் பண்ணத் தெரியாட்டா அவதார் ரேஞ்சுக்கு ஐடியா வச்சிருந்தாலும், கோடிகளை கொட்டும் ப்ரொடுயுசர் இருந்தாலும் பத்தாது. படம் நிச்சயம் ஊத்திக் கொள்ளும். இப்பல்லாம் த்ரில்லர் கேடகரியில் நிறையப் படம் வருது. ஆனால் எனக்குத் தெரிந்து மௌனகுருவுக்கு பிறகு எந்தப் நல்ல த்ரில்லர் படத்தின் பெயரும் ஞாபகம் இல்ல.

    எனக்குத் தெரிந்து முகமூடி கதையைப் பார்த்தால், கிட்டத்தட்ட வேலாயுதம் போன்ற சாதாரண கதை போலத் தான் தெரியுது. ஏன் அதை சூப்பர்ஹீரோ படம்னு சொன்னாங்கன்னு புரியல.

    செமயா எழுதியிருக்கீங்க தல ... இன்னும் பதிவுகள் எதிர்ப்பார்க்கிறேன். ( தமிழில் என் பேவரைட் படங்களில் ஒன்றின் போஸ்டரை போட்டதற்கு நன்றி :) )

    ReplyDelete
    Replies
    1. முகமூடி நிச்சயம் ஏமாற்றம் தான்... சந்தேகமில்லை. ஆனால் அது திரைக்கதைக்கு பேர் போன மிஷ்கினிடமிருந்து வந்தது தான் ஏன் என்று ஆராய வேண்டிய ஒன்று. படத்தில் திரைக்கதை என்ற வஸ்து படத்தில் இல்லவே இல்லை. அதுவும் இரண்டாம் பாதி, நிச்சயம் எனக்கு கடுப்பாகிவிட்டது. எதையும் எதிர்பார்க்காமல் போக வேண்டும் என்று மற்றவர்களுக்கு சொல்லிவிட்டு, படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்துவிட்டேன் :-( விரிவாக அலசலாமென்று இருக்கிறேன்... தொடரந்து வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். விவாதிக்கலாம்...

      Delete
  5. இத்தனை வகைகளாக பிரித்துள்ளது அருமை...

    பழைய / புதிய படங்கள் என அலசல் சூப்பர்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. நண்பரே...போரெல்லாம் அடிக்கவில்லை.
    தொடரவும்.
    இரட்டை வேடப்படங்கள் பற்றி ஒரு தகவல்...
    தமிழில் இந்த பார்முலாதான், அதிக முறை... திருப்பி திருப்பி படமாக்கப்பட்டுள்ளது.

    எம்ஜியார் படங்களில் படங்களில் மட்டும் இத்தனை...
    1 நாடோடி மன்னன்
    2 ராஜா தேசிங்கு
    3 எங்க வீட்டு பிள்ளை
    4 குடியிருந்த கோயில்
    5 மாட்டுக்கார வேலன்
    6 நீரும் நெருப்பும்
    7 உலகம் சுற்றும் வாலிபன்
    8 நாளை நமதே
    9 சிரித்து வாழ வேண்டும்
    10 நினைத்ததை முடிப்பவன்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...