Life of Pi - ஒரு IMAX அனுபவம்...

9:57:00 AM


விற்பனையில் சக்கைபோடு போட்ட, “உலகின் தலை சிறந்த” என்ற அடைமொழியைக் கொண்ட பல நாவலகள், பல முறை திரைப்படங்களாக உருமாறி இருக்கின்றன. ஒரே கதை பல முறை பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாகியிருக்கின்றன. அவற்றில் பல "மூலத்தை கொலை செய்வதற்காகவே எடுக்கப்பட்டவை" என்ற காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், சில படங்கள் நாவலின் தரத்தைக் கெடுக்காமல் திரைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, பாராட்டையும் வசூலையும் குவித்துள்ளன. Harry Potter, Twilight Series, Lord of the Rings போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

துடைப்பக்கட்டையில் பறக்கும் மந்திரவாதிச் சிறுவன் கதையையும், உருகி உருகி காதலிக்கும் வேம்ப்பயர் கதையையும், மனிதர்களுக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போர்க்கதையையும் படமாக்கிவிட்டு காலரைத் தூக்கித் திரிந்த ஹாலிவுட் காரர்களது கண்களை, “படமாக்கவே முடியாது” என்ற முத்திரையுடன் வெளிவந்த ஒரு நாவல் பல வருடங்களாக உருத்திக்கொண்டிருந்திருக்கிறது அந்த நாவல், 2001 ஆம் ஆண்டு Yann Martel என்னும் கனடா நாட்டு எழுத்தாளர், இந்திய சிறுவனனைப் பற்றி எழுதிய 'Life of Pi'. இந்த நாவலை படமாக்குவது உண்மையிலேயே அவ்வளவு சுலபமல்ல. காரணம் படத்தின் நாயகன் பாண்டிச்சேரி வாழ் இந்தியச் சிறுவன் என்பதால் அல்ல; அவனுடன் கதை முழுக்க பயணப்படும் மற்றுமொரு கதாபாத்திரம். அந்தக் கதாப்பாத்திரம், இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான, பெங்கால் புலி! 


பிரதான கதாபாத்திரமான Pi யை, மற்றுமுள்ள ஒரே கதாப்பாத்திரமான புலியுடன் நடிக்க வைக்க வேண்டும். தரையில் என்றால் பரவாயில்லை. பெரும்பாலான கதை நடக்கும் களம், கடல் / தண்ணீர் என்பதால் தான் பிரச்சனை. ஒரே போடாக எந்த நேரத்திலும் கதாநாயகனை புலி போட்டுத்தள்ளிவிடும். Narnia வில் சிங்கத்தைச் செய்தது போல், இங்கும் கிராபிக்ஸில் ஒரு புலியை வடிவமைத்து விடலாம். ஆனால் படம் முழுவதும் வலம் வர வேண்டிய அந்தப் புலி, நிச்சயம் சில இடங்களிலாவது துருத்திக்கொண்டு "நான் கிராபிக்ஸ் புலி" என்று பள் இளிக்கும். படத்தின் உயிர்நாடி புலிக்கும் Pi க்கும் இடையே உள்ள உறவு. பொம்மைப் புலியைக் காட்டி அதைக் கெடுக்க முடியாது. படத்தின் மிகப்பெரிய சவால் ‘புலி’ தான். எனவே காத்திருந்தார்கள். Avatar ருக்காக James Cameron காத்திருந்ததைப் போல.

2003 ஆம் ஆண்டே FOX 2000 PICTURES, Life of Pi கதையை திரைப்படமாக்க அனுமதியைப் பெற்றிருந்தாலும், யாரை இயக்குனராக்குவது என்பதில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிலவியிருக்கிறது. முதலில் இந்தக் கதையை இயக்கக் கேட்டது Manoj K. Shyamalan இடம் தான். இவரும் கதையின் நாயகனான Pi போல ஒரு பாண்டிச்சேரிக்காரர் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் விலகிக்கொண்டார். பின்னர் Y tu mamá también, Children of Men, Harry Potter and the Prisoner of Azkaban படங்களை இயக்கிய Alfonso Cuarón ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் விலகிக்கொள்ள Amélie பட இயக்குனரான Jean-Pierre Jeunet வந்தார். அவரும் விலக, இறுதியாக 2010 ஆம் ஆண்டில் தான் Ang Lee இயக்குனராக உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் பட்ஜெட் என்று 70 மில்லியன் டாலர்களை Lee கேட்க, FOX 2000 PICTURES கொஞ்சம் தயங்கியிருக்கிறது (படத்தின் பட்ஜெட் 120 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்புப்படி 6,66,36,00,000 ரூபாய் மட்டுமே). ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் Lee தனது படத்தின் பிரதான டைட்டில் கேரக்டரான Piscine Molitor Patel என்கிற Pi யைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்படி 3,000 பேர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், Suraj Sharma, படத்தில் 17 வயது Pi ஆக புலியுடன் நடித்த இவருக்கு இப்பொழுது வயது 19. Pi யின் தந்தையாக நடித்திருப்பவரையும் நமக்குத் தெரியும். ஸ்ரீதேவியின் அலட்டல் பீட்டர் கணவனாக Engilish Vingilish ல் வந்த Adil Hussain. அம்மாவாக தபு. இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது நளினமான பரதத்தால் நம்மைக் கவர்ந்து விடும் தமிழ் பெண் ஆனந்தியாக, ஷ்ரவந்த்தி சாய்நாத். இவர் படத்திற்குள் வந்த கதையை இந்த இணைப்பில் படிக்கலாம். சுட்டி டிவியில் படத்தின் இயக்குனர் Ang Lee உடன் உட்கார்ந்து இவர் பேட்டி கொடுப்பது போன்ற விளம்பரம் கண்டேன். விளம்பரத்தின் இறுதியில் Ang Lee, “I Love Chutti TV” என்று சொன்னது தான் செம காமெடி. இறுதியாக Irfan Khan. சமீபத்திய Spiderman ல் வந்தது போல மொக்கை ரோலில் வராமல் பிரதான கேரக்டரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது கதைசொல்லல் வழியாகத்தான், கதை நமக்குச் சொல்லப்படுகிறது. 

“After hearing my story you will believe in God” – இது பிரதான கதாப்பாத்திரமான Pi, தன்னை பேட்டி எடுக்க வரும் எழுத்தாளரிடம் சொல்லும் வசனம். எழுத்தாளர் நம்புகிறாரோ இல்லையோ, படத்தை எடுத்து முடிந்தவுடன் இயக்குனர் நிச்சயம் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பியிருப்பார். அப்படிப்பட்ட, சாத்தியமே இல்லாத ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்திருக்கிறார் இந்த தைவானில் பிறந்து, ஹாலிவுட்டில் பிரபலமாகி, இந்தியாவிற்கு வந்து கனடா நாடுக்காரர் எழுதிய நாவலைப் படமாக்கிய Ang Lee. திரையில் நாம் காண்பது படமா அல்லது நிஜமா என்று தெரியாத வண்ணம் நாம் படத்தினுள் மூழ்கிப் போகிறோம். அகண்டவெளியில் நடப்பதாக நமக்குக் காட்டப்படும் பல காட்சிகள், உண்மையில் நான்கு சுவற்றுக்குள் எடுக்கப்பட்டு, பின் வேறொரு நான்கு சுவற்றுக்குள் வைத்து டெக்னாலஜி என்னும் பிரம்மாவால் உருவாக்கப்பட்டவை என்பதை உண்மையான பிரம்மனே இறங்கி வந்து சொன்னாலும் நாம் நம்ப மாட்டோம். அந்த அளவிற்கு நம்மை கட்டிப்போடுகிறது திரையில் நாம் காணும் இந்த மனிதன் உருவாக்கிய டிஜிட்டல் உலகம். புயலில் சிக்கித் தள்ளாடும் கப்பலைக் கண்டு உயிர்பயமும், அந்தக் காட்சி முடியும் இடத்தில் “உயிருடன் தான் இருக்கிறோம். நாம் காண்பது திரைப்படம் தான், உண்மையல்ல” என்கிற நிம்மதியும் எனக்கு வந்தது. 3Dயில் படம் பார்த்ததால் இத்தோடு நின்று விட்டது. 4D, 6D தியேட்டர்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து, அந்த குறிப்பிட்ட காட்சியில் கொஞ்சம் தண்ணீரை எங்கள் மீது பீச்சியடித்து, அப்படியே கொஞ்சம் காற்றையும் அதிகமாக வீசியிருந்தால், நிச்சயம் எனக்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பெரிய பஞ்சாயத்து ஆகியிருக்கும்.

படத்தில் நாம் பார்க்கும் புலி, கிராபிக்ஸ் புலியாம்! நிஜப் புலியையும், கிராபிக்ஸ் புலியையும் கலந்து கட்டி எடுத்திருக்கிறார்களாம். ஹும்ம்ம்… இரண்டு முறை படத்தைப் பார்த்தும் என்னால் இதை நம்ப முடியவில்லை. உண்மைக்கும், பொய்க்கும் இவ்வளவு ஒற்றுமை இருப்பது, நிச்சயம் சரியல்ல. இவ்வளவு தூரம் எந்தப் படமும் என்னை திரையினுள் இழுத்துக்கொள்ளவும் இல்லை, தனது நம்பகத்தன்மையால் இவ்வளவு ஏமாற்றியதுமில்லை. “சாத்தியமில்லை” – என்ற சொல்லயே இனி அகராதியில் இருந்து எடுத்துவிடலாம் போல. மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஹாலிவுட்காரர்கள். Ang Lee – உலக சினிமாவின் தற்போதைய பிரம்மா இவர் தான் # SALUTE!

James Cameroon இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், Peter Jackson வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். டிசம்பரில் ரிசல்ட் தெரிந்து விடும்.

இந்தியாவின் மதநம்பிக்கையையும் அதில் உள்ள குழப்பங்களையும் இவ்வளவு லாவகமாக யாரும் விமர்சித்தது இல்லை. 70களின் இந்தியாவையும் தத்ரூபமாகவே காட்டியிருந்தார்கள். பிரென்ச் நீச்சல் குளத்தின் நினைவாக பெயர் வைக்கப்பட்ட இந்தியச் சிறுவனான Pi, தனது குடும்பத்துடனும், தனது தந்தை நடத்தும் மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுடனும் கனடாவிற்கு போகும் ஒரு ஜப்பானிய சரக்குக் கப்பலில் பயணிக்கும் போது, கடும்புயலால கப்பல் மூழ்க, ஒரு உயிர்காப்புப் படகில் ஏறி உயிர் தப்புகிறான். உடன் வந்த அனைவரும் இறந்துவிட, பசிபிக் பெருங்கடலில், அந்த சிறிய படகில் இவனுடன் சில விலங்குகளும் சேர்ந்து கொள்கிறன அவை. ஒரு அடிபட்ட வரிக்குதிரை, ஒரு கழுதைப்புலி, ஒரு ஒராங்குட்டான் மற்றும் Richard Parker என்னும் புலி! 

சுற்றிலும் நீர் இருக்க, உண்பதற்கு எதுவுமில்லாமல் முதலில் அடிபட்டு அசையமுடியாமல் படுத்திருக்கும் வரிக்குதிரையை வேட்டையாடுகிறது கழுதைப்புலி. பின் ஒராங்குட்டானும் அந்த வெறிபிடித்த மிருகத்திற்கு உணவாவதைக் கண்டு கோபமடையும் Pi, கழுதைப்புலியை தாக்கப் பாய்ந்து வர, நடுவே புகுந்து கழுதைத் புலியைக் கொல்கிறது புலி. Survival of the fittest. இப்பொழுது படகில் இருப்பது Pi யும் புலியும் மட்டும் தான். சில நாட்களுக்கு, இறந்த விலங்குகளை தின்று புலியும், படகில் இருக்கும் பிஸ்கட்டுகளைத் தின்று Pi யும் உயிர் வாழ்கிறார்கள். எப்படியும் உணவு தீர்ந்தவுடன் புலி, தன்னைத் தாக்கிக் கொன்று விடும் என்கிற பயத்தால், புலிக்காக மீன் பிடிக்கத் தொடங்குகிறான் Pi. புலி மேல் உள்ள உயிர் பயமே Pi யை உயிரோடு இருக்க வைக்கிறது. புலி, Richard Parker க்கும் Pi தேவை, இல்லையென்றால் உணவு (மீன்) எதுவும் கிடைக்காமல் செத்துவிடும் (ஒரு முறை தண்ணீருக்குள் மீன் பிடிக்கக் குதித்து தோற்றுப் போகும் Richard Parker புலி). Survival of the fittest என்பதையெல்லாம் கடந்து வெறும் Survival மட்டுமே சவாலாக இருக்க, 227 நாட்கள் ஒரு புலியுடன் இருந்து, உயிரோடு மெக்ஸிகன் கடற்கரையில் ஒதுங்கும் Pi யின் நம்பமுடியாத கதை தான், ‘Life of Pi’. 

கதையின் இறுதியில் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. Pi சொல்லும் இந்தக் கதை உண்மையா அல்லது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன என்பதை நம்மை முடிவு செய்ய வைக்கும் ஒரு அட்டகாசமான திருப்பம் அது. படத்தைப் பற்றிப் பார்த்தவர்களிடம் பேசிப்பார்க்கும் போது தான், ஒவ்வொருவரும் இந்தப் படத்தை எப்படிப் பார்த்து புரிந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் இன்னமும் நான் தெளிவாகவில்லை. முடிந்தால் இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்.

அவ்வளவு தான். படத்தைப் பற்றி வேறு எதையும் நான் சொல்லப் போவதில்லை. படத்தின் டிரைலரே கொஞ்சம் காட்சிகளை முன்னமே காட்டி நம்மை வஞ்சித்து விட்டதாக நான் கருதுகிறேன். அவையெல்லாம் தியேட்டரில் பார்க்க மட்டுமே தகுதி உள்ளவை. வீணாக அவற்றை டிரைலிரேயே காட்டி, திரையில் நாம் கண்டு வாயைப் பிளக்க வேண்டிய தருணங்களை (கொஞ்சமாக) பாழாக்கிவிட்டார்கள்.  

முதல் முறை ரெகுலர் 3D தியேட்டரில் (Gopalan Cinemas, Bannerghatta Road) இந்தப் படத்தைப் பார்த்த போது, இவ்வளவு உணர்ச்சிகள் என்னுள் எழவில்லை. காரணம் நான் போனது இரவு 10 மணிக்காட்சி அதுவும் அலுவல் முடிந்த பிறகு. திரையரங்கில் படத்தின் திரையளவு, திரையில் fit ஆகாததால், சற்று zoom செய்துவிட்டார்கள். அதனால் மேலே, கொஞ்சம் கீழே கொஞ்சம் படம் திரையை விட்டு வெளியே தெரிந்து கொண்டிருந்தது. பக்கவாட்டில் சுருங்கி கிட்டத்தட்ட சதுரமாக தெரிந்தது படம். ஆனாலும் படத்தை நான் பெரிதும் விரும்பியதால், மறுமுறை வேறு ஏதாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி அடுத்து நான் போன திரையரங்கம், PVR - IMAX!


ஹைதிராபாத்திற்கு மட்மே சொந்தமாக இருந்த IMAX இப்பொழுது பெங்களூருக்கும் வந்திருக்கிறது. ஆனால் டிக்கெட் விலை தான் எப்பொழுதும் பெங்களூர் PVR ன் ஹைலைட். 550ரூ! வாரநாட்களில் காலைகாட்சி மட்டும் 300ரூ. அலுவலகம் கட்டடித்து, இன்று காலை காட்சி போய் தரிசித்து விட்டு வந்தேன். மேலே நான் சொன்ன “மூழ்கடித்த” உணர்வுகளுக்கெல்லாம் IMAX மட்டுமே காரணம்! அவர்களது Tegline, “GET LOST”. அது என் விஷயத்தில் நிச்சயம் உண்மையாகிப்போனது. உலகின் மிகப் பெரிய IMAX (Australia?) 7 மாடி உயரமாம். இந்த IMAX மினிமம் ஒரு மூன்று மாடியாவது இருக்கும். முதல் படமாக SKYFALL ஐ வெளியிட்டிருக்கிறார்கள். AVATAR, HUGO, TINTIN படங்கள் வெளியான போது IMAX இருந்திருக்கக்கூடாதா என்று இப்போது ஏங்குகிறேன். IMAX ல் எனது அடுத்த படம், HOBBIT: THE UNEXPECTED JOURNEY – டிசம்பர் 14 வெளியாகிறது.

LIFE OF PI நிச்சயம் ஒருமுறையேனும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். நல்ல, பெரிய திரையுள்ள தியேட்டரில், முடிந்தால் IMAXல் பாருங்கள். ஹதிராபாத், பெங்களூரு தவிர்த்து சென்னையில் இரண்டு IMAX ஸ்கிரீன்கள் (சத்யம்) வரப்போவதாக கேள்விப்பட்டேன்.

Ang Lee உடன் கமல்ஹாசன் நிகழ்த்திய உரையாடல்: பகுதி 01, பகுதி 02, பகுதி 03

Making of Life of Pi – பகுதி 01பகுதி 02

You Might Also Like

23 comments

  1. I AM THE 100 TH FACEBOOK LIKER. BUT TODAY I AM THE FIRST COMMENTER

    ReplyDelete
  2. தல நாளைக்கு தான் படத்துக்கு போறேன் ...அதனால கடைசி பேரா மட்டும் தான் படிச்சேன் ..
    அப்புறம் இங்க IMAX டிக்கெட் 250 தான் ..வீக் டே , வீக் 3 எண்டு மாதிரி எதுவும் கிடையாது.. ஒரே ரேட் தான் ...இது வரைக்கும் முழுசா IMAX கேமராவுல எடுத்த எந்த படமும் வரல. TDKR மட்டும் தான் 80 நிமிஷம் சீன்ஸ் IMAX கேமராவுல எடுத்து இருப்பாங்க..

    பதிவை வழக்கம் போல் தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. தல, நிச்சயம் பாத்துட்டு எழுதுங்க தல...

      தமிழ்மணத்துல இணைக்க நான் டிரை பண்ணும் போது மட்டும் "உங்கள் பதிவு தமிழ்மணாத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது" என்று வருகிறது. உங்களால மட்டும் எப்படி முடியுதுனு தெரியல :-)

      Delete
    2. படம் பார்த்தேன் தல......விஷுவல், மேக்கிங் செம..நீங்க எழுதியதற்கு வரிக்கு வரி உடன் படுகிறேன்...
      ஆனா படம் ரொம்ப ரொம்ப ஸ்லோ...இன்னும் கொஞ்சம் சுவாரிசியமா சொல்லி இருக்கலாம்.
      தமிழ்மணம் பிரச்சனைக்கு மெயில் பண்ணுறேன் தல..

      Delete
    3. நிச்சயமா திரைக்கதைல கொஞ்சம் வேகத்த சேத்திருக்கலாம் தான். ஆனா அது மூலக்கதைய பாதிக்கும். அத Ang Lee விரும்பல. அது தான் படத்தின் வெற்றியும் கூட. இந்தக் கதைய, இத விட பெட்டரா எடுக்க அவர் நினைக்கல; மாறா எடுக்க முடியாத ஒரு கதைய படமா எடுத்துக் காட்ட அவர் நினைச்சார். அதில் வெற்றியும் அடைஞ்சிருக்கார். இந்த படத்திலும் வேகம் போன்ற கமர்ஷியல் அயிட்டங்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லைனு நினைக்கிறேன். அதுக்குத்தான் ஏகப்பட்ட படம் வருதே :-)

      Delete
  3. கோவைக்கு ஐ மேக்ஸ் எப்போது வரப்போகிறதோ ?ஹூம்...

    நான் படம் பார்த்தேன்.
    3டியில் இல்லை .
    இருந்தாலும் படத்தின் கிராபிக்ஸ் கலக்கல்கள் மிரட்டின.

    ReplyDelete
    Replies
    1. கோவைக்கெல்லாம் சீக்கிரமே வந்துரும் சார்... நோ வொரியிங் :-)

      Delete
  4. இந்த படத்துக்கு நானும் ரொம்ப எதிர்பார்த்திருந்தேன்.. கடைசியில இங்க ரிலீஸே கிடையாது! :(
    படத்தோட மேஜிக் உங்க எழுத்திலும் தொற்றிக் கொண்டிருக்கு போல!

    ReplyDelete
    Replies
    1. ஓ! :-( ரிலீஸே கிடையாதா அல்லது லேட் ரிலீஸா என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தியேட்டரில் பாருங்கள். அல்லது ஒரு மாதம் மட்டும் பொருங்கள். அருமையான பிரிண்ட் தரவிறக்கக் கிடைத்துவிடும் :-)

      Delete
  5. AVATAR அடுத்த இடத்தில் இருக்கிறது LIFE OF PIE. AVATARAI தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இடத்தில் நண்பர், ATHISHA அவர்கள் எழுதிய - OVER BUILDUP http://cinemobita.com/lets_talkcinema/Athisha பதிவை படிக்க வேண்டும். அவரது பதிவு இப்படி ஆரம்பிக்கிறது – ஸ்பெக்டாகுலர்... மார்வெலஸ்.. விசுவல் ட்ரீட்.. இத்யாதி இத்யாதி ஆஹா ஓஹோ படம் என்றெல்லாம் வெளியாவதற்கு முன்பிருந்தே ஒவராய் பேசப்பட்ட படம்தான் லைஃப் ஆஃப் பை (LIFE OF PI).

    ReplyDelete
    Replies
    1. தல, நான் இப்பவும் சொல்றேன் - "சிகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்டா" சொல்ற கூட்டம் நான் இல்ல :-)

      அதீஷா அவர் ஸ்டைல்ல, அவர் பாத்தத எழுதியிருக்கார். அது அவரோட பார்வை. எனக்கும் படம் மொதல்ல திருப்தியா இல்ல, ஆனா IMAXல பாத்த பிரம்மாண்டம் அளவுக்கு அதிகமா புடிச்சு போச்சு. அதுக்கு நான் என்ன தல பண்றது? எனது முதல் IMAX அனுபவமே மட்டுமேகூட இப்படி ஓவரா, ஆஹா, ஓஹோனு பேசக் காரணமா இருக்கலாம். ஒரு படத்த பாத்துட்டு எனக்கு என்ன தோணுதோ அதத்தான என்னால என் பிளாக்ல எழுத முடியும், சொல்லுங்க...

      //இந்த இடத்தில் நண்பர், ATHISHA அவர்கள் எழுதிய - OVER BUILDUP http://cinemobita.com/lets_talkcinema/Athisha பதிவை படிக்க வேண்டும். அவரது பதிவு இப்படி ஆரம்பிக்கிறது... //

      குசும்புக்காரர் தல நீங்க :-) #ரசித்தேன்.

      Delete
    2. நான் சொல்றது, அதீஷா சொல்றதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க? படம் பாத்தாச்சா இல்லையா? என்னக்கேட்டா நிச்சயம் ஒருமுறை நல்ல தியேட்டர்ல பாத்துருங்க...

      Delete
    3. நான் கிண்டலுக்காக போட்ட பின்னோட்டத்தை சீரியசாக எடுத்து கொள்ளாததற்கு முதலில் நன்றி.நான் அது போல் போட்ட பின் கொஞ்சம் வருத்தபட்டு யோசித்தேன்.அடடா துப்பாக்கி படத்திற்காக ஒரு நல்ல நட்பை கேடுத்துகொண்டோமோ என்று.
      இந்த அளவு நீங்கள் சொன்ன பின் படத்தை பார்க்க முயல்கிறேன்.

      Delete
    4. சீரியசா எடுத்துக்குற மாதிரி நீங்க எதுவும் சொல்லல தல :-) துப்பாக்கி உங்களுக்கு புடிச்ச படம், நான் விமர்சனம் பண்ணேன். இந்த படம் எனக்கு புடிச்ச படம், நீங்க விமர்சனம் பண்றீங்க, இதுல நம்ம நட்பு கெட என்ன இருக்கு? நண்பர்களாவே இருந்தாலும் நம் இருவருக்கும் ஒரே டேஸ்ட் தான் இருக்கனும்னு அவசியமே இல்ல :-)

      நிச்சயம் படத்த பாத்துட்டு, உங்க தளத்துல எழுதுங்க...

      Delete
  6. @@ அகண்டவெளியில் நடப்பதாக நமக்குக் காட்டப்படும் பல காட்சிகள், உண்மையில் நான்கு சுவற்றுக்குள் எடுக்கப்பட்டு, பின் வேறொரு நான்கு சுவற்றுக்குள் வைத்து டெக்னாலஜி என்னும் பிரம்மாவால் உருவாக்கப்பட்டவை என்பதை உண்மையான பிரம்மனே இறங்கி வந்து சொன்னாலும் நாம் நம்ப மாட்டோம்.@@
    டிரைலர் பார்த்துட்டு அப்புறம் நம்ம கமல் ஹாசன் இண்டெர்வியூ பார்த்துட்டு படம் கண்டிப்பா பார்க்கனும் என்ற ஆவல் முன்னமே கிளம்பிருச்சி..உங்க விமர்சனம் அதை மேலும் அதிகப்படுத்திருச்சி, விமர்சனம் அருமை..அருமை..நன்றி
    .http://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் படத்த பாத்துட்டு உங்க விமர்சனத்தையும் எழுதுங்க தல...

      Delete
  7. இந்த கதைக்கருவை வைத்துக்கொண்டு மிகவும் பரபரப்பான ஒரு படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் மிகவும் உணர்வுப்பூர்வமாக, (நீங்கள் சொன்னது போல) மூலத்தை கெடுக்காமல் எடுத்திருக்கிறார் லீ. உண்மையிலேயே அவதாருக்கு அப்புறம் நான் பார்த்து பிரமித்த ஒரு படம் இது. நல்ல பகிர்வு நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. @ பாலா: நீங்கள் சொன்னது போல், சினிமாவிற்காக திரைக்கதையை இன்னும் பிரமாதமாக அமைத்து இருக்கலாம் தான். ஆனால் அதை Ang Lee விரும்பவில்லை போல. M. Shyamalan இந்த படத்திலிருந்து விலகியதற்கும் இது தான் காரணம் என்று தெரிகிறது. கதை எதைச் சொன்னதோ அதையே தான் படமும் காட்டியது. அதனால் ஒன்றும் குறைந்து விடவில்லை :-)

      Delete
  8. படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது பெரும்பாலான நண்பர்களுக்கு பிடிக்கவில்லை... எனக்கு மிகவும் பிடித்திருந்தது... அணைத்து வசனங்களையும் காட்சி அமைப்புகளையும் மிகவும் ரசித்தேன்....

    AGS இல் பார்த்தேன் , பெரியதிரை தான் இருந்து subtitle எதுவும் தெளிவாகத் தெரியவில்லை...

    உங்கள் எழுத்து நடை அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. படம் பலருக்கு பிடிக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை :-) இது கொஞ்சம் வேறு மாதிரியான சினிமா, எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் தான் எனது இந்தப் பதிவிலும் கூட கதை, திரைக்கதையைப் பற்றியோ, படத்தின் வேகத்தைப் பற்றியோ எதையும் எழுதவில்லை. ஆனால் இதன் மேக்கிங் நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்று. IMAX திரையில் தெளிவாகத் தெரிந்தது. Widescreen இல்லாமல் கொஞ்சம் சதுரமாக இருக்கிறது. அது தான் நமது தியேட்டர்களில் சரியாகத் தெரியாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்...

      Delete
  9. @ராஜ் : தல தமிழ்மனதில் இணைக்க முடிகிறது...

    babyanandan.blogspot.com/ncr.... FYI

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...