என் தமிழ் சினிமா இன்று - திருட்டு வி.சி.டி, ஒரு பிரச்சனையா?

5:50:00 AM


மாஸ்ரிலீஸ் பிரச்சனை பற்றிய பதிவிற்கு மாஸ் ரெஸ்பான்ஸ் (?) கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. போன பதிவில் சொன்ன டிஸ்கியையே இந்த பதிவிற்கும் கன்டினூயிங். இவை எனது எண்ணங்கள் மட்டுமே. நல்ல படங்களும் சில சமயம் தெரியாத்தனமாக வெற்றி பெரும் என்பதற்கு பீட்ஸா நல்ல எடுத்துக்காட்டு. 120 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. N.R.I ஒருவர் படத்தைப் பார்த்து விட்டு அதை ஹாலிவுட்டிற்கு எடுத்து போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது.

மேலும், இணையத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இயங்கும் IT ACT SECTION 66 A விற்கு எதிராக பதிவர்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள். அதற்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்ப்பை ஆரம்பித்துள்ள பதிவர் தருமி அவர்களின் பதிவை படிக்க கீழுள்ள லின்க் கை பயன்படுத்தவும்.

601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.


இந்திய அரசே,

தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்!

இனி நம் விஷயத்திற்கு வருவோம்.

தமிழ் சினிமா தொடர்ந்து பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு... இல்லை ஒரே பிரச்சனை “திருட்டி வி.சி.டி”!

இந்தத் திருட்டு விசிடியை பற்றிய எனது கருத்துக்களை சொல்கிறேன். முழுதாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை சொல்கிறேன்.

இருக்கிற பிரச்சனையையெல்லாம் விட்டு விட்டு திருட்டு வி.சி.டியை இன்னமும் ஒரு மிகப்பெரிய விஷயமாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது. அப்படி என்ன இந்த வி.சி.டிக்களால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். “என்னடா இவன் லூசு மாதிரி பேசுறான்” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்தத் திருட்டெல்லாம் இன்று நேற்று வந்ததல்ல. காலம் காலமாக, சொல்லப்போனால் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே (நான் பிறந்தது 1987ல்) திருட்டு வீடியோ சமாச்சாரங்கள் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன. முதலில் திருட்டு கேஸட், அதன் பிறகு திருட்டு வி.சி.டி, பிறகு திருட்டு டி.வி.டி. இப்பொழுது லேட்டஸ்ட்டாக திருட்டு புளுரே டிஸ்க் வரை வந்து விட்டது. இடைப்பட்ட காலத்தில் இணையத்திலும் வெளிவர ஆரம்பித்தது. வருங்காலத்தில் இன்னமும் ஏதேதோ வரத்தான் போகிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும், முடியவில்லையா, இத்துடன் வாழ பழகிக் கொள்ளவேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மொத்த இந்தியாவும், இரண்டு கழக ஆட்சிகளின் கீழ் தமிழகமும் வாழப் பழகிக்கொள்ளவில்லையா. அது போல. இத்தனை வட்ருடங்களுக்குப் பிறகும் திருட்டு வீடியோவை ஒழிக்க முடியவில்லை என்றால் அது அவர்களது கையாலாகாத்தனம் தானே தவிர்த்து, தீராப்பிரச்னை எல்லாம் இல்லை. சரி, நம்மாட்கள் என்ன செய்ய கொண்டிருக்கிறார்கள்?

“திருட்டு வி.சி.டியால் மட்டும் தான் எங்கள் படம் ஓடவில்லை. நஷ்டம் அடைந்திருக்கிறோம். அது மட்டும் இல்லையென்றால் தமிழ் சினிமா ஆஹா ஓஹோ வளர்ச்சி பெற்றிருக்கும்” - அது இது என்று, ஏதோ திருட்டு வி.சி.டி மட்டும் இல்லை என்றால் இந்த மக்கள் எல்லாம் அப்படியே மொத்த மொத்தமாக தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலையையே பார்ப்பார்கள் என்பதைப் போல ஒரு மாயையை முட்டாள்த்தனமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பவன் எல்லாம் தியேட்டருக்கு படம் பார்க்க வரவே மாட்டான். காரணம், "டிக்கெட் விலை" + additional charges extra.

திருட்டு விசிடி 15ரூபாய்க்கெல்லாம் கிடைக்கிறது. ஊரே ஒன்னுகூடி உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால் தியேட்டரில் ஒரு ஆள் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலை சென்னையில் 120ரூ. இங்கு பெங்களூரில் மினிமம் 150ரூ (காலை 10:00 மணி ஷோ மட்டும்) மற்றபடி 350ரூ கொடுத்தெல்லாம் நான் படம் பார்த்திருக்கிறேன். சாதாரண தியேட்டர்களிலேயே தமிழ்நாட்டில் அரைக்கப் காபி 10ரூ, 12ரூ கூல்டிரிங் மினிமம் 15ரூ மேக்ஸீமம் அவர்கள் இஷ்டம். பாப்கார்ன் மினிமம் 30ரூ. இந்த விலை டொக்கு தியேட்டர்களில். மால்களில், மல்டிபிளக்ஸ்களில் எல்லாம் விலை என்ன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கமல்ஹாசன் பாப்கார்ன் பெப்ஸி விலையைவிட டிக்கெட் விலை கொஞ்சமாவது உயர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எங்கு போய் முட்டிக்கொள்வது? இப்படி இருக்கையில் ஒரு சராசரி குடும்பத்தால் எப்படி தியேட்டருக்கு போய் படம் பார்க்க முடியும்? திருட்டு வி.சி.டியை விடுத்து தியேட்டருக்கு படம் பார்க்க வந்தால் படம் பார்ப்பவர்களுக்கு தான் நஷ்டமே தவிர, அவர்களால் படத்தைத் தயாரித்தவர்களுக்கோ, வெளியிடுபவர்களுக்கோ எந்த நஷ்டமும் இருக்கப்போவதில்லை. இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்கள் அடையும் நஷ்டம் எல்லாம் ‘கற்பனையான’ ஒன்று தான். “ஒருவேளை இவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருந்தால்?” என்று தான் நஷ்ட கால்குலேஷன் போட முடியும். நமது உலக பேமஸ் 2G கணக்கு போல. ஒருவேளை எல்லாம் சரியாக நடந்திருந்தால் அரசிற்கு 1,75,000 கோடி லாபம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கத்தான் தான் வாய்ப்பே இல்லையே. கோவிலில் செருப்பை பார்த்துக்கொள்பவனில் ஆரம்பித்து மூஞ்சூர், பூசாரியை எல்லாம் தாண்டி பிள்ளையாரிடம் போவதற்குத் தான் நம் நாட்டில் வாய்ப்பே இல்லையே!

அதை விடுங்கள், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சமீபத்திய உதாரணம். காவிரி நீர்ப்பிரச்சனை காரணாமாக பெங்களூரில் மாற்றான், பீட்ஸா, இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் நிச்சயமாக என்னால் சொல்ல முடியும், பெங்களூர் தமிழர்கள் அனைவரும் இந்நேரத்திற்கெல்லாம் இந்த மூன்று படங்களையும் பார்த்திருப்பார்கள். எல்லோரும் அருகில் இருக்கும் ஒசூருக்கு போயா படம் பார்த்திருப்பார்கள்? இத்தனைக்கும் பீட்ஸா ஒசூரில் ரிலீஸ் ஆகவே இல்லை, தவிர எந்தப் பிரச்சனையும் இல்லையென்றாலும் கூட, இங்கிலீஷ் விங்கிலீஷ் தமிழில் ரிலீஸ் ஆகியிருக்காது. ஏனென்றால் ஹிந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. சரி, ஒரு வேளை லீவு சமயங்களில் ஊருக்கு போய் பார்த்திருப்பார்களா? எத்தனை பேர் அப்படி பார்த்திருப்பார்கள்? நிச்சயமாக ஒரு நம்பரைச் சொல்லமுடியுமா? அப்படிச் சொன்னால் தானே நஷ்ட கணக்கை பார்க்க முடியும்?

இங்கு சக்கை போடு போடுகிறது திருட்டு டி.வி.டி பிஸினஸ். தமிழ் படங்களை தியேட்டரில் போட மறுக்கிறார்கள். ஆனால் தெருவிற்கு தெரு ஒரு சின்ன டேபிளைப் போட்டு வைத்துக் கொண்டு கூவிக்கூவி 30ரூக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சரி, அப்படி திருட்டு விசிடி அல்லது திருட்டு தரவிறக்கம் (?) மூலம் படம் பார்த்த இவர்கள் எல்லாம் தியேட்டருக்கு போய் படம் பார்க்காத நஷ்டத்தை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? தயரிப்பாளர், விநியோகிஸ்தர் முடிவு செய்து படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்து போய்விட்ட இடத்தில், இந்த மக்கள் படம் பார்த்தது எந்த வகையில் தயாரிப்பாளருக்கு நஷ்டம்?

என்னைப் பொறுத்தவரை மாஸ் ரிலீஸால் எல்லாம் திருட்டு வி.சி.டியை ஒழிக்கவே முடியாது. 10 கோடிக்கு ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை 5 வருடங்களுக்கு முன் 200 தியேட்டர்களில் 50 ரூ டிக்கெட்டிற்கு விற்றார்கள். லாபம் சுமார் இரண்டு கோடி இருக்கலாம். இன்று அதே 10 கோடி பட்ஜெட் படத்தை 1000 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 200 தியேட்டர்கள் திடீரென்று 1000 ஆகும்போது 50 ரூ டிக்கெட் விலை என்பது ஒரு 40க்காவது வரவேண்டாமா? அது தானே நியாயம்? ஆனால் அது 120க்கு வந்தல்லவா நிற்கிறது! டிக்கெட் விலை 40 ரூ என்று வைத்தால் கூட, 1000 தியேட்டர்கள் என்பதால் லாபம் நிச்சயம் முன்பைவிட பன்மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். படம் எடுப்பவர்களுக்கு மட்டும் லாபம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தைப் பார்த்து லாபத்தை உண்டுபண்ணித் தரும் வாடிக்கையாளர்களான நமக்கு எந்த நன்மையும் ஏற்படக்கூடாது, அப்படித்தானே? நடிகர், நடிகைகள் சம்பளத்தைப் பற்றியெல்லாம் பேசினால் வயிறு தான் பற்றி எரிகிறது. மொத்த பட்ஜெட்டின் பாதி ஹீரோவின் சம்பளம், அந்த சம்பளத்திற்கும் சேர்த்துத் தான் நாம் லாபம் ஈட்டித் தந்துகொண்டிருக்கிறோம். படம் பார்க்கும் நமக்கெல்லாம் சம்பளம் வருடக்கணக்காக ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் நடிகர்களுக்கு மட்டும் எப்படி படத்திற்கு படம் ஜெட் வேகத்தில் சம்பளம் உயர்கிறது? அப்படி என்ன படத்திற்கு படம் வித்தியாச வித்தியாசமாக நடித்து நம்மைக் கிறங்கடித்து விட்டார்கள்? உதாரணம் சகுனி படத்தின் பட்ஜெட் 25 கோடியாம். அப்படி என்ன இருந்தது 25 கோடிக்கு அந்தப் படத்தில்? வெள்ள பம்பரம் மெல்ல சுத்துதே என்று கார்த்தி ஆடிய பாரின் லொக்கேஷன் பாடலுக்கா இந்தக் காசு? தாண்டவத்தின் பட்ஜெட் 35 கோடி. கேட்டால் முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்ட படமாம். ஆனால் நிஜமாகவே முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? வெறும் 15 கோடி (பி.கு: லாபம் 4 வாரத்தில் 88 கோடியாம்)

இதே திருட்டு வி.சி.டிக்காரர்களைப் பாருங்கள், 120 ரூக்கு ஆரம்பித்தது, இப்பொழுது 15 ரூ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் என்றால் போகிற போக்கில் டவுண்லோட் செய்து விட்டுப் போகலாம். வாடிக்கையாளர்களை எப்படிக் கவர்வது, வியாபாரத்தை எப்படி பெருக்குவது என்று திருட்டு வி.சி.டி காரர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். 1000 தியேட்டர் என்ன 1,00,000 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தாலும், திருட்டு விசிடியை ஒழிக்க முடியாது. காரணம் டிக்கெட் விலை. 50ரூ மேக்ஸிமம், அதற்கு மேலெல்லாம் கொடுத்து சாதாரண மக்களால் படம் பார்க்கவே முடியாது.

திருட்டு வி.சி.டியை நியாயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல.. எவ்வளவு காரணங்கள் சொன்னாலும், திருட்டு திருட்டு தான், தண்டனை உண்டு தான், திருட்டு வி.சி.டி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று தான். டிக்கெட் விலையைக் குறைப்பதைத் தவிர மக்களை தியேட்டர் பக்கம் இழுக்க வேறு வழியே இல்லை. இதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

பெங்களூரில் தமிழ் படங்கள் திருட்டு வி.சி.டி படம் வெளியான மறுநாளே சுடச்சுட விற்பனைக்கு வருகிறது. ஆனால் கன்னட படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. தெரியுமா? ஏனென்றால் ரூல்ஸ் இங்கு அவ்வளவு ஸ்டிரிக்ட். வெளு வெளு என்று வெளுத்து விடுவார்கள். சும்மா 10,000 வாங்கிக்கொண்டு வெளியில் விடும் பழக்கம் எல்லாம் இங்கு இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் இருக்கும் மோசமான திரைப்பட இன்டஸ்டரியில் முக்கியமான ஒன்று கன்னட திரையுலகம். இவர்களால் மட்டும் எப்படி திருட்டு வி.சி.டி யை ஒழிக்க முடிந்தது? நம்மூரில் திருட்டு விசிடி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதம் ரூ10,000லிருந்து ரூ50,000 வரை போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சும்மா குற்றம் சொல்ல இப்படிச் சொல்லவில்லை. இதுதான் நடை முறை உண்மை. சும்மனாச்சுக்கும் திடீரென்று ஒரு நாள் எல்லா டிவிடி கடைகளும் மூடி இருக்கும். கேட்டால் ரெய்டு என்பார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் ஜரூராக திறக்கப்பட்டு வியாபாரம் பிய்க்கும். பட்டுவாடா முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி திருட்டு விசிடி ஒழியும்?

கன்னடத்தை விடுங்கள் மலையாள படங்களை எடுத்துக்கொள்வோம். சாதாரணமாக இவர்களது படங்களின் சராசரி பட்ஜெட் இன்னமும் இரண்டு கோடிதான். ஆனால் திருட்டு வி.சி.டி அரவே அங்கு ஒழிகப்பட்டு விட்டது. மென்பொருள் மூலம் திருட்டு வி.சி.டி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் (இந்த வார குமுதத்தில் இந்தச் செய்தி இருக்கிறது). இவ்வளவு மினிமம் பட்ஜெட் படம் பண்ணுபவர்களால் எப்படி இத்தனை பெரிய எதிரியை சமாளிக்க முடிந்தது?

ஹிந்தியில் ஒரு உதாரணம் சொல்லவா? அமீர்கானின் “3 Idiots” படம். ஒரிஜினல் டி.வி.டி வெளிவரும் வரை இணையத்தில் எங்குமே இந்த படம் தரவிறக்கக் கிடைக்கவில்லை. அலசு அலசு என்று அலசியும் ஒரு இடத்தில் கூட திருட்டு டி.வி.டியும் கிடைக்கவேயில்லை. இவர்களால் மட்டும் எப்படி இதுபோல் செய்ய முடிந்தது?

இப்படி மார்கெட் இல்லாதவர்களால் முடிந்த ஒன்று, நமது நடிகர்களின் சம்பளத்தில் 10ல் ஒரு பங்கை மொத்த பட்ஜெட்டாக கொண்டு படம் எடுப்பவர்களால் முடிந்த ஒன்று, நம்மை விட பல மடங்கு அதிக வியாபாரம் செய்பவர்களால் முடியும் ஒன்று, நம்மால் ஏன் முடியவில்லை? வெட்டித்தனமான பிரோமோக்ளால் தங்களது ஓட்டை படங்களை ஓட்ட நினைப்பவர்கள், தாங்கள் எடுத்தது நல்ல படம் என்று நம்பினால் (3 idiots போல) அந்த காசை கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக செலவு செய்து பைரசியைத் தடுத்து தங்களது படத்தைக் காப்பாற்றலாமே. 

இதே இடத்தில் இன்னும் ஒன்று. அடிக்கடி யாரவது ஒரு இயக்குனரோ, நடிகரோ தான் நடித்த படத்தின் திருட்டு விசிடி உலா வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கமிஷ்னரை நேரடியாகச் சந்தித்து புகார் கொடுத்ததாகவும் செய்திகள் வருவதைப் பார்க்கின்ற பொழுதெல்லாம்… நான் தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நேரடியாக புகார் கொடுத்தால் மட்டும் தான் போலீஸ் நடவடிக்கை எடுத்து திருட்டு வி.சி.டி யை ஒழிக்குமா? அப்படியென்றால் அது பப்ளிக்காக வந்து லஞ்சம் கொடுப்பதாகவோ அல்லது என் படம் வெளிய உலாவுது, ஊரறிய வந்து கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கேன், ஒழுங்கா நடவடிக்கை எடு, ஜாக்கிரதை? என்று மிரட்டுவதாக அல்லவா அர்த்தம்? அல்லது பட புரோமஷனில் இது ஒரு புது டிரண்டா? ஏதோ புகார் கொடுக்கப்பட்ட அந்த பட டி.வி.டியை மட்டும் தான் போலீஸ் மீட்பார்கள் என்று போல ஒரு சீனை அரங்கேற்றுவது கேவலமாக இல்லை? இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் திருட்டு வி.சி.டி ரெய்டு போகும் சமயத்தில் “நேரில் சந்தித்து கம்ப்ளைண்ட் செய்யப்படாத” ஒரு படத்தைப் பார்க்கும் போது “இத வேணா வித்துக்கோ. கம்ப்ளைண்ட் எதுவும் வரல. ஆனா மவனே அந்த படத்த மட்டும் வித்த, கொன்டேபுடுவேன்…” என்று சொல்லிவிட்டு வருவார்களோ? என்னமோ போங்க… தங்களது படங்களில் காவல்துறையை இவர்கள் கேவலப்படுத்துவதை விட மட்டமான செயல் இப்படி மீடியா சூழ போய் புகார் கொடுப்பது. தனித்தனியா கம்ப்ளைண்ட் கொடுப்பதற்கு பதில் திரைப்படச் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தெருவில் இறங்கி போராட வேண்டியது தானே? “தமிழக அரசே தமிழக அரசே, திருட்டு வி.சி.டி யை ஒழித்துக்கட்டு” என்று கத்த வேண்டியது தானே? அவர்கள் செய்யும் தொழிலுக்கு தானே பிரச்சனை? எதற்கு இப்படி தனித்தனியாக வர வேண்டும்? பப்ளிசிட்டி, சீப் பப்ளிசிட்டி. போராட்டம் செய்தால் இதை விட பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே? திருட்டு வி.சி.டி ஒழியும் வரை ஒரு படத்தையும் வெளியிட மாட்டோம், வரியும் கட்ட மாட்டோம் என்று எதிர்த்து நிற்கலாமே? வழியா இல்லை, தமிழக அரசை உரசிப் பார்க்க?

அதே போல் ஒரிஜினல் டி.வி.டி...

இது சம்பந்தமாக பல சினிமா ஆர்வலர்கள் பல முறை பலவாறு கத்திப்பார்த்தும் கேட்க ஆளில்லை. தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படமாக இருந்தாலும் சரி ஒரிஜினல் டி.வி.டி என்பது படம் வெளியான இரண்டு மாதங்களுக்குள் வந்துவிடுகிறது. கொஞ்சம் வெற்றிப்படமென்றால் 3 மாதங்கள் ஆகும் அவ்வளவு தான். அதற்குள் தொலைக்காட்சியிலும் போட்டு விடுவார்கள். சமீபத்திய தெலுங்கு ரிலீஸ் 'நான் ஈ' பி.கு: சக்கை போடு போடுகிறது டிவிடி விற்பனை. டிவிடி வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்பே தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பிவிட்டார்கள். ஆக, ஜூலை 6 ஆம் தேதி படம் வெளியாகி சக்கை போடு போட்டுவிட்டு தியேட்டரை விட்டு வெளியான உடனேயே, தொலைக்காட்சி வாயிலாகவும், ஒரிஜினல் டிவிடி வாயிலாகவும் படம் பார்க்க முடியாதவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். நான் ஈ கூட பரவாயில்லை. லேட் ரிலீஸ் தான். ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸான Julayi பட டி.விடி இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இத்தனைக்கு அதுவும் ஹிட் படம் தான்.

ஆனால் தமிழில்?

ஒரிஜினல் டி.வி.டி என்று ஒன்று வெளியாவதே யாருக்கும் தெரியவில்லையே. ஒரு வருடம் கழித்து டி.வி.டியில் வெளியாகும் படத்தையெல்லாம் நியாபகம் வைத்துக்கொண்டு வாங்கும் அளவிற்கு எந்தப் படம் இங்கு இருக்கிறது? அதே போல் நமது சமீபத்திய "இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக” படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. தமிழ் புத்தாண்டிற்கு வந்த படம் இது. ஆனால் இதுவே ஆச்சரியம், இவ்வளவு சீக்கரம் டிவியில் வெளியிட்டு விட்டார்களே. தீபாவளிக்கு எதைப் போடுவார்கள் என்று. OK OK டி.வி.டி எல்லாம் அடுத்த வருடம் வெளியாகலாம். யார் வாங்குவார்கள் அதை?


தமிழில் கடைசியாக டி.வி.டி வெளிவந்த படங்கள் வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, சிறுத்தை, கோ. எவ்வளவு வேகம் பாருங்கள்.

ஒரு தமிழ் படத்தை இங்கு வெளியான இரண்டே வாரத்திற்குள் சிங்கபூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒரிஜினல் டி.வி.டி வாயிலாக ரிலீஸ் செய்கிறார்கள் (SURA, LOTUS, FIVESTAR, AYNGARAN). அவை அங்கிருந்து இங்கு சுடச்ச்சுட பிரிண்ட் போடப்பட்டு இணையத்தில் வந்துவிடுகிறது. அதைத் தான் டி.வி.டியில் போட்டு திருட்டு வி.சி.டியாக விற்கிறார்கள் (சமீபத்திய ரிலீஸ் 'தாண்டவம்' பி.கு அருமையான பிரிண்ட் தான், ஆனால் யார் பார்ப்பது? இன்னமும் கொஞ்ச நாட்களில் மாற்றான் வந்து விடும்). 1000, 2000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லாம் அதிக பட்சம் 15 நாட்கள் தான் ஓடும். அதுவும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே. அதற்குள் அடுத்த படம் வந்துவிடும். அப்படி இருக்க சிங்காஆஆபூருக்கும் மலேசியாவிற்கும் வெளியிடும் டி.வி.டியை படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்ட 15, 20 நாட்கள் கழித்து குறைந்த விலையில் தமிழகத்தில் வெளியிட்டால், குறைந்த பட்ச லாபமாவது கிடைக்கும்தானே? படம் வெளியான சமயம் பார்க்க முடியாமல் போனவர்கள் 50ரூபாய்க்கு ஒரிஜினல் டி.வி.டியே ஒரு மாதத்தில் கிடைக்கிறதென்றால் வாங்கிப் பார்ப்பார்கள் தானே? திருட்டு வி.சி.டி காரர்கள் பார்க்கும் லாபத்தை அப்படியே தயாரிப்பாளர் பார்க்கலாம். சில படங்கள் பல மாதங்கள் கழித்து ஒரிஜினல் டிவிடி கம்பெனிகளான MOSERBAER / Ayngaran / Modern Cinema / Raj Video Vision மூலமாக வெளியாகிறது. இந்த லேட் டிவிடி ரிலீஸால் யாருக்கு என்ன / எவ்வளவு லாபம் என்று தெரியவில்லை. படத்தை மறந்த பிறகு மீண்டும் அதை நினைவு படுத்தி மக்களை பணம் செலவழிக்க வைப்பதெல்லாம் நடக்காத காரியம். ஒரிஜினல் டிவிடி வெளியீட்டால் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று நீங்கள் சொல்லலாம். தியேட்டர் டிக்கெட் விலை ரூ150, ஒரு மாதம் கழித்து ஒரிஜினல் டி.வி.டி ரூ50 என்றால் நானே கூட ஒரு மாதம் காத்திருந்து படம் பார்ப்பேன். தியேட்டர் டிக்கெட் விலையும் ரூ50 ஆக இருந்தால் மட்டுமே இந்த நிலையை சரிசெய்ய முடியும். எப்படியும் தியேட்டரில் பார்ப்பது போல் வருமா? 50 ரூபாய்தானே என்று மொத்தமாக நம் மக்கள் நிச்சயம் தியேட்டருக்கு வருவார்கள். அது தான் 2000 திரையரங்குகளில் வெளியிடுகிறார்களே!

வெளியான சூட்டில் மொத்தமாக காசைப் பார்த்து விட்டு அடுத்த படத்திற்கு போவது தான் புத்திசாலித்தனம். இது கூடவா சொல்லித்தர வேண்டும்? ஒரிஜினல் டி.வி.டி வெளியாகும் அந்த ஒரு மாத இடைவெளிக்குள் வேறு எங்கும் திருட்டு வி.சி.டி வெளிவராமல் பார்த்துக்கொள்வது தயாரிப்பாளர் (அல்லது படம் சம்பந்தப்பட்டவர்கள்), நமது அரசு, போலீஸின் சாமர்த்தியம்.

பி.கு: இந்த ஆட்சியில் எவ்வளவோ பரவாயில்லை. திருட்டு வி.சி.டி பிரச்சனை கம்மியாகியிருக்கிறது. ஆனால் சென்ற ஆட்சியில் எல்லாம் படுபயங்கரம். மதுரை மீனாட்சி பஜாரில் கிடைக்காத படம் இல்லை எனலாம். அடுத்தடுத்த நாளே தரமான பிரிண்டை கூவி கூவி விற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஒரு புதிய படம் வெளியான ஒரு மாதத்திலேயே ஒரிஜினல் டிவிடி வெளியாவதைப் போன்ற பிம்பம் பரவிவருகிறது. MAGNA SOUND HOME VIDEOS, MAXX MOVIE ENTERTAINMENT, BALAJI HOME VIDEOS என்று பல பெயர்களில் அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட புதுப்பட டிவிடிக்கள், அருமையான அட்டப்படம் போட்டு அதில் Hologram, Censor Certificate, Company Address - Phone Number சகிதம் பிரிண்ட் செய்யப்பட்டு பெரிய பெரிய கடைகளிலேயே (Landmark, Ratna Videos) விற்கப்படுகிறது. இவற்றை ஒரிஜினல் என்று அவர்களும் சொல்கிறார்கள், மக்களும் நம்பி வாங்குகிறார்கள். டிவிடியைப் போட்டுப் பார்த்தால் சுலபமாகத் தெரிந்துவிடும், நெட் பிரிண்டை அப்படியே காப்பி செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது. பளபள அட்டை போட்டு, பெரிய கடைகளில் பில் போட்டுக் கொடுத்தால் 'நெட்' திருட்டு பிரிண்ட் ஒரிஜினல் ஆகி விடுமா என்ன? திருட்டு விசிடியாவது 30 ரூ தான். ஆனால் இந்த வகை டிவிடிக்கள் குறைந்தது 50 ரூபாயிலிருந்து 99 ரூ வரை. மால்களிலேயே விற்கப்படுவதால், ஒரிஜினல் தானே என்று நினைத்து மக்களும் அள்ளிக்கொண்டு போகிறார்கள். இது படம் வெளியான உடன் கிடைக்கும் மட்டமான காப்பி திருட்டு டிவிடியை விட மிகப்பெரிய பிரச்சனை. பர்மா பஜார் திருட்டு டிவிடி வாங்குகிறவனுக்கு திருட்டுத்தனம் செய்கிறோம் என்ற ஒரு சின்ன மனவருத்தம் வர கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த so called ஒரிஜினல்களை விற்கும் பெரிய கடைக்காரனுக்கும், வாங்குபவர்களுக்கும் எந்த மனவருத்தமும் இருக்கப்போவதே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை, விற்கப்படுவதும் வாங்கப்படுவது "ஒரிஜினல்"!

சரி, ஒரிஜின்ல தயாரிப்பாளர் வெளியிடும் ஒரிஜினல் ஒரிஜினல் டி.வி.டிக்களையும் பிரிண்ட் போட்டு 15ரூ என்று விற்பார்கள். அதனால் நஷ்டம் தானே ? என்று நீங்கள் கேட்கக்கூடும். மென்பொருட்கள் மூலம் டிவிடிகளை காப்பி செய்யப்படுவதைத் தடுக்கலாம். MOSERBEAR நிறுவனம் தனது டிவிடிக்களில் இதை ஏற்கனவே உபயோகப்படுத்துகிறது. இவர்களது டி.வி.டிக்களை டி.வியில் மட்டுமே பார்க்க முடியும். கம்பியூட்டரில் ஓட்டவும் முடியாது, காப்பி செய்யவும் முடியாது. பின்னர் எப்படி திருட்டு பிரிண்ட் போடுவது?

காவிரிநீர்ப்பிரச்சனை போல தியேட்டரிலும் வெளியாகாமல், ஒரிஜினல் டி.வி.டி யும் வெளியாகாமல் இருக்கும் மாநிலங்களுக்கு / நாடுகளுக்கு, ஆன்லைன் ஸ்டிரீமிங்கில் படத்தைக் காட்டலாம். தரவிறக்க முடியாதபடி, பகிர்ந்து கொள்ள முடியாதபடி பணம் கட்டப்பட்ட அந்த ஒரு IP முகவரிக்கு மட்டுமே அதி வேகமாக ஸ்டிரீம் ஆகும்படி மென்பொருட்கள் மூலம் வழி செய்யலாம். இது லாபத்தை பன்மடங்கு அதிகருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. DTH சேனல்களில் பணம் கட்டி, இடைவெளியில்லாமல் படம் பார்க்க முடிகிறதே, அப்படியும் செய்யலாம். இவற்றை ரெக்கார்டு செய்யவும் முடியாது, வேறு டிவிகளில் பார்க்கவும் முடியாது. பணம் கட்டிய கஸ்டமருக்கு மட்டுமே இந்த வசதி. இன்னும் ஆயிரம் வழிகள் இருக்கிறது.

திருட்டு வி.சி.டி யை அரசும் போலீஸும் நினைத்தால் முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும். இணையத்தில் படங்கள் வெளியாவதை தயாரிப்பாளர்கள் நினைத்தால் தடுக்க முடியும். ஆனால் டிக்கெட் விலையைக் குறைக்காமல் ஏற்றிக்கொண்டே போனால், திருட்டு வி.சி.டி ஒழிந்தாலும் நிலைமை மாறவே மாறாது. திருட்டு வி.சி.டியும் இல்லை என்றால் பழியையும் யார் மீதும் போட முடியாது. ஒரு வேளை பழிபோடவும், நஷ்ட கணக்கைக் காட்டவும் ஏதாவது வேண்டும் என்பதற்க்காக இவர்கள் வேண்டுமென்றே திருட்டு வி.சி.டியை விட்டு வைத்திருக்கிறார்களோ? 

You Might Also Like

24 comments

  1. அருமையான அலசல் பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... உங்களது பார்வையையும் சொல்லியிருந்தால், இன்னமும் நன்றாக இருந்திருக்கும் :-)

      Delete
  2. Intresting Post... :):):)
    தல, எல்லா பாயிண்ட்சையும் நீங்களே சொல்லிடீங்க......இதுக்கு தீர்ப்பு தியேட்டர் டிக்கெட் விலையை குறைப்பது மட்டும் தான்.
    கர்நாடகா போலவே இங்கேயும் ஆந்திராவில் திருட்டு வி.சி.டி பிரச்சனை இல்லவே இல்ல..தியேட்டர் டிக்கெட் விலை நார்மல் ரேட் தான். மாஸ் ரிலீஸ் இல்லை, படத்தை இன்னும் 100 நாட்கள் ஒட்டி விழா எடுத்துகிட்டு தான் இருக்காங்க.. :):):)

    ReplyDelete
    Replies
    1. தல என்ன எதுவுமே சொல்லாம சைலண்ட்டா எஸ்கேப் ஆகிட்டீங்க? :-) டிக்கெட் விலை மட்டுமல்ல. இன்னமும் நிறைய விஷயம் இருக்கு. ஒன்னொன்னா எழுதுறேன்.

      ஆந்திரா மக்கள் மேல் எனக்கு சினிமா சார்ந்த அளவிற்கதிக பொறாமை இருக்கிறது. ஹீரோ ஒர்ஷிப் ஒருபக்கம் இருந்தாலும் நல்ல படங்களை இவர்கள் கொண்டாடத் தவறுவதே இல்லை. "100 நாட்கள் விழா" - எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இந்த மாதிரியெல்லாம் தமிழில் கேட்டு. ஹும்ம்ம்...

      Delete
  3. நடக்கின்ற உண்மையான அலசல்... நன்றி...

    ReplyDelete
  4. சரியான பாயின்ட் ஒஃப் வியூ நண்பா!!
    எல்லா argumentஐயும் நீங்களே போட்டுட்டீங்க.. ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே செய்ய இல்லை!!
    டிக்கெட் விலை குறையும் நாளை எண்ணிப் பார்க்கவே புல்லரிக்குது! ஆனா நடக்கனுமே? :(

    ReplyDelete
    Replies
    1. டிக்கெட் விலையைக் குறைப்பதற்கு சாத்தியங்கள் கம்மி... ஹும்ம்.. என்ன செய்வது, புலம்புவதைத் தவிர...

      Delete
  5. டிக்கெட் விலை குறைய்ந்தால் நல்லாதான் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கனவு நிஜமானால் சந்தோஷம் தான் :-)

      Delete
  6. Replies
    1. Thanks for the visit and comment, K.S.Muthubalakrishnan...

      Delete
  7. SuperB!!! Nice article.. thanks Baby ஆனந்தன்

    ReplyDelete
  8. Good analysis and the way you orchestrated your points was really nice.

    Sony and several others have had spent lot of money in protecting the digital content. Even DRM contents are not safe. The biggest problem is the analog hole. with good sound system to record the sound, we can record the video with HD camera.

    The same problem we are facing with Audio as well. MP3. But we somewhat successfully manage to make money by mobile ringtones, option to buy a single song from an album (flipkart and several others have digital market). With micro payments, producers can earn money. Unfortunately we want money really really fast. our producers don't believe in small payments. The film is an asset and if it is good, it will last longer and should generate money for several years.

    All these can happen in a better way when we are not looking something free. I know many friends didn't even know watching/having a pirated content is a CRIME. If selling is crime, buying would automatically.

    Thanks

    ReplyDelete
  9. அட்டகாசமான கட்டுரை.... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நொந்தவரே, தொடரந்து வாருங்கள்...

      Delete
  10. மிக அருமையான அதிவு நண்பா..:)

    படங்கள் ஓடாததற்கு முக்கியமான காரணம் டிக்கெட் விலை. ஒவ்வொரு படத்திற்கும் 120 ரூபாய் என்றால் அநியாயம் அல்லவா. ஆந்திராவில் சினிமா நன்றாக இருப்பதற்கு டிக்கெட் விலை தான் காரணம். நான் ஹைதிராபாத்தில் ஒரு தியேட்டருக்கு சென்றிருந்தேன். 55ரூ, 40ரூ தான் டிக்கெட் விலை. ஞாயிற்றுகிழமை இரவு காட்சி.. ஹவுஸ்புல். படமும் பெரிய படமெல்லாம் இல்லை... ‘நுவ்வா நெனா’ என்ற ஒரு சுமாரான காமெடி படம். குடும்பமாக பார்த்து செல்கிறார்கள். ஸ்நாக்ஸும் பர்ஸை பதம் பார்க்காத விலை.

    கண்ணெதிரே காரணங்களை வைத்து கொண்டு நம்மை ஏமாற்ற செய்கிறார்கள்.

    ReplyDelete
  11. We got 3 Idiots on the third day excellent quality, we watched in theater on first and for the second time we downloaded it.

    ReplyDelete
    Replies
    1. There are several examples with each one of us... None of us would have the guts to say "I have never seen any movie in a pirated version so far in my life". That's the raw fact. People and the Cinema people should undersand this and act accordingly...

      thanks for coming...

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...