என் தமிழ் சினிமா இன்று - சில எண்ணங்கள்...

9:09:00 AM



“பக்கம் பக்கமா பதிவெழுதுறது உனக்குவேணா அல்வா சாப்பிடுறமாதிரி இருக்கலாம். ஆனா அத படிக்கிற எங்களுக்கு ஆசிட் குடிக்கிற மாதிரி இருக்கு"

எனது பதிவுகள் பற்றி என் அருமை நண்பன் சொன்ன கமெண்ட் இது. ஆனால் அதுக்காகவெல்லாம் நான் கடமையைச் செய்யாமல் இருக்க முடியுமா? So…
 
“என் தமிழ் சினிமா இன்று” என்று ஏதோ பெரிதாக எழுத ஆரம்பித்து பின் வழக்கம்போல அம்போ என்று விட்டுவிட்டேன். சரி, அதை மீண்டும் தூசி தட்ட நினைத்து இதோ ஆரம்பித்திருக்கிறேன். மீண்டும் ஏதாவதொரு தமிழ் சினிமா இயக்குனரைப் பற்றியோ அல்லது வேறு எப்படியெல்லாம் தமிழ் சினிமா இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி செய்வதற்கு பதில், இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்ற எனது பார்வையை, ஏதோ புதிதாக யாருக்குமே தெரியாத சங்கதிகளை சொல்வது போல் இந்தப் பதிவில் சொல்ல இருக்கிறேன். முகமூடி போஸ்ட்மார்ட்டம் நின்றதற்கு காரணாம் அடுத்து வந்த தாண்டவம், மாற்றான் போன்ற படங்கள் தான். போஸ்ட்மார்ட்டம் என்று ஒரு படத்திற்கு ஆரம்பித்தால், அடுத்தடுத்து நீ எழுதிக்கொண்டே இருக்கவேண்டியதது தான் என்பது போல் தான் படங்கள் வந்துகொண்டிருக்கிறாது. மற்ற பதிவுகளைப் போலவே இந்தப் பதிவும் நீளம் தான். ஆசிட் குடிப்பது போல் கூட இருக்கலாம். போக, இவை முழுக்க முழுக்க என் கருத்துக்கள் மட்டுமே. யாரையும் புண்படுத்தவோ அல்லது மட்டம் தட்டிப் பேசவோ அல்ல. இந்த பதிவின் நோக்கம், வழக்கம் போல நான் நேசிக்கும் தமிழ் சினிமாவிற்கு என்னாலான உதவியைச் செய்வது மட்டும் தான். இதை வேறு எப்படி எடுத்துக்கொண்டாலும் அது வாசிக்கும் உங்கள் கற்பனைதானே தவிர அதற்கு நான் பொறுப்பு அல்ல (டிஸ்கி போட்டாச்சு, இனி என்னவேண்டுமானாலும் சொல்லலாம்)
 
2012 ஆம் ஆண்டின் முடிவில் உலகம் அழிந்திருக்குமோ இல்லையோ தமிழ் சினிமா நிச்சயம் அழிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. காராணம் இந்த ஆண்டு வெளியான படங்கள். கிட்டத்தட்ட அனைத்துமே மகாமட்டமான படங்கள். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘மசாலா கபே’ போன்ற "சந்தானம் வந்த" படங்கள் மட்டும் கொஞ்சம் தேறின. “பிட்ஸா”விற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வசூலும் நன்றாக இருக்கிறது என்றே நம்பலாம். வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ். இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான எந்தப்படமும் அந்த எதிர்பார்ப்பை பாதியளவு கூட பூர்த்தி செய்யவில்லை. முன்னனி நடிகர்கள், முன்னனி இயக்குனர்கள் யாராலும் தமிழ் சினிமா ரசிகனை திருப்தி படுத்த முடியவில்லை. நண்பன், வேட்டை, மரினா, அரவான், 3, சகுனி, பில்லா II, முகமூடி, தாண்டவம், மாற்றான் என்று வெளிவந்த அனைத்து படங்களும் மண்ணைக் கவ்வின. இத்தனைக்கும் இந்த படங்கள் எல்லாம் ஹீரோ, இயக்குனர் அல்லது டீம் என்று ஏதாவது ஒரு வகையில் முன்பு மாபெரும் ஹிட் அடித்திருந்தவை. நிஜமாகவே தமிழ் சினிமாவிற்கு சரக்கு தீர்ந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ‘தோல்விப் படங்களான’ இந்தப் படங்களின் வசூல்?
 
கிரிப்பிங்கான திரைக்கதை, வித்தியாசமான கதைகளன்கள், மீண்டும் மீண்டும் காதல்,  டூயட் இவை போன்ற பல காரணங்கள் படங்கள் தோற்பதற்கான பேசிக் ரீசன்ஸ். இப்பொழுது வரும் படங்களின் திரைக்கதையைவிட "பாட்டி வடை சுட்ட கதையில்" நல்ல திரைக்ககதை இருக்கிறது. இந்த ஏரியாவைத் தனியாகப் பார்க்கலாம். தமிழ் சினிமா இப்பொழுது அழிந்து கொண்டிருப்பதற்கு இவை மட்டும் காரணம் அல்ல. வேறு சில முக்கிய காரணங்களும் உண்டு. அவற்றில் ஒன்றை இன்று பார்க்கலாம்.

புதிய இயக்குனர்களின் வருகை, தெளிவான திரைக்கதை போன்றவற்றால் எப்பொழுது வேண்டுமானாலும் இன்றைய படங்களின் நிலைமை மாறி நல்ல சினிமா வரலாம். ஆனால் ஒரு சில விஷயங்களால் தமிழ் சினிமா முற்றிலும் அழிந்து போக நிறைய வாய்ப்பிருக்கிறது. என் 10 வருட சினிமா அனுபவத்தை (?) வைத்து அவற்றில் எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கு சொல்கிறேன். நண்பர்களும் படித்துவிட்டு பின்னூட்டத்தில் தங்களது கருத்துகளை சொல்லி அருமையான ஒரு விவாதமாக இந்த பதிவை மாற்ற வேண்டுகிறேன். தமிழ் சினிமா காதல் வலையில் சிக்கிக்கொண்டு செத்துக்கொண்டிருப்பதைப் போல நாம் இன்னுமும் "சூப்பர் தல”, “அருமையான முயற்சி”, “உழைப்பு வியக்க வைக்கிறது" போன்ற பின்னூட்டங்களைச் சுற்றி சுற்றியே வந்துகொண்டிருக்கிறோம். தயவு செய்து "ஏண்டா நொன்ன உனக்கெல்லாம் கமெண்ட் போடுறதே பெரிய விஷயம் இதுல நக்கல் வேறயா" என்று நண்பர்கள் கோபித்து கொண்டு மேலும் தொடராமலோ, அல்லது பின்னூட்டமே இடாமலோ போய்விட வேண்டாம். நான் நேரம் செலவழித்து எழுதுவதும், நீங்கள் நேரம் செலவழித்து படிப்பதும் முழுமையடைய வேண்டும் என்பது தான் எனது ஆசை. சரி, மேட்டருக்கு போவோம்...
 
ரொம்ப அதிகம் எல்லாம் வேண்டாம், ஒரு 5 வருடங்கள் பின்னால் போவோம் (இந்த காலக்கட்டத்தில் நான் கல்லூரியில் இருந்தேன். வெறித்தனமாக சினிமா பார்த்துக்கொண்டிருந்த காலம்). அப்பொழுதெல்லாம் தமிழ் சினிமா எப்படி இருந்தது? உதாரணத்திற்கு ஒரு படம் – “7G”. படம் வெளியாகி ஒரு வாரமாகியிருந்தது. அப்படியிருந்தும் எனக்கு 5ரூ டிக்கெட் 50ரூ என்று பிளாக்கில் தான் கிடைத்தது. முதல் ரோ முதல் சீட். “சந்திரமுகி” டிக்கெட்டிற்கு கூட்டத்திற்குள் முண்டியடித்துப் போனதில் எனது சட்டை பாக்கெட் கிழிந்து, கண்ணாடி பறந்த நியாபகம். அப்படி படம் பார்த்ததால் தான் அந்தப் படங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. குறைந்த தியேட்டர்கள் மட்டுமே அப்போது இருந்தது. மல்டிபிளக்ஸ்கள் எல்லாம் சென்னையில் கூட ஒன்று இரண்டு தான் இருந்தன. ஆனால் இன்று நிலைமை என்ன? உட்கார்ந்த இடத்தில் ஆன்லைனில் புக் செய்து விடலாம் டிக்கெட்களை, பாப்கார்ன் உடன். 5 வருடத்திற்குள் எத்தனை எத்தனை மல்டிபிளக்ஸ்கள், தியேட்டர்கள்? பெருநகரங்களில் சிங்கிள் ஸ்கிரீன் என்பதே அபூர்வமாகிவிட்டது. எந்த சிரமமும் இல்லாமல் எந்த படத்தையும் முதல் இரண்டு நாட்களுக்குள், யாரும், எப்படியும் பார்த்து விடலாம். அத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது படம். இங்கு தான் ஆரம்பம் ஆகிறது தமிழ் சினிமாவின் தோல்வி என்பேன் நான்.
 
முன்பெல்லாம் நல்ல படமாக இருந்தால், ரிலீஸான நேரத்தில் "மிஸ்" ஆனாலும் கூட, அடுத்தடுத்த வாரத்திலோ அல்லது அடுத்த மாதமோ கூட மவுத் டாக், விமர்சனம் போன்றவற்றால் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. நான் ஸ்ரீகாந்த் நடித்த “போஸ்” படத்தை இரண்டு முறை ஒரு மாத இடைவெளியில் பார்த்தேன். தியேட்டரை விட்டு தூக்கப்பட்டாலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் லாபம் பார்க்கும் நிலையும் இருந்தது. எனக்குத் தெரிந்த சிறந்த உதாரணம் "சித்திரம் பேசுதடி". ரிலீஸான புதிதில் கண்டுகொள்ளப்படாமல் இரண்டு நாட்கள் மட்டும் ஓட்டப்பட்டு, பெட்டி திருப்பி அனுப்பப்பட்டு, பிறகு “வாளமீனு” பாடல் டிவியில் ஹிட் ஆக, விமர்சகர்களும் படம் சூப்பர் என்று எழுத மீண்டும் பெட்டி திரும்ப பெறப்பட்டு புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டது. வெற்றியும் அடைந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
 
வரலாறு படைத்த உதாரணம் "ஆரண்ய காண்டம்". வெளியான புதிதில் யாரும் கண்டுகொள்ளவில்லை. கேட்டால் தமிழ் ஆடியன்ஸிற்கு ஏற்றவாறு படம் இல்லை, போஸ்டர் சரியில்லை, மக்களை ஈர்க்கவில்லை போன்ற மொக்கை காரணங்கள் சொல்லப்பட்டது. பதிவர்கள், விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, படம் சூப்பர் நிச்சயம் பாருங்கள் என்று மன்றாடிய பிறகு படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள் ஏமாந்து போனர். காரணம் படம் வெளியாகி மறுவாரமே "அவன் இவன்"னுக்காக தூக்கப்பட்டிருந்தது. இன்று வரை ரீ-ரிலீஸும் செய்யப்படவில்லை. படம் தேசிய விருது தட்டிச் சென்றது பாருங்கள், அன்றிலிருந்து மீண்டும் டாக் ஆப் தி டவுன் ஆனது. பர்மா பஜாரில் கூட்டம் அலைமோதியது. எங்கும் கிடைக்கவில்லை. "A" certificate படம் என்பதால் டிவியிலும் வெளியிடப்படவில்லை. அதனால் இன்று வரை இந்தப் படத்தை தெளிவான தரத்தில் பார்க்க யாருக்கும் கொடுத்து வைக்கவில்லை. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் YouTubeல் போன வாரம் வரை ஒரு மகாமட்டி பிரிண்ட் உலா வந்து கொண்டிருந்தது. இப்பொழுது அதையும் பிளாக் செய்து விட்டனர் 'Capital Film Works'! ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த பட ஸ்கிரிப்டை எழுதி முடித்துவிட்டார். அதுவும் கேங்ஸ்டர் படம் தானாம். ஆரண்ய காண்டம் போல் இல்லாமல், இந்த படத்திற்கு கிடைக்கப் போகும் ஓப்பனிங்கை இப்பொழுதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தலையில் தூக்கி வைத்து ஆடி, மினிமம் 2000 திரையரங்குகளாவது கொடுப்பார்கள், படம் குப்பையாக இருந்தாலும் சரி, நிச்சயம் வசூல் ரீதியாக மிகப்பெரிய "ஹிட்" ஆகும். 
 
இது தான் பிரச்சனை.
 
முன்பெல்லாம் சினிமாவில் "லாபம்" என்பது இரண்டாம் பட்சமாகவும், "தரம்" என்பது தான் அதைத் தீர்மானிக்கும் முதலாவதாகவும் இருந்தது. படத்தின் வெற்றி தோல்வியும் தரத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர்கள் ஓங்குதாங்காக வளர்ந்ததர்க்கும், தூக்கில் தொங்கும் அளவிற்கு கடனாளி ஆனதற்கும் அவர் தயாரித்த படத்தின் "தரம்" மட்டுமே காரணமாக இருந்தது. ஒரு படம் நல்ல, தரமான படமாக இருந்தால் 100 நாட்களைத் தாண்டி ஓடும். அப்படி ஓடினால் லாபம் தானாக வந்து, வெற்றிப்படமாகும். தயாரிப்பாளருக்கு லாபம், இயக்குனருக்கு பெயர். மிகச் சிறந்த உதாரணம் தலைவரது "பாபா". ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றிப்படமான படையப்பாவிற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து தலைவர் நடித்த படம். இயக்குனர் அண்ணாமலை, பாட்ஷா கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா. எதிர்பார்ப்பிற்கு குறைச்சலே இல்லை. ஆனால் படம்? வெளியான அன்றே தெரிந்து விட்டது குப்பை என்று. அட்டர் பிளாப். தரம் குறைந்த படம் என்பதால் ஓடவும் இல்லை, மக்கள் பார்க்கவும் இல்லை, லாபமும் இல்லை, தலைவரும் அது போலானதொரு முயற்சியை பிறகு எடுக்கவில்லை. அந்த படத்திற்கு ஏற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது, அது "தோல்வி!" (அத்துடன் சுரேஷ் கிருஷ்ணா ஒழிந்துபோனது தனிக்கதை)
 
ஆனால்...
 
அதே பாபா இன்று வெளியாகியிருந்தால்?
 
அடித்துச் சொல்கிறேன் இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் ஹிட் அதுவாகத்தான் இருந்திருக்கும். காரணம் “மாஸ் ஓப்பனிங்”. தரம் இங்கே எங்கு போனது?
 
நடக்காததை ஏன் சொல்லிக்கொண்டு, நடந்த கதையான "பில்லா II" படத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். 2500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார்கள். சென்னை A G S மல்டிபிளக்ஸில் மட்டும் ஒரு நாளைக்கு 25 ஷோவிற்கு மேல் ஓட்டினார்கள். படம் வெளியாகி ஓட்டைப் படம் என்று தெரிவதற்குள் தயாரிப்பாளர்கள், பணம் போட்டவர்கள் என்று அனைவருக்கும் அளவிற்கதிக லாபம் சம்பாதித்து விட்டனர். படம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து படம் வெளியாகும் வரை வெறித்தனமாக ப்ரோமோ செய்யப்பட்ட இந்தப் படம் வெளியான இரண்டே நாட்களுக்குள் காறி காறி துப்பப்பட்டு தியேட்டரை விட்டே தூக்கப்பட்டது. ஆனால் லாபம்? அது பன்மடங்கு அதிகம். பாபா விற்கு கொஞ்சம் குறைச்சல் இல்லாத குப்பை பில்லா II. ஆனால் தீர்ப்பு "வெற்றி!" எவ்வளவு வித்தியாசம்? 
 
பில்லா II, நல்ல படம் என்று கூட வேண்டாம் சுமாரான படம் என்றாவது சொல்லும்படியா இருந்தது? ஆனால் இந்த வருடத்தில் அதிக லாபம் சம்பாதித்த படங்களில் நிச்சயம் இந்த படத்திற்கு இடம் உண்டு. சகுனி - இந்தப் படத்தைப் பற்றி யோசித்தாலே அடிவயிற்றில் இருந்து வெறி வருகிறது. தாண்டவத்திற்கு ஒன்லி பேட் வோர்ட்ஸ். இந்தப் படங்கள் அனைத்தும் மார்க்கெட்டில் "வெற்றி படங்கள்" என்ற தகுதியை அடைந்திருக்கிறது, இந்த வருடத்தின் டாப் க்ராஸர் படங்கள் இவை!
 
படத்தின் வெற்றியை முடிவு செய்ய வேண்டிய ரசிகர்களான நம் அனுமதியில்லாமலே நம்மை ஏமாற்றி, நம்மை வைத்தே குப்பைப் படங்களை வெற்றிப்படங்கள் ஆக்கிக்கொண்டிருக்கின்றனர் வியாபார யுக்தி தெரிந்த இன்றைய கார்ப்பரேட் தயாரிப்பாளர்கள் இந்த “மாஸ் ஓப்பனிங்” என்னும் ஏமாற்று வேலையால். "அதெல்லாம் இல்லை நல்ல படங்களை மக்கள் இனம் கண்டுகொண்டு வெற்றியைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஓட்டை படங்களை ஓட விடுவதே இல்லை" என்றால் பில்லா II, சகுனி இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றது எப்படி? பதில் சொல்லுங்கள். சாட்டை, சுந்தரபாண்டியன் போன்ற கம்பேரிடிவ்லி நல்ல படங்கள் என்ன அவ்வளவு லாபமா சம்பாத்தித்து விட்டது? இல்லை நன்றாக இருக்கறது என்று தற்போது ஊரே கொண்டாடிக்கொண்டிருக்கும் "பீட்ஸா" பில்லா II, சகுனி வசூலைத் தாண்டுமா? பில்லாவிற்கு 2500 தியேட்டர்கள், சகுனிக்கு 2600 தியேட்டர்கள், பீட்ஸாவிற்கு எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும்?
 
மாஸ் ஓப்பனிங் - தரத்தைக் கெடுத்த கார்ப்பரேட் சனியன் இது தான். இதற்கு வித்திட்டது, வேறு யார்? நம் தலைவர் தான். தமிழ் சினிமாவின் தலையெழுத்தை சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். "சிவாஜி" வெளியான முதல் வாரத்திலேயே போட்ட கலெக்ஷன் எடுத்தது, படமும் பிளாக் பஸ்டர் அந்தர்ஸ்த்தை பெற்றது. அது, இது வென்று சூட்டோடு சூட்டாக "எந்திரன்" வரை ரெடி ஆனார்கள், இதுவரை கோடம்பாக்கம் காணாத பிரம்மாண்ட பட்ஜெட்டில். இத்தனை வருடங்கள் தனது கனவு sci fi படத்தைப் பற்றி வெறுமனே பேசிக்கொண்டிருந்த ஷங்கருக்கு உடனடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. காரணம், அவர்களுக்கு தெரியும், புதிதாக பரவியிருந்த அந்த மாஸ் ஓப்பனிங் என்னும் பிரம்மாஸ்த்திரத்தின் மூலம் எவ்வளாவு கொட்டினாலும் அதை மொத்தமாக அள்ளி விடலாம் என்று. எல்லாம் வேகமாக நடந்தது, மிகவும் வேகமாக. 
 
அதீத பிரோமோக்கள் மூலம் மக்களை ஏமாற்றி, அளவிற்கதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, படம் பார்க்கும் எல்லாம் சூழ்நிலைகளையும் அழகாக ஏற்படுத்தித்தந்து, "இன்னும் நீ என் படத்த பாக்கலயா போக்கத்த பயலே, இதைவிட உனக்கென்ன வேற வேல" என்று ஒரு படத்திற்கு மினிமம் 6 சேனல்களில் 5 நிமிடத்திற்கு ஒரு விளம்பரத்தைக் கொடுத்து, நமது உச்சகட்ட டார்ச்சரில் தங்களது லாபத்தை அதிர்கரித்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய சினிமாகாரர்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் என்று எல்லோரையும் தான் சொல்கிறேன்.
 
இவர்களது நினைப்பு இப்பொழுது எப்படி இருக்கிறது? "படம் படு மட்டமாக இருந்தாலும் சரி, ஓப்பனிங், விளம்பரம் மூலம் நாம் சம்பாதித்து விடலாம்" வியாபரம் என்பது பணம் சம்பாதிக்கத்தான். கலைச்சேவை செய்ய இங்கு யாரையும் யாரும் வற்புறுத்தவில்லை. ஆனால் எதிலும் ஒரு வரைமுறை இருக்கிறது. மட்டமான படங்களை மக்களிடம் திணித்து அவர்களது பணத்தை பிடுங்குவதற்கு பெயர் "ஏமாற்றுதல்" தானே தவிர "வியாபார தந்திரம்" இல்லை.
 
இப்படி அனைவரும் முதல் நாளே பார்க்கும் அளவிற்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதால் திருட்டு வி.சி.டி பிரச்சனை குறைகிறது என்பது போன்ற வாதங்களால் சிரிப்பு தான் வருகிறது. அதைப் பற்றியும் விரிவாக எழுதிவைத்திருக்கிறேன். இப்போதைக்கு மாஸ் ரிலீஸ் மட்டும்.
 
5 வருடங்களுக்கு முன்பும் அதற்கும் முன்பு இருந்தது போல படங்களை லிமிடட் ரிலீஸ் மட்டுமே செய்ய வேண்டும். அல்லது டிக்கெட் விலையையாவது குறாய்க்க வேண்டும். முன்பிருந்ததை விட ரிலீசும் அதிகம், டிக்கெட் விலையும் அதிகம், ஆனால் தரம் மட்டும் மகாமட்டம் என்றால் நிச்சயம் அழிவு தான். இத்தனை தியேட்டர்கள் இருக்கிறது என்றால் நிச்சயம் படங்கள் அதிக நாட்கள் ஓட வேண்டுமே? முன்பிருந்ததைவிட இப்பொழுதெல்லாம் நிறைய படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகிறது. நிறைய தியேட்டர்கள் இருக்கிறது என்றால் நிச்சயம் எல்லா படங்களுக்கும் சரிவிகித தியேட்டர்கள் வேண்டாம், குறைந்தபட்ச தியேட்டர்களாவது தியேட்டர் கிடைக்காததானே வேண்டும்? எதுவுமே இங்கு நடைபெறவில்லையே. நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதால்தான் எந்திரன் போன்ற மெகாபட்ஜெட் படங்கள் எல்லாம் சாத்தியம் என்றால் சரி, சகுனி, முகமூடி, தாண்டவம், பில்லா II போன்ற படங்களுக்கெல்லாம் என்ன செலவு?  இதுவரை காணாத எதை காட்டிவிட்டார்கள் இந்தப் படங்களில் அட்லீஸ்ட் படத்தின் பட்ஜெட்டைக் கணக்கில் கொண்டாவது ரிலீஸாகும் தியேட்டர் எண்ணிக்கையை அரசு முடிவு செய்யலாமே? ஓவர் பில்டப் படத்தை ரிலீஸ் செய்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும் நல்ல படத்தை மொத்த மொத்தமாக ஏண் தூக்க வேண்டும்? இன்னமும் 2000 தியேட்டர்கள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டாலும் இந்த நிலைமை தான் இருக்கும்.

நல்ல படம் என்றால் அது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெற்றிப்படமாகவே அமையும். மக்கள் வெற்றியடையச் செய்வார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. அதைவிட்டுவிட்டு மொத்த மொத்தமாக ரிலீஸ் செய்துவிட்டு, மக்களை ஏமாற்றுவதெல்லாம் போங்காட்டம். சீக்கிரம் முழித்துக்கொண்டு பெரிய ஹீரோக்களின் கால்சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கும் கார்ப்பரேட் தயாரிப்பாளர்களை ஓடவிடவில்லை என்றால் மொத்தமாக கடையைக் கிளோஸ் பண்ணும் நாள் தூரத்தில் இல்லை என்று மட்டும் தான் அர்த்தம்.

அரசு நடவடிக்கை எடுத்து நடிகர்களின் சம்பளத்தை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவந்து, தியேட்டர் ரிலீஸ் எண்ணிக்கையை கண்காணித்து, டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து என்று இன்னும் எத்தனையோ செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் லஞ்சத்தில் ஊறிய நமது தாய்த்திரு தமிழ்நாட்டில் சாத்தியமா என்று தான் தெரியவில்லை!

You Might Also Like

24 comments

  1. எல்லாவற்றையும் போட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு, முடிவையும் சரியாக சொல்லி விட்டர்கள்... நல்லது... எல்லாம் பணம் செய்யும் மாயை...

    ReplyDelete
  2. பாஸ், உண்மையிலே மற்றும் ஒரு சிறந்த பதிவு உங்ககிட்ட இருந்து....
    உங்க ஆதங்கம் எனக்கு புரியுது...என்னோட சில கருத்து இதோ..
    ஒரு ரசிகனா நம்ம எப்பவுமே ஒரு படத்தோட வசூல் பத்தி கவலை பட கூடாது...படத்தோட கலக்ஷன் பத்தி படத்தோட producer மற்றும் distributor மட்டுமே கவலை பட்டா போதும்...
    அப்புறம் படம் நல்லா இருந்தா நாளு பேருக்கு recommend பண்ணலாம..நல்லா இல்லாட்டி அதே நாளு பேரு கிட்ட போகாதீங்கன்னு சொல்லலாம்...
    இந்த வருஷம் தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் மோசமான வருஷம் தான்..நிறைய படங்கள் சொதப்பிருச்சு...தோத்தது எல்லாமே நல்ல டைரக்டர்ஸ்....இந்த வருஷம் தோத்தவங்க எல்லாம் அடுத்த வருஷம் தீயா வேலை செஞ்சு விட்டதை பிடிச்சுருவாங்க...நம்பிக்கை.. :):) நல்ல படங்கள் வரும்.. :):)

    அப்புறம் தல...இந்த மாஸ் ரிலீஸ் மட்டும் இல்லாட்டி தமிழ் சினிமா இன்னும் நொடிஞ்சு போயிறும்..
    பழைய மாதிரி கம்மி தியேட்டர்ல் படங்கள் ரிலீஸ் ஆகிட்டு இருந்தா பாபா படத்துக்கு ரஜினி பணத்தை திருப்பி குடுத்த மாதிரி பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கும்....இப்ப வர படங்கள் கூட நின்னு போயிருக்கும்..சோ தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்க மாஸ் ஒபெனிங் கண்டிப்பா வேணும் தல..
    நீங்களே உங்க பழைய பதிவுல சொல்லி இருக்கீங்க..ஹாலிவுட்ல எல்லா படமும் 4000 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது...அதனால ஹாலிவுட் மார்க்கெட் கூட தமிழ் சினிமா மார்க்கெட் compare பண்ண கூடாது....இப்ப பாருங்க தமிழ் சினிமாவும் அதே மாதிரி நுல் பிடிச்சு 1500 தியேட்டர்ல மாஸ் ஒபெனிங் பண்ணி படத்தோட ரிசல்ட் தெரியதருக்கு முன்னாடி அடுத்த படத்துக்கான முதல்லை எடுத்துடுறாங்க.....
    ஆளவந்தான் படம் வரதுக்கு முன்னாடி கமல் தாணு கிட்ட மாஸ் ரிலீஸ் பண்ண சொன்னாரு..தாணு கேட்கல..கமல் அந்த படத்தோட ஹீரோ என்பதனாலே தாணு இப்ப அட்ரெஸ் இல்லாம போயிட்டாரு...

    அப்புறம் நீங்க சொல்லுற மாதிரி அரசாங்கம் நடிகர்களில் சம்பளத்தை, எல்லாம் வரைமுறை படுத்துவாங்கன்னு நம்ம எதிர்பார்க்க முடியாது...இது industry தல...இதுல அரசு தலையிடாது....
    அரசு பொது மக்களை பாதிக்கிற பிரச்சினையில மட்டும் தான் தலையிடும்... :):)
    அப்புறம் நானும் திருச்சியில காலேஜ் படிக்கிற காலத்துல 5 ரூபா டிக்கெட்டுக்கு சண்டை போட்டு டிக்கெட் எடுத்து படம் பார்த்த இருக்கேன்...ஆட்டோகிராப் நினைவுகள்....ஆனா நீங்க சொல்லுற மல்டிப்லெக்ஸ் எல்லாம் பெரிய பெரிய சிட்டிஸ் ல தான் வந்து இருக்கு..இன்னும் திருச்சி, தென்மாவட்டங்களில் 10 ரூபா டிக்கெட் எல்லாம் இருக்க தான் செய்யுது.. :):)

    கடைசியா, உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...தமிழ்மணம் வேலை செய்யுது...நீங்க ஒட்டு பட்டையை வைச்சுருங்க...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தல, விவாதம் ஆரம்பிச்சிருச்சு. இப்போ உங்க கருத்துக்களுக்கு என் பதிலைச் சொல்றேன் :-)

      படத்தோட வசூல் பத்தி நாம கவலைப்படக்கூடாது. வாஸ்தவம் தான். ஆனா தமிழ் படங்கள் இப்படித்தான்னு நம்ம மக்கள் (நம்மளையும் சேர்த்துதான்) நினைக்க ஆரம்பிச்சிட்டா, தமிழ் சினிமா இப்போதைய கன்னட சினிமா மாதிரி நாதியத்து போயிரும்! தங்க முட்டை வாத்த மொத்தமா கொன்ன கதை தான். ஓரேடியா மட்டமான படங்களா வெளியிட்டு, காச பாத்துட்டு, அப்புறம் ஒன்னுமே இல்லாம நிக்கனுமா தமிழ் சினிமா? நல்ல படங்கள் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, ஆனா கார்ப்பரேட் தயாரிப்பாளர்களால, அவங்களோட தலையீடால நம்பிக்கை குறைவாதான் இருக்கு. "முகமூடி" படத்துல தேவையில்லாத பல விஷயங்கள் இருந்ததுக்கு UTVயும் ஒரு காரணம்னு ஒரு பேச்சு இருக்கு. இது ஒரு சின்ன உதாரணம் தான்.

      உலகம் முழுவதும், 15 - 20 மொழிகள்ல 4000 தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆவதற்கும், தமிழில் தமிழ் நாட்டில் மட்டும் மினிமம் 1500 தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தல. நிறைய தியேட்டர்கள் இருக்கு, நல்ல விஷயம். நிறைய படங்கள் வருது, அது ரொம்ப நல்ல விஷயம். ஆனா எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளா கிடைக்குதா? மட்டமான படங்களுக்கு அதிக லாபம் கிடைத்துவிட்டு போகட்டும், நல்ல படங்களுக்கு சுமார் லாபமாவது கிடைக்கவேண்டாமா? அப்பொழுதானே அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் புதிய, நல்ல படங்களைத் தயாரிப்பார்கள்? உதாரணம்: அட்டக்கத்தி ஹிட் ஆனதால்தான் தயாரிப்பாளர் தைரியமாக பீட்ஸா தயாரித்தார், அதுவும் ஹிட்டானதால்தான் அடுத்து நளன் என்ற மற்றுமொரு நாளைய இயக்குனர் வெற்றியாளருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதுவே கார்ப்பரேட் கூட்டத்தில் அட்டக்கத்தி காணாமல் போயிருந்தால்?

      தல ஊர்ப்பக்கம் போகும் போதெல்லாம் தியேட்டர்களுக்கு விடாம போய்கிட்டு தான் இருக்கேன். போடில 3 தியேட்டர் இருக்கு. மீனாட்சி, வெற்றி, ஜீவன். மூணுலையும் மினிமம் டிக்கட் விலை 50ரூ. முதல் வாரத்தில் 100ரூ தாண்டி கூட விக்கிறாங்க. பெரிய படம் என்றால் முதல் மூணு நாள் கூட்டம் இருக்கு. அப்புறம் தியேட்டர்கள்லாம் ஈ ஆடிக்கிட்டு இருக்கு. டிக்கெட் விலைய குறைச்சாலும், படம் நல்லா இருந்தா தான மக்கள் வருவாங்க? கூடிய சீக்கிரம் மூணுல ஒரு தியேட்டர் மூடப்படலாம். லாபம் இருந்தாதன ஓட்ட முடியும். ஓட்டை படங்கள சிட்டில, மாஸ் ரிலீஸ் பண்ணி, ஏமாத்தி ஓட்டிருராங்க. கிராம்த்துல என்ன பண்ணுவாங்க பாவம்?

      //கடைசியா, உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...தமிழ்மணம் வேலை செய்யுது...நீங்க ஒட்டு பட்டையை வைச்சுருங்க...// சூப்பர் தல நீங்க. உதவிக்கு மிக்க நன்றி :-)

      Delete
  3. உங்க பதிவை படிக்கிறது என்றாலே எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி தான் நீங்க சின்னதாய் முடித்தால் தான் எனக்கு கஷ்டமாய் இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல... இந்த பதில அந்த பயலுக்கு நான் forward பண்றேன் ;-)

      Actually, என் பதிவுகளோட முதல் வாசகன் அந்த பய :-)

      Delete
  4. நமக்கு உங்களை போல எல்லாம் எனக்கு சினிமாவை பற்றி ஒன்னும் தெரியாது இப்பவெல்லாம் கதையை பார்த்து படம் எடுப்பது இல்லை மாஸ் ஹீரோ நடித்தால் போதும் இந்த லட்சினத்தில் இன்னும் சினிமா டிக்கெட் விலையை ஏற்ற வேண்டும்மாம் கமல் சொல்லுரார்...இந்த மாதிரி மொக்கை படங்கள் எப்போதும் வந்தது இல்லை தொடர் மொக்கைகள்...ஆரண்யகாண்டத்தை ரீரிலீஸ் செய்து இருந்தால் பெரிய ஹிட் ஆகியிருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அரண்ய காணட படத்தை ரீரிலீஸ் செய்வதில் என்ன தடை என்று தெரியவில்லை. லிமிடட் ரிலீஸ் செய்தால் கூட அமோக லாபம் கிடைக்கும். நிச்சயம் டிமாண்ட் இருக்கிறது. அவங்களுக்கு / அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ!

      Delete
  5. தமிழ்மணம் ஒட்டு பட்டை வைத்தால் பதிவை இணைக்க ஈஸியா இருக்கும்

    ReplyDelete
  6. இந்தத் தொடர் மீண்டும் உயிர்த்தெழுந்ததில் சந்தோஷம்!
    என்னைக் கேட்டால், இப்படித் தொடர் தோல்விகள் வித்தியாசமான நல்ல முயற்சிகளுக்கு ஆரம்பமாக அமையும் என்றே கூறுவேன்..
    இந்தியாவில் தியேட்டர் எண்ணிக்கைகள் பிரச்சனை என்றால் இங்கு தியேட்டர் நடத்துபவர்கள்தான் பிரச்சனையே.. எந்தப் படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்ங்கற தெளிவு பத்தாது!
    18 வயசு, திருத்தணி படங்கள் கூட ரிலீஸ் ஆவுது.. இன்னும் பீட்சாவைக் காணோம்!

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான முயற்சிகள் கவனிக்கப்படுகின்றன. 100 - 100 உண்மை. ஆனால் கவனிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சரியான வாய்ப்புகளும் தரப்பட வேண்டும். பீட்ஸாவிற்கு ஆரம்பத்தில் 100 திரையரங்குகளும், பிறகு நன்றாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் 180 திரையரங்குகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக கேள்வி. இது பத்தாதே! தீபாவளி படங்கள் வந்தாலும் பீட்ஸா தூக்கப்படாது என்று பேட்டி தருகிறார்கள். ஆனால் நிலைமை என்ன என்று அன்று தான் தெரியும். 'துப்பாக்கி', 'போடா போடி'க்காக மொத்தமாக தூக்கியெறியப்படலாம். ஆச்சரியப்படுவதற்கில்லை.

      முன்பெல்லாம் குறைந்த அளவு திரையரங்குகள் இருக்கும் போது கூட தீபாவளிக்கு குறைந்தது 3, 4 படங்களாவது ரிலீஸ் ஆகும். இப்போது இத்தனை தியேட்டர்கள் இருந்தும் 1, 2 தான் ரிலீஸ் ஆகுது. எல்லா தியேட்டர்ளையும் ஒரே படம். லீவு நாட்கள்ல மக்களுக்கும் வேற வழி இல்ல. நல்லா இருக்கோ இல்லையோ எல்லோரும் இந்த படத்துக்கு தான் போவாங்க. ஹிட் ஆகும். ஹும்ம்ம்...

      Delete
  7. நீங்க டைப் அடிக்கிறதுக்கு எதுவும் மென்பொருள் வெச்சிருக்கீங்களா ? எழுத்துப் பிழை இல்லாம இவ்வளவு பெருசா அதுவும் உங்களோட தின அலுவல்களுக்கு நடுவுல எழுதினது ரொம்ப பெரிய விஷயம்... எனிவே நான் பதிவ இதுக்கு மேல தான் படிக்க போகணும்... :)

    ReplyDelete
    Replies
    1. அழகி (www.azhagi.com) மூலம் தமிழ் டைப் அடிக்கிறேன். Alt+Tab உதவி இருக்கும் வரை எங்கும் உட்கார்ந்து பதிவு எழுதலாம் :-)

      Delete
  8. ஒரு வழியா முழு பதிவையும் படிச்சி முடிச்சாச்சி...

    நீங்க சொன்னது உண்மை தான்... நீங்கள் குறிப்பிட்ட நண்பன், வேட்டை, மரினா, அரவான், 3, சகுனி, பில்லா II, முகமூடி, தாண்டவம், மற்றும் மாற்றான், இவற்றில் நான் திரைஅரங்கிற்க்கு சென்று பார்த்தது வெறும் 3 படங்களே... மீதி அனைத்தையும் வாய் வழி விமர்சனத்தை கேட்டு தவிர்த்து விட்டேன்...

    ஆகவே மக்கள் இன்னும் சிறிது காலத்தில் விழிப்படைவார்கள்... அது வரை இவர்களது ஏமாற்று வேலை தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மக்கள் விழிப்படைவதை விட, இவர்கள் திருந்துவது தான் முக்கியமான விஷயம். நல்ல படம், நியாயமான டிக்கெட் விலையில் வந்தால் மக்கள் என்ன பார்க்க மாட்டேன் என்றா சொல்லப்போகிறார்கள்?

      Delete
  9. அண்ணே சூப்பர் நல்ல சொன்னிங்க ஆனா என்ன பன்றது நம்ம இந்தியால காசு உள்ளவன் என்ன வேணாலும் பண்ணலாம் யாரும் ஏதும் கேக்க மாட்டங்க அவன் எப்பவும் போல படத்த எடுப்பான் இவன் நடிப்பான் எல்லாம் சன் சேர்ந்து ரிலிஸ் பண்ணுவாங்க நாம பார்த்து தொலையனும்

    ReplyDelete
    Replies
    1. தியேட்டர் புறக்கணிப்பு போராட்டம் போல எதையாவது நடத்தலாமா? எப்படி ஐடியா?

      Delete
  10. நல்ல பதிவு உங்கள் பதிவு தொடரட்டும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி Hemanth. உங்களது பார்வையையும் எழுதியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

      Delete
  11. என்னைப் பொறுத்தவரை தமிழில் படங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது மார்கெட்டிங் தான் தல.. எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வந்தது கூடத் தெரியாமல் பெட்டிக்கு திரும்பிவிட்டன.. இப்போ அண்ணன் உ.த இன் பதிவுகள் பார்த்துவிட்டு நல்ல படம் என்றால் மட்டும் டிவிடி வாங்கிப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

    இந்த வருடம் விமர்சனங்கள் வாசித்ததால், நிறைய மாஸ் ரிலீஸ் படங்கள் பார்க்கவில்லை.. சகுனி, பில்லா 2 எல்லாம் ஸ்கிப் பண்ணியாச்சு. நம்மாளுக படத்தை நம்பி தியேட்டர் பக்கம் தலை வைக்க முடியல.. கொடுக்கிற காசுக்கு ஏற்ற ரிட்டர்ன் இல்லயே? படம் முடிஞ்ச கையோட, அய்யோ காசு போச்சேன்னு புராணம் பாடிட்டு வர வேண்டியதாயிருக்கு. இதுக்கு பேசாம 50ரூவாய்க்கு ஒரு டிவிடி வாங்கினா, அதுலயே ஒரு ஐந்து படம் பார்த்துக்கலாம். தோ..9ம் திகதி நம்மூருல துப்பாக்கி ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்.. போறதா இல்லையான்னு ஒரு யோசனைல இருக்கேன். :(

    போதாக்குறைக்கு வரும் தமிழ்ப்படங்களும் ஒரு டெம்ப்ளேட் பார்முலாவை சுற்றியே நகர்வதால் பார்க்கவும் சலிப்பு வருகிறது. அப்படிப் பார்க்கும்போது, வரும் ஓரளவு நல்ல படங்களும் எங்கிருந்தாவது சுட்டதாக இருக்கிறது.. இன்னும் கொஞ்ச நாள் போனால், எங்கிருந்தாவது சுட்டாச்சு நல்ல படம் ஒண்ணு கொடுத்தாப் போதும் என்ற நிலைக்கு தமிழ் ரசிகன் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை..

    ReplyDelete
  12. படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது மார்கெட்டிங் என்றால் பில்லா II, சகுனி போன்ற படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே தல :-) தரம் தான் முதலில்.

    மார்க்கெட்டிங்கை ஒரு கட்டுபாடிற்குள் கொண்டுவர வேண்டும். சினிமா விளம்பரங்கள் குவாட்டர் அளவிற்கு தான் செய்தித்தாள்களில் வர வேண்டும் என்று சட்டம் இருப்பதாக இயக்குனர் கரு. பழனியப்பன் ஒரு விழாவில் சொன்னார். அதை மீறிய UTVயை பப்ளிக்காக எதிர்த்தார். செய்திதாள்களில் முடியும் என்றால், ஏன் டிவி, ரேடியோவில் முடியாது? ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் "வெற்றிநடை போடுகிறது" வரக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதை தடுக்க வேண்டும். Atleast குறைக்கவாவது வேண்டும். சென்சார் போர்டு போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஒரு படம் அதன் பட்ஜெட்டைப் பொறுத்து இத்தனை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்றும், நடிகர்களின் சம்பளம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றும்... செய்ய வேண்டும் என்று நினைத்தால் எவ்வளவோ செய்யலாம். சினிமா மற்றுமொரு பணம் பண்ணும் தொழில் என்கிற ரீதியில் மட்டுமே தொடர்ந்தால், கல்வித்துறை போல் சினிமாத்துறையும் நாசமாய் போய்விடும்...

    வாய்ப்புகள் இருந்தால் நல்ல படங்கள் நிச்சயம் வரும். சினிமா மேல் காதல் உள்ள எத்தனையோ பேர், கையில் கதையுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். பணம் மட்டும் தான் இல்லை. கொஞ்சம் உதவியும், வாய்ப்பும் அமைந்தால் திரும்ப 80களின் பொற்காலம் வரும். நம்புவோம்...

    ReplyDelete
  13. நண்பரே ,
    கொஞ்சம் தாமதம் தான்,ஆனால் என் கருத்தை எழுத நேரமில்லை.இப்போது தான் கிடைத்தது.சரி விஷயத்திற்கு வருவோம்.முதலில் என் தாய் வழி மாமா சொந்தமாக் இரு திரை அரங்கை வைத்துள்ளர்கள்.அதனால் சினிமா வியாபாரம் பற்றி ஓரளவு அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.நான் அறிந்தவரையில் இன்றைய நிலை :
    1. 2000ஆம் ஆண்டுக்கு பின் ,அதாவது டிவி ஆக்கிரமித்த பின் பெண்கள் சுத்தமாக தியேட்டர் வருவது நின்று போனது. முன்பு ஒரு படம் பெண்கள் வரவேற்ப்பு உள்ளது என்றால் அதன் வசூலே தனி.அந்த நேரத்தில் டிக்கெட் நகரங்களில் சராசரியாக ஒரு டிக்கெட் விலை 25-30 இருக்கும்.அதன் பின் படம் பார்க்க வருபவர்கள் இளைஞர்கள் 13-35 வயது வரை அதிகமாக வருகிறார்கள்.இன்று இவர்களை நம்பியே சினிமா உள்ளது.இவர்கள் எந்த விலைக்கும் படம் பார்க்க ரெடி.ஆகவே அவர்களை குறிவைத்து டிக்கெட் விலை தாறுமாறாக ஏறிவிட்டது.இன்றைய நிலையில் டிக்கெட் விலைகள் குறைந்தாலும் மற்றவர்கள் படம் பார்க்க வருவார்களா என்பது கேள்வி குறியே? மேலும் அதை நடைமுறையில் செயல் படுத்தி பார்க்கும் (சில மாதங்கள் டிக்கெட் குறைத்தால் கூட்டம் வருதா என? )அவகாசத்தை கூட திரை அரங்கங்கள் தர தயார் இல்லை.கேட்டால் மின் கட்டணம் ,வேலை ஆட்கள் கிடைக்காமல் அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை பனி அமர்த்தி இருக்கிறார்கள்,பட வியாபார தொகை கடும் உயர்வு என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகிறார்கள்.
    2. படங்களின் தரமும் அப்படி உள்ளது.இந்த ஆண்டு எனக்கு முழு திருப்தி தந்த படங்கள் இரெண்டே இரண்டு .தடையற தாக்க ,பீசா .மற்ற படங்கள் எல்லாம் பார்த்த பணம் வீண் தான்.ஆனால் பிசா மட்டுமே வசூல் அடைந்துள்ளது.
    3.இயக்குனர்கள் ,நடிகர்கள் தங்கள் படங்களில் கவனம் செலுத்த வேண்டும்.இயக்குனர்கள் வருஷத்திற்கு ஒரு படம் எடுக்கணும் என்று நினைக்காமல் ,நேரம் எடுத்து ஸ்க்ரிப்டில் முழு கவனம் செலுத்த வேண்டும்.நடிகர்கள் ஆண்டுக்கு 2 , 3 படம் நடிக்கணும் என்று எண்ணாமல் ஒவ்வொரு படத்திற்கும் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்.இப்போது சூர்யா மட்டுமே அதை ஓரளவு சரியாக செய்து வருகிறார்.அதுவும் சில படங்களாக சரியில்லை .
    4. நீங்கள் சொல்வது போல் அரசு இதில் தலை இட்டு நடிகர்கள் ,நடிகைகள் ,இயக்குனர்கள்,இசை அமைப்பாளர்கள் சம்பளங்களை கட்டு படுத்த வேண்டும்.ஆனால் இதை நம் அரசுகள் 100% சத்தியமாக செய்யாது.
    5. சென்னை போன்ற நகரங்களில் multiplex காலம் தள்ளுவது தனி கதை.on line ticket booking ,with snaks (rs.200 each) ,parking ( rs.120 for first 4 hrs, rs .70 for next hr ) என்று பணத்தை கறந்து விடுகிறார்கள்.200 க்கும் குறைவான இருக்கைகள்,இவர்கள் குறியே வார இறுதி நாட்கள்.மனைவி ,குடும்பத்தோடு ,நண்பர்களோடு என்று பணத்தை பற்றி கவலை படாமல் எதனை மொக்கை படம் பார்த்தாலும் அடுத்த பெரிய படம் வந்தால் நிச்சயம் போவார்கள்.அவர்களை பொறுத்தவரை அது ஒரு வார இறுதி கொண்டாட்டம்.அவ்வளவுதான்.படத்தின் தரம் முக்கியமில்லை.
    6.ஆரண்ய காண்டம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.நான் படம் வந்த 4 காம் நாள் பார்த்து விட்டேன்.படம் எனக்கு பிடித்தது.நிறைய நண்பர்களிடம் சொல்லி பாக்க சொன்னேன்.வித்தியசமான படம் விரும்புவர்கிடம் மட்டுமே படம் பிடித்தது.மற்றவர்கள் படம் பிடிக்கவில்லை என்றே கேள்வி பட்டேன்.நான் பார்த்த போதே நிறைய பேர் படம் முடிந்த போது திட்டி கொண்டே போனார்கள்.இன்று மீண்டும் ரிலீஸ் செய்தாலூடுமா என்பது கேள்விதான்? (நீங்கள் சொலியபடி மொக்கை காரணங்கள் தான் இருந்தாலும் நீங்களே சொல்லுங்கள் ப்ளாக் படிப்பவர்கள் எதனை பேர்\? )

    மொத்தத்தில் இன்றைய சினிமா வெறியர்களுக்காக மட்டுமே உள்ளது ரசிகர்கள் கேள்விப்பட்டு பொறுமையாய் பார்க்கும் வரை எங்களால் காக்க முடியாது.வெள்ளி கிழமை போட்டோமா ? சனி ,ஞாயிறு காசு பார்த்தோமா ? மிச்ச சொச்ச உள்ள வெறியங்கள் அடுத்த 3,4 நாள் பார்த்தல் போதும் அடுத்த வெள்ளி அடுத்த படம் ,அடுத்த கொள்ளை- இது இன்றைய சினிமாவின் முகமாக உள்ளது.

    நண்பரே உங்கள் கருத்தில் நான் மாறி இருக்கலாம் ,இருவருக்குமே ஒரே எண்ணம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அருமை தல, அருமை... இதைத்தான் நண்பர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். வெறும் ரசிகனாக நான் என் கருத்துக்களை முன் வைக்கும் போது, விபரம் தெரிந்த நீங்கள் உங்களது கருத்துக்களையும் சொல்லும் போது தான் இந்த முயற்சி நிறைவு பெறுகிறது... மிக்க மகிழ்ச்சி.

      சினிமா வெறியர்களுக்காக மட்டுமே வந்து கொண்டிருக்கிறது, மல்டிபிள்க்ஸில் எந்த கன்றாவிப் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் சென்று அதைப் பார்த்தால் தான் வீகெண்ட் நிறைவு ஆகும் என்று நினைக்கும் குடும்பங்கள் - 100% உண்மை.

      நிலைமை மாற வேண்டும். இயக்குனர்கள் அல்லது நடிகர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிஸ்தர்கள் அல்லது தியேட்டர் ஓனர்கள் அல்லது நம் அரசு அல்லது சினிமா வெறியர்களாகிய என்னைப் போன்றவர்கள், யாராவது ஒருவராவது மாற வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமா அழிந்து விடுவது உறுதி.

      பீட்ஸாவிற்கு 100 தியேட்டர்கள் தான் முதலில் கொடுத்தார்கள். ஆனால் SKYFALLக்கு 300 தியேட்டர்கள். சின்ன தமிழ் படங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை விநியோகிஸ்தர்களுக்கு. ஹிந்தியும் இப்பொழுது மட்டமாகத்தான் இருக்கிறது. எனவே இப்படியே போனால் ஹாலிவுட் தமிழ் சினிமாவை தமிழகத்திலேயே விழுங்கிவிடும் :-(

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...