என் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்...

1:25:00 PM


போன பதிவில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சில வகைப் படங்கள் (genre) / கதைகளைப் பற்றி எழுதியிருந்தேன்.

தமிழ் சினிமா விடாமல் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் genreகளை பற்றி குறிப்பிட்டு சொல்வது மட்டும் எனது நோக்கம் அல்ல. தமிழ் சினிமா இதுவரை தொடாத அல்லது அதிகம் தொட்டிராத இன்னும் எத்தனையோ இருக்கிறது. அவ்வபோது சில வித்தியசமான, புதிய முயற்சிகள் தலைகாட்டினாலும், ஒன்று அவை பெரிதாக கவனிக்கப்படுவதில்லை அல்லது அவை சரியான முறையில் எடுக்கப்படுவதில்லை. சமீபத்திய உதாரணங்கள்: 1) ஆயிரத்தில் ஒருவன் – fantasy. என்னைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்களுள் ஒன்று. 2) நாணயம் / சிந்தனை செய் – வங்கிக்கொள்ளை, 3) ஆரண்ய காண்டம் - ஒரு நாளில் நடக்கும் கேங்ஸ்டர் கதை, 4) மதுபானக்கடை / 5) மாலை பொழுதின் மயக்கத்திலே - முறையே ஒயின் ஷாப் / காஃபி ஷாப் ஒன்றில் ஒரு நாளில் நடக்கும் கதை. 6) அம்புலி 3D - ஹாலிவுட்டிற்கு இணையான அருமையான Stereoscopic 3D முயற்சி. 

சினிமா என்பது ஒரு வியாபாரம். வியாபாரம் என்றால் அதில் லாபம் இருக்க வேண்டும். சினிமா வியாபாரத்தில் மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அதைக் கொடுத்தால் தான் லாபம் பார்க்க முடியும். 'மக்கள் கமர்சியல் படங்களையே விரும்புகிறார்கள். அதனால் அதையே கொடுக்கிறோம்' என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். வாஸ்தவம் தான். 2012 ஆம் ஆண்டு இதுவரை வெளியாகியுள்ள மொத்த தமிழ் படங்கள் முகமூடியுடன் சேர்த்து 100. கடந்த 8 மாதங்களில் வந்த 100 படங்களில் “ப்ளாக் பஸ்டர் ஹிட்” ( = தயாரிப்பாளருக்கு லாபம் + பார்த்த ரசிகர்களுக்கும் திருப்தி) என்று சொல்லக்கூடிய படங்கள் எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்று தான். ஒரு கல் ஒரு கண்ணாடி. வெறும் “லாபம்” என்று மட்டும் பார்த்தால் முதல் இடத்தில் பில்லா 2, இரண்டாம் இடத்தில் சகுனி, மூன்றாவதாக OK OK (“நான் ஈ” படத்தை இங்கு சேர்க்க விரும்பவில்லை) 100 வருட பாரம்பரியமுள்ள, உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்புத் தளமான கோடம்பாக்கத்தின் இந்த ஆண்டு ரெக்கார்டுகள் இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. இவை எல்லாம் தான் மக்கள் விரும்பி கேட்டு, அதனாலேயே எடுத்து வெளியிடப்பட்ட கமர்சியல் படங்களா? அல்லது இவ்வளவு தான் ரசிகர்களாகிய நமது சினிமா ரசனையா? இவை தான் நல்ல படங்களா? இல்லை!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் சரி, இயக்குனர்களும் சரி, சுதாரித்து எழ வேண்டிய சரியான தருணம் இதுவே. இந்த சந்தர்பத்தை விட்டு விட்டால் தமிழ் சினிமா ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களுக்கு தங்களது ரசிகர்களை தாரை வார்த்து கொடுக்க வேண்டிய நிலை வந்து விடும். கன்னட சினிமாவின் நிலை இன்று இது தான். இன்றைய தேதிக்கு 9 பழைய படங்கள் ரீமேக் செய்யப்படப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிற மொழி ரீமேக் படங்கள் எத்தனை இருக்கிறதோ, தெரியவில்லை. அந்த அளவிற்கா கதைப் பஞ்சம்? அந்த அளவிற்கா சரக்கு தீர்ந்து போய் சும்மா வெறுமனே பாவலா காட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்?

வெறும் புலம்பலோடு மட்டும் நிறுத்திவிடாமல், தமிழ் சினிமா இதுவரை தொட்டிராத, ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற சில genreகளை இங்கு கொடுக்க விரும்புகிறேன். இந்த genreகளில் படங்கள் வருவதில்லை என்ற ஏக்கம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்கள் தங்களது “ஏக்கங்களையும்” தாராளமாகப் பகிரலாம். 

நான் தினம் தினம் பார்த்து, பேசி, கேட்டு, ரசித்து மகிழும் தமிழ் சினிமாவிற்காக என்னால் ஆன சிறு உதவி இந்தப் பதிவு.  உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன். மேலும் ஆங்கில மற்றும் பிற மொழிப் படங்களோடு ஒப்பிட்டு தமிழ் சினிமாவை மட்டம் தட்டுவது இந்தப் பதிவின்  நோக்கம் அல்ல என்பதை சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

History

தமிழ், தமிழனுக்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் மூத்தகுடி நாம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நமது மன்னர்கள் செய்த சாகசங்களுக்கும் எல்லையே இல்லை. குமரிக்கண்டத்தையே கட்டி ஆண்டவர்கள் நம்மவர்கள். இன்று குமரிக்கண்டமும் இல்லை, அந்த மாமன்னர்களும் இல்லை. வரலாற்று ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் சில தகவலகளைக் கோர்த்து ஒரு புனைவுக்கதையை அருமையான திரைக்கதையின் துணையோடு திரையில் கொண்டு வரமுடியும். அந்த தேடல் நமது இயக்குனர்களுக்கு இருக்க வேண்டும். ஒரு இயக்குனர் என்பவர் முதலில் நல்ல கதை சொல்லியாக இருக்க வேண்டும். பிறகு ஒரு கிரியேட்டராக உருமாற வேண்டும். மற்றதெல்லாம் பிறகு தான். கதை சொல்வதற்கு வரலாறை விட்டால் வேறு நல்ல ஏரியா இருக்க முடியுமா? “இப்பபடித்தான் இருந்திருப்பார்கள்” என்ற கற்பனையே அருமையான கதையைகளைக் கொடுக்குமே!

சினிமா தொழில்நுட்ப ரீதியாக பெரிய வளர்ச்சி அடையாத அன்றைய காலகட்டங்களில் கூட வரலாற்றுப்படங்கள் தான் அதிகம் வந்துகொண்டிருந்தது. ஆனால் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனோடு வரலாற்றுப் பின்னணியில் படமெடுப்பது நின்றுவிட்டது (புலிகேசியை இந்த லிஸ்டில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை) சந்திரலேகாவில் ஆரம்பித்து வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ராஜராஜசோழன் போன்ற படங்களை அப்பொழுதே அவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கலாம் என்றால் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப உதவியால் நிச்சயம் அசத்திவிடலாம். தமிழகத்தின் மாமன்னர்களான கரிகால சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், நரசிம்மவர்மன் ஆகியோர் தங்களது வாழ்நாளில் தோல்வியையே சந்தித்ததில்லை என்கிறது வரலாறு. அவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் இல்லவே இல்லை. நாம் விட்டால் நிச்சயம் ஒரு நாள் ஹாலிவுட்காரன் அவர்களது வரலாறை படமாக எடுப்பான். Genghis Khan, Alexander, தாய்லாந்தின் மாமன்னர் Naresuan, King Arthur போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படங்கள் எல்லாம் பிரம்மாண்டத்தின் உச்சம். பூலித்தேவன், ஓண்டிவீரன், மருது சகோதரர்கள் (சிவகங்கைச் சீமை), வேலு நாச்சியார்… இன்னும் எத்தனையோ ஹீரோக்கள் இருக்கிறார்கள் நமது வரலாற்றில். போதிதர்மர் போல் யாரென்றே தெரியாதவர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ. தமிழில் மட்டும் இத்தனை பேர். இந்திய அளவில் யோசிக்கவே முடியவில்லை.

விக்ரமை வைத்து ‘கரிகாலன்’ என்ற படத்தைத் தொடங்கியதாத கேள்விப்பட்டோம். போஸ்டரெல்லாம் கூட வந்தது. தாடியுடன் விக்ரம் தோற்றமளித்தால் உடனே '300' போல் உள்ளது என்றெல்லாம்கூட எழுதினார்கள். ஆனால் படம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

மருதநாயகம்” – வரவே வராதா?

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்கிறோம் என்று இன்றைய தேதிக்கு 10 பேர் கிளம்பி விட்டார்கள். ஆனால் இன்னும் ஏன் ஒருவரும் ஒரு முடிவிற்கு வரவில்லை?. பொன்னியின் செல்வன் வேண்டாம். இன்னும் எத்தனையோ கதைகள் நம்மை ஆண்ட நம் மன்னர்கள், வெளிநாட்டவர்களைப் பற்றி இருக்கிறது. பட்ஜெட் மட்டும் தான் இந்த மாதிரியான பிரம்மாண்ட படங்கள் வராததற்குக் காரணம் என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது. தெலுங்கில் மஹதீரா வந்து அசத்தியது. ஹிந்தியின் Jodha Akbar, Ashoka பிரம்மாண்டத்தின் உச்சம்!

வரலாற்றுப் பின்னணியில் தமிழில் சமீபத்தில் வந்த படம் மதராஸபட்டினம். எடுத்துக்கொண்ட களம் சுதந்திரப் போராட்ட காலம். சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இயக்குனர் A L விஜய் காதலை கையில் எடுத்தார். தமிழ் சினிமாவில் “காதல்” தான் ஏகப்பட்ட பரிமாணங்களில் கொட்டிக்கிடக்கிறதே. இங்குமா? எந்தக் காதலை இனிமேல் புதிதாக கற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மூன்றாவது படிக்கும் பொடியன் சொல்கிறான், ‘C செக்ஷனில் படிக்கும் அம்ரித்தாவை நான் காதலிக்கிறேன்’ என்று. 1947 – வெள்ளையர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை மொத்தமாகப் பிழிந்து, சக்கையை மட்டும் விட்டுவைத்திருந்த சமயம். 1857 ஆம் ஆண்டிலிருந்தே, துதந்திரம் வேண்டி போராட்டங்கள் தொடங்கப்பட்டு ஆங்கிலேயருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. போதாத குறைக்கு இரண்டாம் உலகப் போரில் தோற்றதனால், இங்கிலாந்தில் பொருளாதார வீழ்ச்சி வேறு. தங்களது நாட்டையே காப்பாற்ற முடியாத நிலையில், எங்கிருந்து இந்தியாவை மேயிப்பது என்று ஆங்கிலேயர்கள் ஒரு வழியாக நமக்கு சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்ட காலகட்டம் (இவை எல்லாம் மதராஸபட்டினம் படத்தில் ஒரே ஒரு வசனமாக மட்டும் வரும்) 1947 ல் சுந்தந்திரம் மட்டுமா வந்தது? பிரிவினை என்ற பெயரில் என்னென்ன கொடுமைகள் நடந்தது. Direct Action Day - அப்படியென்றால் இன்றைய தலைமுறையினருக்கு என்னவென்று கூடத் தெரியாது. நேதாஜியின் INA படை தில்லியை அதிரடியாகத் தாக்கியதால் நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகளாக தாங்கள் ஆண்டு வந்த தேசத்திடம் ஆயுத பலத்தால் தோற்றதாக வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் காந்தியிடம் சென்று அவரது அஹிம்சா போராட்டத்திற்கு இணங்கி விடுதலையளிப்பதாக முடிவு செய்தார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறதே. அதையெல்லாம் ஆய்வு செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, அற்புதமான ஒரு வரலாற்றுப் படமாக காட்டாமல் ஏன் அங்கும் காதலையே காட்டவேண்டும்? "காதல புதுசா சொல்லியிருக்கேன்" என்று யாராவது பேட்டி கொடுத்தாலே, எரிச்சல் தான் வருகிறது.

இந்த வகையில் "ஹேராம்" தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய படம் தான்.

இந்தியப் பிரிவினை சம்பந்தமாக பிற இந்திய மொழிகளில் மொத்தமாக 10 படங்கள் தான் வந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படி வந்த படங்களிலும் பிரதானமாக காதலே இருக்கிறது. காதலைத் தவிர எதுவுமே இல்லையா, தமிழகத்தில், இந்தியாவில்?

சுதந்திரப் போராட்டம் என்று மட்டுமல்ல. அதன் பிறகும் இன்னும் எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 1975 – 1977 எமர்ஜன்சி காலம் ஒரு உதாரணம். மலையாளம் (Yathra - 1985) மற்றும் இன்னும் சில மொழிகளில் படங்கள் வந்திருந்தாலும் அவை எல்லாம் எமர்ஜன்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் / ஹீரோ டைப் படங்கள் தான். Operation Blue Star சம்பந்தமாக ஒரு படம் கூட வரவில்லை. அப்படி என்றால் என்ன என்று கேட்கிறான் என் நண்பன். BBCயில் இந்த நிகழ்வைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள்.

எனக்கு தோன்றிய இரண்டு சம்பவங்களைச் சொல்லியிருக்கிறேன். இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்று சத்தியமாகத் தெரியவில்லை. ஏனென்றால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள் மேல் சொன்ன சம்பவங்களில் நேரடித் தொடர்பு உள்ளவர்கள் ஆயிற்றே!

War

மயிர்கூசும் போர்க்களக் காட்சிகளைக் கொண்ட படங்கள் தமிழில் மிகவும் குறைவு. உ.தா: ஆங்கிலத்தில் Saving Private Ryan (சமகாலம்), Lord of the Rings (புனைவு), Alexander (வரலாறு) போல. இன்னும் 300, Braveheart, Troy, Kingdomof Heaven என்று 100 படங்களுக்கு மேல் இருக்கிறது. கொரிய சினிமாவில் 71-Into the Fire, Brotherhood of War, The Front Line போன்ற படங்கள் இன்றும் எனது Top 10 War Movies களில் ஒன்று. பொன்னர் – சங்கர் கிளைமாக்ஸில் அப்படி ஒரு முயற்சியை செய்திருப்பார்கள். அதானாலேயே அந்தப் படம் எனக்கு பிடிக்கும் என்றேன். வரலாற்றுப் பின்னணியில் படம் எடுக்க ஆரம்பித்தாலே போதும், போர்க்களக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பிவிடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆங்கிலத்தில் 300 படம் முழுக்க முழுக்க ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. ஆனால் திரையில் காடு, மலை, கடல் என்று சகலத்திலும் சண்டை நடக்கும். இந்தியாவிலேயே அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. பிரம்மாண்டம் டிஜிட்டல் மயமாகி விட்டது. “நான் ஈ” அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தமிழில் டிஜிட்டலின் எதிர்காலம் தலைவரது கோச்சடையான் வந்தால் தெரிந்து விடும். மலை போல் இந்தப் படத்தை நான் நம்மி இருக்கிறேன்.

Military Operations

போலீஸ் படங்கள் ஆண்டுக்கு 10 வருகிறது. ஒவ்வொரு ஹீரோவும் போலீஸாக நடித்த பின் தான், தனது ஆக்ஷன் ஹீரோ இமேஜ் முழுமையடைகிறது என நினைக்கும் நிலை இங்கு (நல்ல வேளை தனுஷ் இன்னும் முயற்சிக்கவில்லை, தப்பித்தது தமிழகம்). ஆனால், ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள், ராணுவத்தினரின் சாகசங்கள், டெக்னிக்குகளைச் சொல்லும் படங்கள் இந்தியாவிலேயே மிகவும் குறைவு. ஹிந்தியல் எப்பொழுதாவது எட்டிப்பார்க்கிறது. Behind Enemy Lines, Hurt Locker, Platoon போன்ற ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் வர வேண்டும். தமிழில் பெரும்பாலும் ஹீரோ ராணுவத்திலிருந்து ரிட்டயர்ட் ஆகி, ஊருக்குள் வந்து அல்லல்படும் வகைப் படங்கள் தான் அதிகம். ரியலிஸ்டிக் ராணுவ படங்கள் மிகவும் குறைவு. மேஜர் ரவி “அரண்” என்ற ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அது மற்றுமொரு attempt என்ற வகையில் கூட சேர்க்க முடியாததாகத் தான் இருந்தது. ராணுவத்தினர் என்ன செய்கின்றனர் என்பதைக் காட்டாமல், தீவிரவாதிகள் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருக்கும் ஒரு பெண்ணை சீரழிப்பதை மட்டும் அரை மணி நேரம் விலாவரியாக காட்டினார்கள். வெறுப்பு தான் வந்தது. சமீபத்திய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தில் ஒரு எப்பிசோட் ராணுவம் சம்பந்தப்பட்டது. சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆனால் முழுமையாக ஒரு படம் அப்படி வந்ததில்லை. (ரோஜா?) பி.கு: கேப்டன் படங்களை நான் இந்த வகையில் சேர்க்க மாட்டேன்.

ஈழப்போர், அதிலிருந்த சூழ்ச்சி, அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்து மட்டும் 1000 படங்கள் War, Military Operations இரண்டிலும் எடுக்கலாம். ஆனால் அதற்கு இங்கு வாய்ப்பே இல்லை. அந்த சம்பவங்களின் பின்னணியில் ஒன்றிரண்டு படங்கள் தப்பித்தவறி வந்தாலும் அவை ஒன்று தரத்தில் குறைந்ததாக இருக்கிறது அல்லது ஆவணப்படத்தைப் போல இருக்கிறது. பெரும்பாலான படங்கள் வியாபாரத்தை மட்டுமே குறி வைத்து எடுக்கப்படுபவையாக இருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்லும் படம் இன்னும் வெளியாகவில்லை. இனியும் வெளியாகுமா என்பது சந்தேகமே.

Adopted Screenplay

அனைத்து கலைகளையும் உள்ளடக்கியது தான் சினிமா. சினிமாவின் ஆதாரமே கதை தான். அப்படிப் பார்த்தால் சினிமாவில் இலக்கியத்தின் பங்கு பெரிதாக இருக்க வேண்டும். ஆனால் நாவல்களை படமாக்குவது என்பதே தமிழ் சினிமாவில் அத்திபூத்தாற்போல் எப்பொழுதாவது தான் நடக்கிறது. அப்படி வரும் ஒன்று இரண்டும் பலவீனமான திரைக்கதையால் மண்ணைக் கவ்விவிடுகிறது. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்'. அருமையான நாவல். ஆனால் அதன் திரைவடிவம் சரியாக இல்லை. இன்னும் சில சுஜாதா  நாவல்களும் படமாகி தோற்ற கதை உண்டு. மகேந்திரன் புதுமைப்பித்தன் அவர்களது கதையை உதிரிப்பூக்களாக எடுத்தார். சுசீந்திரன் பாஸ்கர் சக்தி அவர்களது சிறுகதையை அழகர்சாமியின் குதிரை என்று எடுத்தார். ஆனால் உதிரிப்பூக்களின் அருகில் கூட வரமுடியாத நொண்டிக்குதிரையாகவே அழகர்சாமியின் குதிரை இருந்தது. எந்தக் கதை படமாக மாறினால் நன்றாக இருக்கும் என்கிற புரிதலும் மிக அவசியம் என்பதற்கு மேல் சொன்ன படங்கள் தான் சாட்சி.

மேலும் தமிழில் பொதுவாகவே சிறுகதைகளுக்கு இருக்கும் வரவேற்பு நாவல்களுக்கு இல்லை. சமீபத்திய சாகித்ய அகாடமி நாவலான காவல் கோட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சிறுகதை / பகுதி அரவானாக வந்தது. ஆனால் அதற்கும் இதே நிலை தான். திரைக்கதை தெளிவாக இல்லை (நாவலாசிரியரான திரு. சு.வெங்கடேசன் அவர்களது துணையிருந்தும்) படன் தோல்வி. ஒரு பக்க சிறுகதையோ அல்லது 1000 பக்க நாவலோ. எதுவாக இருந்தாலும் அதற்கு இரண்டு மணிநேரம் திரையில் வரும்படியான திரைக்கதையை அமைத்து எழுதுவதில் தான் ஒரு படைப்பாளியின் திறமை இருக்கிறது. ரசிகனைக் கட்டிப்போடும் மந்திரம் திரைக்கதை தான். அந்தத் திறமை நம் இயக்குனர்களுக்கு இல்லையா அல்லது திறமை இருந்தும் சரியான சூழல் இல்லையா என்று தெரியவில்லை. தங்களால் முடியவில்லை என்றால் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இன்றும் தமிழில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் திரைக்கதை எழுதுவதில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழ் சினிமா, இலக்கியவாதிகளை வசனம் எழுத மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். 

கே.வி.ஆனந்த் எழுத்தாளர்கள் ‘சுபா’வின் கதைகளையே படமாக எடுக்கிறார். வெறும் வசனத்திற்காக மட்டுமல்லாமல் திரைக்கதை அமைப்பதிலும் ‘சுபா’வின் பங்கு இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுத்தாளர்களை உடன் வைத்திருக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் ‘சுஜாதா’ அவர்களது பங்களிப்பை யாரும் மறக்க / மறுக்க முடியாது. அவர் வெறும் வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. தன் கதை அல்லாத படங்களுக்கும் அவர் திரைக்கதை எழுதியுள்ளார். மதன் வசனம் எழுதிய அன்பே சிவம் இன்றும் எனது பேவரிட். சினிமா ரசிகரான / தேர்ந்த விமர்சகரான அவர் திரைக்கதை எழுதினால் அருமையாக இருக்கும். இன்றைய நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலும் சினிமாவையும் நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். திரு.எஸ்.ரா ஒரு சிறந்த உதாரணம். அவரது சினிமா அறிவு எல்லை கடந்து இருக்கிறது (எஸ்.ரா,உலக சினிமா – படித்து, பிரம்மித்துக் கொண்டிருக்கிறேன்) இன்னும் நிறைய, நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தான் அவர்களை பயன்படுத்திக்கொள்வதில்லை. அதற்காக சினிமாவை ரசிக்கும் அனைத்து இலக்கியவாதிகளும் திரைக்கதைக்கு உதவலாம் என்று நான் சொல்லவில்லை. சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அது தெரிந்திருப்பதும் மிக அவசியம்.

ஆங்கிலத்தில் சக்கை போடு போட்ட அனைத்து நாவல்களும் / சிறுகதைகளும் காலம் காலமாக சினிமாவாக வந்து கொண்டிருக்கிறது. அன்றைய The Godfather ரில் இருந்து நேற்றைய The Hunger Games வரை. அவற்றில் பல மாபெரும் வெற்றியையும் கண்டிருக்கிறது. தேவதைக் கதைகளைக் கூட இவர்கள் விட்டுவைப்பதில்லை. தமிழ் மொழியில் அப்படி எத்தனையோ பொக்கிஷங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் பல படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன. இப்போதைய காலகட்டத்தில் என்று பார்த்தால் பாலா எடுத்த நான் கடவுள் ‘ஏழாம் உலகம்’ நாவலின் கதாப்பாத்திரங்களைக் கொண்டது. அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பரதேசி, ‘எரியும் தணல்’ என்ற நாவலின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. தமிழ் கதைகள் / நாவல்களை மட்டும் தான் எடுக்க வேண்டுமென்றில்லை. வேறு மொழி இலக்கியங்களையும் தமிழுக்கு ஏற்றவாரு எடுக்கலாம். பிரதாப் போத்தன் எடுத்த வெற்றிவிழா The Bourne Identity என்ற நாவலின் தழுவல். கௌதம் மேனன் எடுத்த பச்சைகிளி முத்துச்சரம் Derailed என்ற நாவலின் தழுவல். நம் இயக்குனர்கள் எல்லாவற்றையும் தாங்களே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என்று அனைத்தையும் தாங்களே செய்து Jack of all trades ஆக மட்டுமே இருக்கிறார்கள். But they are masters of none!


Robbery

பேங்க் கொள்ளை என்று மட்டுமல்ல, ஒரு சாதாரண வழிப்பறிக்கொள்ளையைக் கூட சுவாரஸ்யமான ப்ளாட்டாக மாற்ற முடியும். தமிழில் பெரும்பாலும் இந்த genreல் படங்கள் வருவதில்லை. ‘நாணயம்’ ஒரு நல்ல முயற்சி என்றாலும் சில ஆங்கிலப்படங்களின் சாயல் இருந்ததால் முழுமனதாக பாராட்ட முடியவில்லை. பாக்யராஜ் நடித்த ‘ருத்ரா’ படத்தின் ஆரம்ப பேங்க் கொள்ளைக் காட்சி, ‘சிந்தனை செய்’ படத்தின் முதல் பாதி போன்ற படங்கள் அதிகம் வர வேண்டும். இந்த மாதிரியான படங்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் புதுமாதிரியானதொரு அனுபவத்தைக் கொடுக்கும். அமெரிக்கா / ஐரோப்பாவில் மட்டுமா கொள்ளையர்கள் இருக்கிறார்கள்? நம்மூரிலும் தான் தினம் தினம் எங்காவது கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றை பின்புலமாக வைத்து எத்தனையோ படங்கள் எடுக்கலாம். திருடா திருடா, ஜென்டில்மேன் போன்ற எனக்கு நியாபகத்திற்கு வரும் படங்களும் ஹீரோவைப் போற்றும் படங்களாகத்தான் தெரிகிறது.

Sci Fi

எந்திரன் – சமீபத்திய சிறந்த உதாரணம். மக்களுக்கு புரியாது என்றே இவ்வகைப் படங்களை எடுக்காமலே வைத்திருக்கிறார்கள் நம்மாட்கள். ரோபோட்டிக்ஸ் மட்டும் தான் sci fi என்றில்லை. Back to the Future டைப் படங்களும் இதே genre தான். புகுந்து விளையாடலாம் இந்த ஏரியாவிலெல்லாம். ஆனந்த விகடனில் வந்த கி.மு.வில் சோமு என் நினைவிற்கு வருகிறது. அருமையான டைம் டிராவலிங் காமிக்ஸ் கதை இது. இப்பொழுது படமான வந்தால் பட்டையைக் கிளப்பும். இந்த காமிக்ஸின் எழுத்தாளர் நம் ‘புலிகேசி’ சிம்புதேவன். சிரிப்பு ராஜாவை படமாக எடுத்தார், வெற்றி பெற்றது. கடவுள் பூமிக்கு வந்து பக்கம் பக்கமான கிளாஸ் எடுப்பது போல் படம் எடுத்தார், ஊற்றிக்கொண்டது. கௌபாய் கதை எடுத்தார். உழைப்பு இருந்தும் ரசிகர்கள் அதனை ஏற்கவில்லை. களம் அந்நியமாக இருந்ததனால் இந்த நிலை. ஆனால் கி.மு வில் சோமு அப்படி அல்ல. 100% தமிழுக்கு ஏற்ற கதை. சோமு, வெங்கி, ருக்கு, சுப்புணி, கபாலி, பிச்சு, முல்லா தாத்தா - குழந்தைகளுக்கான சிறந்த கதை. இம்சை அரசனை ஒத்த சாதனை புரியும். யாராவது அவர் கிட்ட சொல்லுங்களேன், ப்ளீஸ்!

‘நியூ’ கூட Sci Fi தான். ஆனால் எஸ்.ஜே.சூர்யா எதையெதையோ வளைத்து வளைத்து காட்டினார் ஆனால் அறிவியலை மட்டும் காட்டவேயில்லை. இவர் நடித்த 'வியாபாரி' கூட Sci - Fi தான். குரங்கு கையில் மாலை!

Crime / Suspense / Investigation Thriller

யுத்தம் செய் ஒரு அருமையான க்ரைம் த்ரில்லர். சில படங்கள் அப்படி தமிழில் வந்திருந்தாலும் (சமீபத்திய உ.தா: தடையற தாக்க) அவை ரசிகர்களை முழுமையாக கவருவதில்லை. படத்தோடு ஒன்றிப்போய் சீட் நுணிக்கு வந்து, நகத்தைக் கடித்து கொண்டு ரசிகர்கள் இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பதில்லை. ‘அதே கண்கள்’, ‘மௌனம் சம்மதம்’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ போன்ற படங்கள் எல்லாம் இப்பொழுது வருவதே இல்லை.

அந்த நாள், வேட்டையாடு விளையாடு (தேவையில்லாத காதல் எப்பிசோட்கள் தவிர்த்து) போன்ற முழுமையான Investigation டைப் படங்களும் தமிழில் அதிகம் இல்லை.  

Prison

முழுக்க முழுக்க ஒரே இடத்தில் நடக்கும் கதைகள் ஆங்கிலத்தில் மிகவும் பிரபலம். அதில் முக்கியமாக சிறைச்சாலையில் நடக்கும் கதைகள். ஆங்கிலத்தில் சிறைசாலை என்ற பேக்டிராப்பில் காமெடி (The Longest Yard), டிராமா (Carandiru), மர்மம் (The Green Mile), ஆக்ஷன் (Undisputed, Death Race), புரட்சி (Cell 211), தப்பித்தல் (Shawshank Redemption, Papillon), ஏன் sci-fi கூட இருக்கிறது (The Experiment). தமிழில் “சிறைச்சாலை” என்ற ஒரே ஒரு படம் தான் நினைவிற்கு வருகிறது. அதுவும் மலையாள டப்பிங் தான். விருமாண்டியை இதில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை. மகாநதி படம் கூட பாதி சிறையில் தான் நடக்கும். ‘புழல்’ என்றொரு படம் சமீபத்தில் வெளியானதாக நியாபகம். படம் எப்படி என்று தெரியவில்லை. சிறைச்சாலையில் நடப்பதாக சில காட்சிகள் பல படங்களில் வந்தாலும் முழுக்க முழுக்க சிறைச்சாலையில் மட்டுமே நடக்கும் கதைகள், தமிழில் இல்லவே இல்லை (?)

Sports

முழுக்க முழுக்க ஏதாவது ஒரு விளையாட்டை மட்டுமே மையப்படுத்தி தமிழில் வரும் படங்கள் மிகவும் குறைவு. விளையாட்டா இல்லை தமிழகத்தில்? வெண்ணிலா கபடி குழு நல்ல வெற்றியடைந்ததும் அந்த மாதிரியான படங்கள் வரவில்லை. ஹிந்தியில் லகான், சக் தே இந்தியா என்று வந்திருக்கிறது. சென்னை 600018 காமெடி பட வகை தான். அதை இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

Treasure Hunt / Mystery:

“புதயலைத் தேடி” வகையாறா படங்கள் தமிழில் வருவதில்லை. ஆங்கிலத்தில் Indiana Jones, National Treasure, Mummy, Tomb Rider போன்ற படங்கள். காதலியை தேடி மட்டும் அமெரிக்கா வரை போகிறார்கள் நமது ஹீரோக்கள். அல்லது தீவிரவாதியைத் தேடி பார்டர் தாண்டி செல்கிறார்கள். ஆனால், புதையல்கள், அந்த காலத்து அதிசயங்கள் போன்றவற்றைத் தேடி யாரும் போவதில்லை. செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ அப்படி தமிழில் வந்த ஒரு உண்மையான முயற்சி. வேறு எந்த படமும் நினைவில் இல்லை. தெரிந்தால் சொல்லவும்.

Occult

பேய் படங்கள் கூட தமிழில் அதிகம் வருவதில்லை! தமிழ் மக்களுக்கு பேயைக்கண்டு பயம் விட்டுப் போய்விட்டதா? இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது? 

ஹும்ம்...

இன்னும் தமிழ் சினிமா தொடாத எத்தனையோ ஏரியாக்கள் இருக்கிறது. Alien படங்கள், Zombie படங்கள், Apocalypse / End of the World வகைப் படங்கள் (இது கிறிஸ்தவ மதம் சார்ந்த ஏரியா), Teen Comedy (சக்கரக்கட்டி இந்த வகை படம் என்று படமெடுத்தவர்கள் சொன்னார்கள்), Psycho Thrillers (நடுநிசி நாய்கள் ஒரு மோசமான உதாரணம்), Road Trip (பையா?), Vampires  என்று. ஆனால் இவையெல்லாம் தமிழுக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஆனால் திறமையான திரைக்கதையால் எதுவும் சாத்தியமே, சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை எதையும் காட்டி நம்பவைக்கவும் முடியும், கட்டிப்போடவும் முடியும். முயற்சி செய்து பார்த்தால் தானே ஒத்துவருமா வராதா என்று தெரியும். மாமூல் கேங்ஸ்டர் படங்களுக்கு மத்தியில் திடீரென்று “ஆரண்ய காண்டம்” வந்தது. இந்த மாதிரி மேக்கிங் எல்லாம் தமிழுக்கு சாத்தியம் என்று நாம் நினைத்திருப்போமா? ஆனால் வந்ததே!

Exam என்றொரு படம். அருமையான த்ரில்லர். மொத்தம் படமும் ஒரு பரிட்சை ஹாலுக்குள்ளேயே எடுக்கப்பட்டிருக்கும். படத்தில் கதையும் இருக்கும். இவ்வகைப் படங்களைத் திரைக்கதையின் உச்சம் எனலாம். இந்த மாதிரி படங்களெல்லாம் தமிழில் வரவே வராது போலிருக்கிறது. 

Fantasy

அதற்காக Alice in Wonderland போலவோ, நெருப்பைக் கக்கும் டிராகன்களை வைத்தோ படம் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை (ராமநாராயணன் - சட்டை போட்ட யானை - fantasy ?). 

ஹாலிவுட்டில் கிரேக்க கடவுள்களை வைத்து ஆண்டுக்கு இரண்டு படமாவது வருகிறது. இந்த வருடம் கூட Wrath of the Titans, Immortals என்று வந்தது. The Da Vinci Code, Antichrist, Camino போல் கடவுளை கேள்வி கேட்கும் படங்களும் வருகிறது. நாம் ஏன் நமது கடவுள்களை வைத்து இதுபோல் fantasy படங்களை எடுக்கக்கூடாது? உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் விட நமக்கு கடவுள்களும் அதிகம், அவர்கள் சார்ந்த கதைகளும் அதிகம். கற்பனைத்திறன் மட்டும் கொஞ்சம் இருந்தால் போதும், புகுந்து விளையாடலாம். Chota Bheem, Arjun – The Mighty Warrior என்று ஹிந்தியில் குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களாகத்தான் கடவுள்கள் கதாநாயகர்களாகிறார்கள். இல்லையென்றால் சாதாரண மனிதன் எமலோகம் செல்கிறான், எமனையும் மற்றவர்களையும் ஒரு கலக்கு கலக்குகிறான் என்ற அளவில் தான் நாம் கடவுள்களை பயன்படுத்திக்கொள்கிறோன். உ.தா: அதிசயபிறவி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன். ஆக எமனை மட்டும் நாம் வில்லனாகக் கூட போட்டுப் படம் எடுக்கலாம். மற்றவர்களை எதுவும் சொல்லக்கூடாது. எமன் மட்டும் தான் Bad பாய்ஸ் ஆ? 

நமது மகாபாரதக் கதைமாந்தர்களை மட்டும் வைத்தே எத்தனையோ படங்கள் எடுக்கலாம். அரிஜுனன், பீமன், அபிமன்யூ, பீஷ்மர், சகுனி (இந்த பெயருக்கு இருந்த மரியாதையே இப்போது போய்விட்டது) என்று. டிஜிட்டல் கர்ணன் நிஜமாகவே 150 நாட்கள் ஓடியிருந்தால், மகாபாரதக் கதைகளுக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்று தானே அர்த்தம். அம்மன் படங்கள் கூட இப்பொழுது வருவதில்லை (நல்லவேளை வருதில்லை என்று கூட சொல்லலாம்). சீடன் படத்தில் தனுஷ் முருகன். அப்படி தெய்வம் மனிதனாக வந்து உதவும் கதை தான் ஏகப்பட்டது இருக்கிறதே. தெய்வம் தெய்வமாகவே வரும் படங்கள் தான் வேண்டும்.

இந்தியாவில் கடவுள்களை கதாநாயகர்களாக போட்டு படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘The Immortals of Meluha’ (Shiva Trilogy) நாவலை படமாக எடுக்கலாம். சிவன் உள்ளிட்ட கடவுள்கள் மனிதர்களாக வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கதை போகிறது. தமிழில் எடுக்கிறோமோ இல்லையோ, ஹிந்தியில் நிச்சயம் இந்தக்கதையை படமாக எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. எடுத்தவுடன் காவிவேட்டிக்காரர்கள் அதை மடித்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்று தான் நினைக்கிறேன். Thor போல் கற்பனை உலகத்தின் கற்பனை தெய்வங்களையும் உருவாக்க முடியாது. கஷ்டகாலம்!

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கும் மனநிலை என்று வருகிறதோ அன்றுதான் இவ்வகைப் (பலவகை) படங்கள் சாத்தியம். “அதெப்படி, தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை”, “எப்படி இந்த மாதிரியான பொய்யான விஷயங்களை பரப்பலாம்” போன்ற லூசுத்தனமான விமர்சனங்கள் தான் தமிழ் சினிமா தோற்றுக்கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம். என்னவோ பின்னி மில்ஸில் இருபது பேரை ரத்தம் சொட்ட சொட்ட சொழட்டி சொழட்டி அடிப்பது மட்டும் நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு போல, அதை மட்டும் கேள்வியே கேட்காமல் ஒத்துக்கொள்கிறோம். வேறு டைப் படங்கள் வந்தால் உடனே கேள்வி கேட்கிறோம். லாஜிக் உதைக்கக்கூடாது என்று சொல்வதில் தவறே இல்லை. ஆனால் கற்பனையே இருக்கக்கூடாது என்பது தவறு. அப்படி ஒருவரது கற்பனைக்கு நாம் கேள்வியாகக் கேட்டு தோற்கடித்த படம் - ஆயிரத்தில் ஒருவன். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும். தங்களது முன்னாள் ஜனாதிபதியைம் அவரது பெயரைச் சொல்லியே, ஒரு வாம்பையர் வேட்டையனாக காட்டிப் படமெடுத்து வெளியிடுகிறார்கள் அமெரிக்கர்கள். நம்மால் அப்படி செய்ய முடியுமா?  

சரி, இவையெல்லாம் தவிர மற்றுமொரு முக்கியமான ஏரியா இருக்கிறது. அது தான் “Super Hero” ! தமிழுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் ஒத்துவருமா என்று ஒரு கேள்வி இருக்கிறது. தாராளமாக ஒத்துவரும்.

தொடரும்…

You Might Also Like

24 comments

  1. பிரமிக்க வைக்கிறது உங்களின் முயற்சி இந்த பதிவில்...படிக்க படிக்க இவ்ளோ விசயங்களா என்பது மலைக்க வைக்கிறது..

    ReplyDelete
  2. இவ்வளவு டீடெயில் கலெக்ட் பண்ணி பதிவா போட்டதற்கு மிக நன்றி. எங்கிருந்து இவ்வளவு தகவல்கள் சேகரித்திங்களோ தெரியாது. நிறைய புத்தகங்கள் பற்றியும் ஆராய்ந்திருக்கீங்க. சல்யூட் ...

    //சரி, இவையெல்லாம் தவிர மற்றுமொரு முக்கியமான ஏரியா இருக்கிறது. அது தான் “Super Hero” ! தமிழுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் ஒத்துவருமா என்று ஒரு கேள்வி இருக்கிறது. தாராளமாக ஒத்துவரும்.//

    அழகா சொல்லிட்டு வந்து பாயிண்ட்ல அடிச்சிங்க பாஸ். முகமூடி பற்றி எப்ப எழுதுவீங்க? உங்க வியுவையும் பார்க்க ஆவல்.


    இப்படியெல்லாம் படமெடுக்க முதல்ல சுவாரஸ்யமான திரைக்கதை வேணும். பிறகு அதையும் நம்பி களமிறங்கவைக்க நல்ல தயாரிப்பாளர் வேணும். எல்லாம் முடிஞ்சபின் கதைக்களம் அந்நியம்னு மக்கள் ஒதுக்கினாங்கன்னா அதுக்கப்புறம் புது முயற்சிகள் வராது. திரும்பவும் பழைய சாதம் தான் மிஞ்சும்.

    //Exam என்றொரு படம். அருமையான த்ரில்லர்.//
    Buried (2010), Devil (2010) படங்களையும் ட்ரை பண்ணிப் பாருங்க. Buried செமயா இருக்கும்.
    Devil ஒரே அறைக்குள் நடக்காது. ஆனாலும் லிஃப்டில் மாட்டிக்கொண்ட ஒரு கும்பல் பற்றிய படம்.

    ReplyDelete
    Replies
    1. பலவீனமான திரைக்கதை தான் ஒரு நல்ல முயற்சி தோற்கக் காரணம். சஉதா: மாலை பொழுதின் மயக்கத்திலே. ஒரு மழைக்கால மாலையில் காஃபி ஷாப் ஒன்றில் நடக்கும் கதை. அருமையான ஒளிப்பதிவு, புதுமையான இசை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று அனைத்தும் இருந்தும் ஒன்று மட்டும் மிஸ்ஸிங். அது திரைக்கதை. அசத்தியிருக்க வேண்டிய களம். சுத்தமாக சொதப்பிவிட்டார்கள். கேரக்டர்களை அருமையாக டிசைன் செய்துவிட்டு அதை திரையில் எக்ஸிகியூட் செய்யும் போது சொதப்பிவிட்டார். காஃபி ஷாப்பில் இருக்கும் 2 மணிநேரத்தில் ஹீரோவிற்கு ஹீரோயினைப் பார்த்து மூன்று முறை பாடல் பாடத் தோன்றுகிறது. கனவுப்பாடல் வேறு, வெவ்வேறு லொக்கேஷன்களில்...

      Buried, Devil இரண்டும் பார்த்திருக்கிறேன். Exam தான் சட்டென்று நினைவிற்கு வந்தது :-)

      தமிழுக்கு பொருந்தும் என்று தங்களுக்கு தோன்றும் படங்களையும் இங்கு குறிப்பிடவும்...

      Delete
  3. எனக்கும் உங்களை போலவே தமிழில் நல்ல படங்கள் வர வேண்டும் என்கிற ஆசை உள்ளது...ஆனால் அதற்கான சாத்தியங்கள் ரொம்பவே கம்மின்னு நினைக்கிறன்...சில நல்ல/வித்தியாசமான முயற்சிகளை மக்கள் நிராகரித்ததும் ஒரு காரணம்...
    நீங்க சொல்லுவது போல் டைரக்டர்கள் எல்லா வேலையும் தாங்களே பண்ண வேண்டும் என்று நினைகிறார்கள்...அந்த அந்த துறையில் இருக்கும் experts கொண்டு அந்த வேலையை செய்தால் அந்த வேலை இன்னும் சிறப்பாக வரும்....ஆனால் அதை செய்ய மாட்டார்கள்....
    மறுபடியும் உங்க உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்...Hats off..மச்சி... :):)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் சரிதான் ராஜ். நல்ல முயற்சி பல முறை சரியாக மக்களை ரீச் ஆவதில்லை. தற்போதிருக்கும் சூழலில் ரிலீஸ் ஆன முதல் வாரமே படம் ஓடினால் தான் உண்டு. அடுத்த வாரம் அடுத்த படம் ரிலீஸ் ஆகிவிடுகிறது. 'லேட் பிக்கப்' என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆக முதல் வாரம் கூட்டம் கூட வில்லை என்றால், அடுத்த வாரம் விமர்சனம், மௌத் டாக், விளம்பரம் ஆகியவற்றைப் பார்த்து விட்டு படம் பார்க்க ஆசைப்பட்டாலும், படம் இருக்காது. உதா.: ஆரண்ய காண்டம். படத்தின் முதல் வாரம் கூட்டமே இல்லை. பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று எழுதித் தள்ளினார்கள். அடுத்த வாரம் படம் பார்க்கலாம் என்றால் படத்தைத் தொக்கிவிட்டார்கள், அவன் இவன் படத்திற்காக. பல படங்கள் லேட் பிக்கப் ஆகியிருக்கிறது. 'சித்திரம் பேசுதடி' ஒரு சிறந்த உதாரணம். இப்பொழுதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பேயில்லை. என்ன செய்ய, சினிமாவும் அரசியலைப் போல் சில குறிப்பிட்டவர்கள் கையில் சிக்கிக்கொண்டு தள்ளாடுகிறது :-(

      // மறுபடியும் உங்க உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்...Hats off..மச்சி... :):) // Thanks மச்சி :-)

      Delete
  4. அருமையான அலசல்... ரொம்ப அழகா தெளிவா எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க... உங்கள் ஆதங்கம் தான் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனுக்கும் இருக்கு... தமிழ் சினிமா ரசிகனும் மெல்லச் சாவான் போல

    ReplyDelete
    Replies
    1. சினிமாவும் சாகாது, ரசிகனும் சாகமாட்டான், அப்படி விட்டுவிடுவோமா என்ன :-)

      Delete
  5. விரிவான அலசல்... பல உண்மைகள் பளிச்சிடுகிறது... இவ்வளவு ஆழ்ந்து, பல வகைகளாக பிரித்து, அப்பப்பா... பல தகவல்கள்... வியப்பாக இருக்கிறது... நன்றி...

    ReplyDelete
  6. எப்படி இப்படி ஒரு விஷயம் பற்றி எழுத யோசனை வந்தது? முதலில் நம் மக்கள் எந்த புதிய முயற்சியாய் இருந்தாலும் அதை ஆங்கில ,உலக படங்களாக இருந்தால் பெரும் வரவேற்ப்பு கொடுக்கிறார்கள்.நாம் எடுத்தால் ,இந்த அளவாவது சிறப்பாக எடுத்தார்களே என்று தட்டி கொடுக்காமல் குறை மட்டுமே சொல்லி காலி செய்து விடுகிறார்கள்.உதா.- ஆயிரத்தில் ஒருவன்.நல்ல படம் .வரலாற்று உண்மைகளை தவிர்த்து பார்த்தால் சிறப்பாக எடுக்க பட்ட படம்.ஆனால் அதை மட்டுமே சொல்லி காலி செய்து விட்டார்கள்.நாணயம் கூட சிறப்பான படம் தான்.ஒருவேளை ஆயிரத்தில் ஒருவன் மிக பெரிய வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிலர் வரலாற்று படம் எடுக்க துணிந்திருபார்கள்.
    மதராசபட்டினம் ஒரு நல்ல முயற்சி.அதிலும் காதல் மட்டுமே முன்னிலை படுத்த பட்டது.சுபாஷ் சந்திர போஸ் விஷயம் படித்து அதிர்ந்து போனேன்.
    எந்திரன் இந்திய படம் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.மிலிடரி சமந்தமாக மலையாளத்தில் சில படங்கள் வந்திருகின்றன.வரலாற்று படங்கள் தெலுங்கில் வருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன் வரை மலையாளத்தில் நாவல்கள் ,சிறுகதைகள் தொடர்ந்து படமாகபட்டு வந்தது.சில வருடங்களாக அங்கும் மசாலாதான்.கிரைம் ,சஸ்பென்ஸ் விசாரணை படங்கள் மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை வந்து கொண்டிருந்தது.( cbi டைரி , சிந்தாமணி கொல கேஸ் ) .விளையாட்டு சம்பந்தமாகவும் அங்கே படம் வருகிறது.ஒரு விதத்தில் மலையாளம் ,தெலுங்கு படங்கள் வரைட்டி காட்டுகின்றன.தமிழ் சினிமா இந்த காதலை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறது.
    நான் படித்த சிறந்த பதிவுகளில் ஒன்று இந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன விஷயம் 100/100 உண்மை. மலையாளத்தில் முன்பு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. நமது கமர்சியல் குப்பைகள் அங்கு வெறித்தனமாக ஓட, அவர்களும் அதுபோலவே எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

      நமது விடுதலைப் போராட்டம், சுதந்திரம் குறித்த வரலாறாக நமக்குச் சொல்லப்பட்டதில் அல்லது கற்பிக்கப்பட்டதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. எங்கும் சரியான ஆதாரம் இல்லை. அது தனி டிராக். இங்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று காந்தி போராட்டத்தில் குதித்ததும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது காக்கா உட்கார பனப்பழம் விழுந்த கதை போலத் தான் எனக்குத் தெரிகிறது. பாடப்புத்தகம் தாண்டி நிறைய புத்தகங்கள் நாம் படிக்க வேண்டும்.

      ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம். 'குப்பன்-சுப்பன் இருவருக்கும் சண்டை. அதில் குப்பன் தனது மகனை தொலைதூர தேசத்திற்கு அனுப்பிவைக்கிறான். அவனைத் தேடி சுப்பன் செல்கிறான்' என்று சொன்னால் நம்மால் கதையில் ஒன்ற முடியாது. அதனால் தான் செல்வா நமக்கு நன்கு தெரிந்த சோழனையும், பாண்டியனையும் உபயோகப்படுத்தினார். "ஒருவேளை இப்படி நடந்தால்" என்ற கற்பனையாக மட்டுமே ஆ.ஓ படத்தைப் பார்க்க வேண்டும். வரலாறையும் படத்தையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. நமது மாமன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி நமக்கு சொல்லப்பட்டதும் எடிட் செய்யப்பட்ட வரலாறு தான் என்று தெரிகிறது :-) ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி விரிவான் ஒரு பதிவி எழுதி வைத்திருக்கிறேன். சமயம் கிடைக்கும் போது நிச்சயம் வெளியிடுகிறேன். இன்னும் நிறைய பேசலாம்..

      // எப்படி இப்படி ஒரு விஷயம் பற்றி எழுத யோசனை வந்தது? // நான் படித்த சிறந்த பதிவுகளில் ஒன்று இந்த பதிவு. // - என்னி இன்னும் நிறைய நிறைய எழுதத் தூண்டும் வரிகள் இவை. மிக்க நன்றி!

      Delete
  7. வாவ்.. நான் படிச்சதுலயே one of the best பதிவு!.. உங்கள் ஆதங்கத்தில் பாதிக்கு மேல் எனது ஆதங்கமுமே!

    புது இயக்குனர்களில் சிலர்தான் எப்பயாவது இப்படி வருகிறார்கள்.. பட்ஜெட் இல்லாமலும்
    , மார்க்கெட்டிங் பத்தாமலும் அவர்களது படங்கள் படுத்துவிடுகின்றன.. அந்தப் பயத்தாலேயே நல்ல இயக்குனர்கள் கூட தங்கள் முதல் சில படங்களை மசாலாவாக கொடுத்து தோற்றுப் போகிறார்கள்

    அதை தவிர்க்க தங்களை நன்றாக establish பண்ணிய டைரக்டர்கள் புதிய களங்களைத் தேர்ந்தெடுத்து படம் செய்யத் துணிய வேண்டும். செல்வா, வெற்றிமாறன், சசிகுமார் இந்த மாதிரி இயக்குனர்களால அவங்க ஏரியாவுக்கு வெளியில வந்தும் தரமான படங்களை கொடுக்க முடியும்-ங்கற நம்பிக்கை இருக்கு. இவங்க செய்தால் தான் பின்னால் தயாரிப்பாளர்கள் நல்ல கதையுள்ள இயக்குனர்களுக்குகு காசு செலவழிக்க முயல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. மோசமான கட்டமைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் இஷ்டத்திற்கு படங்கள் வெளியாகிறது. அதுவும் மாஸ் ரிலீஸ் தான். 1500 ஸ்கிரீன்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு மிகவும் அதிகம். பெரிய படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, முதல் வாரத்திலேயே கலெக்ஷனை அள்ளி விடுகிறது. சிறிய படங்கள் போஸ்டர் ஒட்ட கூட இடம் இல்லாமல், ரிலீஸ் ஆன சுவடே இல்லாமல்காணாமல் போய்விடுகிறது...

      இந்த நிலை மாறாவிட்டால் நிச்சயம் கஷ்டம் தான்.

      நீங்கள் சொன்னது போல் பெரிய, விஷயம் தெரிந்த இயக்குனர்களாவது புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் மிஷ்கின் கொடுத்தது ஏமாற்றமே. நந்தலாலா சையில்லாமல் இருந்தது கூட பரவயில்லை. ஆனால் முகமூடி பல வித்தியாசமான படங்களுக்கு ஆரம்பமாக இருந்திருக்க் வேண்டியது. ஆனால் மொத்தமாக ஏமாற்றிவிட்டது, தோற்றும் விட்டது...

      Delete
  8. ப்ரம்மிக்க வைத்த பதிவு. அத்தனை தகவல்கள்... வாழ்த்துக்களுடன் ஒரு பெரிய பொக்கே.... :D :D

    நமது இயக்குனர்கள் வேறு வழியில்லாமல் தான், காதல் பின்னாடி ஒளிந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன் சார்...
    80’ஸ் பேக்டிராப் ல வந்த சுப்பிரமணியபுரத்தயும் காதல் தான் காப்பாத்துச்சு,
    உலகமயமாக்கல் மையபடுத்தி வந்த கற்றது தமிழ் படமும் காதல் பிண்ணனியில் தான் இருந்துச்சு. ஒரு பெரிய கூட்டத்த இந்த மாதிரி காதல், டுயட் + கொஞ்சம் கதை இது தான் தியட்டருக்கு இழுக்க முடியும்னு எழுதிவைச்ச விதி போல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்பிட்டாங்க... ஆனால் அதுவும் உண்மைதான்.


    அதுபோல சசி, சர்குணம், சிம்புதேவன் போல பல இயக்குணர்கள் முதல் படத்த அருமையா எடுத்துட்டு அடுத்த படத்த அவசர அவசரமா சொதப்புறது... கொஞ்சம் நிதானமா திரைக்கதை எழுதுனாதான் என்னவாம்?
    அந்த வையில் “தங்க மீன்கள்”ஐ ரொம்ப நம்பிருக்கிகேன்...

    பி.கு - புத்தக தழுவலில் “பூ” என்னும் அருமையான படப்பை விட்டுவிட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து காதலே இல்லாமல் படமெடுத்த ஒரே இயக்குனர் பாலா தான். படம் நான் கடவுள். இத்தனைக்கும் அவரது முதல் படத்தில் காதலுக்காகத் தான் எல்லாமே நடக்கும்.

      'தங்க மீன்கள்' பற்றிய சுவடே இல்லை. கௌதம் மேனன் தனது நீ.தா.எ.பொ படம் ரிலீஸ் மும்முரத்தில் இருக்கிறார். இந்த வருடம் தங்க மீங்கள் ரிலீஸ் டவுட் தான்.

      தொடர்ந்து வாருங்கள், நன்றி :-)

      Delete
  9. நல்ல பதிவு.. சினிமா இயக்குனராக விரும்பும் எனக்கு இது போன்ற ஆதங்கம் நிறைய உண்டு.

    'புயலிலே ஒரு தோணி' நாவலை வெற்றிமாறன் இயக்க விரும்பியாதாக கேள்வி..

    எதிர்காலத்தில் இப்பதிவின் நோக்கத்தை நான் நிறைவேற்றலாம் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. // எதிர்காலத்தில் இப்பதிவின் நோக்கத்தை நான் நிறைவேற்றலாம் என்று நம்புகிறேன்.. //

      காத்திருக்கிறோம் கார்த்தி :-)

      Delete
  10. இவ்ளோ பெரிய பதிவுல உங்க ஆதங்கத்த முழுவதுமா கொட்டிடீங்க.

    தமிழல action heroine கதைகளும் ரொம்ப கம்மி. full and full hero worship தான்.

    அப்படியே வந்தாலும் மொக்கதனமா எடுக்குறாங்க. லேட்டஸ்ட் உதாரணம் "பவானி"

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தியில் கூட ஹீரோயின் கதைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. உ.தா: 7 Khoon Maaf, The Dirty Picture, Kahaani. தமிழில் விஜயசாந்தி இருந்தார். பாரதிராஜா கொடுத்த கேப்டன் மகள், கருத்தம்மா போன்ற சில படங்கள் நினைவிற்கு வருகிறது. இவையெல்லாம் 90களில் வந்தவை. இன்றைக்கு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. பவானி - அட போங்க பாஸ், சினேகா போலீஸா? ஹி ஹி

      வருகைக்கு நன்றி :-)

      Delete
  11. ரொம்ப டீடெய்ல்டா ஆராய்ஞ்சிருக்கீங்க.. Amassing these large no. of details is a difficult one, Hats off!! இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.. :-)

    ReplyDelete
  12. 1. வரலாற்று படம் - ஜாதி , இன கலவரம் உண்டாகும்
    2. போர்க்களம் படம் - எழுத்தாளர்கள் கலவரம்
    3. மிலிட்டரி படம் - சர்ச்சை / சென்ஸார்
    4. நாவலை தழுவி படம் - ஏற்கனவே வாய்க்கால் தகராறு ... இதுல கைய்ய புடிச்சி .....
    5. திருட்டு படம் - சர்ச்சை / சென்ஸார்
    6. விஞ்ஞான படம் - மக்கள் நம்பவே மாட்டார்கள்
    7. க்ரைம் படம் - ஓகே... அப்பப்போ வருது
    உங்கள் ஆதங்கம் புரிகிறது... நமக்கு சென்சார், பட்ஜெட், அணைத்து தரப்பினரையும் பகைத்து கொள்ளாமை, எழுத்தாளர்கள் ( பிளாகேர்) சமாளிப்பு, யூனியன் பிரச்னை, தமிழனுக்கே உண்டான ஈகோ பிரச்சனை, அரசியல் தலையீடு இவற்றை தாண்டி நம்மால் எடுக்க முடிந்தது --- பிப்பிளிக்கி பிள்ளக்கி....

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...