மிஷ்கின் எனும் ஒரு தனித்த ஓநாய் - A tribute to the Master...

12:25:00 PM



“நீயெல்லாம் அக்கா, தங்கச்சியோட பிறக்கல...த்தூ… - குளித்துக்கொண்டிருக்கும் போது உள்ளே வந்தவனைப் பார்த்து அவள் கத்த, அமைதியாக வெளயேறினான் அவன். குளியல் தொடர, அந்த இருண்ட அறையில் அமர்ந்து அமைதியாக நாங்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தோம் - எங்கோ படித்தது. எழுதியது யாரென்றும் தெரியவில்லை. ஆனால் இதன் கருத்து என்னை வெகுவாக யோசிக்க வைத்தது. தமிழ் சினிமா தனது ரசிகனை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லிவிட முடியாது. இயக்குனர் மிஷ்கினை எனக்கு பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். "அஞ்சாதே" திரைப்படத்தில் ஒரு காட்சி. வில்லன் கதாப்பாத்திரம் வீட்டில் பதுங்கியிருக்க, கதாநாயகி பக்கத்து அரையில் உடை மாற்றிக்கொண்டிருப்பாள். வில்லன் ஒரு காமுகன். குனிந்து கதவிடுக்கு வழியாக அவள் உடை மாற்றுவதை பார்க்கத் துடிப்பான். சாதாரணமாக இது மாதிரியான ஒரு காட்சியில் வில்லனின் பார்வையில் கதாநாயகி உடை மாற்றுவது பார்வையாளர்களான நமக்குக் காட்டப்படும் (கதவிடுக்கு வழியாகவோ சாவித்துவாரம் வழியாகவோ). ஆனால் அஞ்சாதே'வில் அப்படி இருக்காது. "என் படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் வில்லனது பாய்ண்ட் ஆஃப் வியூவை ஷேர் செய்வது Blunder ஆக எனக்குப் பட்டது. அது எனக்கு ரொம்பப் புடிக்கல" என்று அஞ்சாதே மேக்கிங் வீடியோவில் பேசியிருந்தார் மிஷ்கின் - தமிழ் சினிமாவின் கூட்டத்தில் சேராமல் விலகி நிற்கும் பசித்த ஓநாய். தனது ரசிகர்களை எவ்வளவு தூரம் மிஷ்கின் ரசிக்கிரார் என்பது இந்த வரிகளில் புரியும். விமர்சன ரீதியாகவும், மிகவும் குறைந்த தியேட்டர்களிலேயே வெளியாகியிருந்தாலும் எப்படியோ படம் பார்த்துவிட்ட என்னைப் போன்ற சாதராண ரசிகர்களின் பார்வையிலும் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கிறது. வணிகரீதியாக இந்தப் படம் ஒரு வெற்றிப்படமா என்பது இன்னமும் தெரியவில்லை. முகமூடி படத்திற்காக மிஷ்கினை காறி உமிழ்ந்தவர்கள் இன்று அதே மிஷ்கினை ஓ.ஆ'விற்காக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பதிவும் மற்றுமொரு மிஷ்கின் புராணம் பாடும் பதிவு தான். முகமூடி பார்த்த பின்பு மிஷ்கின் மேல் எனக்குத் தீராத கோபம் இருந்தது. வாய் மட்டும்தான் பெரிதாகிக்கொண்டே போகிறது, படங்களின் தரம் குறைந்துகொண்டுடே போகிறது என்ற கோபம் எனக்கு. முகமூடியில் இருந்தப் பிழைகளைச் சுட்டிக்காட்டியதோடு நிறுத்திக்கொள்ளாமல் (இதுவே அதிகப்பிரசங்கித்தனம்), எப்படி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் மேதாவித்தனமாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். முகமூடி என்ற தவறை மிஷ்கின் திருத்திக்கொண்டு விட்டார். இப்பொழுது என் முறை. 

இந்தப் பதிவு எந்த வாதத்திற்கான களமும் அல்ல. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் விமர்சனமும் அல்ல. மிஷ்கின் படங்களில் நான் ரசித்தவற்றப் பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தவர்கள் தொடரலாம். பிடிக்காதவர்கள் விலக்கிக்கொள்ளலாம். 
"இது ஒரு சாதாரணமான படம். இதுக்கு இவ்ளோ விளம்பரம் போதும்னு நினைக்கிறேன். படத்த தியேட்டர்ல போய் பாருங்க. திருட்டு வி.சி.டில கூடப் பாருங்க. பிடிச்சிருந்தா தியேட்டர்ல போய் மறுபடியும் பாருங்க" - பிரபல கதாநாயகனும் கதாநாயகியும் உண்மையில் திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள் என்று பரப்பரப்பாக (?) விளம்பரம் செய்யப்பட்ட ஒரு படத்துடன் சேர்ந்து தனது படத்தை வெளியிட்ட மிஷ்கின் கொடுத்த விளம்பரம் இவ்வளவு தான். படம் வெளியாகும் வரை பிரபலங்கள் யாரும் இந்தப் படத்தையும், மிஷ்கினையும் பாராட்டிப் பேசவில்லை, இசை வெளியீடு, ஒரு பாடல் வெளியீடு போன்ற எந்த அபத்தங்களும் நடக்கவில்லை, கண்கலங்கியபடி யாரும் பேட்டி கொடுக்கவில்லை. "ஆட்டுக்குட்டியைத் துரத்திக்கொண்டு ஓடும் ஓநாய்க்குத்தான் தெரியும் ஆட்டுக்கறி எவ்வளவு ருசி என்று" போன்ற வசன விளம்பரங்கள் கூட இல்லை. டீஸர் வரும்வரை இப்படியொரு படம் எடுக்கப்பட்டு வருகிறது என்பதுகூட வெளியில் தெரியவில்லை. நடிகர் சங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றவர்களை மட்டும் அழைத்து தனது அலுவலகத்திலேயே மரியாதை செய்து படத்தை அறிமுகம் செய்தார் மிஷ்கின். இரண்டே படங்களில் தமிழின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் ஆன மிஷ்கின் "முகமூடி" என்ற ஒரே ஒரு தவறால் அட்ரஸ் இல்லாமல் போனார். அடிபட்ட ஓநாயாக பதுங்கியிருந்தார். யாருடைய உதவியும் இல்லாமல் தன் பாணியில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்து இப்பொழுது நமக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள் சேலை குத்துப்பாட்டு இல்லை. காமெடியன் இல்லை கதாநாயகி இல்லை. அதனால் அபத்த காதல்காட்சிகள் இல்லை, குடிகாட்சிகளும் இல்லை, ப்ளாஷ்பேக் இல்லை, நொண்டியடிக்கும் திரைக்கதையை நகர்த்தும் அபத்த ஃபில்லர்கள் இல்லை. ஏன் ஒரு மெசேஜ் கூட இல்லை. இப்படி பல இல்லைகள் - ஆனால் இவை எதுவும் இல்லையென்றாலும் மற்ற படங்களில் இல்லாத ஒன்று இருக்கிறது. அது - கதை. ஓர் இரவில் நடக்கும் மிகச் சாதாரணமான ஒரு கதை.
மிஷ்கின் படங்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு. அதை புரிந்துகொள்ளவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளவாவது வேண்டும். சினிமா என்பதே மிகையதார்த்தம் தான். அதில் யதார்த்தத்தை தேடிக் கண்டுபிடித்து "இது தான் நல்ல சினிமா" என்று முத்திரை குத்த நினைப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம். கதை சொல்லும் ஒரு இயக்குனர், தன் கதையில் ஒரு நாய் பறந்து கொண்டே பேசுகிறது என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அது அவர் கதை. அவர் நினைப்பதைத்தான் நமக்குக் காட்டுவார். இஷ்டமிருந்தால் நாம் அதைப் பணம் கொடுத்துப்பார்க்கலாம். இஷ்டமில்லை என்றால் விலகிக்கொள்ளலாம். நமது யதார்த்தத்தை அடுத்தவர் கதையில் தேடுவது முட்டாள்தனம். இவ்வளவு விளக்கம் கொடுக்கக்காரணம் இருக்கிறது. மிஷ்கின் நமக்குக் காட்டும் உலககில் பெரும்பாலும் அவரது கதாப்பாத்திரங்கள் மட்டுமே உலாவுவார்கள். சாலைகள், தெருக்கள் காலியாக இருக்கும். கதாப்பாத்திரங்கள் ஒருவித ஒழுக்கத்துடனே (?) நடப்பார்கள், நடிப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள். பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். சாமுராய் (?) வீரர்கள் இருப்பார்கள். மிஷ்கின் உலகத்திற்கென்று ஒரு தனி யதார்த்தம் இருக்கும். வில்லன்களுக்கும் ஒரு குடும்பம், செண்டிமெண்ட் எல்லாம் இருக்கும். அவர்கள் வரையில் அவர்களது செயல்களுக்கு ஒரு நியாயம் இருக்கும். சண்டையிடும் போது கூட கூட்டமாக வந்து அடிக்கமாட்டார்கள், அடிவாங்கவும் மாட்டார்கள் (ஒருவன் பத்து பேரை பறந்து அடிப்பதும் எதார்த்தம் இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். தவிர, தமிழ் சினிமாவின் பெஸ்ட் பைட்களில் மிஷ்கின் பட சண்டைக்காட்சிகள் நிச்சயம் இடம்பெரும்). யதார்த்தம் இல்லை என்று சொல்லப்படும் மிஷ்கின் படங்களில் தான் சி.பி.சி.ஐ.டி ஆகவே இருந்தாலுல் மேலதிகாரி பெர்மிஷன் கொடுத்தால் தான் துப்பாக்கி வழங்கப்படும். ஜஸ்ட் லைக் தட் கொலை செய்து கொண்டே போகும் கில்லர்கள் பைக்களுக்கு கூட ஸ்டார்டிங் டிரபிள் ஏற்படும். கதாநாயகன் போலீஸே ஆனாலும் முதல் நாளே பயந்து உட்கார்ந்த இடத்திலிருந்து கீழே விழுந்து அடுத்த நாள் ஆபீஸ் 'கட்' அடிக்க நினைத்து அப்பாவிடம் திட்டு வாங்குவான். இந்த யதார்த்தங்கள் வேறு எந்த தமிழ் சினிமாவில் உண்டு?
அனைவரும் கண்மூடித்தனமாகச் சொல்வது போல் மிஷ்கினின் அனைத்து கதாப்பாத்திரங்களும் தரையையே பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். மனதில் ஒருவித கனமிருப்பவர்கள் மட்டும்தான் எதிரில் இருப்பவர்களது கண்ணைப் பார்த்துப் பேச மாட்டார்கள். தரையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். கவனித்துப் பார்த்தால் இது தெரியும். பிரதான கதாப்பாத்திரம் அப்படி இருக்கிறதென்றால் அது அந்தக் கதாப்பாத்திரத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. அஞ்சாதே'வில் அனைவரையும் "வந்துபார்" என்று லந்தைக்கொடுக்கும் சத்யா கதாப்பாத்திரம் கதாநாயகி உத்ராவைப் பார்கும் பொழுது மட்டும் தரையைப் பார்த்தே பேசும். காரணம், தன் நண்பனின் தங்கை, தன் அண்ணனுடன் ஒப்பிட்டு தன்னை கேவலமாக நினைக்கிறாள் என்ற நினைப்பு. அதே போல் தான் சித்திரம் பேசுதடி திரு. நல்லவன் தான். ஆனால் இப்பொழுது கூலி ஆளை அடிக்கும் ரவுடி. அவனால் எப்படி ஒரு படித்த பெண்ணை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியும்? 'யுத்தம் செய்' ஜே.கே தரையையே பார்த்துக்கொண்டிருப்பார். சி.பி.சி.ஐ.டி ஆபீஸராக இருந்தும் தொலைந்த தன் தங்கையை இன்னும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நந்தலாலா 'அகி' தரையையே பார்த்துக்கொண்டிருப்பான், ஏனென்றால் அவன் தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் ஒரு சாதாரண சிருவன். அவனது மனநிலை அப்படித் தான் இருக்கும். முகமூடியில் கூட முதலில் கெத்'தாகவே இருக்கும் 'லீ' கதாப்பாத்திரம், தன்னால் தான் தன் நண்பன் இறந்தான் என்பது தெரிந்ததும் தரையையே பார்த்து தன் தாத்தாவிடம் பேசுவான்.
இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு என்று மிஷ்கினின் படங்களில் பல அருமையான விஷயங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது மிஷ்கினின் இந்த கதாப்பாத்திரங்கள் தான். இதுவரை மிஷ்கின் இயக்கியுள்ள 6 படங்களிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கென்றும் ஒரு குணாதிசயம் இருக்கும். கதையின் ஓட்டத்திற்கேற்ப அந்தக் கதாப்பாத்திரத்தின் சூழ்நிலை மாறினாலும் அந்த குணம் மாறவே மாறாது. சூழ்நிலை என்று சொல்லக்காரணம், பெரும்பாலும் மிஷ்கினின் (பிரதான) கதாப்பாத்திரங்கள் ஒருவித இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும்படியாக அமைந்திருக்கும். இருள் சூழ்ந்து (neo-noir) தனது திரைப்படங்கள் இருப்பதற்கு இந்தக் காரணத்தைத் தான் சொல்கிறார் மிஷ்கின். காதலால், பொறுப்பு வருவதால், ஏமாற்றத்தால், நண்பனின் மரணத்தால் மாறும் இளைஞர்கள், செல்ல மகளின் துர்மரணத்தால் மாறும் ஒரு குடும்பம், அன்பால் மாறும் ஒரு ஓநாய் - என்று கதாப்பாத்திரங்களின் நிலை மாறினாலும், குணம் மாறியிருக்காது. சித்திரம் பேசுதடி திரு, கோபக்காரன். சமூகத்தின் மேல் அவனுக்கு ஒரு வெறுப்பு உண்டு. காதல் அவனை மென்மையாக்குமே தவிர மழுங்கடிக்காது. அஞ்சாதே சத்யா தன்னை ஒரு கோபக்காரனாக காட்டிக்கொண்டாலும், அவனுக்குள் ஒருவித தாழ்வுமனப்பான்மை உண்டு. முகத்தில் அறையும் உண்மையைக் கண்டு பயப்படுபவன் அவன். தன்னிடம் துப்பாக்கியிருந்தும்கூட, சுட தைரியம் இருக்காது. ஆனால் சண்டையிட தைரியம் இருக்கும். உயரதிகாரியை எதிர்க்கத் தெரிந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது. யுத்தம் செய் படத்தில், தன் குழந்தையை நாசமாக்கியவர்களை கடத்திக்கொண்டு போவாள் ஒரு தாய். அப்போது சிக்கிக்கொண்டு விடும் தன் மகனுக்காகக் கூட கலங்காதவள், தன் மகளைப் போன்ற மற்றொரு பெண்ணுக்காக இறுதிக்காட்சியில் உயிரையே விடுவாள். அதே யுத்தம் செய் படத்தில் என்னை கவர்ந்த மற்றுமொரு கதாப்பாத்திரம் ஜவுளிக்கடை அதிபராக வரும் மாணிக்க விநாயகம். போலீஸ் தன்னை விசாரித்ததை பயத்துடன் படபடப்பாக தனது கூட்டாளிகளிடம் சொல்லும்போது கூட அவரது குணம் மாறியிருக்காது "என்ன இப்புடியே பாக்குறான். அவன் மட்டும் பாத்தா பரவாயில்ல. இன்னும் ரெண்டு வேற. சல்லட போடுறா மாதிரி பாத்துக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு பொண்ணு வேற, நல்ல கெழங்கு மாதிரி!". ஓ.ஆ படத்தில், உல்ஃப் ஒரு ஆட்டுக்குட்டிக் குடும்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டாலும், அதன் ரௌத்ர குணம் மாறவே மாறாது. வேட்டை நாய்களை கொடூராமாகக் கொல்வதை அது நிறுத்துவதேயில்லை. தன் வீட்டில் இழவு விழுந்திருக்கும் பொழுது கூட ஒரு டாக்டராக ஒரு ஆசிரியராக தனது பணியைச் செய்வார் ஒரு மருத்துவர். உயிருக்கு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகூட கண்தெரியாத சிறுமி கதை கேபாள், அதே சிறுமி தன் தாய் இறந்து விட்டாள் என்று தெரிந்தவுடன் "நாமளும் செத்துப்போயிரலாமா எட்வர்ட் அண்ணா" என்று கேட்கும். பெண்களை வைத்து தவறான தொழில் செய்பவர்களாக இருந்தாலும், யுத்தம் செய் 'திரிசங்கு'விற்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கும். அவள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பார். பெண்களைக்கடத்தும் தொழில் செய்தாலும் அஞ்சாதே 'சப்பை'க்கு ஒரு குடும்பம் இருக்கும். செண்டிமெண்ட் இருக்கும். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவையும் யதார்த்தங்கள் தான்.
எப்பொழுதும் நம் அருகில் ஏதாவது ஒரு தவறு இருந்து கொண்டே இருக்கிறது என்பதை வழியுறுத்த முகமே காட்டாத ஒரு மொட்டை கதாப்பாத்திரம், அஞ்சாதேவில் பயந்து நடுங்கும் ஒரு கடத்தல்காரன், யுத்தம் செய் படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் ஆனால் பயந்து சாகும் ஒரு இன்ஸ்பெக்டர், இங்கிலீஷ்காரன் ரேஞ்சில் போலீஸ் உயர் அதிகாரிகள், பிணவறை மருத்துவர், அகிரா குரசோவாவின் செவன் சாமுராயில் வரும் பிரதான சாமுராய் போலவே தனது மொட்டைத்தலையை தடவும் மேனரிசம் உள்ள அதிகாரி (அஞ்சாதே - கீர்த்திவாசன் - பொன்வண்ணன்),  தன் சிறுநீர்ப்பையை சிப்ஸ் பாக்கெட்டுடன் சேர்த்து கையில் ஏந்திக்கொண்டு பழிவாங்கப் புறப்படும் 'கரடி' வில்லன் என்று மிஷ்கினின் படத்தில் தான் முழுக்க முழுக்க வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் காணக் கிடைப்பார்கள். தான் எழுதும் கதாப்பாத்திரங்களுக்கு மிஷ்கின் தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் இன்னொரு ஸ்பெஷல். நரேன், பாண்டியராஜன், பிரசன்னா, சப்பை கேரக்டர், மாணிக்க விநாயகம், ஒய்ஜி - லட்சுமி ராமகிருஷ்ணன், ஓநாய் படத்தில் அந்த அம்மா இவ்வளவு ஏன் யுத்தம் செய் படத்தில் சாட்சி சொல்லும் டான்ஸ் டீச்சரை நியாபகம் இருக்கிறதா? (இத போலீஸ் கிட்ட சொன்னீங்களா - அவங்க அத கேக்கலியே) - பெர்பெக்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மிஷ்கின் தனது கதாப்பாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்கும் நடிகர்கள். யாரும் இதுவரை அபத்தமாக எனக்குப் பட்டதில்லை, முகமூடி செல்லா கேரக்டரையும் சேர்த்து. 
மிஷ்கினின் கதாப்பாத்திரங்கள் அளவிற்கு அவரது கதை அவ்வளவு கனமானதாக இருப்பதே இல்லை. இது தான் மிகப்பெரிய ப்ளஸ். சாதாராண கதையை அசாதாரனமாக சொல்வதில்தான் முழுத்தறமையும் இருக்கிறது. மிஷ்கின் அதில் கைதேர்ந்தவர். மிகவும் சாதாரணமான ஒரு கதையில் தனது கதாப்பாத்திரங்களை உலவ விடுவார் மிஷ்கின், கதையின் ஓட்டத்தில் ஒரு சின்ன டுவிஸ்ட்டும் இருக்கும் (பாலாவின் படங்களில் கதாப்பாத்திரத்திரங்களுக்கேற்ப கதையும், களமும்கூட கனமானதாகவே இருக்கும்). சித்திரம் பேசுதடி - குடும்பச் சூழ்நிலையால் ரவுடியாகி பின் ஒரு பெண்ணின் மென்மையான காதலால் மாறுபவனது கதை. அஞ்சாதே - பொறுக்கியாக சுற்றித் திரிபவனுக்கு விதியால் பொறுப்புள்ள பதவி கிடைக்க தனது நட்பை இழந்து அநீதியை எதிர்ப்பவனது கதை. நந்தலாலா - தன்னை விட்டுப் போன தாயைத் தேடும் இரண்டு குழந்தைகளின் பயணம். யுத்தம் செய் - தங்கையை தொலைத்துவிட்டுத் தவிக்கும் அண்ணன் + கல்லெறியப்பட்ட ஒரு குருவிக்கூட்டின் மிச்ச உயிர்கள் பருந்துகளாக மாறிப் பழிவாங்கம் கதை. முகமூடி - பொறுப்பில்லா இளைஞனுக்கு ஒரு மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு, அதனால் அவன் எடுக்கும் முடிவு. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ஒரு சிறிய ஆட்டுக்குட்டிக் குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு ஓநாயின் கதை.
பெரும்பாலும் மிஷ்கின் படத்தின் ஒளிப்பதிவானது, ரசிகர்களை படத்தின் கதாப்பாத்திரங்களை பின்தொடர்ந்து செல்லவைக்கும். யாருடைய பார்வையிலும் (பாய்ண்ட் ஆப் வியூ) படம் நகராது. கதாப்பாத்திரங்களை தன் உலகில் உலாவவிட்டு கேமரவால் பின்தொடருவது தான் மிஷ்கின் ஸ்டைல். குனிந்து கதவிடுக்கு வழியாக ஒரு கதாப்பாத்திரம் பார்க்கிறதென்றால், கேமராவும் கதவிடுக்கிற்குள் நுளையாது; மாறாக குனிந்து பார்க்கும் அந்தக் கதாப்பாத்திரத்தை நமக்குக் காட்டு. ஒரு கதாப்பாத்திரம் வெறிகொண்டு ஓடினால் கேமராவும் பின் தொடர்ந்து ஓடும், நின்றால் அங்கேயே நிற்கும், ஒளிந்திருந்து பார்த்தால் கேமராவும் ஒளிந்தபடியே நடப்பதை நமக்குக் காட்டும். அஞ்சாதே படத்தின் கதாப்பாத்திரங்கள் நம்மை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்பதற்காகவே க்ளோசப் காட்சிகளைக் குறைத்து, லாங் ஷாட்களே அதிகம் வைத்ததாகக் கூறியிருக்கிறார் மிஷ்கின் (அஞ்சாதே மேசர்பியர் டி.வி.டியில் மேக்கிங் வீடியோ உள்ளது. மிஷ்கின் மேல் எனக்குத் தனி மரியாதை ஏற்பட அந்த வீடியோவும் ஒரு காரணம்). அஞ்சாதே கத்தியால் குத்தப்பட்டு கிடக்கும் ஒருவனை ரோட்டுடன் சேர்த்துக் காட்டும் நீண்ட ஷாட், கிளைமாக்ஸில் வில்லன்கள் தப்பித்த வண்டியைச் சுற்றி வரும் ஷாட், யுத்தம் செய் படத்தின் ஆரம்பக் டாப்-ஆங்கிள், புரொபஸர் குடும்பத்துக்கு நடந்ததை போலீஸ் சொல்லும் காட்சி (அந்த அம்மா ஒரு வேச ஸார்...) பாலத்தில் சேரன் சண்டை போட்டுவிட்டு வருவதைக் காட்டும் ரொடேஷன் ஷாட் - இப்படி பல அற்புதமான கேமரா கோணங்கள் மிஷ்கின் படத்தில் மட்டுமே காணக்கிடைக்கும்.   
மிக நீண்ட காட்சிகளால் ரசிகனின் பொறுமையை சோதிப்பவர் என்ற குற்றச்சாட்டு மிஷ்கின் மீது உண்டு. தனது கதாப்பாத்திரம் களத்தில் என்ன செய்கிறது என்பதை படம் பார்க்கும் ரசிகன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கவனித்தால் மட்டும் போதும், கதாப்பாத்திரத்தின் பின்னாலேயே அரக்கபறக்க ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்பது தான் மிஷ்கினின் விருப்பம். ரோட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனது அருகில் வர அஞ்சி நிற்கும் 'அஞ்சாதே' சத்யா கதாப்பாத்திரம் படும்பாட்டைக் காட்டவோ, பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்களது தாய்-தந்தையருடன் செல்ல தன்னைக்கூட்டிக்கொண்டு போக மட்டும் யாருமில்லை என்று கலங்கி நிற்கும் ஒரு சிறுவனின் நிலையைக் காட்டவோ, கொட்டும் மழையில் கடத்தப்படும் ஒரு இளம்பெண்ணைக் காட்டவோ, ஒரு குழந்தைக்கு சொல்லும் உயிருள்ள ஒரு கதையைக் காட்டவோ கட்-ஷாட்கள் தேவையில்லை. நிதானமான லாங்-ஷாட்கள் அந்த காட்சியின் அழுத்தத்தைக் காட்டும்.
இசை - மிஷ்கின் படங்களின் இசையைப் பற்றி பெரிதாக நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. இசை பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. முக்கியமாக பின்னணி இசை. படத்தோடு பொருந்தாமல் இருக்கும் இசை தான் என்னை ஒன்றவிடாமல் வெறுப்பேற்றும். பொருத்தமான இசை என்னை படத்தோடு ஒன்றச் செய்துவிடும். அந்த இசையை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். மிஷ்கின் படங்களின் தாக்கம் மற்ற படங்களை விட எனக்குள் அதிகமாக இருப்பதற்கு நிச்சயம் இசையும் முக்கிய காரணம் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.  மிஷ்கின் இலவசமாக வழங்கும் இலவச முன்னணியசை ஆடியோ சிடியை முதல் ஆளாக வாங்கிவிட்டேன்.
உலகசினிமாக்களிலும்,புத்தகங்களிலும் தன்னை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனது படைப்பில் பாதிப்புகள் இருப்பதிலும் என்னைக்கேட்டால் ஆச்சரியம் இல்லை. என் நண்பன் ஒருவன் சர்வசாதாரணமாக Mysskin Films are made in Korea, Assembled in India என்று சொன்னான். சரி எந்தெந்த படங்கள் எல்லாம் அப்படி என்று கேட்டால் நந்தலாலா என்றான். சரி நந்தலாலா ஒரு அப்பட்ட காப்பி படம் என்றே வைத்துக்கொள்வோம். மீதி 5 படங்கள்? Memories of Murder படம் பார்த்த யாரும் அதை யுத்தம் செய் படத்துடன் ஒப்பிட மாட்டார்கள். வேண்டுமென்றால் வேட்டையாடு விளையாடு / Kiss the Girls படங்களை ஒப்பிட்டுக் கூறலாம். யாராவது பேசியதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து ஒரு நல்ல கலைஞனை ஒதுக்கிவைப்பது தவறு. மிஷ்கின் மேல் தவறே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் தவறுகளை விட, நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும் பொழுது, சின்ன சின்ன தவறுகளை பொறுத்துக்கொள்ளலாம். நான் பொறுத்துக்கொள்வேன்.
கால்கள் - பதற்றத்தை, சந்தோசத்தை, பொறுமையின்மையை, வலியை கால்களை வைத்துக்காட்டுவது மிஷ்கினின் சிறப்பு. இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. அதே போல் எம்.ஜி.ஆர் கருப்புக்கண்ணாடியும், கொழுத்தும் வெயிலில் குளிர் தொப்பியும் போட்டார், யாரும் எதுவும் கேட்கவில்லை. கலைஞர் கருப்புக்கண்ணாடி மஞ்சள் துண்டு போட்டார், யாரும் எதுவும் கேட்கவில்லை. பாலுமகேந்திரா தலையில், தொப்பி கழுத்தில் ஸ்கார்ப் போட்டுக்கொண்டார். யாரும் எதுவும் கேட்கவில்லை. இளையராஜா வெள்ளை ஜிப்பாவிற்கு நிரந்தரமாக மாறினார். யாரும் எதுவும் கேட்கவில்லை. மிஷ்கின் ஒரு கருப்புக்கண்ணாடியை போட்டுக்கொண்டு திரிகிறார். ஆளாலுக்கு அதையே பிரதானமாக கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். 
நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும பல விஷயங்கள் இருக்கிறது. சமயமிருந்தால் மற்றொரு பதிவில் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மற்ற இரு படங்களை நான் மறந்துவிட்டேன்.

You Might Also Like

20 comments

  1. என்ன சொல்ல...ஹட்ஸ் ஆப் உங்க உழைப்புக்கு.
    ரொம்ப அற்புதமா அனாலிசிஸ் பண்ணி எழுதி இருக்கீங்க தல. மிஷ்கின் மேல எனக்கு இருந்த மரியாதை இன்னும் கூடுது. அஞ்சாதே தான் அவரோட மாஸ்டர் பீஸ்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன், அதை ஒ.ஆ தூக்கி சாப்பிட்டுச்சு.
    அவருக்குன்னு நல்ல பேன் பேஸ் இருக்கு, அவங்களுக்காவது அவர் இன்னும் நிறைய படம் அவர் குடுக்கணும்/குடுப்பார். அது மட்டும் போதும்.
    //Mysskin Films are made in Korea, Assembled in India என்று சொன்னான்.//
    இது மாதிரி கோமாளி பாய்ஸ் நிறைய பேரை பார்த்தாச்சு தல. டோரென்ட்ல டவுன்லோட் பண்ணி பார்த்திட்டு அது நோட்டை, இது நோட்டைன்னு அடிச்சு விடுவானுக, ஓரமா போய் காமெடி பண்ணுன்னு போய்கிட்டே இருக்கணும்.

    ReplyDelete
  2. அதே போல மிஸ்கின் தன் பாத்திரத்திற்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதையும் (அதுவரை எல்லா படத்திலும் சாக்லேட் பாயாக வந்த பிரசன்னா வில்லன்!), அவர்களை தன் பாத்திரத்திற்கு பொருந்தும்படி செய்வதையும் (அஞ்சாதேயில் பாண்டியராஜனின் பிரபல 'முழி' யை மறைக்கும் பட்டை கண்ணாடி!) எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    ReplyDelete
  3. "ஆட்டுக்குட்டியைத் துரத்திக்கொண்டு ஓடும் ஓநாய்க்குத்தான் தெரியும் ஆட்டுக்கறி எவ்வளவு ருசி என்று" போன்ற வசன விளம்பரங்கள் கூட இல்லை.

    This is the highlight of pakati!! Excellent-keep it up!

    ReplyDelete
  4. மிக அருமையாக எடுத்து கூறி உள்ளீர்கள் , மிஷ்கினின் படங்களை மனபூர்வமாக ரசிக்கும் ஒரு ரசிகனாக என்னையும் பெருமை கொள்ளவைத்து உள்ளது.மிக்க நன்றி நண்பா :) :)

    ReplyDelete
  5. கலக்கிட்டீங்க பிரதீப்.
    ஒரு படைப்பாளிக்கு ஒரு ரசிகன் செலுத்திய மிகப்பெரிய மரியாதை.
    இந்தப்பதிவுதான் மிஷ்கின் போன்ற படைப்பாளிக்கு ‘மிகப்பெரிய வசூல்’.

    வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் உங்களையும்...மிஷ்கினையும்.

    ReplyDelete
  6. மெய்மறந்து படிக்க வச்சுட்டீங்க போங்க.. இப்டித்தாண்டா ஒரு படத்தை ரசிக்கனும்னு தெள்ளத்தெளிவா எடுத்து சொல்லிருக்கீங்க தல.. ராஜமவுலி பத்தின உங்க தொடர்பதிவு தான் உங்களோட மாஸ்டர்பீஸ்னு நினச்சேன்.. இது அத விட அருமையா இருக்குது..!!

    //சினிமா என்பதே மிகையதார்த்தம் தானே..// கரெக்ட்டு.. சினிமாவுல சினிமாத்தனமான காட்சிகள் வைக்காம யதார்த்தமா காமிக்கனும்னா டாகுமெண்டரி தான் எடுக்கனும்..!!

    மிஷ்கின் பத்தி இதுவரை நான் படித்தவைகளிலேயே இதுதான் பெஸ்ட்..!! ராஜமவுலி தொடர் மாதிரி இதுவும் பல பதிவுகள் விரிவா வந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் நானாதான் இருப்பேன்..!! ஈகர்லி வெயிட்டிங்..!!

    ReplyDelete
  7. நீண்ட நாட்களுக்கு பின் பதிவு.இந்த படத்திற்கு உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்த்தேன் பிரதீப்.என்ன இன்னும் பார்க்கலையோ என்று கூட நினைத்தேன்.இன்று எதிர்பார்க்காமல் உங்கள் பதிவு.

    என்ன சொல்வது,உங்கள் இயக்குனர்கள் பற்றிய பதிவுகளில் நான் ரொம்பவும் ரசித்தது ஹரி பற்றி நீங்கள் எழுதியது.ஆனால் இப்போது மிஷ்கின் பற்றி எழுதி இருப்பது தான் பெஸ்ட்.

    இப்போதைய இயக்குனர்களில் என்னுடைய பேவரைட் மிஷ்கின் தான்.படம் வந்த 6வது நாளில் கூட்டமில்லாத உதயம் சந்திரனில் இந்த படத்தை பார்த்தேன்.ரொம்பவும் பிடித்தது.அன்று இரவு பல காட்சிகள் என் கண் முன்னே ஓடியபடியே படத்தின் நினைவுகளோடே தூங்கி போனேன்.

    படத்தை பற்றி என் தலத்தில் கூட பதிவு போடவில்லை.என் நண்பர்கள் சிலருக்கு படம் பிடிக்கவில்லை காரணம் அவர்கள் எதிர்பார்த்தது இறுதியில் ஒரு வலுவான பிளாஷ்பேக் .அதனால் சப்பென இருந்ததாக சொன்னார்கள்.அனால் எனக்கு அத குறை இல்லை.ஒரு பதிவில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கொரியா கதைகளை தமிழில் எடுத்துவிட்டு கூட்டமே இல்லை என்று புலம்புவது ஞாயமில்லை என்று ஒருவர் எழுதி இருந்தார்.என்ன சொல்வது.

    எனக்கு மிஷ்கினிடம் பிடிக்காத ஒரே விஷயம் எல்லா பேட்டிகளிலும் தன முந்தய படத்தை மட்டமாக சொல்வது.அதாவது அதை நான் எடுத்திருக்கவே கூடாது என்பது.எப்படி என்றால் அஞ்சாதே ஹிட்.அடுத்த படம் எடுத்து கொண்டிருக்கிறார்.நான் எடுததிலேயே மோசமான படம் அஞ்சாதே.அடுத்த பேட்டியில் அடுத்த படத்தை.இப்படி .ஆனால் அதையும் மீறி இன்று தனக்கென ஒரு உலகம் .அதை ரசிக்க ஒரு கூட்டம் என்று ஆளுமையுடன் இருக்கும் இயக்குனர் மிஷ்கின்

    ReplyDelete
  8. அபாரம் !!!!! அருமையான பதிவு... . உங்கள் பதிவை படித்தவுடன் மேலும் மிஷ்கினின் தீவிர ரசிகனாகி விட்டேன்...

    ReplyDelete
  9. Best Review on Mysskin views and his direction. I think you are deserve to be a Great Mysskin Fan. Bcoz even Mysskin Assistant Directors dont know much about this. I think Mysskin is so lucky to get a Fan like you. FYI - I watched Onayum Aatukutiyum on First day. Its really touching. I am a Movie Blogger. Take Care...Cheers :)

    ReplyDelete
  10. இந்த படத்தை என்னுடய இரு மகன்களுடன் பார்த்தேன்.இருவருமே இறுதியில் கண்ணீர் விட்டு திருப்தியை கரகோசத்துடன் சமர்ப்பித்தனர்.

    ReplyDelete
  11. அபாரம் !!!!!

    ReplyDelete
  12. மிஸ்கினின் கதாபாத்திரங்களை இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்தவர்கள் உண்டா என்று தெரியவில்லை.

    # இன்னைக்கு தேதிக்கு தானா சேர்ந்த கூட்டம்னா இது தான்!

    ReplyDelete
  13. வாவ்.. வாவ்... வாவ்... என்ன ஒரு அற்புதமான பதிவு.. ஒரு நிஜ கலைஞனுக்கு செலுத்தும் உணர்வுபூர்வமான மரியாதை இந்தப்பதிவு... ஐ லவ் யூ மிஷ்கின்....

    ReplyDelete
  14. அழகான, மிஷ்கினை மிகச்சிறப்பாக புரிந்துகொள்ள உதவும் அற்புத பதிவு. தங்களின் உழைப்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. good article about miskin

    ReplyDelete
  16. boss... romba naal kazhichu vandhalum, kalakiteenga.... pathivugal thodara vizhaigiren...

    ReplyDelete
  17. முதல் முறையாக உங்கள் பதிவுக்கு வந்தேன். நல்ல பதிவு. வளர்க.
    பின்னூட்டங்கள் வாசித்ததும் மற்றைய பதிவுக்குச் செல்லும் ஆர்வம் வந்து விட்டது. .......... வாசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.தருமி :)

      Delete
  18. இதையும் பாருங்களேன் - http://dharumi.blogspot.in/2013/10/blog-post_2.html

    ReplyDelete
    Replies
    1. உங்களது பதிவுகளைத்தான் வரிசையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்... நன்றி :)

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...