Saturday, June 18, 2011

நமது கையாலாகாதத்தனமும், அமெரிக்க டிவி சேனலின் ஆதாரமும்

'அவன் இவன்' பற்றியது தான் எனது அடுத்த பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அதற்கு முன்பு இந்தப் பதிவை போட்டே ஆக வேண்டிய கட்டாயம். "இதைப் பகிர்தல் வேண்டாம்" என்று எவ்வளவோ நினைத்தாலும், என்னால் என் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. உயிரோடிருக்கும் பொழுதும், பின் கொத்துக்கொத்தாக ஷெல்லடிபட்டு இறந்துகொண்டிருந்த போதும், என் சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய நேரத்தில் எதுவும் செய்யாமல் இப்போது எல்லாம் முடிந்தபிறகு, அவர்கள் எப்படி வகை வகையாக சித்ரவதை செய்யப்பட்டு இறந்தார்கள் என்பதர்க்கான சாட்சியை சம்பிரதாயமாக எனது தளத்தில் பகிர்வதற்கு உண்மையில் வெட்கமாகவே இருக்கிறது.

நான் கையாலாகாதவன். என்னால் உணர்ச்சிப் பொங்க வீறுகொண்டெழுந்து என் மக்களைக் கொன்ற மிருகங்களை வேட்டையாட முடியாது. இப்படி எதாவது வீடியோவை என் தளத்தில் பகிர்ந்து ஒரு மூச்சு புலம்பத்தான் முடியும். ஆனால் இதைப் பகிர்வதன் மூலம், எம் மக்களின் மரண ஓலம் இன்னும் சிலருக்கு கேட்க வாய்பிருக்கிறது. அதனால் திடீரென்று ஏதாவது எழுச்சி ஏற்பட்டு ஏதாவதொரு வகையில் நன்மை நடக்கிறது என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். நம் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை, அவர்களை கொன்றவர்களையாவது நாம் நம் அரசாங்கத்தின் மூலம் தண்டிக்க வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஒருவர் இறந்ததையே காரணம் காட்டி காங்கிரஸ் பலர் கொல்லப்படுவதை பார்த்து ரசிக்கப்போகிறது? எத்தனை நாளைக்குத் தான் நாம் "இது அரசியல் சமாச்சாரம், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று அமைதியாகவே இருக்கப் போகிறோம்? அமெரிக்க டிவி சேனல் நம் மக்கள் கொல்லப்பட்ட ஆதாரத்தைக் காட்டுகிறது. நம்மவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?

பத்தொன்பதே வயதான ஈழத்தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர் இசைப்ரியாவை பிணமாக பார்க்கும் போது உண்மையிலேயே இதயம் கணக்கிறது. மண்டை சிதறிய நிலையில் தூக்கிச் செல்லப்படும் அந்த 2 வயது சிறுவன் என்ன தவறு செய்தான்? பெண்கள் குனியும் போது தான் செல்போன் கேமராவில் படமெடுக்கிறார்கள் என்றால், கற்பழித்து கொல்லப்பட்டு, அவர்களது சடலங்களை தூக்கிப் போடும் போதும் அந்த உடலைப் படமெடுக்கிறார்கள். செத்தொழிந்த பிறகு நரகம் என்று வேறோரு உலகத்திற்கு போவோம் என்று சொல்கிறார்கள். நாம் வாழும் இந்த உலகத்தை விட வேறு என்ன இருந்து விடப் போகிறது அந்த பொல்லாத நரகத்தில்? படுத்தால் நிம்மதியாக தூக்கம் வருவதில்லை. இதை விட வேறென்ன சித்ரவதை இருந்துவிடப்போகிறது?

இந்தக் காணொளி பலவீனமானவர்களுக்கல்ல என்றெல்லாம் நாம் சொல்லப்போவதில்லை. பலவீனமானவர்கள், பெண்கள், குழந்தைகள், 18 வயது நிரம்பியோர் என்றெல்லாம் சிங்கள மிருகங்கள் பாரபட்சம் காட்டவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேவையாக இருந்ததெல்லாம் தமிழர்களின் உயிரும், தமிழ் பெண்களின் கற்பும்தான். நம் மக்களுக்கு என்ன நடந்தது, நாம் என்ன செய்யத் தவறினோம் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காணொளியை மிச்சமிருக்கும் ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் பார்க்கவேண்டும்.

அமெரிக்க சேனலான டிவி9 இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சிங்கள வெறிநாய்கள் நடத்திய அட்டூழியங்களைத் தொகுத்து வெளியிட்ட காணொளி உங்கள் பார்வைக்கு.


1 comments:

சிங்கம் said...

என்னத்த செய்ய.. தமிழினத்தலைவன்னு சொல்லிக்கிட்டு நாட்ட கொல்லையடிக்கிரவந்தான் இன்னக்கி தலைவனா இருக்கானுவ..

Post a Comment

படித்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடவும்...