2010 சினிமா | எனது பார்வை

11:52:00 AM

2010 இனிதே நிறைவடையப் போகிறது. புது வருடத்தை சொந்த ஊரில் தொடங்க இருப்பதால் அநேகமாக இந்த வருடத்தின் கடைசி பதிவு இது தான்.

போன வருடத்தைப் போல இந்த வருடமும் நல்ல திரைப்படங்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களும் சொன்னபடி வெளியாகி சந்தோஷத்தைக் கிளப்பின. ஆனால் என்னளவில் சொல்ல வேண்டுமானால் போன வருடம் பார்த்த அளவிற்கு இந்த வருடம் அதிக படங்கள் பார்த்திருக்கவில்லை (வேலை பளு என்று சாதாரணமாகக் கூறிவிட மனம் வரவில்லை)

சரி, மேட்டருக்கு வருவோம். இந்த வருடம் 'புகைப்படம்' தான் முதல் படம் என்று விக்கிபீடியா சொல்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதியும் சில படங்கள் வெளிவருவதாகத் தெரிகிறது. அதனால் கடைசி படம் எதுவென்று இப்போது சொல்ல முடியாது.



2010 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்களாக நான் நினைக்கும் படங்கள் பட்டியலிடும் முன் ஒரு முக்கியமான விஷயம். எந்திரன், மன்மதன் அம்பு. இந்த இரண்டு படங்கள் நான் இந்தப் பத்தில் சேர்க்கப்போவதில்லை. காரணம் அவை சிறந்த படங்கள் அல்ல என்பதல்ல.



விமர்சன இடிபாடுகளில் இந்த வருடம் பெரிதும் சிக்கித் தவித்த இந்த இரண்டு படங்களுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஜினி - கமல் இருவரையும் நான் பெரிதாக நேசிப்பது உண்மை. அவர்களை சிறந்த 10 என்றெல்லாம் பத்தோடு ஒன்றாக கலக்கக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே இதற்குக் காரணம். எந்திரன் - மன்மதன் அம்பு அல்லாத மற்றவை...

10. பாஸ் (எ) பாஸ்கரன்:


'சிவா மனசுல சக்தி' படம் எனக்குப் பிடிக்கக் காரணமாகயிருந்த சந்தானமே இந்த படம் எனக்குப் பிடிக்கவும் காரணம். மேலும் பல படங்களுக்குப் பிறகு நயன்தாரா கொஞ்சமே போர்த்திக் கொண்டு அழகாக உலா வந்தததும் காரணம். ஆர்யாவும் நன்றாகச் செய்திருந்தார். ஆனால் இது போல் கதையே இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி (அ) சந்தானத்தை நம்பியே எடுத்துக் கொண்டிருந்தால் ராஜேஷின் அடுத்த பட வெற்றி சந்தேகம் தான்.

9. களவாணி:


பலர் இந்தப் படத்தை முதல் ஐந்திற்குள் வைத்திருப்பார்கள். எனக்கு பிடித்திருந்த அளவில் இந்த இடம். விமல், ஓவியா பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. படத்தின் நிஜ ஹீரோ-ஹீரோயின் இளவரசு - சரண்யா காம்பினேஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே.

8. மதராஸபட்டினம்:


படம் அருமையாக இருந்தது. அதில் சந்தேகமில்லை. இங்கும் காரணம் சத்தியமாக ஆர்யா இல்லை. அவர் இந்தப் படத்திற்கு பொருத்தமாகவே இல்லை என்றே நான் சொல்வேன். ஆனால் இந்தியன் படத்தில் காட்டப்பட்ட அந்த 15 நிமிடங்களைப் போல ஆற்புதம் படைத்திருக்க வேண்டிய இந்த இரண்டரை மணி நேரப் படம் சாதாரண காதல் கதையாக அமைந்து விட்டது தான் எனக்கு ஏமாற்றம். ஆயிரம் காவியக் காதல் கதைகளைப் பார்த்தாகிவிட்டது. ஆனால் சுதந்திரப் போராட்டக் கதைகள்?

7. வம்சம்:


இந்தப் படம் எனக்குப் பிடிக்கக் காரணம் படத்தில் காட்டப்பட்டிருந்த டீடெய்ல்ஸ் மற்றும் பாண்டிராஜின் வசனங்கள். எப்பாடு பட்டாலும் பிற்பாடு பெறாதவர் என்னும் அந்தக் குரலும் அதன் பின்னனியில் அதன் வரலாற்றைக் கூறுவது போல் ஒலிக்கும் அந்த இசையும் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டேய்ருக்கிறது.

6. நந்தலாலா:


நான் மிகவும் எதிர்பார்த்திருந்த படம். ஆனால் பார்க்க இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் இம்பாக்ட் குறைந்துவிட்டது. மிஷ்கினின் க்ளிஷே ஷாட்கள் இந்தப் படத்திற்கு பொருந்தவில்லை. உணர்ச்சிப் பூர்வமாக எடுக்கிறேன் என்று மிகவும் ஸ்லோவாக எடுத்திருப்பதும் ஒரு காரணம். ஆனால் படத்தின் ஊடே அழகாக, சின்னச்சின்னதாக அவர் காட்டியிருந்த இன்பர்மேஷங்கள் அதியற்புதம்.

5. சிங்கம்:


விளக்கம் தேவையே இல்லை. சேவல் கூவவில்லை என்பதால் சிங்கத்தை கர்ஜிக்க விட்டு மிரட்டி விட்டார் ஹரி. காக்க காக்க, சாமி இரண்டின் சாயலுமே இல்லை. ஒரு போலீஸ், ஒரு வில்லன், அவர்களுக்குள் சண்டை என்ற கதையை 1000மாவது தடவையாக பார்க்கும் போதும் புதிதாக இருந்தது. எல்லாம் சரியான அளவில் கொடுக்கப்பட்டிருந்ததால் சன் டிவிக்கு இந்த வருடம் பேர் சொல்லும்படி அமைந்துவிட்டது.

4. விண்ணைத்தாண்டி வருவாயா:



கெளதம் மேனன் - இந்த ஒரு பெயரே போதும். படத்தின் முதல் பாதி நான் வாழ விரும்பும் வாழ்க்கை. ஆரோமலே - இதுவரை ஆயிரம் தடவையாவது நான் கேட்டிருக்கும் பாடல்.

3. அங்காடித் தெரு:


முன்பு வெயிலின் உக்கிரம் என்றால் இப்போது அங்காடி தெருவின் தாக்கம் அதைவிட அதிக. படம் பார்த்த அன்று மனதிற்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கு அளவே இல்லை. நண்பன் ஒருவன் எதிரே வந்த லாரியை நோக்கி வாங்கடா வந்து என்னையும் ஏத்திக் கொல்லுங்க என்று சொன்னது இன்னும் நினைவில் உள்ளது.

2. ஆயிரத்தில் ஒருவன்:


இந்தப் படத்திற்கு இரண்டாவது இடமா? பலர் புருவத்தை உயர்த்தினாலும் அல்லது முஷ்டியை மடக்கினாலும் சரி. இந்தப் படம் தமிழில் இது வரை வந்திராத ஒன்று. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப் படவேண்டியது. தனிப்பட்ட ஒரு கலைஞனது கற்பனையின் உச்சக்கட்ட வெளிப்பாடு. நான் பிரமித்து, வாயடைத்துப் போன படம்.

1. மைனா:


திரையில் கதநாயகன் அழும் போது நானும் சேர்ந்து அழுது, அவன் சிரிக்கும் போது நானும் சேர்ந்து சிரித்ததெல்லாம் எனது விபரம் தெரியாத வயதில் தான். ஆனால் மைனாவின் 'கையப் புடி, கண்ணப் பாரு' பாடலில் என்னுள் ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் கதநாயகியைப் பிணமாகப் பார்க்கும் கதாநாயகன் அதற்குக் காரணமானவர்களைக் கொல்ல அரிவாளோடெல்லாம் புறப்பட மாட்டான். இதற்கு மேல் எதுவுமே இல்லை என்று ரெயிலின் குறுக்கே விழுந்து விடுவான். அதே மனநிலை தான் எனக்கும் இருந்தது. அது தான் அந்தப் படத்தை மறக்க முடியாமல் இருக்க வைக்கிறது. 'மைனா' - இந்த வருடத்தின் தலைசிறந்த படம், எந்த வித சந்தேகங்களும் இன்றி...


அதே போல் இந்த வருடம் என்னை பெரிதும் ஏமாற்றிய படங்கள் என்று ஒரு லிஸ்ட் உள்ளது. அவை,

1) ராவணன் - முதல் முறையாக என்னை ஏமாற்றிய மணிரத்தினத்தின் படம்.

2) ஈசன் - நல்ல படம் தான். ஆனால், சசிக்குமாரிடமிருந்து இத எதிர்பார்க்கவில்லை.

3) ஆனந்தபுரத்து வீடு - 'மர்மதேசம்' நாகா விட்டலாச்சாரியா கிராபிக்ஸை எப்படி நம்பினார் என்று தெரியவில்லை

4) அசல் - இறுதியாக அஜித்-சரண் காம்பினேஷனும் புட்டுக்கிச்சு. பாவம் அஜித்

5) இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - டீடெய்ல்ஸ் அற்புதம். ஆனால் கதை?

6) ரெட்டச்சுழி - இமையத்தையும் சிகரத்தையும் இப்படி மண்ணைக் கவ்வ வைத்திருக்க வேண்டாம்.

7) வ - இவனுக குடுத்த அலப்பறக்கு நான் என்னென்னவோ எதிர்பார்த்தேன்

8) மாஸ்கோவின் காவிரி - ரவிவர்மன். என்றும் அழியாத காதல் காவியத்தைக் கொடுப்பார் என்று நினைத்தேன். வழக்கம் போல அவரது கேமரா கோணங்கள் மட்டுமே அற்புதமாக இருந்தது.

9) ஜக்குபாய் - வசாபிக்கு பதில் 'டேக்கன்' கதையை தலைவர் விஜயகாந்த் செய்வதற்கு பதில் சரத் - ஸ்ரேயாவை வைத்து செய்திருந்தால் கூட ஹிட்டாயிருக்கும்.

10) அவள் பெயர் தமிழரசி - பெயரே ஆவலைத் தூண்டியது. இன்னொரு 'பூ' என்று நினைத்தேன், ஏமாற்றமடைந்தேன்.

மேக்கிங், கேமரா கோணங்கள், சிறந்த நகைச்சுவை போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக நான் 'பார்க்கலாம்' என்று வகைப்படுத்தும் படங்கள் ஒரு 10 இருக்கிறது. அவை,

1) போர்க்களம்


2) நான் மகான் அல்ல


3) பையா


4) ரத்த சரித்திரம்


5) பலே பாண்டியா


6) துரோகி


7) தமிழ் படம்


8) கற்றது களவு 


9) கொல கொலையா முந்திரிக்கா


10) தீராத விளையாட்டுப் பிள்ளை 

மேலும் மந்திரப் புன்னகை, தா, தென்மேற்குப் பருவக்காற்று ஆகிய மூன்று படங்களும் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எனக்குப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த வருடத்தில் நான் பார்த்த மிக மட்டமான படம் என்றால் அது 'சுறா' மட்டுமே!

2011 ஆம் ஆண்டு பிறப்பதற்கு நான் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதன் முக்கிய காரணம் இந்தப் படங்கள் தான். அனைத்து படங்களும் எனது விருப்பத்திற்குரிய இயக்குனர்களின் படங்கள். முதல் நாள் முதல் ஷோ நிச்சயம். முன்பே சொன்னது போல் ஹரா (Sultan the Warrior) மற்றும் தலைவன் இருக்கிறான் இதில் அடங்காது :)

10) வேங்கை (ஹரி)

9) மாலைநேரத்து மயக்கம் (அ) இரண்டாம் உலகம் / சிந்துபாத் (செல்வராகவன்)  

8) ஆடுகளம் (வெற்றிமாறன்)

7) ஆதிபகவான் (அமீர்)

6) கோ (கே.வி. ஆனந்த்)

5) யுத்தம் செய் (மிஷ்கின்)

4) ஆரண்ய காண்டம் (தியாகராஜா)

3) அவன் இவன் (பாலா)

2) நடுநிசி நாய்கள் (கெளதம் மேனன்)

1) 7ஆம் அறிவு (ஏ.ஆர்.முருகதாஸ்)

இந்த வருடத்தை போல சோம்பேறித் தனமாக இல்லாமல் அடுத்த வருடம் நிறைய பதிவுகளுடன் சந்திப்போம்.

"அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்"

You Might Also Like

2 comments

  1. உங்களின் டாப் 10 படங்களின் வரிசை மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நண்பா, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். செல்வராகவன் படம் , அப்புறம் ஏழாம் அறிவு - இந்த இரண்டு படங்கள் முதல் நாள் போகும் போது, என்னை மறவாதே!!!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...